Serial Stories

நந்தனின் மீரா-28

28

பெருவிரல் நகம் வரை பற்றியெரிந்தபடி ,
நிலவுக்கு பின்னான சூரியனை
விரும்ப தொடங்கியதும்
சமர்த்தென பாராட்டியபடி உடலோடும்
வியர்வை ஓடைகளின் மீதான
விருப்பும் அன்றிலிருந்துதான்

நீ என்னை  பற்றிய அன்றிலிருந்துதான்.

” கொஞ்ச நேரம் இப்படி சாய்ந்தே உட்கார்ந்திருங்கள் பாட்டி . சாப்பாடு உள்ளே இறங்கட்டும் .ஒரு பத்து நிமிடத்தில் மாத்திரை தருகிறேன் …”

பாட்டி சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கினாள் மீரா.

” என்னம்மா …உன் புருசன் என்ன சொல்கி்றான் ..? “

” என் புருசனா …? உங்க பேரனில்லையா பாட்டி ….? “

” என் பேரனா இருக்கிறதோடு உனக்கு புருசனாத்தான் அதிக நேரம் இருக்கிறான் போல …? “

பாட்டியின் கேலியில் மீராவின் முகம் சிவந்தது .பாட்டியின் தலையணையை சரி செய்தாள் .

” என்னம்மா ..இப்போது உனக்கு ஒழுங்கான புருசனா நடந்துக்கிறானா ….? ” பொருள் பொதிந்த பாட்டியின் கேள்விக்கு …நேரடி பதில் தர கூச்சப்பட்டு தலை குனிந்து படுக்கை விரிப்பை சரி செய்தபடி….

” ம் …” என்றாள் .

” இவ்வளவுதான்மா வாழ்க்கை .இனி அவனுக்கு ஒரு பிள்ளையையும் பெத்துட்டீன்னா …எங்கேயும் போகமாட்டான். உன் முந்தானையை பிடிச்சிட்டு சுத்தி சுத்தி வருவான் ….”

சுத்தி வருவான்தான் ..இது போல் பிள்ளை பெற்று அதனால் புருசனை இழுத்து வைத்துக்கொள்ளும் சாதாரண வாழ்க்கை என்ன வாழ்க்கை …? நம் நாட்டில் எல்லா பெண்களுக்கும் கிடைக்கும் வாழ்க்கைதான் இது .ஆனால் மீரா விரும்பியது …உன்னால் நான்…. என்னால் நீ …என ஒருவரில் ஒருவர் கரைந்து வாழும் ஒரு முழுமையான காதல் வாழ்விற்கு …

ஆனால் அம்மாவிற்காக ….உறவினரின் விசாரிப்பிற்காக …பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக என ஊருக்கு காட்ட வாழும் ஒரு வாழ்வு இது .இதனுடன் என்ன முயன்றும் மீராவால் முழு மனதுடன் ஒன்ற முடியவில்லை .

” அவர் அம்மாவே சொல்லிவிட்டார்களே .பிறகு என்னோடு வாழாமல் இருப்பாரா பாட்டி ..? “

மீராவை உற்று நோக்கினாள் பாட்டி .

” சுந்தரி என்ன சொன்னாள் …? “

” விரைவில் எனக்கு பேரப்பிள்ளை வேண்டும் என உறுதியாக உத்தரவிட்டு சொல்லித்தான் அவரை அறைக்குள் அனுப்பினார்கள் .அம்மா சொல்லை அவர் நிறைவேற்றினார் ….” வறண்ட குரலில் கூறினாள் .




உண்மையில் அன்று நடந்ததும் அதுதான் .அன்று இவர்கள் இருவரையும் பூஜையறைக்குள் அழைத்த சுந்தரி இருவர் நெற்றியிலும் திருநீறு பூசிவிட்டு ….சீக்கிரமாக ஒரு பேரக்குழந்தை வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தாள் .

அன்னையின் கோரிக்கையை மகன் உடனே தலையிலேற்றி செயலாற்றுவான் என தெரிந்தே , அன்று மீரா கணவனை மறுக்க எண்ணவில்லை .அத்துடன் அன்று மிருணாளினி கல்யாணம் முடித்து அமெரிக்கா போக போகிறேன் என்றதும் மீராவை கொஞ்சம் நெகிழ்த்தியிருந்தது .எனவே எளிதாக கணவனின் பிடியில் மனைவியாகிவிட்டாள் .

