Short Stories sirukathai

ஆ! அமலி டீச்சர் (சிறுகதை)

பொல பொலவென்று கைகளில் சொட்டிய மழைத் துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என் கணவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பின்னே! கன்னியாகுமரி கடற்கரையோரம் ஒரு கையில் குச்சி ஐஸ் வைத்துக் கொண்டு,மறு கையில் மழைத் துளிகளை கையில் ஏந்திக் கொண்டு .. மெல்லிய காற்றின் கடலோசையில் ஒரு குழந்தையாய் மாறியிருந்த என்னை எனக்கு மிகவும் பிடித்துப் போனது .

நான் என்றால்.. நானே தான் . ரோஜாவை இந்தப் பெயரில் அழைத்தால் என்ன? தனக்கென எந்த ஒரு அடையாளமும் இல்லாத குடும்பத் தலைவிகளுள் நானும் ஒருத்தி. கணவர் பேங்க் மேனேஜர். பேங்க் வேலை தான் அவர் முதல் மனைவி.ஒரே பெண். அவளை என்னை மாதிரி இல்லாமல் அவளுக்குப் பிடித்ததை செய்வது போல் சுதந்திரமாக வளர்க்கிறோம்..பெங்களூரில் அவளுக்குப் பிடித்த காலேஜில் அவள் விரும்பிய ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கிறாள்.

வருடக்கணக்காக வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் போகிறது.தனிமையின் மாயக்கரங்கள் மனதை இறுக்கியதால் கணவருடன் ஒரு வார கன்னியாகுமரி பயணம்.

” செகண்ட் ஹனிமூனா..என்ஜாய் மம்மி.” மகள் போனில் கிண்டல் அடித்தாள் .

கிழிஞ்சுது போ.இத்தனை வருட திருமண வாழ்வில் தனியாகவே இப்போது தான் வந்து இருக்கோம். இது முதல் “தனி மூன்” என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

கடற்கரைக்கு எதிரே கடலைப் பார்த்த படி காட்டேஜ். இவர் இங்கு வந்தும் லேப் டாப்பில் வேலை பார்க்க, நான் அலைகளை ரசித்தபடி புத்தகம். பாடல், வாக்கிங் என் பொழுதுகள் சுவாரஸ்யமாக கழிந்து கொண்டிருந்தன.

கடல் என்றாலே சிலிர்ப்பு தான். மூன்று கடல்கள் சங்கமித்து ,மூன்று வண்ணங்களில் கடல் நீர் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதைவிட இரண்டு மனங்கள் சங்கமிப்பது தான் இன்றைய உலகில் மாபெரும் சவாலாக உள்ளது . சூன்யத்தின் உள்ளே நிரம்பிய சூன்யமாய் தனிமைக்குள் வெறுமையை நுழைய விடாமல்
அலைகள் மாறி மாறி ரீங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

கடற்காற்று பிசுபிசுப்பின்றி குளிரை ஊடுருவியது. எத்தனை மனிதர்களின் அஸ்தியை உள்வாங்கிய கடல்.எத்தனை ஆன்மாக்களை தாலாட்டும் கடல்.உடலை வருடும் காற்றின் துளிகளில் கூட எவ்வளவு உயிர்களின் மூச்சுக்காற்று நிரம்பியிருக்கும். நினைத்தவுடன் மறுபடி உடல் சிலிர்த்தது.

கடற்கரையில் திடீரென ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு,மூன்று பேர் இறங்கி விட்டு காரிலிருந்து கைத்தாங்கலாக ஒரு முதியவரை கீழே இறக்கினர். ஒரு நாற்காலியில் மெதுவாக அமர வைத்தனர் . அவரது மனைவி போல் இருந்தவர் குனிந்து பணிவாக அவரிடம் ஏதோ கேட்டார். அதற்கு அவர் கோபத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின் முகம் அவமானத்தில் சிவந்து குன்றிப்போனது. ரொம்பத் தெரிந்த முகமாக இருந்தது. சட்டென்று ஞாபகம் வரவில்லை. யோசித்தபடி இருந்தேன்.
ஆ ! அமலி டீச்சர்….”

யாரை வாழ்க்கையில் சந்திக்கக் கூடாது என்று நினைத்து இருந்தேனோ, யாரிடம் அளவுக்கு அதிகமாய் அன்பு வைத்திருந்தேனோ, யாரிடம் உலகத்திலேயே அதிகளவு கோபம் கொண்டிருந்தேனோ அந்த அமலி டீச்சரை
இங்கே, இப்படி பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

கணவரிடம் சொல்லிவிட்டு தயக்கத்துடன் அங்கே சென்றேன்.

