18
வந்தனா மசக்கையில் படுத்துக் கிடக்கிறாள் .அவளுக்கு பிடித்தது பிடிக்காதது பார்த்து வாய்க்கு நல்லவிதமாக நாலு பலகாரம் செய்து போட வேண்டுமே. நீங்கள் ஒத்தாசைக்கு வாருங்கள் அண்ணி ” நாத்தனார் வாய் திறந்து கேட்டு விட்ட பின்பும் ராஜாத்திக்கு இருப்பு கொள்ளுமா ? அவள் வந்தனாவின் மசக்கைக்காக என்று கூறிக்கொண்டு மறைமுகமாக நாத்தனார் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டியவளானாள் .
” இருக்கட்டும் ஒரு வாரம் பத்து நாள் அம்மா வீட்டில் இருப்பாள் வந்தனா .அதுவரை தானே… நான் தினமும் போய் விட்டு வந்து விடுகிறேன் ” என்று கீதா வீட்டிற்கு போய் வந்து கொண்டிருந்தாள் ராஜாத்தி
. மாலினி அவளது இறுதியாண்டு தேர்வில் இருந்ததால் பரீட்சை எழுதுவதும் மறுநாள் பரீட்சைக்கு தோழிகளோடு சேர்ந்து படிப்பதுமாக அவளை வீட்டில் பார்ப்பதே அரிதாக இருந்தது. இப்போது ஜெயக்குமாரும் சங்க வேலை என்று அடிக்கடி வெகு நேரம் வெளியே சென்றுவிட வாசுகியை வீட்டில் தனிமை ரொம்பவே தாக்கியது.
கதைப் புத்தகம் , டிவி என எதிலும் மனம் செல்லாமல் வெறுமையான பார்வையுடன் சோபாவில் அமர்ந்து கணவனின் நினைவில் மூழ்கி இருந்தவளை அழைப்புமணி கலைத்தது .மென்மையான கணவனின் பாத வருடலை மனதிற்குள் நினைத்து உடல் சிலிர்த்து கொண்டிருந்தவள் இடையூறு செய்த அழைப்பு மணிக்கு எரிச்சல் பட்டபடி போய் கதவை திறக்க மின் அதிர்வு அவளை தாக்கியது.
” தூங்கிக் கொண்டிருந்தாயா ? ” என்று கேட்டபடி வெளியே நின்று கொண்டிருந்தவன் அவளது கணவன் தேவராஜன்.
பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டு நின்றவளின் முகத்தின் முன்னால் சொடக்கு இட்டான் ” ஏய் உன்னைத்தான் கேட்கிறேன்”
“என்ன ..” திணறியபடி மலங்க மலங்க விழித்தாள் அவள்.
” எதற்காக இந்த முழி முழிக்கிறாய் ? சற்று நகர் ” என்றபடி அவன் உள்ளே வர முயல அவசரமாக அவனைத் தடுத்தாள்.
” என்ன விஷயம் ? சொல்லிவிட்டு நீங்கள் அப்படியே போகலாம் ”
தேவராஜன் கூர்மையாக அவள் கண்களுக்குள் பார்த்தான் ” உன் அப்பா இங்கே ஒரு பைல் வைத்திருக்கிறாராம் .அதை எடுத்து வரச் சொன்னார் ” யயஞ
” நீங்கள் இங்கேயே நில்லுங்கள். நான் போய் எடுத்து வருகிறேன் ‘ வாசுகி சிறிது நகரவுமே கிடைத்த சிறு இடைவெளியில் அவளை உரசியபடி உள்ளே நுழைந்து விட்டான் அவன் .ஷாக் அடித்ததுபோல் அவனது உரசலை உணர்ந்து பின் வாங்கியவள் ” என்ன செய்கிறீர்கள் ? ” கத்தினாள்.
தேவராஜன் அசராமல் உள்ளே நுழைந்ததோடு கதவையும் பூட்டினான் .உதட்டின் மேல் ஒற்றை விரல் வைத்து ” உஷ் எதற்கு இப்படி கத்துகிறாய் ? வா அந்த பைலை எடுக்கலாம் ” அவளை முந்தி உள்ளே நடந்தான்.
