14
” உங்களுக்கு ஒரு தோசை ஊத்தட்டுமா ? ” வாசுகி தயக்கத்துடன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவராஜனிடம் கேட்டாள்.
தேவராஜன் சட்டென தான் அமர்ந்திருந்த நாற்காலியை சர்ரென பின்னால் தள்ளிவிட்டு கையை உதறிக்கொண்டு பாதி சாப்பாட்டில் எழுந்தான்.
” எனக்கு போதும் அம்மா ” கையைக் கழுவிக் கொண்டு வேகமாக வெளியே போய் பைக்கை எடுத்துக்கொண்டு போய் விட்டான்.
” இரண்டே இட்லி தானே சாப்பிட்டிருந்தான் .எப்படி அவனுக்கு வயிற்றுக்கு பற்றும் …? ” மங்கை அவன் வைத்துவிட்டு போன தட்டை பார்த்துவிட்டு புலம்பலாக பேசினாள் .வாசுகி தலை குனிந்து கொண்டாள் .அங்கே அவள் தனக்கான சமையலை தானே தான் செய்து கொண்டிருந்தாள் .இன்று கணவனுக்கு பரிமாறும் எண்ணத்திலும் தனது சமையலை அவனுக்கு அறிமுகப்படுத்தும் ஆவலிலும் கேட்டாள்.
அத்தோடு திடுமென வந்துவிட்ட அவளது கணவனுக்கு பரிமாறும் ஆவலுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது கடந்த ஒரு வாரமாக தேவராஜன் அவளிடம் காட்டிய முகம் திருப்பல் .அன்று இரவு அவள் அவனுடைய அழைப்பை மதிக்காமல் ஹாலில் அடுத்து கொண்டதோடு மறுநாளும் அதனையே தொடர தேவராஜன் அவளிடம் இருந்து சிறிது சிறிதாக விலகத் துவங்கினான்.
வாசுகி திருமணம் முடிந்த நாள் முதல் எப்போதுமே அவனிடமிருந்து விலகித்தான் இருப்பாள் .ஆனால் அவன் அதற்கு அவளை அனுமதிக்காமல் ஆனமட்டும் அவர்களுக்கிடையே அருகாமையை உண்டாக்க முயல்வான் .இல்லை என்றாலும் அங்கும் இங்கும் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டு இருப்பவளை பார்வையினாலாவது தொடர்ந்து கொண்டே இருப்பான்.
ஆனால் இப்போதோ அவள் இருக்கும் பக்கம் கூட திரும்புவதில்லை. அவளிடம் ஒரு வார்த்தை பேசுவது இல்லை .எதிரியை பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக்கொண்டு வீட்டிற்குள் இருந்தான். மேலும் வீட்டிற்குள் இருக்கும் நேரத்தையும் குறைத்துக் கொண்டே வந்தான்.அவனுக்கு தன் மேல் இருந்த கோபத்தை வாசுகியால் உணர முடிந்தது .அவள் கணவனது கோபத்தை குறைக்க எண்ணினாள்.
அதற்காக பல விதங்களில் அவனுடன் பேச முயன்கள் .அவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை .இதோ இப்போது போல் சாப்பிடுகிறாயா என்ற ஒற்றை கேள்விக்கு தனது சாப்பாட்டையே துறந்து வெளியேறியது போன்ற கடுமையான முறைகளிலேயே அவளிடம் நடந்து கொண்டிருக்கிறான்.இனி கடைசி வழியாக அவனது அறைக்கு சென்று தான் பேச வேண்டும் .ஆனால் அதற்கு வாசுகிக்கு விருப்பமில்லை .
வாசுகிக்கு தனது அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது .தேவராஜன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வரவில்லை .இனி நடு ராத்திரி தான் வீடு திரும்புவான் .அதுவரை காத்திருக்கும் பொறுமை இன்றி மங்கையிடம் சொல்லிவிட்டு அம்மா வீட்டிற்கு கிளம்பினாள் வாசுகி.
சரியாக பாதை தெரியும் தானே ? ஒழுங்காக போய்விடுவாய் தானே ? வழியில் எங்கேயும் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்று விடாதே …தேவை இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசி விடாதே …மங்கை மற்றும் திலகாவின் ஆலோசனைகள் முழுவதும் வாசுகியை பைத்தியம் போலவே உணரவைத்தது .குழம்பிய முளையுடனும் பாரமான மனதுடனும் அவள் ஆட்டோ பிடித்துக் கொண்டு தாய் வீட்டின் முகவரியை சொல்லி ஏறி அமர்ந்தாள்.