” அமலி டீச்சர் “

திடுக்கிட்டுத் திரும்பிய அமலி டீச்சருக்கு என்னை அடையாளம் கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனது.

வாழ்க்கையில் சில பொழுதுகள் வெற்றுக்கணங்களாக கனக்கும் . என்ன கேட்க என்று எனக்கும் புரியவில்லை. என்ன பேசுவது என்று அவருக்கும் தெரியவில்லை. உள்ளோடிய மவுனங்களே ஓராயிரம் கதைகள் பேசின.

தன் கணவரிடம் மெல்லிய குரலில் ஏதோ கூறிவிட்டு வந்தார். இருவரும் மெதுவாக நடந்து கடற்கரை மணலில் அமர்ந்தோம்.




என் மனம் சரசரவென்று பால்யத்துக்குத் தாவியது.

எங்கள் தெருவில் எங்க வளவில் இருந்து ஐந்து வளவு தள்ளி அமலி அக்கா வீடு இருந்தது. ஒரே பெண். அப்பா கிடையாது. அம்மா முனிசிபல் ஆபிஸில் வேலை பார்த்து வந்தார்கள். அமலிக்கா பி.காம் முடித்து வேலைக்கு முயற்சி பண்ணிக்கொண்டு இருந்தாங்க. அவங்க அம்மா துபாயில் வேலை பார்க்கும் தன் தம்பிக்கு அக்காவை கல்யாணம் பண்ணிக்குடுக்க நினைச்சாங்க. அக்காவுக்கு அதில் இஷ்டம் இல்லை. எனவே அடிக்கடி வீட்டில் சண்டை நடக்கும்.

என் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அமலிக்காவிடம் ட்யூஷன் படித்தேன் . என்னுடன் எங்க வளவில் இருந்த குழந்தைகள் அனைவரும் படித்தார்கள். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கினாலும் அங்கே எல்லோருடனும் சேர்ந்து படிக்க ரொம்பப் பிடிக்கும்.

எல்லோரும் அவங்களை அமலி டீச்சர் என்று கூறினாலும், எனக்கென்னவோ அமலிக்கா என்று கூப்பிடத்தான் பிடிக்கும். அதே போல் எல்லாரையும் விட அவங்க என்னிடம் கூடுதலாக பிரியம் காட்டினாங்க.

அமலி டீச்சர் ஒல்லியா, பொன்வண்ணத்தில் இருப்பாங்க. நீண்ட கூந்தல். ஒற்றைப்பின்னல் பாம்பு மாதிரி கீழிறங்கும். பெரிய கண்கள். சிரித்த முகம். இனிமையான குரல். எங்களுக்கு அப்போதிருந்த ஸ்ரீதேவி , ஸ்ரீப்ரியா , மாதவியை விட அமலி டீச்சர் தான் பேரழகி.

வாழ்க்கையை அதன் வேரிலிருந்து துளித்துளியாய் ரசித்து வாழச் சொல்லிக்கொடுத்தவங்க.

அக்காவுடன் சேர்ந்து கமல், ரஜினி தாண்டி மம்முட்டி, ஜாக்கி ஷ்ராஃப் , அனில் கபூர் எல்லாம் ரசிக்கக் கற்றுக்கொண்டோம். இளையராஜா பாடல்கள் தேவ கானங்களாக இருந்தன. காலையில் இருந்து மாலை வரை இலங்கை வானொலி கேட்டோம். ரூபவாஹிணி பார்த்தோம். வானொலியில் ஹிந்தி விவிதபாரதி , பிபிசி, ரேடியோ மாஸ்கோ, ரேடியோ சீனா எல்லாம் கேட்க ஆரம்பித்தோம்.ரசனைகள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த காலம் அது. அக்கா சொன்னபடி லைப்ரரி போய் நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். அவங்களுக்கு விளையாட்டு என்றால் இஷ்டம். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பார்த்து நிறைய விளையாட்டு வீரர்களை சொல்லிக் கொடுப்பாங்க. கலரில் வரும் ஸ்க்ரீன் பேப்பர், பிலிம்பேர் , ஸ்டார் டஸ்ட் வாங்கி பிடித்த ஹீரோக்களின் படங்களை ரூம் சுவர் எல்லாம் ஒட்டி வைப்போம்.

