Serial Stories

கடல் காற்று-45

  45

அந்த பளபளப்பான ஆரஞ்சு நிற குழைவான ஷிபான் துணியினை டேபிள் மேல் விரித்து வைத்து கட் பண்ணினாள் மேகலை .நான்கு நாட்கள் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள் . செல்வமணியும் நேரம் கிடைக்கும் போது இங்கே வந்துவிட நான்கு பெண்களுமாக சேர்ந்து வீட்டை கலகலப்பாக்கி கொண்டிருந்தனர் .

இவர்களது சந்தோசத்தை மயில்வாகன்ன் தள்ளியிருந்தே ரசித்தபடியிருந்தார் .ஏனெனில் புவனாவை தவிர யோகனோ , செல்லாவோ…ஏன் சமுத்ராவோ கூட அவரை மன்னிக்க தயாராக இல்லை .அதனை உணர்ந்து இவர்களுடன் கலந்து கொள்ள ஆசைப்படாது தள்ளியிருந்தே இவர்களை பரவசத்துடன் பார்க்க பழகியிருந்தார் அவர் .

நாளை மேகலை ஹாஸ்டல் போய்விடுவாள் .அதன் பிறகு வீடு வெற்ச்சென்றாகி விடும் .அன்று சாவித்திரியை பிரியவே மாட்டேன் என யோகன் சமுத்ராவிடம் சொன்ன நாளிலிருந்து அவனருகில் உணவருந்த கூட அமர்வதில்லை சமுத்ரா .ஒரு அலட்சிய கையசைவுடன் அதை கண்டுகொள்ளாமலேயே அவனும் சென்று கொண்டிருந்தான் .புவனாதான் இவர்களை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .

ஒருவேளை மேகலாவையும் , செல்வமணியையும் புவனாதான் இங்கே வர வைத்திருப்பாளோ …? என்ற சந்தேகம் கூட சமுத்ராவிற்கு இருந்த்து .இவர்.கள் வந்து சமாதானப்படுத்தியா என் வாழ்வு சரியாக போகிறது ..? சமாதானப்படுத்த வேண்டியவன் பார்வையை கூட திருப்பாமல் போய் கொண்டிருக்கிறான் …மனதினுள் ஏக்கமாக நினைத்தபடி பெருமூச்செறிந்தாள் சமுத்ரா.

” அண்ணி இந்த துணி எவ்வளவு அழகா இருக்குது இல்லை ..? “

” ம் ..மிக மென்மையாகவும் …பார்த்தவுடன் அணிந்து பார்க்க தூண்டுகிறது ” சமுத்ரா அதனை மென்மையாக வருடினாள் .

” புது மாடல்ல டாப்ஸ் தைக்கலாம்னு இருக்கேன் .எப்படின்னு யோசிக்கிறேன் ” பென்சிலை வாயில் வைத்து யோசித்தாள் .

” நான் ஒரு ஐடியா சொல்லவா ..? இப்பொழுது சைஸாக வெட்டி விட்டாயல்லவா ..? இனி இந்த உடம்பு பக்கம் , கை பக்கம் என முழுவதுமாக மூட்டுவதற்கு பதிலாக மூன்று செண்டிமீட்டர் இடைவெளி விட்டு கைகளையும் , இடுப்பையும் …துண்டு துண்டாக இடைவெளி விட்டு ஆங்காங்கே தைத்து விடு .துணி குழைவாக இருப்பதால்  இந்த இடைவெளி யாருக்கும் தெரியாது .மேலும் இந்த மாடல் உடலை இறுக்கி பிடித்து வடிவையும் காட்டாது .பார்க்க மாடர்னாகவும் இருக்கும் . டிரை பண்ணி பாரேன் ” என்றாள் .

” சூப்பரண்ணி …நிச்சயம் நன்றாக இருக்கும் ” என்றவள் பத்தே நிமிடத்தில் அதனை தைத்து முடித்தவள் ” அண்ணி நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்லா வந்திருக்கு .ம் ..இப்போ இதை போட்டு பார்க்க ஒரு மாடல் வேணுமே .யாரை பிடிக்கலாம் ? ” என யோசித்தாள் .

உடல் மெலிய வேண்டுமென டாக்டர் சொல்லியதால் அதற்காக வாக்கிங் , ஜாக்கிங் என கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வமணி சமுத்ராவின் பார்வையில் பட்டாள் .தனது குரலை சிறிது உயர்த்தி ” செல்லா அண்ணியிடம் முயற்சித்து பாரேன் மேகலை ” என்றாள் .