” வீட்டில் யாரும் இல்லையா ? “போகிற போக்கில் கேட்டபடி நடந்த அவனது கேள்வியில் வாசுகிக்கு தலைசுற்றுவது போலிருந்தது .இவன் இப்போது இங்கே எதற்கு வந்து நிற்கிறான் …அவள் வேகமாக உள்ளே ஓடி போய் பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை திறந்து பைலைத் தேடிக் கொண்டிருந்தான் அவன்.
” இப்படி எங்கள் வீட்டில் நடமாடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? ” அறை வாசலில் இருந்து கத்தினாள் வாசுகி.
பட்டென்று பீரோ கதவை மூடியவன் அவளை நோக்கி வேக நடையுடன் வந்தான் .தன்னை நோக்கி நீண்ட அவன் கையில் பதறி வாசுகி பின்னடைய அவளது கழுத்தில் பதிந்து அவன் கை மெல்ல கழுத்தை வருடி விட்டு தாலி செயினை வெளியே எடுத்தது .” இந்த உரிமை ” அவள் தாலியை ஆட்டிக் காட்டினான்.
” ஆஹா இந்த தாலிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் நீங்களும் உங்கள் குடும்பமும் கொடுத்தீர்கள்தானே … நானும் அனுபவித்து கொண்டுதானே இருந்தேன் ” பேசிக்கொண்டிருக்கும்போதே தான் அனுபவித்த வேதனை நினைவிற்கு வந்து விட வாசுகியின் குரல் கம்மியது. அத்தோடு கண்களும் கலங்க ஆரம்பிக்க அதனை அவனுக்கு காட்டாமல் மறைக்க எண்ணி வேகமாக திரும்பி நின்று கொண்டாள்.
தேவராஜன் முதுகு காட்டி நின்ற மனைவியை பின்னிருந்து இறுக்க அணைத்துக் கொண்டான் . ” சாரி வசு ” மென்மையாய் மன்னிப்பு வேண்டியவனது குரலுக்கு நேர்மாறாக வன்மையாய் அவள் தேகம் இறுக்கியது அவனது கரங்கள் .அவனது வேகத்தில் திணறிய வாசுகியின் தேகம் விலக நினைக்க அந்த நினைப்பு கணத்தின் கால் பகுதி அளவு கூட நிறைவேறாமல் போனது.
” விடுங்க ” பலவீனமான அவளது வேண்டலுக்கு இனி உன்னை விடவே மாட்டேன் என்ற உறுதியை பதிலாக தந்தன அவனது குரலும் , உடலும்.
திருமணம் முடிந்து சில மாதங்களாக ஏதேதோ காரணங்களால் இணையாமல் இருந்த தம்பதிகளின் முரண்மை அன்று இயற்கையாக அமைந்தது.
————————
” வசு ” கொஞ்சலாக அழைத்த தேவராஜனின் குரலில் இன்னமும் போதை குறையவில்லை.
“ஏன் இப்படி செய்தீர்கள் ? ” அவனது முகம் பார்க்கும் தைரியம் இல்லாமலும்் பரவசத்தால் சிவந்த கிடந்த தனது முகத்தை அவனுக்கு காட்டாமலும் இருக்க கைகளால் முகத்தை மூடிக் கிடந்தபடி கேட்டாள் வாசுகி.
” எப்படி செய்தேன் ? ” அவனது பதில் கேள்விக்கு இன்னமும் அவள் முகம் சிவந்தது .முகம் மூடி இருந்த கைகளின் மேல் அழுந்த முத்தமிட்டான் அவன் .” கையை எடுடா …எதற்காக முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய் ? ” வலுக்கட்டாயமாக விலக்கினான்.
வாசுகி இப்போது தன் கைகளுக்கான பணியை அவன் மார்பிற்கு கொடுத்தாள். தன் மார்பில் புதைந்து இருந்த மனைவியின் தலையை பரிவுடன் வருடிய தேவராஜன் ” வசு நான் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்டா ” என்றான்.
அவன் குரலின் மகிழ்ச்சி அவளுள்ளும் ஊடுருவினாலும் தன் நிலைமையை வாசுகி மறந்தாளில்லை .உள்ளமும் உடலும் சேர்ந்து அனுபவித்த துன்பம் அவளுக்கானதல்லவா ? எனவே அவள் வார்த்தைகள் கசப்பும் வெறுப்புமாகவே வழிந்தன.
