Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-8

8

“ஆனாலும் அநியாயத்திற்கு கோபக்காரராக இருக்கிறார் மேடம்” தக்ளா அனன்யாவிடம் ரியோவை பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள்.

” அப்படியா?” கைகளை கன்னத்தில் தாங்கி சுவாரஸ்யமாக கதை கேட்டுக் கொண்டிருந்தாள் அனன்யா.

கிச்சனுக்குள் இருந்து மூன்று டீ கப்புகளுடன் வந்தாள் சுபவாணி. இவர்களைப் பார்த்ததும் டீ போடுவதற்கு எழுந்த அனன்யாவை அமர வைத்துவிட்டு தானே டீ போட சென்றிருந்தாள். “அருமையான இஞ்சி வாசம்” தன் கப்பை கையில் எடுத்த அனன்யாவின் முகம் வாடியது.

” என்ன சுபா இது?”

” மேடம் உங்களுக்கு  சத்து மாவு கரைத்து இருக்கிறேன் சமத்தா குடிச்சிடுங்க” புன்னகையோடு தன் கப்பை எடுத்துக் கொண்டாள்.

” மணக்க மணக்க நீங்க ரெண்டு பேரும் டீ குடித்துக் கொண்டு எனக்கு மட்டும் இந்த சப்பென்ற சத்துமாவா? அநியாயம் செய்கிறாய் சுபா” மூக்கை சுருக்கி சிறு பிள்ளையாய் புகார் அளித்தாள் அனன்யா.

” எந்நேரமும் காபி டீ குடித்தால் வயிற்றில் இருக்கும் உங்க பாப்பா கறுப்பாக பிறக்கும் பரவாயில்லையா மேடம்?”

” ஏய் இந்த நான்செஸ்ஸிற்கெல்லாம் மெடிக்கலில் ஆதாரம் இருக்கிறதா?” தக்ளா மெலிதாக தலையில் அடித்துக் கொண்ட விநாடியிலேயே…

“வேண்டாம் வேண்டாம் என் குழந்தை என்னை போல நல்ல நிறமாக அழகாக இருக்க வேண்டும்” அனன்யா தனது சத்து பானத்தை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

சுபவாணி தக்ளாவை பார்த்து சிரிக்க” ம் நல்லா இடம் பார்த்து அடிக்கிறீங்கடி…” சலித்தாள் அவள்.

 “பொதுவாக வயிற்றில் குழந்தையை சுமக்கும் பெண்கள் சிறு குழந்தையாகி விடுவார்கள்.உடம்பு அவர்களைப் படுத்துவதில் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சரியாக எதையும் சாப்பிடாமல் சிணுங்கிக் கொண்டும் கோபித்துக் கொண்டும் எல்லோரையும் படுத்தி எடுப்பார்கள்” பேசியபடி டீ குடித்துக் கொண்டிருந்தவளை ஆச்சரியமாக பார்த்தனர்.




” ஆனால் எப்படி இவ்வளவு விவரங்கள் உனக்கு தெரிகிறது சுபா?” 

“ம்… என் அக்கா கர்ப்பமாக இருந்தபோது என் அம்மா அவர்களை கவனித்ததை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்” வறண்ட குரலில் சொன்னவளின் ஆட்காட்டி விரல் காபி கோப்பையின் விளிம்பை வட்டமாக வரைந்தது. இனி இந்த டீயை குடிக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. 

“ஆனால் உன் அக்காவிற்கு செய்ததை பார்த்தது போல் தெரியவில்லை. நீயே உள்ளார்ந்து அனுபவித்தது போல் இருக்கிறது உன்னுடைய பேச்சுக்கள்” சொன்னபடி தக்ளா தனது டீ, கோப்பையை முடித்துவிட்டு கீழே வைத்தாள்.

” அதென்ன கடைசியில் கொஞ்சம்… இரண்டு மடக்கு இருக்குமா? அதில்தான் எல்லா சத்துக்களும் இருக்கிறது. குடித்துவிட்டு கொடுங்கள்” தாயாய் அதட்டி கடைசி மிடறையும் விளங்க வைத்த பிறகு, குடிக்காமல் வைத்த தனது பாதி கப்போடு உள்ளே போனாள்.

” மேடம் அவரைப் பற்றி சொல்லுங்கள்” தக்ளா கேட்க “எவரைப் பற்றி..?” அனன்யா கண்களை உருட்டினாள்.

” நம்ம காலேஜ் புது லெக்சரர் ரியோவை பற்றி…”

” ஏய் உனக்கு வேற வேலை இல்லையா? ஏதோ டவுட் கேட்க வேண்டுமென்று என்னை மேடம் வீட்டிற்கு இழுத்து வந்து விட்டு…” கப்புகளை கழுவி வைத்துவிட்டு கைகளை துடைத்தபடி வந்த சுபவாணி செல்லமாக தக்ளாவின் தலையில் கொட்டினாள்.

