Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் -15

15

 

கொத்தான ரோஜா மலர்களை வெண்ணிற கப்புகளின் நடுவே பதித்தாள்.சுற்றிலும் கரும்பச்சை இலைகளை அமைத்தாள்.அடுத்த கப்பில் சவுக்கு மரத் தோப்பினை கொண்டு வந்தாள்.குச்சியாய் நீண்டிருந்த ப்ரௌன் தண்டுகளிடையே இளம்பச்சை இலைகள்.அடுத்த கப்பில் மூக்குரசி கொஞ்சின இரண்டு காதல் பறவைகள்.

“வெறுமனே பிரிண்டிங்காக இல்லாமல் எம்பாஸ்டாக செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும் மாமா” யவனாவின் யோசனையில் எழுந்த நல்லசிவம் அவளது கை பற்றிக் குலுக்கினார்.

“நல்ல யோசனைம்மா.நீ எழுந்து வா.ஆபீசில் வந்து உட்கார்.அப்போதுதான் இன்னமும் நிறைய ஐடியா கிடைக்கும்”

“நான் இங்கேயே இருந்து வேலை பார்க்கிறேனே மாமா” யவனாவிற்குள் இன்னமும் அலுவலகம் செல்வதில் தயக்கம் இருந்தது.

“வொர்க் ப்ரம் ஹோமெல்லாம் இப்போ கொடுக்கறதில்லைங்க அண்ணி.அதுதான் லாக்டவுன் முடிஞ்சிடுச்சே.இனி நேரடியா ஆபீஸ்தான் வரனும்” மாதவன் கிண்டலாக பேச யவனா புன்னகைத்தாள்.

“உங்களை மாதிரி எனக்கு திறமை இருந்தால் நானெல்லாம் இங்கே இருக்கவே மாட்டேன்.சான்ஸ் கிடைச்சதுன்னு ஆபீஸ் ஓடுங்க.ஆல் தி பெஸ்ட் ” என்ற நிர்மலா,யாரும் கவனிக்காத போது இவளிடம் கிசுகிசுப்பாக…

” வீட்டை நான் கவனிச்சுக்கிறேன்.ஆபீசை நீங்க கவனிச்சுக்கோங்க.இரண்டு இடத்திலும் நம் உரிமையை நாம் விட்டுக் கொடுக்க கூடாது” என்றாள்.




யவனாவிற்கு உஷ்ஷென்றிருந்தது. இந்த தொல்லைக்கு ஆபீசிற்கே போய்விடலாமென்ற முடிவை எடுத்தாள் அவள்.

மறுநாள் பணியாளர்களின் சிறு வரவேற்போடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.அவளுக்கென சிறிய குளிரூட்டப்பட்ட அறை ஒதுக்கப்பட,வீட்டிலிருப்பதை விட இங்கே இறுக்கங்களற்று எளிதாக வேலை செய்ய முடிவதை உணர்ந்தாள்.

வாழ்த்துக்கள் என வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தான் சக்திவேல்.இவன் எங்கே இருக்கிறான்?மதிய உணவு இடைவேளையின் போது கம்பெனி முழுவதும் சுற்றி வந்தும் அவன் கண்களில் படவில்லை.

இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்தவள் மூன்றாவது நாள் காபி கொண்டு வந்து வைத்த அட்டென்டர் பெண்ணிடம் மெல்ல விசாரித்தாள்.ஐந்தாவது நிமிடம் அவள் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு அவள் முன் வந்து நின்றான்.

“என்ன விசயம் யவனா?”

“எ…என்ன?”

“விசாரித்தாயாம்.எதுவும் விபரம் தெரிய வேண்டுமா?”

யவனா திணறி சட்டென ஒரு முடிவெடித்து,லேப்டாப்பை அவன் பக்கம் திருப்பினாள்.”இந்த சாப்ட்வேரில் கலர் சரியாக இடத்தில் உட்காரவில்லை.எப்படி கலரடிப்பது?”

அவளுக்கே தெரிந்த விபரம்தான்.ஆனால் ஏதேனும் கேட்க வேண்டுமே எனக் கேட்டு விட்டு,விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவனின் பேச்சில் மனம் பதியாமல் ஓரக்கண்களால் அவனை ஆராய்ந்தாள்.

சக்திவேல் கொஞ்சம் இளைத்திருத்தான்.நிறைய கறுத்திருந்தான்.உதடுகள் காய்ந்து வெடித்திருந்தன.தலைமுடி வெட்டிக் கொள்ளாமல் ஒழுங்கின்றி வளர்ந்து நெற்றியில் பரவிக் கிடந்தது.பார்க்க கொஞ்சம் பரிதாபகரமாகவே இருந்தான்.இதென்ன தோற்றம்…கேள்வியோடு அவன் பக்கம் நன்கு திரும்பி கவனித்தவளின் முகம் இறுகியது.