” அம்மாவிற்காகத்தான் உன்னுடன் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறான் என்கிறாயா …? ” பாட்டி நேரடியாகவே கேட்டார் .

” எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ….”

” இல்லைம்மா மீரா …நீ எங்கேயோ தப்பு செய்கிறாய் “

” தப்பெல்லாம் இல்லை பாட்டி .எல்லாம் சரிதான் .என் வாழ்க்கை இப்போது சரியான பாதையில்தான் போய் கொண்டிருக்கிறது .நீங்கள் வாயை திறங்கள் .மாத்திரை தருகிறேன் ….” மாத்திரை போட்டு நெஞ்சை நீவி விட்டாள் .

” உடம்பெல்லாம் ஊறலாக இருக்கிறதும்மா .அந்த மருந்தை எடுத்து தேய்த்து விடுகிறாயா ….? ” படுக்கையிலேயே இருப்பதால் உடம்பு அடிக்கடி ஊறும் .அதற்கு பாட்டி ஒரு மருந்து தடவுவார் .

” சரி பாட்டி .மருந்து எங்கே உள்ளே இருக்கிறதா …? “உள் ரூமில் மேலே செல்பில் இருந்த மருந்து பாட்டிலை சின்ன ஸ்டூலை போட்டு ஏறி எடுத்துக் கொண்டிருந்தாள் .

” நான் உதவட்டுமா மீரா …? கிசுகிசுப்பாய் கேட்டபடி பின்னால் வந்து நின்ற நந்தகுமார் , அவள் திரும்பும் முன் அந்த சிறிய ஸ்டூலில் ஒற்றை காலை ஊனி தானும் ஏறியிருந்தான் .தடுமாறியவளின் இடையை தாங்கி தன்னுடன் சேர்த்துக் கொண்டான் .

” எதை எடுக்க வேண்டும் மீரா …? ” கொஞ்சலாய் கேட்டபடி அவள் கன்னத்தில் மூக்கை உரசினான்.

” என்னங்க இது …அங்கே பாட்டி இருக்காங்க .விடுங்க …” அவனை தள்ள முயன்றாள் .

” பாட்டி தூங்குறாங்க ….” ஆவலுடன் கன்னத்தில் புதைந்தன அவன் இதழ்கள் .

” இல்லை …இப்போ வரை பேசிட்டிருந்தாங்க .சும்மாதான் கண் மூடியிருப்பாங்க .விடுங்களேன் …” தவித்தாள் .

” அப்போது ஒரு முத்தம் கொடு .விடுறேன் ….” பேரம் பேசினான் .

” சரி …கொடுத்ததும் போயிடனும் …” உதடு குவித்து நெருங்கிய மனைவியின் இதழ்களில் விரல் வைத்து தடுத்தான் .




” ஐய்யே …உப்புச்சப்பில்லாத இந்த முத்தம் யாருக்கு வேண்டும் .எனக்கு அந்த முத்தம் வேண்டும் ….”

கணவனும் , மனைவியுமாக காதல் விளையாட்டில் கலந்திருக்கும் ஒவ்வொரு நேரத்தின் முடிவிலும் , நந்தகுமார் மீராவின் முத்தத்தில் திருப்தியடைவதில்லை .ஒவ்வொரு முத்தத்திலும் அவளது அந்த முதல் முத்தத்தை எதிர்பார்த்தான் …கேட்டான் .

மீராவும் முயற்சித்தாள் .ஆனால்  …கள்ளமில்லாமல் , உறுத்தலில்லாமல் …முழுக்க முழுக்க கணவன் மீது காதல் மட்டுமே பொங்கியிருந்த அந்த நேரத்தில் அவள் கொடுத்த முத்தம் அது .

இப்போதோ ..மனம் நிறைய குழப்பங்களுடன் …ஆழ்ந்த தாம்பத்யத்தில் கூட கணவனுடன் ஒன்ற முடியாத நிலையில் அவள் அளிக்கும் முத்தங்கள் மனமார இருப்பதில்லை .சீக்கிரமே அதனை உணர்ந்து கொண்ட நந்தகுமார் அந்த முதல் முத்தத்திற்காக அவளை வேண்டியபடி இருந்தான் .

