Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 32

32

மறுநாள் காலை தூங்கி எழுந்து தங்கள் அறையிலிருந்து சோம்பல் முறித்தபடி ஹாலுக்கு வந்த கமலினி திகைத்தாள் .அங்கே ஹாலில் அந்த அதிகாலையில் விஸ்வேஸ்வரன் அமர்ந்து கொண்டிருந்தான் .கலைந்த தலையும் , கசங்கிய நைட்டியுமாக வந்து நின்றவளை  பழம் உருட்டும் அணில் பார்வை பார்த்தான் .

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற கமலினி ” ஓவ் ” என்ற மெல்லிய அலறலுடன் உள் அறை ஸ்கிரீனின் பின்னே தன்னை மறைத்துக் கொண்டாள். இவன் ஏன் இங்கே வந்தான்…? நகம் கடித்து யோசித்தாள் .அவர்கள் வீடு இன்னமும் தூக்கத்தில் தான் இருந்தது .அதிகாலையில் வேலைக்கு கிளம்பி விட்ட அப்பாவை வழியனுப்ப எழுந்த அம்மாவின் பின்னால் இப்போது எழுந்து வந்து இருப்பவள் கமலினி தான் .




இன்னமும் சித்தப்பா குடும்பத்தில் யாரும் எழுந்து கொள்ளவில்லை .தெருவில் இப்போதுதான் ஒவ்வொரு வீடாக வாசல் தெளித்து கொண்டிருக்கின்றனர் .இத்தனை அதிகாலையில் இவனுக்கு இங்கே என்ன வேலை…? கமலினி தலையை மட்டும் வெளியே நீட்டி அவனை முறைத்தாள் .

அவர்கள் இப்போது தங்கியிலுக்கும் அறையில் அட்டாச்டு பாத்ரூம் கிடையாது .

அனைத்து வசதிகளுடனுமிருந்த அறைகள் எல்லாம் சித்தி கனகம் வீட்டினர் வசம் போய்விட்டிருந்த்து .இவர்களுக்கு சாதாரண ஒற்றை  அறை .பல் தேய்க்க வேண்டுமானாலும் வீட்டின் பின்புறம் இருக்கும் பொது பாத்ரூமிற்குத்தான் போயாக வேண்டும் .நட்ட நடு ஹாலில் பிள்ளையார் போல் அமர்ந்திருக்கும் இவனை தாண்டி எப்படி போவது …? நேரம் நகர …நகர கமலினிக்கு விஸ்வேஸ்வரன் மேலிருந்த ஆத்திரம் அதிகரித்தபடி இருந்தது.

“உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் ஆலோசனை என்னை போன்ற சிறியவர்களுக்கு தேவை அங்கிள் ”  என்று சொந்தம் கொண்டாடி பேசிக் கொண்டிருந்தான் அவன் . அது யார் அந்த அனுபவசாலி…யோசித்துவிட்டு அவன் தன் தந்தையைத்தான் சொல்கிறானென உணர்ந்து அயர்ந்தாள் .இவனது நோக்கம்தான் என்ன …?

” உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஆர்டர் ரொம்பவும் புனிதமானது தம்பி .அதனை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும் ” வேலாயுதம் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார் .

அந்த திருவானைக்காவல் கோவில் ஆர்டரை பற்றி பேசுகிறார்கள் என ஊகிக்க முடிந்தது .அதை இவன் ஏன் இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறான்…? இவனது எண்ணத்தை இப்போதே உடனடியாக தெரிந்து கொண்டாக வேண்டுமே …கமலினி யோசனையில் இருந்த போது வேலாயுதம் எழுந்தார்

” இருங்க தம்பி உங்களுக்கு சில விபரங்கள் காட்டுகிறேன் ” அறைக்குள் போனார் .

இனி தன் தோற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் .கமலினி ஒரு முடிவெடுத்து மறைந்திருந்த ஸ்கிரீனை விட்டு வெளியே வந்தாள் .தலையை கோதி விட்டு நைட்டியின் கசங்கலை நீவி விட்டுக் கொண்டாள் . ” இங்கே எதற்கு வந்தீர்கள் ? ” கேள்வியின் முடிவில் வெளியே கேட்கும் அளவு பற்களை நறநறத்தாள் 

” எனக்கு சில விபரங்கள் தெரிய வேண்டும் கமலினி . அதற்காக வந்தேன் ” 

” என்ன விபரங்கள் …? எதைப் பற்றி 

..? மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் …? வேண்டாம் சார் .நீங்கள் தப்பு செய்கிறீர்கள் ?” 

கிட்டதட்ட அவனை அடித்து விடும் பாவனையுடனேயே அவனருகில் போய் நின்று ஒற்றை விரலாட்டி  ஜாக்கிரதை பேசியவள் அவன் முகத்தை பார்த்ததும் கன்னங்கள் சிவந்து மேலும் பற்களை நறநறத்தாள் .