நம்ம உடம்பையும் மனசையும் எப்பவும் இளமையாய் வச்சிருக்கணும்னு சொல்வாங்க. நாங்கள் புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டுவோம்.

போட்டித்தேர்வு, பேங்க் எக்ஸாம் எல்லாத்துக்கும் படிக்கும் புத்தகங்களை எல்லாம் எங்களிடம் கொடுத்து சொல்லிக் குடுப்பாங்க. நிறைய ஆங்கில புத்தகங்கள் வாசிக்க சொல்வாங்க. இங்கிலிஷ் கிராம்மர் அற்புதமா சொல்லிக்கொடுப்பாங்க.

டியூஷன் முடிந்ததும் வீட்டிருக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் திரும்ப வந்து இதெல்லாம் நடக்கும்.

ஒருநாள் எல்லோரிடமும் வருங்காலத்தில் நீங்கள் யாராக ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ஒவ்வொருத்தரும் டாக்டர், என்ஜினீயர், டீச்சர், வக்கீல் என்று சொன்னார்கள்.

” எனக்கு குழப்பமா இருக்கு கா. எண்ணெய் பற்றியே எனக்குத் தெரியல. ஒன்னும் புரியல” என்று தளு தளுத்தபடி கூறினேன். என்னை தோளோடு சேர்த்து அனனித்த அவங்க கண் கலங்கி இருந்தது.

சமயங்களில் அவங்களுக்கும்,அவங்க அம்மாவுக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் நடக்கும். எதுவும் பேசாமல் என் உள்ளங்கையை இறுக்கப் பற்றி என் ஆள்காட்டி விரலை அமுக்குவாங்க. வலி உயிர் போகும். தன் வலிகளை , வேதனைகளை ஒட்டு அழுத்தலில் அடக்கிக்கிடுறாங்க என்று புரியவே பல வருடங்கள் ஆனது எனக்கு.

மாலை ஆறு மணிக்கு தினமும் பக்கத்துத் தெரு ரகு அண்ணா அக்கா வீட்டு வழியா போவாங்க. இருவர் கண்களும் ஆனந்தமாய் ஒரு நொடி சங்கமிக்கும். ஆயிரம் கதைகள் பேசும் இருவரின் கண்களை எங்கள் கண்கள் திருட்டுத்தனமாய் பார்த்து ரசிக்கும்.

ஞாயிற்றுக் கிழமைன்னா அக்கா கூட சேர்ந்து ஆத்துக்கு குளிக்கப் போவோம். லைஃப்பாய் சோப் மணக்கும் படித்துறையில் காலைக் கடிக்க வரும் மீன்களுக்கு பயந்து அமர்ந்திருப்போம்.

தூரத்தில் ரகுண்ணா தன் பிரெண்ட்ஸ் உடன் பாடிக்கொண்டு குளிப்பாங்க.

விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கில் ஏறலாம்
ஓ ஓ ஓ ஓ ஜுலீ ஐ லவ் யூ …என்ற பாட்டு ஆற்றில் மிதந்து வரும். ஐ லவ் யூ என்று பாடுகையில் ரகுண்ணா மெதுவாக அமலிக்கா முகத்தைப் பார்த்ததும் சடசடவென்று நூறு மீன்கள் அவங்க கண்ணில் குதித்து வெளியேறும்.

ஒருநாள் வீட்டில் அனைவரும் சாயங்கால ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்பி வருகையில் அம்மாவிடம் சொல்லிவிட்டு அக்காவைப் பார்க்க வந்தேன். அவங்க வீடு பூட்டி இருந்தது. தூங்கி இருப்பாங்க என்று கிளம்புறப்போ சாவித் துவாரத்தின் வழியே வெளிச்சம் வெளியே தெரிந்தது. ஆர்வமிகுதியில் உள்ளே உற்றுப்

பார்த்தேன். உள்பாவாடையும், ஆம்பிளை சட்டையும் போட்டு விழிகள் மேடையாம் பாடலுக்கு அமலிக்கா டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தாங்க.

ஒருவரின் அந்தரங்கத்தை திருட்டுத்தனமாய் பார்ப்பது தவறு என்று அந்த வயதில் தெரியவில்லை.

