13
இரண்டு நாட்களுக்கு பிறகு…
இளமாறன் ஆரமிக்கும் புது கம்பெனி திறப்புவிழாவுக்கு அனைவரும் கிளம்பிகொண்டிருந்தார்கள். செம்பருத்திக்காக காத்திருந்த வேளையில்,
“நீங்க போயிட்டு வாங்கப்பா…என்னால வர முடியாது எனக்கு படிக்கிற வேலை நிறைய இருக்கு…” என்று சாக்குப் போக்கு சொல்லி வீட்டிலேயே தங்கி விட்டாள் செம்பருத்தி.
“என்னங்க அவ இங்கேயே இருக்கட்டும் கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்கெல்லாம் அழைச்சிட்டு போற பழக்கம் நமக்கு இல்லைங்க…அவ வரலேன்னா விட்டுடுங்களேன்… என்று கணவனை சமாதானப்படுத்தி சின்ன மகள் வாணியை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
காலை ஒன்பதிலிருந்து பத்து மணி வரை நல்ல நேரம் என்பதால் அனைவரும் சரியாக 9:00 மணிக்கு அங்கே கூடியிருந்தார்கள். ரிப்பன் கட் பண்ண போகும் மினிஸ்டரின் வரவுக்காக காத்திருந்த வேளையில் அவர் வர இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும் என்று தகவல் வர சற்று டென்ஹனாகவே இருந்தான் இளமாறன்.
“மினிஸ்டர் என்றால் அப்படித்தான்பா கூப்பிட்ட உடனே வர மாட்டாங்க…காலத்தாமதமா வந்தா தான் அவங்களுக்கு பெருமை இது காலம் காலமா நடக்குற விஷயம் தானே சரி வெயிட் பண்ணுவோம்…” என்று மகனை சமாதானப்படுத்திவிட்டு இவர்களிடத்தில் வந்தார் மணாளன் அவர் முகம் நிறைவாய் இருந்தது.
பின்னே இருக்காதா மகன் சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கிறான் அதுவும் சொந்த இடத்தில் புதிதாய் கட்டிய கட்டிடத்தில் ஆரம்பிக்கிறான் கண்டிப்பா பெருமை இருக்க தானே செய்யும் என்று எண்ணிய விநாயகம் “சம்மந்தி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் இந்த கம்பெனி நல்லபடியா வரும்…” என்றார்.
“எல்லாம் எங்க மருமக வரப்போற அதிர்ஷ்டம் தாங்க இல்லன்னா இந்த கட்டடம் கட்டி முடிக்காம இழுத்துகிட்டு இருந்துச்சு இப்ப பாருங்க மடமடன்னு கட்டி முடிச்சாச்சு அதது நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும்னு சொல்றாங்களே அது உண்மைதான்.” என்றார்.
“அவனுக்கு இனிமே நல்ல நேரம் தான் ஏறுமுகமா தான் இருக்குன்னு ஜோசியர் கூட சொன்னார்…” என்று மகனுக்காக சப்போர்ட் பண்ணி பேசினாள் பார்வதி “ஆமா…எல்லாரும் வந்திருக்கீங்க என்னுடைய மருமகளை மட்டும் காணலையே” என்று கண்களை சுழற்றி தேடிய போது,
“அவளுக்கு எக்ஸாம் இருக்கு படிக்கணும்னு சொன்னா சரி கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு வர்ற பழக்கம் இல்லையேன்னு தான் விட்டுட்டு வந்துட்டோம்…”
“என்னங்க நீங்க சொல்றீங்க எந்த காலத்துல இருக்கீங்க பொண்ணே மாப்பிள பாக்க போகுது நீங்க என்னடான்னா இந்த இடத்துக்கு வருவதற்கு இவ்வளவு யோசிக்கிறீங்க அதுவும் எங்க வீட்டுக்கு கூப்பிடலையே இது பொது இடம் தானே மருமக வந்தா அவ கையால குத்துவிளைக்கை ஏத்தலான்னு நினைச்சேன்…”என்று சொன்ன பார்வதியை பார்த்து தர்ம சங்கடத்தோடு நெளிந்தார்கள் விநாயகமும் தேவகியும் .
“சம்பந்தி நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க அவ அப்படித்தான் மனசுல எதையும் வச்சுக்க தெரியாது பட்டுன்னு போட்டு உடைச்சிடுவா ஏம்மா பொண்ண கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்றாங்க நாசுக்கா சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?” என்று மணாளன் மனைவியை பார்த்து கேட்க,
“அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க இப்ப சொல்லுங்க உடனே போய் கூட்டிட்டு வரேன்”. என்றார் விநாயகம்.