அடுத்த அறையில் பாட்டியை வைத்துக்கொண்டு காதல் பொங்கும் ஒரு முத்தத்திற்காக வேண்டும் கணவனின் குழந்தைமையில் சிரிப்பு வந்தது மீராவிற்கு .

” பட்டப்பகலில் …பாட்டி பக்கத்திலே உப்பும , உரைப்புமா …முத்தம் கேட்டால் எப்படி கிடைக்கும் …? ” சீண்டினாள் .

” ஆமாம் …நடுராத்திரியில் யாரும் இல்லாத போது மட்டும்  அந்த முத்தம் கிடைக்குதாக்கும் …? உனக்கு கொஞ்சம் கூட என் மேல் காதலே இல்லை மீரா …” சலித்துக் கொண்டான் .

” காதல் இல்லாதவங்கதான் புருசனை இப்படி கட்டிப்பிடிச்சுக்குவாங்களா ….? ” கணவனின் தோளை அணைத்தபடி அவன் மீசையை வருடினாள் .

” போ …சொன்னதிற்காக …ஒண்ணும் நீ இதெல்லாம் செய்ய வேண்டியதில்லை …” அவளை தள்ளினான் .

” ஆமாம் ..பாட்டிக்கு மருந்து தடவனும் …” கீழே இறங்கிய மனைவியுடன் சேர்ந்து உரசியபடி இறங்கியவன் …

” நீதான் எதற்கும் உதவ மாட்டேனென்கிறாய் …நானாவது …” என அவள் இதழ்களை நெருங்கினான் .

” டேய் …நந்தா ….” வெளியிலிருந்து பாட்டியின் குரல் .

” பா …பாட்டி …” நொடியில் காதல் வடிய தடுமாறினான் .

” என்னடா பண்ற ….? “

” அ…அது மருந்து பாட்டில் …தேடி …இதோ …கிடைச்சிடுச்சு …” பாட்டிலுடன் வெளியே போனான் .

” முழிச்சிட்டீங்களா பாட்டி …? “

” நான் எப்போடா தூங்கினேன் ….? “

” ஓ…அ…அப்படியா …நா …நான் எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது .வர்றேன் ….” வெளியே ஓடிவிட்டான் .

” டன் டன்னா அசடு வழியுது உன் புருசன் மூஞ்சியில் …” பாட்டி கேலி செய்ய மீரா சிரித்தாள் .

” பட்டப்பகல்ல பாட்டி பக்கத்திலிருந்தாலும் உன்னை பார்த்ததும் காதல் எண்ணம் வருகிறது உன் புருசனுக்கு .நீ அம்மாவிற்காக உன்னுடன் வாழ்கிறானென்கிறாய் …இது சரியில்லைம்மா மீரா .உன் எண்ணத்தை மாற்றிக்கொள் ….”

இது மீராவிற்குமே நெருடல்தான் .ஆசையோடு நந்தன் அவளை நெருங்கும் ஒவ்வொரு நேரமும் கணவனையும் , மனைவியையும் தவிர வேறு எண்ணம் அவனுக்கு இருப்பதாக தோன்றாது .கடமைக்கானதாகவோ , அந்த நேரத் தேவைக்கானதாகவோ அந்த அணைப்பு தோன்றாது .இவன் எப்படி இவ்வளவு நாட்களாக என்னை தொடாமல் தள்ளியிருந்தான் …ஒவ்வொரு முறையும் மீராவின் மனதில் எழும் ஆச்சரிய கேள்வி இதுதான் .

“சரிதான் பாட்டி ..” என பாட்டிக்கு ஒப்புதல் பதிலளித்து விட்டாலும் நெருஞ்சி ஊறும் மீராவின் அடிமனது அப்படியேதான் இருந்தது ஊஞ்சலாக ஊசலாடியபடி .

ஏனென்றால் இவர்கள் இருவருக்குமிடையே மிருணாளினி என்ற முள் இன்னமும் கூர்மையாக குத்தியபடியேதான் இருந்தது .அடிக்கடி வீட்டிற்கு வருபவள் …தவறாமல் வேலி மரத்தின் விதைகளை மீராவின் நெஞ்சில் தூவி விட்டே போனாள் .

வேர்பிடித்து வளர்ந்து நிற்கும் அந்த முள் மரத்தினை வெட்டியெறியும் வகையறியாது தவித்துக் கொண்டிருந்தாள் மீரா .




What’s your Reaction?
+1
26
+1
27
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
8 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!