அமலிக்கா அந்த சட்டையில் இன்னும் சின்னப்பொண்ணா இருந்தாங்க. கரை ஒதுங்காமல் அலைகளில் மிதந்து கொண்டே இருக்கும் ஒற்றைச் செருப்பைப் போல , அந்த சட்டை யாருடையது என்ற கேள்வி என் மனதை இம்சித்துக்கொண்டே இருந்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் பெரிய பெண்னானதைக் கூட முதலில் அவங்க கிட்ட தான் சொன்னேன். திடீரென எங்க ஆச்சி, தாத்தா என்னை ஸ்கூலை விட்டு நிப்பாட்டி கல்யாணம் பண்ணிக்குடுக்கணும் என்று சொன்னதும் அமலிக்கா கிட்ட ஓடி வந்து அவங்க மடியில் படுத்துக் கதறி அழுதேன். அவங்க எங்க வீட்டில் சண்டை போட்டு, எடுத்துச்சொல்லி என்னை படிக்க அனுமதி வாங்கி கொடுத்தாங்க.

உலகத்தில் உள்ள தெய்வங்களுக்கு மேலாக, ஒரு அழகிய தேவதையாக எனக்கு அமலி டீச்சர் தெரிஞ்சாங்க. அவங்க மேல உள்ள மதிப்பு, மரியாதை இன்னும் அதிகமானது.

உங்களை மாதிரி பேங்க் எக்ஸாமுக்கு படிச்சு நான் பேங்கில் வேலை பார்க்கணும் கா என்று என் ஆசையை ஒருநாள் தயங்கியபடியே சொன்னேன்.அவங்க முகம் பூரா சந்தோஷம்.

ஒருவழியா டென்த் வந்தாச்சு. அவங்க சொன்னபடி ஒரு வருஷம் சினிமா பார்க்காம தீவிரமா படிக்க ஆரம்பித்தேன். அதே மாதிரி அவங்க வீட்லயும் சண்டைகள் தீவிரமானது. அவங்க கிட்ட கேட்கவும் தயக்கமா இருந்தது. ரகுண்ணா மனசுல இருப்பதால் தான் திருமணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க என்பது புரிந்தது, அதே சமயம் தன் காதலையும் அம்மா கிட்ட சொல்ல தயங்குறாங்க என்பதும் புரிந்தது.

பரீட்சைகள் முடிந்ததும் லீவில் அவங்க வீட்ல தான் கிடந்தோம். அவங்களுக்கு வேலை இன்னும் கிடைத்தபாடில்லை. நாளுக்குநாள் சோர்வாகி கிட்டே இருந்தாங்க. ரிசல்ட் வந்த நாள். 435 மார்க்குகள் எடுத்து இருந்தேன். கணக்கில் 99. சந்தோஷம் தாங்கவில்லை. டீச்சர் கிட்ட சொல்ல மூச்சிறைக்க ஓடி வந்தேன். கலங்கிய கண்களுடன் இருந்த டீச்சர்,”வெரிகுட்” என்று தோளைத் தட்டிக் குடுத்தாங்க. எனக்கு உற்சாகமெல்லாம் வடிந்து ஏமாற்றமாக இருந்தது. கண்களில் நீர் வடிய வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டார்கள். எங்கே சென்றார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை. சொல்லாமல் சென்றதில் அவங்க மேல் கோபம் பொங்கியது. இனிமேல் எந்தக் காலத்திலும் அவங்க முகத்தில் முழிக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.




அந்த அதிர்ச்சியில் இருந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு மீளவே முடியவில்லை. ரகுண்ணா தாடி வளர்த்து திரிஞ்சார். பாவமாக இருந்தது.ப்ளஸ் டூவில் சுமாரான மார்க்குகள் தான் எடுக்க முடிந்தது. அமலி டீச்சரை மனதில் இருந்து தூக்கி எறிந்தேன். காலேஜில் சேர்ந்து படித்து பெரிய ஆள் ஆக வேண்டும்; அமலி டீச்சருக்கு கிடைக்காத பேங்க் வேலை கிடைக்க வேண்டும் என மனம் உறுதி எடுத்தது.

ஒரு நிகழ்விற்கான பின்னூட்டம் தவறாகக் கருதப் படும்பொழுது, அதற்கான எதிர்வினைகளும் எவ்வளவு அபத்தம் என்று பின்னால் புரிந்தது.

நிறைய பெண்களை போல என் கல்லூரி செல்லும் லட்சியமும் நிராசை ஆகி விட்டது. வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் போராடி என்னை காலேஜ் சேர்த்துவிட அமலி டீச்சரும் இல்லை. எனக்கும் என் ஆசையைக் கூறி படிக்கப் போறேன் என்று கேட்கும் தைரியமும் இல்லை.பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டாயிற்று.

