சன்டே விடுமுறை என்பதால் அனைவரது வீடுகளிலும் அசைவ விருந்து தயாராகிக் கொண்டிருக்கும். அதுவும் தற்போது வட தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயம் அனைவருக்குமே நல்ல காரசாரமான அசைவ உணவை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். உங்களுக்கும் அப்படி தோன்றுகிறது என்றால், இன்று உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியைக் கொண்டு மதுரை ஸ்டைலில் சாப்ஸ் செய்யுங்கள். இந்த மதுரை ஸ்டைல் நாட்டுக்கோழி சாப்ஸ் சுவையாக இருப்பதோடு, சளிக்கும் நல்லது. சளி பிடித்திருக்கும் போது, இந்த மதுரை ஸ்டைல் நாட்டுக்கோழி சாப்ஸை செய்தால், சட்டென்று சளி இளகி, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பாக இந்த சாப்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த நாட்டுக்கோழி சாப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
கீழே மதுரை ஸ்டைல் நாட்டுக்கோழி சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி – 1 கிலோ
* வரமிளகாய் – 20
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1 * கிராம்பு – 2
* பெரிய வெங்காயம் – 1
* சின்ன வெங்காயம் – 15
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* தக்காளி – 2
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
அரைப்பதற்கு…
* தேங்காய் – 1/2 மூடி
* சோம்பு – 1 டீஸ்பூன்
* கசகசா – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம் :
* முதலில் வரமிளகாயை நீரில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஊற வைத்த வரமிளகாயை மிக்சர்ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில், தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு இரும்பு வாணலி அல்லது மண் பானையை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள வரமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து, ஒரு 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு மல்லித் தூள், சிக்கன் மசாலா மற்றும் கரம் மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக மசியும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் நாட்டுக்கோழியை சேர்த்து, மசாலா கோழியுடன் சேரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து குறைவான தீயில் வைத்து, 30 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். * குழம்பு மிகவும் நீராக இருந்தால், தீயை அதிகரித்து 10 நிமிடம் நீரை வற்ற வைக்க வேண்டும்.
* நீர் நன்கு வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் மிளகுத் தூள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி, அதன் பின் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வைக்க வேண்டும். இப்போது சுவையான மதுரை ஸ்டைல் நாட்டுக்கோழி சாப்ஸ் தயார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1