29
அன்று காலை ஒரு சம்பவம் நடந்திருந்தது .அதை எடு , இதை பிடி , அப்படி வை என்று சபர்மதியின் விரல் நுனி அசைவிற்கு வீடே ஆடிக்கொண்டிருந்தது .மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு எரிச்சலாக இருந்தது என்ன பெரிய இவளா இவள் ..வீட்டு தலைவரிலிருந்து வாசல் வாட்ச்மேன் வரை இவள் என்றால் பல்லிளிக்கிறார்கள் .
அந்த பூரணசந்திரன் எவ்வளவு பெரிய ஆள் . அவன் கை சொடுக்கினால் பின்னால் வர ஒரு பெண்கள் கூட்டமே இருக்கிறது .அவன் இந்த சபர்மதியை பார்த்து குடம்குடமாய் ஜொள் விடுகிறான் .இந்த தர்மன் வேறு நாலு வரி இவளிடம் பேசினால் இரண்டு வரி என் தங்கை என்பதாக இருக்கிறது .ஏற்கெனவே தர்மனிடம் பழைய அசட்டுத்தனம் குறைந்துவிட்டது என சம்யுக்தாவிற்கு தோண ஆரம்பித்திருந்தது .
தெளிந்த பைத்தியம் என்றால் கொஞ்சம் மந்தமாகத்தான் இருப்பான் .அவனை அமுக்கிவிட்டு தொழில் வரை தன் கைவசம் கொண்டு வந்துவிட்டு எல்லாவற்றையும் விற்று காசாக்கி விட்டு மீண்டும் அமெரிக்கா பறந்து விடுவோம் . அவள் பூரணசந்திரன் தன்னை வந்து சந்தித்து இங்கே அழைத்தபோது இந்த திட்டத்தில்தான் இருந்தாள்.
ஏற்கெனவே எவனையோ நம்பி அமெரிக்கா போய் அவன் இவள் காசையும் சேர்த்து தொலைத்து விட்டு எங்கோ ஓடிவிட்டான் .யார்யாரிடமோ பிச்சை எடுத்து இந்தியா வந்து மும்பையில் சுற்றிக்கொண்டிருந்த போதுதான் இந்த பூரணசந்திரனை பார்த்தாள் .
தர்மனை பற்றி அவன் கூறியதும் , புளியங்கொம்பு என எண்ணி இங்கே வந்துவிட்டாள் .இங்கே வந்து பார்த்தபின்தான் தான் நினைத்தது அவ்வளவு எளிதில் நடக்காது என தெரியவந்தது .முதல் காரணம் இந்த சபர்மதிதான் .அவள்தான் சம்யுக்தா என்ன சொன்னாலும் , செய்தாலும் முட்டுக்கட்டை போட்டாள் .அதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அவளுக்கு ஜால்ரா அந்த மொட்டைதலைச்சி .இவளுக ரெண்டு பேரையுமே இந்த வீட்டை விட்டு விரட்டனும் .
இப்படி எண்ணிக்கொண்டுதான் காலையிலிருந்து சபர்மதி செய்த காரியங்களை எல்லாம் குறை சொன்னாள் .நீ விலகு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவளை ஒதுக்க முனைந்தாள் .ஆனால் அவளை தன் நுனி விரலால் எளிதாக ஒதுக்கி விட்டு தன் வேலைகளை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தாள் சபர்மதி .
வீடே அவள்பின்னால் இயங்கிக்கொண்டிருந்தது .அன்று ….
” அப்பா புதிதாக விலைக்கு வந்திருக்கும் எஸ்டேட்டை தங்கை பெயரில் வாங்கிவிடலாம்பா ” என்று தர்மன் சொல்லிக்கொண்டிருந்தான் .
” ஆமாம் அவள் திருமண சீராக கொடுத்து விடலாமென ” அம்சவல்லி பதில் கொடுத்துகொண்டிருந்தாள்
சம்யுக்தாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது .அவள் என்னமோ இந்த சொத்து முழுவதும் தனது போலவே எண்ண தொடங்கியிருந்தாள் .சபர்மதியை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.