” என்னதும்மா ..? என்ன ..? என்ன …? ” என ஆவலாக அவர்கள் இருக்குமிடம் வந்தாள் செல்லா.

” இதோ இதைத்தான் செல்லாக்கா …உங்களுக்காகவே …அளவெடுத்தது போல் பார்த்து பார்த்து தைத்து வைத்திருக்கிறேன் .போட்டு காட்டுங்களேன் ” என்றபடி மேகலை நீட்டிய துணியை பார்த்த செல்லா எரிமலையானாள் .

” ஏன்டி உங்க இரண்டு பேருக்கும் என்னை பார்த்தால் எப்படியடி தெரிகிறது ..? இதையெல்லாம் போடும் வயதா எனக்கு ..? அதுவும் இது நான் போடுவது மாதிரியா இருக்கிறது ..? இரண்டு எருமையும் கிண்டலா பண்ணுறீங்க ..? ” கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு செல்லா அவர்களை விரட்ட இருவரும் அடுப்பில் நின்ற புவனாவிடம் ஓடிப்போய் நின்று கொண்டனர் .

” சமுத்ரா என்ன இது ..? இப்போது நீ இப்படி ஓடலாமா ..? பார்த்து நடக்க மாட்டாயா ..? ” புவனா அதட்ட , ” மேகலை அத்தையிடம் டிரை பண்ணேன் ” என்றாள் சமுத்ரா .

” ஐ…நல்ல ஐடியா ..அம்மா ப்ளீஸ்மா ..நீங்களே போட்டு காமிங்க ..” என மேகலை புவனாவிடம் அந்த டாப்ஸ்சை நீட்டினாள் .

” அடிக் கழுதைங்களா ..என்னையும் சேர்த்து ஓட்டுறீங்களா ..? ஓடுங்கடி ..இன்னைக்கு ஒருத்திக்கும் சாப்பாடு கிடையாது ” மூவரின் தலையிலும் செல்லமாக குட்டினாள் புவனா .

” ஐய்யய்யோ வேண்டாம் அத்தை .எனக்கு இப்போதே பசிக்கிறது .இப்படி பழி வாங்காதீங்க .ஏய் நூடுல்ஸ் நீ வேறு யாரையாவது மாடலாக்கிக்கோ போடி …” சமுத்ரா .
” என்னது நூடுல்ஸா …?” மேகலை முறைக்க ..

” ஆமாம் மேகலை சுருங்கி மேகி …மாறி …நூடுல்ஸ் …”

” ஓஹோ மாமியாரும் மருமகளும் ஒன்றாக சேர்ந்துக்கிட்டாங்க மேகலை .இனி நம்ம இரண்டு பேரையும் ஒரு வழி பண்ணிடுவாங்க.அதுக்கு முன்னாடி இவுங்களை தம்பிகிட்ட சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கனும் நூடுல்ஸ்  …இல்லை …மேகி ..ஐய்யோ சாரி மேகலை …” என கேலியைத் தொடர்ந்தாள் செல்வமணி .

” அது சரி செல்லாக்கா .ஆனால் நீங்கள் என் பக்கமா ..? அவர்கள் பக்கமா ..? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறதே ” மேகலை தலையை சொறிந்தாள் .

” அட நான் எப்போதும் என் அருமை தங்கை பக்கமேதான்மா …”

” போங்கப்பா என்னோட அழகான மாடலை போட்டுக் காட்ட ஆளில்லை ..என்ன என் பக்கம் ..? ” என்றவள் ” அண்ணி வேறு வழியில்லை .இதை நீங்கள்தான் போட்டு காட்ட வேண்டும் ” என்றாள் .

” என்னது ..? நானா ..? உதை வாங்குவாய் ..நீ ..? “

” ஆமாம் அண்ணி .இங்கே நீங்கள்தான் மெல்லிடையாளாக இருக்கிறீர்கள் .அதனால் நீங்கள்தான் போட வேண்டும் .” சமுத்ராவின் சிறிய இடையை சுட்டியபடி மேகலை சொல்ல ” மேகலை உன் அண்ணியின் சின்ன இடையை இப்போதே ரசித்துக் கொள் .இன்னும் சிறிது நாட்களில் பாப்பா வளர வளர இடை பெருத்து விடும் ” புவனா கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் வலியுறுத்தியபடி சமுத்ராவை பார்த்தாள் .

தன்னையறியாமல் சமுத்ரா தன் இடையை தடவிப் பார்த்த போது ,” உஷ் ஒரு போன் பேச முடியாமல் வளவளன்னு என்ன இங்கே சத்தம் ..? ” என போனை காதில் வைத்தபடி  வந்து நின்றான் யோகேஷ்வரன்.