” அண்ணா ஆட்டோவை நிறுத்துங்க ” பாதி வழியில் ஏறக்குறைய கத்தினாள் வாசுகி . போகும் வழியில் அவள் கண்ட காட்சியில் அவள் மனம் மிகவும் நொந்தது .அங்கே தேவராஜனும் ராதாவும் பேசிக்கொண்டே ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். வாசுகிக்கு முன்பொருநாள் தானும் அவனும் பேசியபடியே இப்படி தெருவோரம் நடந்து சென்றது நினைவில் வந்தது .தன் மனம் விரிசல் விட்டது போற்றோர் வேதனையுற்றாள் வாசுகி.
இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பழக்கம் ? ராதாவிற்கு தேவராஜன் மேல் இருந்த பிரேமையை அவள் அறிவாள் .அவர்களது திருமணத்தை ராதா முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் ஒரு பெண்ணாக உணர்ந்து இருந்தாள் அவள் .இப்போது இவர்கள் இருவருமாக இப்படி இருக்கிறார்கள் என்றால் …அவளது வேதனை சிந்தனையில் இன்னுமொரு வலி.
அங்கே தேவராஜனும் ராதாவும் ரோட்டோரமாக மிஷினில் பிழிந்து கொண்டிருந்த கரும்புச்சாறு கடை அருகே நின்றனர் .ஏதோ சொல்லி சிரித்தபடி பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய ஐஸ் கட்டி மிதக்கும் கரும்புச்சாறு வாங்கி ராதாவிற்கு நீட்டினான் தேவராஜன் .முகம் நிறைந்த புன்னகையுடன் அவள் அதனை வாங்கிக் கொண்டு குடிக்கத் தொடங்கினாள் .வாசுகியின் உடல் முழுவதும் தீ அள்ளி போட்டது போன்ற எரிச்சல் பரவியது.
வாசுகி ஆட்டோவை விட்டு இறங்கி விட்டாள் .அம்மா வீட்டை மறந்து விட்டாள். ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு திரும்பியவள் ராதா அவளது வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைவதை பார்த்தாள் . தேவராஜன் பின்னால் போகும் ஐடியாவை கை விட்டு ராதாவின் பின்னால் நடந்தாள் வாசுகி .எவ்வளவு விரைவாக நடந்தாலும் ராதாவை தொடும் முன் அவள் அவளது வீட்டு வாசலில் நுழைந்து விட்டாள்.
உன்னை விட்டேனா பார் என்ற வேகத்துடன் வீட்டிற்குள் நுழைய போன ராதாவின் தோளை பற்றி திருப்பினால் வாசுகி.
” வாசுகி நீயாடி ? எப்படி இருக்கிறாய் ? “ராதா உற்சாகமாக தோழியை வரவேற்க வாசுகி அவள் தோள் பற்றி உலுக்கினாள்.
” ஏய் என்னடி உனக்கு கொஞ்சம் கூட புத்தியே கிடையாதா ? ஏன் இப்படி மட்டமாக நடந்து கொள்கிறாய் ? ”
” என்னடி ? என்ன விஷயம் ? ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய் ? ”
மிக இயல்பாக சாப்பிட வாயேன் என்பதுபோல் ராதாவின் பேச்சு இருக்க வாசுகியின் உக்கிரம் அதிகமானது.
” உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் புருஷனுடன் தவறாக பழகிவிட்டு என்னவென்று என்னிடமே அப்பாவியாக கேட்பாய் ? ”
” வாசுகி உளறுவதை நிறுத்து ” ராதா அதட்டல் குரலுக்கு மாறி இருக்க அது இன்னமும் வாசுகியின் கோபத்தை தூண்டியது .தப்பும் செய்துவிட்டு இந்த நிமிரவும் எதற்கு என்ற எண்ணம் அவளுக்கு.
” யாருடி உளறுவது ? நீ எங்கள் கல்யாணத்திற்கு முன்னாலேயே என் புருஷனை காதலிப்பதாக சொல்லவில்லை ? எங்கள் கல்யாணத்தை நிறுத்தி விடச் சொல்லி என்னிடம் கெஞ்ச வில்லை ? அன்று நீ விஷம் குடித்தது கூட இதனால் தானோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது .இப்போதும் இருக்கிறது .உண்மையைச் சொல் .உனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ? ” வாசுகி தன்னிலை மறந்து கத்தியபடி ராதாவின் தோள்களை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள்.
” ராதா ” அந்த குரலுக்கு இருவரும் திரும்பிப் பார்க்க வீட்டு வாசலில் ராதாவின் தாய் நின்றிருந்தாள்.” என்னடி இது வாசுகி சொல்வதெல்லாம் உண்மையா ? நீ அன்று விஷம் குடித்த காரணம் இதுதானா ? ”
தாயின் கேள்வியில் ராதாவின் கண்கள் கலங்கிவிட்டன. ” இல்லை அம்மா நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் ”
” அம்மா உங்கள் மகள் சொல்வதை கேட்காதீர்கள் .அவள் பொய் சொல்கிறாள் .என்னிடமிருந்து என் புருஷனை பறித்துக் கொள்ள நினைக்கிறாள். நீங்கள் தான் அவளிடம் பேசி என் புருஷனை எனக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் ”
” ஏய் பைத்தியம் போல் உளராதடி ” ராதா வாசுகியின் தோளில் சுளீரென அடித்தாள் .