அன்று அதிகாலை நீர் மேல் கோலம் வரைய முடிவு பண்ணி அதற்கான ஏற்பாடுகளில் இருந்தாள் சபர்மதி .
பெரிய பித்தளை தாம்பாளம் ரெடி பண்ணி வாசலுக்கு நேராக வைத்திருந்தனர் .அதில் நீர் நிரப்பிய பின் வண்ணங்களை அதன் மேல் சல்லடை மூலம் பரப்ப தொடங்கினாள் சபர்மதி .மிக அழகான கோலம் ஒன்று உருவாகிக்கொண்டிருந்தது .வீடே சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது
.அவ்வளவு காலையிலேயே பூரணசந்திரன் வேறு .அரசாங்கத்திடமிருந்து சிறந்த தொழிலதிபருக்கான விருது கிடைக்க கூடிய நிலையில். இருப்பவன். அவனது கண்டுபிடிப்பு உலகின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவிக்கப்படகூடிய சாத்தியங்கள் இருக்கிறதாம் .தர்மனும் ,சத்யேந்திரனும் பேசிக்கொண்டிருந்ததை சம்யுக்தா கேட்டாள். அப்படிப்பட்டவன் இந்த சபர்மதி என்னமோ கிறுக்குகிறாளென அதைக்காண காலையிலேயே இங்கு ஆஜர் .
அப்படி என்னதான் செய்பிறாளென மெல்ல எப்டிப்பார்த்தாள். பொருத்தமான வண்ணங்களுடன் அழகான ரங்கோலி .இதோ இந்த தட்டை லேசாக தட்டி விட்டு விட்டால் அனைத்தும் கலைந்துவிடுமல்லவா .
தட்டை தட்ட மெல்ல காலை உயர்த்தியவளின் மீது அந்த கரும்பச்சை பொடி சிறிது சிதறிவிட்டது .
” இப்படித்தான் என்மேல் பொடியை தூவுவாயா ? ” வலிந்து சபர்மதியை வம்புக்கு இழுத்தாள் .
” கவனிக்கவில்லை. கொஞ்சம் தள்ளி இருங்கள். ” நிமிர்ந்து பார்க்க கூட செய்யாமல் அலட்சியமாக பதிலளித்தாள் சபர்மதி .
” உன்னை …” பற்களை நறநறத்தவள் பக்கத்திலிருந்த வண்ண டப்பாவை சபர்மதியின் தலை மீது கவிழ்க்க முனைந்தாள் .ஒரே தட்டில் டப்பா தூர போய் விழுந்தது .நிமிர்ந்து பார்த்தால் அனுசூயா ….
” என்ன செய்யப்போகிறீர்கள் ஜாக்கிரதை …” விரல் ஆட்டி எச்சரித்தாள் .
” வேலைக்காரக் கழுதை …என்னிடமா விரல் நீட்டுகிறாய் …? ” அனுசூயாவை அடித்தே கொன்று விடும் நோக்கத்துடன் வீசிய சம்யுக்தாவின் கைகள் முழுவேகத்துடன். பின்னிருந்து பற்றப்பட்டது .தர்மசேகரன ….கண்கள் சிவக்க ஆத்திரம் பொங்க நின்றான் .
” சம்யுக்தா…. யார் வேலைக்காரி , அவள் எங்கள் உறவுப்பெண் .சபர்மதி எங்கள் வீட்டுப்பெண் .இதில் யாரையும் எதுவும் சொல்லவோ , கை நீட்டவோ உனக்கு உரிமையில்லை .உள்ளே போ ” அத்தனை வேலைக்காரர்கள் முன் கத்தியதோடு மட்டுமில்லாமல் பற்றிய கைகளை இழுத்து அவளை உள்ளே தள்ளினான் .அவமானத்துடன் அறைக்குள் முடங்கியிருந்த சம்யுக்தா இதோ இப்போது சபர்மதிக்கும் , ஸ்வாதிக்கும் இடையே நடந்தவைகளை பார்த்தாள் . இதோ …அவளை தனக்கு தோழமையாக்க முனைந்து கொண்டிருக்கிறாள.