” இதோ டவுட் தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். சொல்லுங்க மேடம். அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

” ஒன்றும் தெரியாது” உதடு பிதுக்கினாள் அனன்யா. “நிறைய படித்திருக்கிறார் என்று நம்ம டைரக்டர் சொன்னார். உங்களுக்கு பதில் அவரை கெஸ்ட் லெக்சரராக அப்பாயிண்ட் பண்ண போகிறேன். நீங்கள் நிதானமாக தேவையான நேரம் எடுத்துக்கொண்டு நல்லபடியாக குழந்தை பெற்று திரும்பி வாருங்கள் என்று சொன்னார.அவ்வளவுதான். அந்த ரியோவை நான் நேரடியாக பார்த்தது கூட கிடையாது”

” அடப் போங்க மேம்” தக்ளா தலையை இரு கைகளாலும் இறுக்க பிடித்துக் கொண்டாள். “அவருடைய விவரங்கள் தெரியவில்லை என்றால் தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது”

“ம்ம்க்க்கும்… என்னால் கொஞ்சம் அதிக தகவல்கள் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் தக்ளா” சுபவாணி குறும்புடன் சொல்ல “என்ன…?” இருவரும் ஒன்று போல் கூச்சலிட்டனர்.

 தக்ளா “உனக்கு எப்படி தெரியும்?  என்ன தெரியும்?” பரபரத்தாள்.

” எங்கே பார்த்தாய்? என்ன பேசினார்?” அனன்யாவும் தன் பங்கிற்கு கேள்விகளை எழுப்ப, இரு கைகளையும் இருவர் புறமும் நிறுத்து என்பது போல் சைகை செய்து அப்படியே சில நொடிகள் நின்று இருவரையும் தவிக்க விட்ட பிறகு சுபவாணி சொன்னாள்.

” நான் தங்கி இருக்கும் பிஜியில் எனக்கு எதிர் அறையில்தான் அவர் தங்கி இருக்கிறார்”

 இரு பெண்களுக்கும் அட ச்சை என்றாகிவிட்டது. “இதற்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தாயா?” அனன்யா சலிக்க, “அடி போடி ஏதாவது என் வாயில் வந்திடப் போகுது” தக்ளா தோழியை முறைத்தாள்.

” ஏய் காலேஜ் இல்லாமல் வெளியில் தினமும் நான் அவரை பார்க்கிறேன். இது பெரிய விஷயம் இல்லையா?” 

” என்ன பெரிய விஷயம்? எத்தனை தடவை நீ அவரிடம் பேசி இருக்கிறாய் சொல்லு”

” அது… சுபவாணி தலையை சொரிய, “ம்… எதிரெதிர பார்த்தும் நீ யாரோ நான் யாரோன்னு நீ பாட்டுக்கு மூஞ்சிய திருப்பிட்டு போய் இருப்ப,நான் நினைக்கிறேன் அந்த ஆத்திரத்தில் தான் அவரு நேற்று கிளாஸ்ல உன்ன பனிஷ் பண்ணினாரோ?” ஆருடம் கேட்டாள் தக்ளா.

 அனன்யாவோ வேறு சிந்தனையில் இருந்தாள். “உன்னோட பிஜிலையா தங்கி இருக்காருன்னு சொல்ற?  வசதியான வீட்டு ஆள்னு டைரக்டர் சொன்னாரே” 

” இருக்கலாம் மேடம். அவருக்கு பிஜில தந்து இருக்கிற ரூம் ஸ்பெஷல் ரூம். உள்ளேயே ஏசி கூட இருக்குதுன்னா பாத்துக்கோங்களேன்” 




இப்போது மூன்று பெண்களுக்குமே மனதில் ஒரே கேள்விதான் எழுந்தது. அவ்வளவு வசதியானவன் எதற்காக இந்த வேலை பார்க்க வர வேண்டும்?

சுபவாணி மீண்டும் பிஜிக்கு திரும்பிய போது ரியோ ரிஷப்சனில்தான் அமர்ந்திருந்தான்.காலடியோசைக்கு மொபைலிலிருந்து நிமிர்ந்தவன் இவளை பார்த்ததும் உதட்டை அலட்சியமாக சுளித்தபடி மீண்டும் போனுக்குள் குனிந்து கொண்டான்.அதென்ன இவனுக்கு எப்போது என்னை பார்த்தாலும் இப்படி ஒரு அலட்சியம்? ஓரக் கண்ணால் அவனை பார்த்தபடி கடந்தவள் தன் அறைக்கு வந்ததும் சலித்தாள்.