” நான் பைத்தியமா ? பார்த்தீர்களா அம்மா ? உங்கள் மகள் நிமிடத்தில் என்னை பைத்தியம் ஆக்கி விட்டாள் ” வாசுகி குமுறும் குரலில் பேசத் துவங்க ராதாவின் அம்மா அவளை ஒரு விதமாக பார்க்கத் துவங்கினாள்.
” நீங்கள் உள்ளே போங்கள் அம்மா .நான் பேசிவிட்டு வருகிறேன் ” ராதா அவளது தாய்க்கு ஏதோ ஜாடை காட்டுவதாக உணர்ந்தாள் வாசுகி.
” என்ன ராதா உன் சினேகித பொண்ணு என்னென்னமோ சொல்லுது ” என்ற குரல் பக்கத்து வீட்டிலிருந்து வர ராதா முகம் குன்றினாள். வாசுகிக்கும் அந்நேரம் தான் ஏதோ அதிகப்படியாக நடந்துகொண்டதாக தோன்ற அவளும் அமைதியாக நின்றாள்.
” வாசுகி நீ உன் வீட்டிற்கு கிளம்பு. நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன் ” ராதா அழுத்தமாக பேசி தெருவோடு போன ஆட்டோவை கைதட்டி அழைத்து அதில் வாசுகியை உள்ளே திணித்து அவளது வீட்டு விலாசம் சொல்லி ” இடையில் எங்கேயும் நிறுத்த வேண்டாம் அண்ணா .பத்திரமாக அங்கே கொண்டு போய் சேருங்கள்” என்று கையில் பணத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டாள்.
இவள் என்னை என்னவென்று நினைத்தாள் ?இருப்பிடம் கூட போய்ச்சேர தெரியாத பைத்தியமா நான் …ஆட்டோ பயணம் முழுவதும் வாசுகியினுள் இதே பொறுமல் தான்.
” எங்கே போய் …எந்த வம்பை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாய் …? ” வீட்டிற்குள் நுழையும்போது முகத்தை பார்த்தே கோபமாக கேட்டாள் மங்கை.
” வம்பு பேசுவது.. வஞ்சம் வைப்பது …திட்டங்கள் தீட்டுவது …”இதெல்லாம் உங்களுடைய வேலை. இதுபோன்ற தவறுகளை நான் செய்யமாட்டேன் .” ஏற்கனவே குழப்பத்தில் இருந்த வாசுகியின் மூளை நாவிற்கான அடக்கத்தை அவளுக்கு கொடுக்கவில்லை.
“ஏய் என்ன மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறாய்.? நான் உன் மாமியார் என்பது மறந்துவிட்டதா ? ”
” ஆஹா அதனை மறக்க முடியுமா ? உங்கள் மாமியார்தனத்தைத்தான் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறேனே “.
” அடிப்பாவி எப்படி பேசுகிறாய் ? தெரியாத்தனமாக ஒரு பைத்தியத்தை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டு நான் படுகிற அவஸ்தையை யாரிடம் சொல்லுவேன் ? ”
” யாரைப் பைத்தியம் என்கிறீர்கள் ? ”
” சந்தேகமே இல்லாமல் உன்னைத்தான் ”
” நானா… நான் …பைத்தியமா ? ” வாசுகி வெகுண்டெழுந்து மங்கையை நோக்கி வேகமாக நடந்தபோது..
” அலமு நன்றாக இருக்கிறாயா …? ” என்ற கேள்வியோடு வாசலில் வந்து நின்றாள் அந்த பெண்.
அந்தக் குரலும் …அந்த அழைப்பும்… வாசுகியினுள் மின்னல் வெட்டியது போல் இருந்தது .தீராத குழப்பங்கள் தீர்ந்தது போல் உணர்ந்தாள் .இதனை உடனடியாக அவரிடம் சொல்ல வேண்டும் கணவன்புறம் தாவியது அவள் மனம் . அவளது மன பரபரப்பிற்கு பதில் சொல்லும் வகையில் வேகமாக வந்து நின்ற பைக்கிலிருந்து இறங்கி உள்ளே வந்தான் தேவராஜன்.
தனது உள்ளக் கிடக்கை கணவனிடம் கொட்ட விரைந்தாள் வாசுகி .ஆனால் அவனோ அவளை காது கொடுத்து கேட்கும் நிலைமையில் இல்லை. கனன்று கொண்டிருந்த அவன் கண்களில் வாசுகியை பொசுங்க வைக்கும் உத்தேசங்கள் நிறையவே இருந்தன.
What’s your Reaction?
+1
19
+1
24
+1
1
+1
+1
2
+1
+1