” உடன்பிறந்தவள் மேல் அண்ணன்களுக்கு மிகுந்த பாசம் போல …” மெல்ல ஸ்வாதியிடம் பேச்சை ஆரம்பித்தாள் சம்யுக்தா .
” யார் …இவளா உடன்பிறந்தவள் .யாருக்கு எப்படி பிறந்தாளோ .இவளைக்கொண்டு வந்து நடுவீட்டில் அமர்த்தி வைத்து எல்லோருமா கூத்தடிக்கிறார்கள் “
” என்ன சொல்றீங்க ? “
” ஆமாம் அந்த சத்யேந்திரனுக்கு தப்பான வழியில் பிறந்தவள் இவள் .
எங்கேயோ குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தவளை இப்போதுதான் ஒரு வருடத்திற்கு முன் இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறர்கள் .”
கண்களை இறுக மூடி இந்த விவரங்களை உள்ளிறக்கி கொண்டாள் சம்யுக்தா .இப்படிப்பட்டவள் இங்கிருந்தால் அவள் வாழ்வு என்ன ஆவது ?
” சீச்சி ..மோசமான பொண்ணு , உடனே இவளை வீட்டை விட்டு துரத்தனும் .நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா ? “மெல்ல ஸ்வாதியை தன் வழிக்கு கொண்டு வர முனைந்தாள .
அவளைப்பார்த்து அலட்சியமாக சிரித்த ஸ்வாதி ” எனக்கு நீ சொல்ல வேண்டாம் .நான் ஏற்கெனவே ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்கிறேன் .அதற்கு நீ தலையாட்டினாள் போதும் ” என்றாள்
சத்தமின்றி ஒரு சதி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது .
தன் கைகளை பற்றியபடி உள்ளே இழுத்துக்கொண்டு வந்த சபர்மதியை , அவள் அறைக்குள் வரவும் , இழுத்து அணைத்து முத்தமிட்டான் பூரணசந்திரன் .அவளை அணைக்க எதடா சாக்கென்று காத்துக்கொண்டிருப்பவன் .இப்போது சபர்மதி இத்தனை மாமா போட்ட பின் சும்மா இருப்பானா ?
இந்த முத்தத்தை சபர்மதி எதிர்பார்த்தே இருந்தாள் .இல்லை , வேண்டாம் …போதும் …தப்பு …விலக வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தபடியே விலக முயன்ற ஒவ்வொரு கணத்தின் முடிவிலும் , மற்றொரு முத்தம் மீண்டும் ஆரம்பித்தது .
இறுதியில் மூச்சு வாங்க அவளை விடுவித்த பூரணன் , விலக மனமின்றி மீண்டும் அவளை அணைத்துக்கொள்ள முனைந்தான் .
மெல்ல அவனை தள்ளிய சபர்மதி தன் மனதில் காலையிலிருந்து உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை கேட்டாள் .” இன்று காலை அந்த சம்யுக்தா என்னிடம் வம்பிழுத்த போது , ஏன் சும்மாவே இருந்து விட்டீர்கள் …? “
தனது அவமானத்திற்கான பதில் தன் சகோதரனிடமிருந்து உடனே கிடைத்துவிட்ட போதும் , தன்னவனின் பிரதிபலிப்பிற்காய் அவளின் உள்ளம் ஏங்கியது .
” அவளை அப்போதே அடித்து நொறுக்க துடித்து கொண்டிருந்தேன் .ஆனால் அது தர்மனுக்கான நேரம் என்றுதான் என்னை அடக்கிக்கொண்டு சும்மா இருந்தேன் “
“அப்போ இதற்காகத்தான் அவளை ….”