ப்ளூடூத் ஸ்பீக்கரில் ஒரு ஆங்கிலப் பாடலை உச்சஸ்தாதியில் அலற வைத்து கூடச் சேர்ந்து பாடியபடி லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தாள் ஸ்வரூபா.ஹார்ம் பளீஸ் எனக் கத்தும் ஆவலை அடக்கியபடி உடை மாற்றிய சுபவாணி,

மெல்ல அவள் அருகே போய் ஸ்பீக்கரில் சவுண்டை பாதியாக குறைத்தாள்.

 “இப்படி வைத்து கேட்டாயானால் யாருக்கும் தொந்தரவு இருக்காது”  

 சாதாரணமாக இதற்கெல்லாம் கட்டுப்பட்டு இருப்பவள் அல்ல ஸ்வரூபா. ஆனால் ஏனோ அன்று ஆச்சரியமாக தலையசைத்து தனது வேலையை தொடர்ந்தாள். சுபவாணியும் தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.

இருவரும் இரவு உணவு முடித்து வந்த பின் “சுபா எனக்கு ஒரு ஹெல்ப்…”கெஞ்சுதலாய் ஆரம்பித்தாள் ஸ்வருபா.

 சுபவாணியின் மனதில் அபாய மணி அடித்தது.கடவுளே இன்றைக்கும் இவள் அவுட்டிங்கா? அந்த விடுதியை 60 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் இணைந்து நடத்திக் கொண்டிருந்தனர். ஆண் பெண் இருபாலரும் தங்க அனுமதித்திருந்தாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிறையவே அங்கே கட்டுப்பாடு உண்டு. 

இரவு 10 மணிக்கு மேல் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அது போல் பத்து மணிக்குள் உள்ளே வராதவர்கள் அவர்களுடைய பெற்றோரோ அல்லது கார்டியனோ மூலமாக அவர்கள் தாமதத்திற்கான காரணத்தை சொன்ன பிறகே மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

இதற்கு முன்பு இரண்டு முறை ஸ்ரூபா இந்த கட்டுப்பாடுகளை உடைத்து வெளியே போயிருக்கிறாள். உடன் இருப்பவளுக்கு தெரியாமல் போக முடியாததலால் அந்த நேரங்களில் எல்லாம் அவன் சுபவானியிடம் மிக இணக்கமாகவே சென்று விடுவாள்.

 இதனை பி.ஜி ஓனருக்கும் தெரிவிக்க முடியாமல் ஸ்வரூபாவையும் கட்டுப்படுத்த முடியாமல் திக் திக் மனதுடன் அந்த இரவை கடப்பாள் சுபவாணி. ஏனெனில் இரவில் திடீரென்று தோன்றினாற் போல் அறையை செக் செய்ய வரும் பி.ஜி ஆன்ட்டி சைலஜாவை சமாளித்து அனுப்ப வேண்டும்.

 அன்றும் ஸ்வரூபாவின் கட்டிலில் தலையணை போர்வையை மூடி செட் செய்து விட்டு “பார்த்துக் கொள்” என்று விட்டு கிளம்பினாள். 

விடுதியின் பின்பக்க வேலியில் சற்றே தளர்ந்திருந்த இடத்தை பயன்படுத்தி அவள் நண்பனுடன் வெளியே போய்விடுவாள். 

ஐந்தே நிமிடங்களில் போனில் “சுபா என்னோட ஹேண்ட் பேக்கை அங்கே விட்டுட்டு வந்துட்டேன். ப்ளீஸ் கொண்டு வந்து தாயேன். நான் வேலிக்கு வெளியே நிற்கிறேன்.திரும்ப உள்ளே வர முடியாது” என்றாள்.

  சுபவாணிக்கு திக்கென்றது. இடுக்கில் மாட்டிக்கொண்ட எலியின் மனோபாவத்தோடு பேக்கை எடுத்துக்கொண்டு யாரும் அறியாமல் விடுதியின் பின்பக்கம் போய் வேலிக்கு அந்தப் பக்கம் இருளில் நின்றவளிடம் பேக்கை தூக்கிப்போட்டுவிட்டு வேகமாக உள்ளே வந்தபோது, “யார் அந்த திருடி?” என்ற குரல் ஹிந்தியில் ஒலித்தது.

 அங்கே பின் வாராண்டாவில் அரை இருளுக்குள் ஓரமாகக் கிடந்த நாற்காலியில் இருந்து எழுந்து வந்தான் ரியோ.




What’s your Reaction?
+1
35
+1
30
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!