சரியாக பராமரிக்கப் படாமல் கிடந்த அவன் மீசை தாடியில் ஆங்காங்கு நரை முடிகள்.காதோரமும் வெள்ளிக்கம்பிகளாய் மின்னின மனிதனின் வயதை தெரிவிக்க இயற்கை ஏற்படுத்திய தடங்கள்.இவன் இவற்கையெல்லாம் கறுப்படித்து மறைத்து என்னை ஏமாற்றினான்தானே!

யவனாவின் மூச்சுக்காற்று சூடாக வெளிவர,சக்திவேல் அவளை நிமிர்ந்து பார்த்து,அவள் பார்வை போன இடங்களை கவனித்துவிட்டான்.தலைக்குள் கை விட்டு கோதிக் கொண்டவன்,மென்குரலில் கேட்டான்.

“சாரி”

“மன்னிக்கப்படும் தவறுகளுக்கு அளவீடு உண்டு”அவள் வார்த்தைகளின் உஷ்ணத்தை தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.எழுந்தான்.

” வேறு ஏதாவது சந்தேகமென்றால் கேள்” போய்விட்டான்.




யவனாவிற்கு அதன் பிறகு வேலை ஓடவில்லை.வேலை நேரம் முடிந்த பிறகும் வீட்டிற்கு போகத் தோன்றாமல் ஆபீசிலேயே கண்களை மூடி பின்னால் சரிந்தே கிடந்தாள்.

“ஆபீஸ் நேரம் முடிந்தது மேடம்.ஸ்டாப்ஸ் போய்விட்டார்கள்.ஆபீசை பூட்டிவிடலாமா?” மேனேஜர் பவ்யமாக கேட்டு நின்றார்.

சேர்மராஜ் ஒரு க்ளையன்டை சந்திக்க மதுரைக்கும்,மாதவன் கம்பெனி ரா மெட்டீரியல்ஸ் வாங்க குஜராத்தும் சென்றிருந்தனர்.ஆக அடுத்த முதலாளி ஸ்தானத்தில் வைத்து அவளிடம் அனுமதி கேட்கின்றனர்.ஆனால் சக்திவேல் எங்கே?அவன் வெளியூர் போகவில்லை.வீட்டிற்கும் வருவதில்லை…இங்கேயும் இல்லையென்றால்,எங்கேதான் இருக்கிறான்?

யவனா ஆபீசை பூட்டும்படி கையசைத்து விட்டு வெளியேறினாள்.கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் நான்கைந்து பேர் சிறு கும்பலாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.

“பாவம்டி”

“இந்த வெயில் காலத்தில் இது பெரிய தண்டனை”

“என்ன காரணம்னாலும் பெத்த பிள்ளையை இப்படி ஒதுக்கி வைக்க பெரிய மன தைரியம் வேண்டும்டி”

“ம்.பெரியவர் எப்பவும் இப்படித்தானே! அவருக்கு நியாயம்னா நியாயம்தான்.ரொம்ப கறார்”

“சக்தி ஐயாதான் பாவம்.முத கல்யாணத்திலும் நிம்மதி இல்லை.இப்ப வந்த மகராசியும் இப்படி அவர வேக விடுறா”

கம்பெனி மைதானத்திற்குள் பெரும்பான்மை விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க,யவனா பின்வருவதை அறியாமல் தங்களுக்குள் பேசியபடி போய் கொண்டிருந்தனர் அவர்கள்.யவனா திடுக்கிட்டாள்.இவர்கள் சக்திவேலைப் பற்றித்தான் பேசுகின்றனர்.அவனுக்கு தண்டனையா?

அவர்கள் பேச்சிலிருந்து அரைகுறையாக ஊகித்து கம்பெனியின்  வட கோடியை நோக்கி ஓட்டமும் நடையுமாக போனாள்.அங்கேதான் கில்லன் இருந்தது. பாக்டரி தயாரிப்பு வேலைகள் இரவில் முடிவுக்கு வந்தாலும் இந்த கில்லன் மட்டும் இரவும்,பகலும் இயங்கியபடியே இருக்கும்.ஷிப்ட் முறையில் இங்கே வேலையாட்கள் பணி புரிவார்கள்.

சேர்மராஜ் அங்கேதான் தன் பெரிய மகனுக்கு வேலை கொடுத்திருந்தார்.தயாரித்த பொருட்களை சுடும் வேலை.சுட்ட  பொருட்களை பக்குவமாக பாக் செய்து குடோன் சேர்க்கும் வேலை.பொதுவாக முதலாளிகள் செய்யும் வேலை கிடையாது இது.