சட்டென்று சளசளப்பு அடங்கி அந்த இடம் அமைதியாக வாசலில் நின்ற யோகனை தாண்டி முதல் ஆளாக வெளியேறி விட்டாள் புவனா .

” அண்ணா இது நான் புதிதாக தைத்த டாப்ஸ் . அண்ணி இடை மெலிந்து இருப்பதால் இதனை அவர்களை போட்டுக் காட்டச் சொல்லி , கேட்டுக் கொண்டிருந்தேன் ” மேகலை சொல்லும் போதே யோகனின் விழிகள் மனைவியின் இடையினை வருடுவதைக் கண்ட செல்வமணி மேகலையின் கையை பற்றி இழுத்தபடி  வெளியேறினாள் .

இப்போது சமுத்ராவும் வெளியேறி விடலாம் .ஆனால் யோகன் நன்றாக நகர்ந்து வாசலை அடைத்தாற் போல் நின்றிருந்தான் .மற்றவர்கள் வெளியேறும் போது , விலகி வழிவிட்டவன் எனக்கு வழி விடுவானென தோன்றவில்லை .மேலும் அப்படி அவனருகே போய் கடக்க சமுத்ராவிற்கும் விருப்பமில்லை .அதனால் அவனை கவனியாத்து போல் அவனுக்கு முதுகை காட்டியபடி நின்றாள் .

” ரொம்ப நன்றி சமுத்ரா .இது போல் நம் வீட்டை மாற்றியதற்கு .இது போலெல்லாம் கலகலப்பாக இந்த வீடு மாறுமென்று நான் நினைத்ததே இல்லை தெரியுமா ..? ” என்றான் .

பத்துநாட்களாக இப்படி ஒரு ஜீவன் இருப்பதையே உணராமல் மூஞ்சியை திருப்பிக கொண்டு போனாயே …இன்றென்ன அக்கறை எடுத்து என்னோடு பேச தோன்றியிருக்கிறது உனக்கு ..? உன் குடும்பத்தை கலகலப்பாக வைத்திருப்பதற்கு நன்றிக்கடனாக்கும் ….சமுத்ரா மனதிற்குள்ளாக அவனிடம் இப்படி கேட்டாள் .

இவன் எங்கள் கலாட்டாக்களை ரசித்துக் கொண்டுதானிருந்திருக்கிறான் .பிறகு என்ன பெரிய இவன் மாதிரி அப்படி ஒரு அதட்டல் …மனதிற்குள்தான் இதையும் சமுத்ரா நினைத்துக் கொண்டாள் .சாவித்திரியை என் வாழ்விலிருந்து பிரிக்க முடியாது என்று எப்போது சொன்னானோ ,அன்றிலிருந்தே அவன் முகம் பார்ப்பதைக் கூட தவிர்த்து வந்தாள் .வழக்கமாக இப்படி சமுத்ராவை முகம் திருப்ப யோகன் விட்டதில்லை .அவள் பின்னேயே வந்து எதையாவது சொல்லியபடி சீண்டிக் கொண்டே இருப்பான் .ஆனால் இந்த முறை அதற்கான முயற்சிகள் எதுவும் செய்யாமல் அவனும் மௌனமாகவே வளைய வந்து கொண்டு இருந்தான் .




கிட்டதட்ட பத்து நாட்களுக்கு பிறகு இப்போதுதான் பேசியிருக்கிறான் .யாரோ ..யாரிடமோ பேசுகின்றனர் என்ற பாவத்தில் , பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றி தேவையேயில்லாமல் சுட வைக்க தொடங்கினாள் சமுத்ரா .

” செல்லாவின் கணவரிடம் பேசி அவரை ட்ரீட்மென்ட்டுக்கு சம்மதிக்க வைத்திருக்கிறாய் ..? இதற்கெல்லாம் உனக்கு நான் என்ன செய்ய போகிறேன் ..? இப்படி அவரிடம் பேச வேண டுமென்று எனக்கு தோணினதேயில்லை .”

” அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை .அவருக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேண்டும் .அதை விட்டு விட்டு உங்களிடம் வேலை செய்யும் எடுபிடியை போல் நடத்தினால் எப்படி ..? ” கோபமாக கேட்டாள் .

” இல்லை சமுத்ரா ..நான் ஊர் முழுவதும் எல்லோரையும் குடிக்கக் கூடாது என சொல்லிக் கொண்டிருக்கிறேன் .ஆனால் இந்த ஆள் … ” என்றவன் சமுத்ராவின் முறைப்பைக் கண்டதும் ” இவர் …என்று அழைக்கும் முறைக்காக தடுமாற , ” அக்கா கணவர் ..உங்களுக்கு மச்சான் .” என உறவுமுறையை கூறினாள் .