காலம் போட்ட கோலத்தில் என் கனவுப் புள்ளிகள் தடமற்று அழிந்தன.

யதார்த்த நதியில் ஆசைக்கப்பல் தடுமாறி மூழ்கியது.தொலைத்த என்னை மீட்டெடுக்காத குற்றவுணர்ச்சி மட்டும் நங்கூரமாய் நிலைத்தது.

காலை ஸ்கூலுக்குக் கிளம்பும்போது வழுவழுவென்று மடித்துக் கட்டிய இரட்டை ஜாடை மாலை வீடு வரும் வரை கலையாமல் இருப்பது போல் வாழ்க்கையும் வருடக்கணக்கில் எந்த மாறுதலுமின்றி சென்று கொண்டிருந்தது.

காரணங்கள் என்னென்னவோ சொல்லலாம் கனவை மெய்ப்படுத்தாததற்கு. கனவு ஓரிடத்தில் பிசகி நழுவிச் சென்று விட்டால், தேடிப்பிடிப்பது பெரும்பாடாய்ப் போகிறது.

எல்லா அம்மாக்களும் அவர்களின் கனவுகளை தங்கள் குழந்தைகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை. என் மகளை அவள் ஆசைகளை , கனவுகளை அடைவதில் குறுக்கிடாமல் இருந்தேன்.

முன் நிர்ணயிக்கப்பட்ட எல்லா உணர்வுகளும் அமலி டீச்சரைப் பார்த்ததும் சோப்புக்குமிழ்களாய் உடைய ஆரம்பித்தன.

டியூஷன், பாய்ஸ் ஷர்ட் , டான்ஸ்,படித்துறை, ஜூலி ஐ லவ் யூ, ரகுண்ணா, எல்லாம் அலை மடிப்புகளில் சுழன்று கொண்டிருந்தன. ரகுண்ணா இப்போது எங்கே எப்படி இருப்பார் என்ற சிந்தனைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

என்னைப்போல அவங்களும் இளைமைக்கால நினைவுகளில் மூழ்கியிருப்பது புரிந்தது.

எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று எனக்குத் தெரியவில்லை.

ஏதேனும் ஒரு கேள்வி கூட டீச்சரை நிலைகுலைய வைத்து விடுமோ என்று பயமாக இருந்தது.

பால்ய கால நானும், பால்ய கால அமலி அக்காவுமாக இப்போது மாறி இருந்தோம்.

மழைத் துளி ஒன்று புல் நுனியில் உதிரக் காத்து இருப்பதைப் போல மவுனத்தை யார் கலைப்பது என்று அமர்ந்து இருந்தோம்.

” அமலி டீச்சர் எப்படி இருக்கீங்க?” அடக்க முடியாமல் கேட்டு விட்டேன்.

புல்லை விட்டு ஓடிய பனித்துளியாய் சரசரவென்று அவர் கன்னங்களில் நீர்தாரைகள் வடிய ஆரம்பித்து அலைகளில் தெறித்தன.

” ப்ச் ..என்னத்தை சொல்ல?” என்றபடி அலைகளை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தார்.

அவர் முகத்தைப் பார்க்கும் திராணியற்று தலை குனிந்து அமர்ந்திருந்தேன். எங்கள் இருவருக்குமிடையில் பால்யகாலம் நுரைத்து ஓடிக்கொண்டிருந்தது.

நான் நினைப்பதையே அவரும் நினைத்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது.

எனக்குள் நிகழ்ந்ததைப்போல் ஏதோ ஒன்று அவருக்குள்ளும் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தேன்.

மவுன அலைகளுக்குள் பேச்சு மூழ்கிக்கொண்டிருந்தது.

தழுதழுத்த முகத்துடன் எப்பவும் போல் என் விரல்களை இறுக்கப் பற்றினார்.

கடந்தகாலக் கதைகளை அந்த விரல் அழுத்தம் , அழுத்தமாய் சொல்லி விட்டது.

ஆனால், விரலை விட அதிகமாய் மனது வலித்தது.

இறந்தவர்களின் அஸ்தியை மட்டுமல்ல, உயிரற்ற வாழ்வு வாழும் எத்தனையோ பெண்களின் கண்ணீரையும் உள்வாங்கிய கடல் எப்போதையும் விட அன்று சற்று அதிகமாக உப்புக் கரித்தது.




What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!