” திருட்டு மாங்காய் தான் ருசி என்பீர்களே …அது போலத்தானே இதுவும் ” வாசகியின் குரல் மிக மென்மையாகத் தான் இருந்தது .ஆனால் அது தேவராஜனின் உடம்பில் பெரும் திடுக்கிடலை கொடுத்தது.
” வாசுகி ” அதட்டினான்.
” உங்கள் அம்மாவிற்கு தெரியாமல் தானே இங்கே வந்தீர்கள் ? இல்லையில்லை என் அம்மா அப்பாவிற்கு கூட தெரியாமல் திருட்டுத்தனமாக…”:
” ஏய் வாயை மூடுடி ”
” ஏன் உண்மையைச் சொன்னால் உங்களுக்கு கசக்கிறதா ? உங்கள் அம்மாவிற்கு பயந்து என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டு இப்போது இங்கே வந்து என்னுடன்…” மேலே பேசமுடியாமல் உதடு கடித்து நிறுத்தினாள்.
” எதற்காகடி பாதியிலேயே நிறுத்தி விட்டாய் ? தொடர்ந்து சொல்லேன் . உன்னால் முடியாவிட்டால் நான் சொல்லட்டுமா ? என் மாமியார் வீட்டிற்கு வந்து என் பொண்டாட்டியிடம் நான் உன் கணவன் என்று காட்டி இருக்கிறேன் .இதற்கு உன் தந்தையோ என் தாயோ என யாருடைய அனுமதியும் தேவையில்லை .ஏனென்றால் சுற்றம் சூழ நமக்கு திருமணம் முடித்துக் கொடுத்த நாளன்றே அந்த அனுமதியை அவர்கள் நமக்கு கொடுத்து விட்டனர் .அதற்கு மேலும் உன்னை தொடுவதற்கு எனக்கு என் மனதை தவிர வேறு எந்த அனுமதியும் தேவையில்லை ” சொல்லிவிட்டு தனது கணவன் உரிமையை மீண்டும் அவளிடம் நிலைநாட்ட துவங்கினான்.
அவனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து முடியாமல் சிறிது சிறிதாக அவனிடமே மீண்டும் சரணடைந்தாள் வாசுகி.
இவற்றையெல்லாம் மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது வாசுகிக்கு தன்னை நினைத்தே கொஞ்சம் அவமானமாக இருந்தது .அது என்ன அப்படி அவன் தொட்ட உடனேயே உருகுவதும்… கரைவதும்… தன்னையே பழித்துக் கொண்டாள் வாசுகி .நீ இவ்வளவு பலவீனமானவளா … தன்னைத்தானே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டாள் .
” போட்டுக்கொண்ட அக்ரிமெண்ட்டுகளை நிறைய பிரதிகள் எடுத்து சங்கத்தில் எல்லோருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் மாமா. முக்கியமாக அந்த நில உரிமையாளர்கள் பார்வைக்கு இந்த அக்ரிமெண்ட்ஸ் போக வேண்டும் ” தேவராஜன் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு கொண்டிருந்தான்.
ஆம் தனது தொழில் பிரச்சனைகளுக்காக சொந்த பிரச்சனைகளை தள்ளி வைத்துவிட்டு ஜெயக்குமார் அவனை வீட்டிற்குள் அனுமதித்து இருந்தார். மாமனாரும் மருமகனும் தொழிற்சங்க பிரச்சனைகளை ஓயாமல் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
” அந்த லாரி டிரான்ஸ்போர்ட் காரன் தான் ரொம்பவும் அடம்பிடிக்கிறான் மாப்பிள்ளை. அவனிடம் நாளை நேரில் போய் பேசிப் பார்த்தால் என்ன ? ”
” நாளையா…? எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கிறதே மாமா ” தேவராஜனின் பார்வை இப்போது ஓரமாக அமர்ந்திருந்த வாசுகியின் மேல் ஒரு விதமாக படிந்தது. வாசுகியின் மனம் படபடக்க துவங்கியது .இவன் எந்த வேலையை சொல்கிறான் … அவன் நாளையும் இங்கேதான் வரப் போகிறான் என்று அவளது மன பட்சி சொன்னது.