” ம் ..மச்சான் எந்நேரமும் குடித்துக் கொண்டேயிருப்பாரா ..? அதனால் எனக்கு இவர் மீது வெறுப்பு “

” ஆமாம் அவரது மனைவியை நீங்கள் அவரிடமிருந்து பிரித்து உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் .பிறகு பாவம் அந்த மனிதர் என்ன செய்வார்..? “

” ஓ..அப்போது மனைவியை பிரிந்த கணவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்களா ..? ” சமுத்ராவை உற்று பார்த்தபடி கேட டான்.

” ஆமாம் ஒரே ஒரு மனைவியோடு வாழுபவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் .” உடனடியாக பதிலடி கொடுத்தாள் .

” அப்பா …கொதிக்கிறதே …” கேலியோடு கூறிய யோகனை முறைத்தவளுக்கு அடுப்பைக் காட்டினான் . ” நீ சுட வைத்த தண்ணீர்மா ..கொதித்து கொண்டு இருக்கறது பார் ” என்றவன் சற்று நிறுத்தி ” அணைக்கட்டுமா ..? ” என்றான் .

அவன் குரலில் வழிந்த தாபத்தில் திணறி திடுக்கிட்டு விழித்தவளிடம் ” அடுப்பை சொன்னேன்மா …” என்றபடி உள்ளே வந்து அடுப்பை அணைத்தான் .” நீ என்ன நினைத்தாய் …? ” என்று வேறு கேட்டான் .

ம்ஹூம் ..இனி இங்கேயிருக்க கூடாது என்றெண்ணி  வெளியேற போனவளின் கைகளை பற்றினான் .” மேகலையின் விபரம் எனக்கு சொல்ல மாட்டாயா சமுத்ரா .அவளை இங்கே ஒரு வருடத்திற்கு வரவே விட கூடாது என று அந்த பிரின்சிபாலிடம் நீ சொல்லிக் கொண்டிருந்த்தை நான் கேட்டேன் . ஆனால் இப்போது வந்திருக்கிறாள் . உன்னோடு பாசமாக இழைகிறாள் .என்ன விசயம் சமுத்ரா ?.நான்தான் உனக்கு லாவண்யா விபரம் முழுவதும் சொல்லி விட்டேனே ” என்றான் .

” தொடாமல் பேசுங்கள் ..” என அவனிடம் சீறியபடி கைகளை விடுவித்துக் கொண்டவள் ” அவள் பழைய அசட்டுத்தனங்களை முழுவதுமாக விட்டுவிட்டாள் .அதனை நன்கு தெரிந்து கொண்டுதான் இங்கே வர அனுமதித்தேன் “

” அசட்டுத்தனம் …? அவள் பொதுவாக கொஞ்சம் அசடுதான் சமுத்ரா .சிறு பெண்தானே .ஆனால் ஒரு வருடம் இந்த பக்கமே வரவிடக்கூடாத அளவிற்கென்றால் ….என்ன விசயம் சமுத்ரா …? “

தன் கை விரல் நகங்களை ஆராய்ந்தபடி மெல்ல” அமல்ராஜ் ” என்றாள் சமுத்ரா .

யோகனின் உடல் இறுகுவது தெரிந்த்து .” அவன் என்ன செய்தான் ..? ” குரலில் வெறி தெரிந்த்து .

” அவன் என்ன செய்தான் ..? அவன் வேலையை அவன் காட்டினான் .ஒரு பொறுக்கிப்பயலை கொண்டு வந்து விபரமறியா பசுந்தளிர் இருக்குமிடத்தில் வைத்தது உங்கள் தவறு .அந்த நாய் மேகலையிடம் என்ன பேசியதோ ..?இவள் அவன் பேச்சிற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறாள் .சொன்னால் புரிந்து கொள்வாளென தோன்றவில்லை .அதனால்தான் இங்கிருந்து அவளை அனுப்பிவிட எண்ணி இப்படி செய்தேன் .மேகலையின் கலை ஆர்வம் அவளுக்கு இந்த பித்தினை தெளிய வைத்துவிடுமென எண்ணித்தான் அவள் விரும்பிய கலை பயிலும் கல்வியில் சேர்த்தேன். என் கணிப்பு தப்பவில்லை “




” அவனை இப்போதே வெட்டிப் போட்டு விட்டு வருகிறேன் . ” கைகளை முறுக்கியபடி கிளம்பியவனை இழுத்து நிறுத்தி தடுத்தாள் .

” வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போகப் போகிறீர்கள் போல. அவன் பாட்டுக்கு ஊருக்குள்தானே திரிந்து கொண்டிருந்தான் .அவனை ஏன் வீட்டினுள் கொண்டு வந்து விட்டீர்கள் .? தவறை நீங்கள் செய்துவிட்டு …இப்போது கைகளை முறுக்கிக் கொண்டிருக்கிறீர்களே ..? “

ஏனென்றால் அப்போது நீ ஊருக்குள் தானே சுற்றிக் கொண்டிருந்தாய் .அவன்தான் நீ எங்கே போனாலும் உன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தானே ..அதனால் என் பார்வையில் இருக்கட்டும் என இங்கே கொண்டு வந்து வைத்தேன் .யோகன் இதனை மனதிற்குள்தான் சொல்லிக் கொண்டான் .நேரடியாக சமுத்ராவிடம் கூற அவனென்ன பைத்தியமா ..?

” உனக்கு எங்கே யார் தவறு செய்தாலும் , அதற்கு மூலகாரணம் நானாகத்தான் இருப்பேன் .எப்போதும் என்னை குற்றவாளியாக நிறுத்தி வைப்பதில் உனக்கு தனி ஆனந்தம் ” என வெளியே அலுத்துக் கொண்டான் .

அப்படியா இருக்கிறேன் என சமுத்ரா சுயஅலசலில் இறங்கிய போது அவளுக்கு மிக அருகில் வந்தான் யோகன் .” என் தாயை , தங்கையை , அக்காவை செப்பனிட்டு மீண்டும் எனக்கு தந்திருக்கிறாய் சமுத்ரா ..? நான் இதற்கு என்ன செய்யட்டும் உனக்கு ? ” என்றபோது யோகனின் குரல் நெகிழ்ந்த்து .

அந்த சாவித்திரியை விட்டுவிடுகிறாயா ..? என கேட்க நா நுனி வரை வந்து விட்ட வார்த்தைகளை சிரமப்்பட்டு உள்ளே தள்ளினாள் . அப்படி பிச்சை கேட்டு பெற்று இவனுடன் உனக்கென்ன வாழ்வு வேண்டிக் கிடக்கிறது ஆர்ப்பரித்த மனதினை அதட்டி அடக்கினாள் .

” தொடக்கூடாது என்று சொல்லியிருக்கிறாய் முத்ரா .ஆனால் என்னால் முடியவில்லை . என் உயிரை சிறிது சிறிதாய் சுவைத்தபடி நீயென் எதிரிலேயே இருக்கும் போது , தொடாமல் தள்ளியிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா ..? ” சொல்லிய வார்த்தை முடியும் முன்பே அவளை வாரி இறுக அணைத்தான் .

” நானும் பத்து நாட்களாக முயற்சித்தேன் உன்னை விட்டு விலகி நிற்க வேண்டுமென்று .ஆனால் அதில் மிகப் பெரிய தோல்விதான் எனக்கு .தடுக்க தடுக்க உடனே உன்னை தொட வேண்டுமென்றுதான் …” இதழ்களை கழுத்தினுள் புதைத்தான் .

குளிரும் , சூடுமாக ஏதேதோ உணர்ச்சிகள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வடிய, நிற்க முடியாமல் திணறிப் போனாள் சமுத்ரா .இவனென்ன செய்து கொண்டிருக்கிறான் …? அவள் எனனவாகிக் கொண்டிருக்கிறாள் .கண்கள் சொருகி மயக்கம் வரும் போலிருக்க மெல்ல துவண்டாள் .

கடவுளே ..முருகா இந்த மயக்கத்திலிருந்து என்னை மீட்டெடுத்து விடப்பா …வேறு வழியின்றி தெய்வத்தை சரண்டைந்தவள் மெல்ல தன்னை திடப்படுத்திக் கொண் டு  அழுத்தி அவனை தள்ளினாள் .மனைவியின் மறுப்பை உணர்ந்து மெல்ல அவளை விலக்கி நிறுத்தினான் யோகன் .

” அண்ணனை வரச்சொல்லி அன்றே போன் செய்து பேசிவிட்டேன் .இரண்டொரு நாளில் வந்துவிடுவார் .அவருடன் சேர்ந்து நானும் கிளம்பி விடுவேன் .” இதனை யோகனன் கண்களை பார்க்காமலேயே சொல்லிவிட்டு வெளியேறினாள் .

அவள் சென்ற திசையை வேதனையுடன் வெறித்தபடி நின்றான் யோகேஷ்வரன்.




What’s your Reaction?
+1
16
+1
12
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!