யவனா ஐம்பதடி தள்ளி நின்றே கண்காணித்தாள்.இங்கேயே அவளால் நிற்கமுடியாத அளவு வெப்பம் இருந்தது. அங்கே ஐந்தடி தூரத்தில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு…?ஏதோ மாதிரி உணர்வு தோன்ற வேகமாக திரும்பி விட்டாள்.

ஏனோ  அன்றைய இரவு உணவை அவளால் சரியாக உண்ண முடியவில்லை.ஒரு சப்பாத்தியில் எழுந்து விட்டவள்,தனது அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள்.இதமாக குளிர்ந்த ஏசி அனுபவிக்க மனமில்லாமல் போக,ஆப் செய்துவிட்டு,சன்னல்களை திறந்து விட்டாள். வெளி இருளை வெறித்தபடி நின்றாள்.

அவள் போன் ஒலிக்க,எடுத்து வைஷ்ணவி என பார்த்து உற்சாகமாக பேச ஆரம்பித்தாள்.எப்போதும் போல் கலகலவென பேசிய வைஷ்ணவி,”உன் ஆள் எப்படி இருக்கிறார்?” என வழக்கமான கிண்டலுக்கு வந்தாள்.

தோழியின் கலகல பேச்சில் தனது இளமை பருவத்தில் சுகமாக உழன்று கொண்டிருந்தவளுக்கு,கணவனுக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனை இப்போது நியாயமாக தோன்றியது.




“அவர் பனிஷ்மென்டில் இருக்கிறார்.” பட்டென சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“பனிஷ்மென்டா? எதற்கு?” வைஷ்ணவி கேட்க,யவனா மறைக்க முயல அவள் விடுவதாக இல்லை.

“யவி எனக்கு எதுவுமே தெரியாதென்றில்லை.ஓரளவு தெரியும்.அங்கே என்ன நடக்கிறதென்று சொல்லு” வைஷ்ணவி அதட்டலாக கேட்க திகைப்போடு “எ…எப்படி?” என்றாள்.

“நீதான் உன் மனக் கஷ்டங்களை உடனே உடனே என்னுடன் பகிர்ந்து கொள்வாயே அப்படி” குத்தினாள்.

யவனா மௌனமாக,

“எனக்கு மட்டுமில்லை.உன் கணவருக்கும் எல்லாமே தெரியும்”என்றாள் வைஷ்ணவி.

“என்ன ? அது எப்படி?யார் சொன்னார்கள்?” படபடத்தாள்.

“அம்மா தாயே யவனாம்பிகையே!தன்மான சிங்கமே!உன் தன்மானம் தெரிந்து நாங்களாகவே உன் அருமை சித்தியை பற்றி ஊகித்து தெரிந்து கொண்டோம்.உன் கணவர் சென்னை வந்து என்னை சந்தித்தார்”

“எப்போது?” யவனாவின் குரல் உலர்ந்திருந்தது.வைஷ்ணவி சொன்ன நாள் யவனா வெயிலில் கிடந்து உடல்நலம் கெட்டு தேறியதற்கு மறுநாள்.

“நான் சொன்னதே சரியாகி உன் சித்தி உன் வாழ்க்கையையே கெடுத்து விட்டார்கள் பார்த்தாயா?ஆனால் நீ மிகவும் நல்லவள் யவி.அதனால்தான் உன் சித்தி கெடுக்க நினைத்து உனக்கு வரித்து கொடுத்த இந்த வாழ்விலும் இப்படி ஒரு நல்ல கணவர் உனக்கு வாய்த்திருக்கிறார்”

“அ…அவர் என்ன சொன்னார்?”

“உன்னைப் பற்றி உன் சித்தி பற்றி தெரிந்து கொண்டார்.அவரும் உன்னை மிகவும் நோகடித்ததாக வருந்தினார்.உன்னை பேசி கலகலப்பாக வைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார்.இனி உன் வாழ்வு முழுவதும் சந்தோசமாக வைத்துக் கொள்வதாக எனக்கு வாக்களித்தார்.இப்போது சொல் அவருக்கு எதற்கு தண்டனை? தண்டனை வாங்க வேண்டியவர்கள் சந்தோசமாக வெளிநாட்டு வாழ்வை அனுபவித்து இருக்க,ஒன்றுமறியாத இவருக்கு தண்டனையா?”

“உன்னிடம் பிறகு பேசுகிறேன்டி” போனை கட் செய்த யவனா யோசனையுடன் அறையினுள் நடக்கத் துவங்கினாள்.




What’s your Reaction?
+1
44
+1
34
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!