ம்ஹூம் … இல்லை இனி ஒருதரம் இவனை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது ….அவசரமாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டாள். மறுநாள் அவன் வந்தாலும் எப்படி கூப்பிட்டாலும் கதவைத் திறக்கவே கூடாது என்ற முடிவுடன் கதவிற்கு மேல்தாழ் கீழ்தாழ் பூட்டு என எல்லாவற்றையும் போட்டு வைத்தாள் .பிறகு கதவுக்கு நேராக ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு காலிங் பெல் ஓசையையோ கதவு தட்டப்படும் ஓசையையோ எதிர்பார்த்திருந்தாள் .அவனை மறுத்து உள்ளே விடாமல்
அனுப்ப வேண்டுமே ஆனால்….
பின்னால் இருந்து அவள் தோள் மென்மையாக தட்டப்பட திரும்பிப் பார்த்தவள் ” ஆ “என அலறினாள்.
” எதற்கு இப்படி பேயை் பார்த்ததுபோல் கத்துகிறாய் ? ” சாதாரணமாக கேட்டபடி சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான் தேவராஜன்.
“நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள் ? நான் கதவை பூட்டி வைத்தேனே ”
தேவராஜன் கையில் வைத்திருந்த சாவியை அவள் பார்க்குமாறு தூக்கிப்போட்டு பிடித்தான் .” உன் அப்பாவின் தச்சுக் கூட சாவி .அவரிடமிருந்து வாங்கி கொண்டு வந்தேன் ” அவர்கள் வீட்டின் பின் பக்கத்தை காட்டினான்.
ஆக இவன் என்னை ஊகித்து இருக்கிறான்.. வாசுகிக்கு அவனிடம் தோற்ற கோபம் வந்தது . ” திருட்டுப்பயல் போல் இது என்ன முறையற்ற வேலை ? ”
” காதலில் களவு தவறில்லை ” அவனது ஒற்றைக்கண் சிமிட்டலுக்கு வாசுகியினுள் வெட்டுக்கிளிகள் படபடத்தன.
பின் வாசல் திறந்து இருக்குமே அதன் வழியாக வெளியே போய்விட்டால் என்ன நினைத்த மறுகணமே பின் வாசலுக்கு நடந்த அவள் கால்களுக்கு குறுக்கே தயக்கமின்றி தன் கால்களை நீட்டி அவள் நடையை தட்டி விட்டான் தேவராஜன்.
” ஆ ” என்ற அலறலுடன் தரையில் விழ போனவளை பாங்காக கைகளில் தாங்கிக் கொண்டான். வெற்றிப் புன்னகையுடன் அவளை அள்ளிக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
தோல்வி மீண்டும் தோல்வி மீண்டும் மீண்டும் வாசுகிக்கு தோல்வி. ஆனால் இவ்வளவு ருசிகரமான ஒரு தோல்வி இருக்க முடியுமா என்ன ? உண்மையை சொல்வதானால் அவன் விலகளில் உறைவதும் அணைத்தலில் கரைவதுமாக அவளது பொழுதுகள் கணவனின் துணையுடன் சுவாரசியமாகவே நகர்ந்தன.
ஆம் ராஜாத்தி தனது கடமையில் ஆழ்ந்து விட , மாலினி படிப்பில் மூழ்கிவிட .ஜெயக்குமார் தொழிலுக்குள் நுழைந்துவிட …தனித்திருந்த வாசுகியின் பொழுதுகளை இனிமையாக களவாடி கொண்டான் தேவராஜன் .தவிப்பும் தயக்கமுமான அவள் நேரங்களை மயக்கு புன்னகையும் சிலிர்க்கவைக்கும் சீண்டலுமாக கணவனின் உரிமையுடன் கையகப்படுத்திக் கொண்டான்.
புதுமணத் தம்பதிகளின் இயற்கையான வாலிப வசந்தமாக நாட்கள் சொக்கி நகர்ந்தன.
What’s your Reaction?
+1
32
+1
13
+1
1
+1
+1
2
+1
+1