விஸ்வேஸ்வரனின் விழிகள் லேசாக மேல் சொருகி இருந்தன .அதில் ஏதோ ஒரு கனவு இருந்தது. அவன் கன்னங்கள் பரவசம் தாங்கி குவிந்திருந்தன . இதழ்கள் மென்மையாக துடித்தபடி இருந்தன .அவனது இந்த அருகாமை முகத்தை பார்த்ததும் கமலினி சற்றே தயங்கி பின்வாங்கினாள் .ஏனோ அந்நேரம் அவளுக்கு முன்னோரு நாள் அவன் கொடுத்த முத்தம் நினைவில் வந்து தொலைந்த்து. இவன் மொகரையை பார்த்தால் இப்போதும் …நான்கெட்டு பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள் .

விஸ்வேஸ்வரன் எழுந்து நின்று அவர்களுக்கிடையே அவள் உண்டாக்கி வைத்திருந்த தூரத்தை குறைத்தான் .” உன்னை முதன் முதலில் இன்டர்வியூவில் பார்த்த போது அலங்காரங்கள் ஏதுமின்றி வெகு சாதாரணமாக இருக்கிறாயே என வேலைக்கு உன்னை ரிஜக்ட் செய்தேன் .அன்று எனது கண்ணோட்டம் தங்கத்தாமரை வேலை செய்ய வந்த மலராக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று …இதோ இப்போது எந்த அலங்காரமும் இன்றி இப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்து வந்திருக்கும் இந்த நிலையிலும் நீ …” மேலே வாய் பேசாது கண்களில் பாவம் காட்டினான்.




அவன் கண்கள் பிரமித்தன ,…ஆச்சரியத்தன …மகிழ்ந்தன …பாராட்டின …இறுதியாக மோகித்தன . தன் அழகிற்கான பாராட்டென்பது ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது …விரும்புவது .அதுவும் துளி அலங்காரமின்றி படுத்து எழுந்து வந்த இந்த கோலத்தில் கிடைக்கும் பாராட்டு …கமலினி யோகினி அல்ல .முற்றும் துறந்தவள் அல்ல .ஆசாபாசமுடைய சராசரி பெண்தான் .அவளது பெண் மனம் சர சரவென கட்டவிழ்ந்து விஸ்வேஸ்வரன் பால் வீழ்ந்தது. 

இப்போதும் அத்தனை அழகாகவா இருக்கிறேன் நான் …? விழிகள் கேள்வி கேட்க விஸ்வேஸ்வரனின் இமைகள் அழுந்த  மூடித் திறந்து ஆமோதிப்பை தந்தன .அந்த இமையழுத்தம் அவள் உடல் முழுவதும் பரவி அவனது இறுக்கமான உடலணைப்பை அவளுக்கு உணர்த்த நொடியில் உடல் வியர்த்து விட கமலினி தன் கண நேர பிறழ்தலில் மனம் நொந்தாள் .தன் பலவீனத்திற்கான கோபத்தை அவன் மீது காட்டினாள் 

” என் அப்பாவை பேசி மயக்கி என்னை பெற நினைத்து வந்தீர்களோ ? ” 

விஸ்வேஸ்வரனின் விழிகளில் வெறுமை தெரிந்தது .அவன் முகம் சிறு அசைவுமின்றி அப்படியே இருந்தது .சில விநாடி அவளைக் கூர்ந்து பார்த்தவன் ” ஆமான்டி .அப்படித்தான் .அதில் என்ன தப்பு ? ” என்றான் .

கமலினி விதிர்த்து நின்றாள் . ” சீ உங்களை உயர்வாக நினைத்திருந்தேன் ” 

” இப்போது என்னைப் பற்றி தெரிந்து கொண்டாய்தானே …? இனி அவ்வளவு உயரமாகவெல்லாம் நினைக்காதே …சரியா …? ” கையை வீட்டு கூரை வரை உயர்த்திக் காட்டினான் .

” ப்ராடு …பொறுக்கி …ராஸ்கல் …ரவுடி …” அவளது எல்லா வசவுகளையும் கை கட்டி பொறுமையாக கேட்டவன் ” முடித்து விட்டாயா ?” என அவளிடமே கேட்டு சந்தேகம் தெளிந்து கொண்டு …

” போடி .போய் பல் விளக்கி விட்டு வா ” புறங்கையை அசைத்தான் .

கமலினி அவன் கன்னத்திலறையும் முடிவிற்கே வந்துவிட்டாள் …வேலாயுதம் இடையிட்டு விஸ்வேஸ்வரனை காப்பாற்றினார் .

” எனக்குத் தெரிந்த சில விவரங்கள் இருக்கிறது தம்பி .அதனை நான் உங்களுடன்…” பேசியபடி வந்தவர் அங்கே நின்றிருந்த மகளைக் கண்டதும் ” கமலினி எப்போது வந்தாய் ? சார் உன் விபரம் பேசத்தான் வந்திருக்கிறார்.” என்றார் .