“அதெல்லாம் வேணாங்க நீங்க இப்பதான் வந்து இருக்கீங்க திரும்பவும் அலைய முடியுமா?
“ஒன்னும் பிரச்சனை இல்லைங்க போறதுக்கு பத்து நிமிஷம் வரதுக்கு பத்து நிமிஷம் இருபது நிமிஷத்துல கூட்டிட்டு வந்துட போறேன்…”
“அப்போ நீங்க போக வேணாம் நம்ம டிரைவர் அனுப்பி விடுறேன் அவனுக்குதான் வீடு தெரியுமே…” மணாளன் எப்படியாவது மருமகளை வரவழைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
“அதுவும் சரியான ஜடியா தான் என்று சொல்லிவிட்டு செம்பருத்தியை ரெடியா இருக்க சொல்றேன்…” என்று போனை எடுத்தார் விநாயகம்.
“ஒரு நிமிஷம் இப்படி வாங்க…” என்று கணவரை அருகில் அழைத்தாள் பார்வதி.
“என்னம்மா?”
“ஒன்னு இல்ல டிரைவரை அனுப்புவதை விட சம்மந்தி போய் கூட்டிட்டு வர்றதுதான் முறை…”
“என்னம்மா ஏதோ சீரியஸா பேசிட்டு இருக்குற மாதிரி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் திவ்யா.
“ஒன்னு இல்லம்மா உங்க அண்ணியை கூட்டிட்டு வராம வந்துட்டாங்க அதான் டிரைவர் அனுப்பி கூப்பிடலாம்னு அப்பா சொல்றாரு எனக்கு அதுல உடன்பாடில்லை வீட்டுக்கு வர போற மருமக நாம போய் பத்திரமா கூட்டிட்டு வரணும் இல்லையா?” ஒரு நிமிடம் யோசித்தாள் திவ்யா.
“உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லைன்னா நான் போய் கூட்டிட்டு வந்துடவா ஏன்னா மினிஸ்டர் வர இன்னும் முக்கால் மணி நேரமாகும் நான் இருபது நிமிஷத்துல வந்துருவேன்”.
“நல்ல ஜடியா தான் ஆனா…” எதையோ சொல்ல வாயை எடுக்க,
“மினிஸ்டர் இப்பதான் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறாராம். அங்கிருந்து கிளியர் ஆகி இங்கே வருவதற்கு கண்டிப்பாக ஒன்னவருக்கு மேல ஆகுமாம். அப்பா நீங்க வந்திருக்கிறவங்களை எல்லாம் அழைச்சிட்டுப்போய் டிபன் சாப்பிட வையுங்க நான் ஃபிரண்டு ஒருத்தனை மயிலாப்பூர் வரை போய் ரீசிவ் பண்ணிட்டு வந்துடுறேன்…”
மயிலாப்பூரா? என்று எல்லார் முகத்திலும் வியப்பு தோன்றியது.
“என்னாச்சு…”
“செம்பருத்தியை கூட்டிட்டு வரணும்…” மணாளன் தயக்கத்தோடு கூறினார்.
“ம்ம்….ஓகே கூட்டிட்டு வரேன்…” உடனே சம்மதித்தான். மற்றவர்கள் முகங்களில் புன்னகை மலர்ந்தது.
“செம்பருத்திக்கு கால் பண்ணி ரெடியா இருக்க சொல்லுங்க…” என்று மணாளன் விநாயகத்திடம் சொல்லிகொண்டிருக்கும்போதே இளமாறனின் கார் வேகமெடுத்தது.
“இந்த வயசுலயும் இதுங்க ஒன்னோட ஒன்னு பேசாம எப்படி இருக்குதுங்க பாருங்க! அந்த காலத்துல பேசி முடிச்ச உடனே நானும் எங்க வீட்டுக்காரரும் அடிக்கடி பேசிப்போம்.” என்று சிரித்தார் பார்வதி.
இளமாறன் காரை எடுத்துக்கொண்டு முதலில் செம்பருத்தியை அழைத்தபிறகு நண்பனை அழைத்துகொள்ளலாம் என்று அவளுடைய வீட்டை நோக்கி சென்றான்.
காரணம் என்னவென்று தெரியவில்லை இரண்டு நாட்களாகவே செம்பருத்தியின் நினைவு அடிக்கடி வந்துபோகிறது. அவளிடம் பேசுவதற்காக ஒரு முறை போனைகூட கையில் எடுத்துவிட்டான். பிறகு மனம்மாறி அந்த எண்ணத்தை கைவிட்டான். வலிய சென்று பேசுவதற்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போ அப்படியல்ல அப்பா அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சமாளித்துவிடலாம். சே…இந்த சிக்னல் வேற என்று சலித்துக்கொண்டான்.
வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் பட்டென்று கதவை திறந்து வெளியில் வந்தாள் செம்பருத்தி மெல்லிய ஜரிகை போட்ட பட்டு சாரியில் அழகு தேவதையாய் காட்சியளித்தாள்.
“ரெடியாதான் இருக்கேன் போகலாமா?” என்று கேட்டுகொண்டே வீட்டை பூட்டப் போனவளிடம் “கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றான் இளமாறன்.
“ஓ சாரி கிளம்புற அவசரத்துல வீட்டுகுள்ளகூட கூப்பிடல உள்ள வாங்களேன்.”
“இல்லைங்க…பரவாயில்லை… அவன் தயங்க, பரவாயில்ல வாங்க…என்று அவள் சொல்ல,
“இன்னொரு நாளைக்கு வரேங்க…” இவன் சொல்ல,
செம்பருத்தி முகத்தில் புன்னகை படர்ந்தது. அவள் சிரிக்கும் போதுகன்னத்தில் விழுந்த குழியை ரசித்தான். ரொம்ப அழகா இருக்காளே!
கண்கொட்டாமல் அவளையே மார்த்தான். “கீ…..கீ…… பின்னாடி ஹாரன் சத்தம் காதை பிளந்தது.
சுய உணர்வு பெற்றவனாய் காரை ஸ்டார்ட் பண்ணினான். சே…இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவா? அதுவும் பகல் கனவா? தன்னை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது.
செம்பருத்தியின் வீட்டுப்பக்கம் திரும்பும்போதுதான் அவனுக்கு முன்புறம் இருந்த அந்த மொபைல் ஒலித்தது. ஏதோ புது நம்பர் என்று எடுக்காமல் விட்டபோது திரும்பவும் ஒலித்தது.
“சார்…நான் சத்தீஸ்…நம்ப ரெஸ்டாரண்ல இருந்துதான் பேசுறேன்…”
“சதீஸ் சொல்லுங்க சதீஸ்…?”
“நீங்க உடனே இங்கே கொஞ்சம் வரமுடியுமா?
“என்னாச்சு…எனி பிராப்ளம்?
இரண்டே வரியில் சொல்லிமுடித்தான். அடுத்தநிமிடம் யூடேர்ன் போட்டு வேகவேகமாக காரை செலுத்தினான்.
அப்பா அம்மாவோடு இளமாறனின் கம்பெனி திறப்புவிழாவிற்கு போகவேண்டுமென்ற ஆவலோடு இருந்தாள் செம்பருத்தி. ஆனால் அதே நாளில் காலை ஒன்பதுமணிக்கு நேரில் வா பென்டிரைவ்வை தருகிறேன் என்று அழைத்திருந்தான் ராஜா. பங்கஷனை விட பென்டிரைவ்தான் முக்கியம். என்று எண்ணியவள், அப்பா அம்மாவிடம் சாக்குபோக்கு சொல்லிவிட்டு அவன் சொன்ன இடத்திற்கு கிளம்பினாள்.
போகும் வழியெல்லாம் இளமாறனோடு ராஜாவை இணைத்து பார்த்து சோர்ந்தது மனம்.
இளமாறன் இதுவரை ஒரே ஒரு வார்த்தைக் கூட ஆபாசமாக முகம் சுளிக்கும் படி பேசியதில்லை. இரண்டே இரண்டுமுறைதான் என்றாலும்
அவனுடைய பேச்சை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். சலிப்பு தட்டவே தட்டாது. எங்கே போனை துண்டித்து விடுவானோ என்ற பயத்துடனேதான் இவள் பேசுவாளே தவிர எப்படா போனை வைப்பானென்னு ஒருபொழுதும் எண்ணியதில்லை.
இளமாறன் ஒவ்வொரு வார்த்தைகளையும் செதுக்கி அழகாகவே பேசுவான்.
கண்டிப்பாக ராஜ்ராஜனைப்போல உருவ ஒற்றுமை இல்லையென்றாலும் இளமாறனின் மனமும் குணமும் யாரோடும் ஒத்துப்போகாது என்பது செம்பருத்தியின் கணிப்பு.
ஆனால் ராஜா அப்படியில்லை. ஒரு வரி பேசினால் இரண்டு வார்த்தைகளாவது முகம் சுளிக்கும் விதத்தில் இருக்கும்.
What’s your Reaction?
+1
16
+1
17
+1
+1
+1
+1
+1