விழிகளை அகல விரித்து அவனை நோக்கினாள் சபர்மதி .அவள் கண்களுக்குள் உற்று நோக்கியபடி அவளுக்கு விழிகளாலேயே பதிலுரைத்தான் பூரணன் .
மெல்ல அவளை நெருங்கி அவள் கன்னத்தை வருடியபடி ” தர்மனுக்கு அவனையே உணர்த்திக்கொண்டிருக்கிறேன் செல்லம் ” என்றவன் இதழ்கள் அவள் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தன .
உள்ளத்தோடு உடலும் நெகிழ சிலிர்த்து நின்றாள் சபர்மதி .இவ்வளவு தூரம் ஒவ்வொரு சின்ன விசயத்தையும் யோசித்து செய்பவன்
இன்னும் சிறிது நாட்களுக்குள் உலகம் முழுவதும் பேசப்பட போகிறவன் , அப்படி ஒரு இரட்டை வாழ்க்கை வாழ துணிவானா ?.குழம்பிய அவள் முகத்தை கண்டவன் அவள் கன்னத்தோடு தன் கன்னங்களை பதித்தபடி
” என்னடா …என்ன பிரச்சினை …எதை போட்டு இப்படி மனதிற்குள் உருட்டிக்கொண்டுருக்கிறாய் ?” பரிவாக கேட்டான் .
இதோ இப்படி அவன் சூடான அணைப்பிற்குள் நின்றபடி , அவன் கன்னத்தின் லேசான சொரசொரப்பை தன் கன்னத்தில் உணர்ந்து கொண்டிருக்கும் இக்கணம் …என்ன பிரச்சினை எனக்கு ? ஒன்றுமில்லையே …இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான பெண் நான்தான் என்றே சபர்மதிக்கு தோன்றியது .
இதோ இவ்வளவு மென்மையாக என்னை அணைத்தபடி என்னை மகிழ்விக்க துடித்துக்கொண்டு இருக்கும் இந்த ஆண்மகனிடம் எப்படி கேட்பேன் .நீ என்னையும் ஸ்வாதியையும் வைத்து இரட்டை வாழ்வு வாழ நினைத்தாயா என்று ?
இல்லை இதனை எனக்கு அந்த ஸ்வாதியேதான் விளக்க வேண்டும் என முடிவெடுத்தாள் சபர்மதி .
தன்னை அணைத்து கூந்தல் வாசம் பார்த்துக்கொண்டிருந்த பூரணனை செல்லமாக தள்ளியவள் ” வெளியே போங்க ,நான் கிளம்ப வேண்டும் .”
” ஓ…இனிமேல்தான் கிளம்ப வேண்டுமா ? பார்த்தால் இப்போதே முழுவதும் கிளம்பியது போல்தானே இருக்கிறது “, என்றபடி அவள் உடல் முழுவதும் தாபத்துடன் விழிகளை ஓட்டினான் .
“ம்ஹூம் இன்னும் நீங்கள் இங்கிருந்தால் சரி வராது போங்க ” அவன் தோள்களை பற்றி இழுத்து வந்து அறைக்கு வெளியே தள்ளினாள் .தலையை கூட ஒழுங்காக சீவவில்லை .அங்குமிங்கும் காலையிலிந்து அலைந்ததில் முகம் சோர்ந்து , சுருங்கி கிடக்கிறது .இவருக்கு நான் கிளம்பியது போல் இருக்கின்றேனாம் .கூடவே அப்படி ஒரு பார்வை வேறு …தன்னை கண்ணாடியில் பார்த்தபடி பூரணனின் பார்வையை நினைவு கூர்ந்து சிவந்தாள் சபர்மதி .
முகம் கொள்ளா சிரிப்புடன் சபர்மதியின் அறையிலிருந்து வெளியே வந்த பூரணனை குரோதத்துடன் முறைத்தன இரு ஜோடி விழிகள் .
What’s your Reaction?
+1
41
+1
24
+1
+1
2
+1
+1
+1