” என் விவரமா…?  அப்படி என்ன விபரம் உங்களிடம் பேசினார் அப்பா? ” 

” அது வந்து …” ஆரம்பித்த வேலாயுதத்தை கையை உயர்த்தி தடுத்தான் விஸ்வேஸ்வரன் . ” உங்கள் மகள் போய் பிரஷ்  ஆகிவிட்டு வரட்டும் சார் .நாம் பேசலாம். ” 

 ” சரிதான் நீ போய் விட்டு வாடாம்மா ” இரண்டு பேருடைய நோக்கமும் அவளை அங்கிருந்து அனுப்புவதுதான் என்பதை உணர்ந்து கொண்ட கமலினி வாயை முனுமுனுத்தபடி உள்ளே போனாள். 

சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து அவள் வந்தபோது தங்கத் தகடுகள் செய்யும் முறைகளின் நுணுக்கங்களை வேலாயுதம் விக்னேஸ்வரனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அவன் கை கட்டாத குறையாக பவ்யமாக கேட்டுக் கொண்டிருந்தான் .அத்தனையும் நடிப்பு கமலினியின் மனம் பொருமியது.

” என்ன விஷயம் சொல்லுங்கள் ? ” அப்பாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டு தெறித்தாற் போல் விஸ்வேஸ்வரனை பார்த்தாள்.

” உனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கொண்டுவந்திருக்கிறார் கமலி ” வேலாயுதத்தின் குரலில் உற்சாகம் .

என்ன பெரிய வேலை வாய்ப்பு …என் கடை தங்கத்தாமரை என்பான் .மனதிற்குள் எரிச்சல் பட்ட படி வெளியே அப்பாவிற்காக உதட்டை இழுத்து வைத்தாள்.

” உன்னுடைய கற்பனைத் திறனுக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு தெரியும்மா ” 

” அப்படி என்ன விஷயம்…? ”  கேள்வியை எரிச்சலோடு விஸ்னேஸ்வரனுக்கு கேட்டாள் .

”  சொல்லட்டுமா அங்கிள் ? ”  அவன் வேலாயுதத்திடம்  அனுமதி போல் கேட்க கமலினிக்கு டென்ஷன் ஏறியது. இவன் அலப்பறை தாங்க முடியவில்லையே …

“பரவாயில்லை சொல்லுங்கள் தம்பி ” வேலாயுதம் தாராளமாக அனுமதி வழங்க …

” உன்னுடைய இளம்பிள்ளை காட்டன் சேலைகளை,  பேன்சி சேலைகள் ஆக்கும் வேலையை நீ எனக்காக செய்து தரவேண்டும் ” 

கமலினி விஸ்வேஸ்வரன் சொல்ல அலட்சியமாக உதட்டை சுளித்தாள் .

” எப்போது சேலை கட்ட ஆரம்பித்தீர்கள் ? ” நக்கலாக கேட்டாள்.




”  கமலினி …” வேலாயுதம் அதட்டினார் .” முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருக்கும்போது என்ன கிண்டல் ? ஒழுங்காக தம்பி சொல்வதை கவனி ” தந்தைக்கு தலையசைத்து திரும்பியவள் விஸ்வேஸ்வரனின் திருப்தி முகபாவத்தில் நொந்தாள்.

”  சீக்கிரம் சொல்லுங்கள் ”  வெடுவெடுத்தாள்.

” நம் ஸ்வர்ண கமலம் கடை மாடியில் சேலைகளுக்காக ஒரு தனிப் பிரிவு தொடங்கலாம் என்ற ஐடியா எனக்கு இருக்கிறது. அங்கே இதுபோல் காட்டன் சேலைகளை புதுமையான வகையில் வடிவமைத்து நீ கொடுத்தாயானால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. நகை வாங்க வரும் பெண்கள் கூடவே சேலையையும் வாங்கி செல்வார்கள். இந்த ஐடியா எப்படி இருக்கிறது கமலினி? ” 

மகா மட்டம் என்று கமலினி பேசத் துடிக்கும் முன்பே விஸ்வேஸ்வரன் கூறிவிட்டான் .

“நன்றாக யோசித்து பதில் சொல்லு கமலினி. நலிந்து கொண்டிருக்கும் இளம்பிள்ளை காட்டன் சேலைகளுக்கு ஒரு மறுமலர்ச்சி கொடுக்க எண்ணுகிறேன். ஓரளவு பெரிய முதலீட்டை இதற்காக ஒதுக்க நினைக்கிறேன். நிதானமாக யோசித்து பதில் சொல்.”  மீளமுடியாத முடிச்சு ஒன்றை  கமலினியை சுற்றி போட்டான்

What’s your Reaction?
+1
27
+1
19
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!