20
“ஐயோ என்னங்க நம்ம ரெண்டு பிள்ளைங்களோட வாழ்க்கையும் இப்படியா போக வேண்டும்” திலகவதி அழ ஆதித்யன் இறுகிப்போன முகத்துடன் நின்றிருந்தான். அப்போது கதிரவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
இயல்பற்ற ஒரு சூழலை வீட்டிற்குள் பார்த்தவன் புரியாமல் நின்றான். ஓரமாக நின்றிருந்த பாட்டியை பார்த்ததும் ஆச்சரியமாகி அவரருகில் சென்றான் “பாட்டி உங்களுக்கு உடம்பு சரியாகி விட்டதா?”
“அதெல்லாம் நான் குத்துக் கல்லு மாதிரிதான் இருக்கிறேன். உன் பொண்டாட்டியை எங்கே?”
“திவ்யாவா? இங்கேதான் இருப்பாள். எங்கே போனாள்?” சுற்றும் முற்றும் தேடினான்.
“இங்கே இல்லை” ஆதித்யன் சொல்ல கதிரவனின் முகத்தில் பதட்டம் வந்தது.
“எங்கே போனாள் உங்கள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லையா?”
“வாழ்க்கையை வெறுத்தவள் எங்கே போனாளோ ?என்ன செய்கிறாளோ ?பாட்டி அழும் குரலில் சொல்ல கதிரவன் அதிர்ந்தான்.
“என்ன பாட்டி என்னென்னவோ சொல்கிறீர்கள்? திவ்யாவை எங்கே?”
“அதனை நீதாண்டா சொல்ல வேண்டும் முட்டாள். கருவாச்சி குண்டச்சி என்று பொண்டாட்டியை ஏசும்போது இது தெரிய வேண்டும்”
“அது நான் சும்மா விளையாட்டிற்காக சொல்வது. அதற்காகவா கோபித்துக் கொண்டாள்?”
“கோபிக்கவில்லை. வருத்தப்பட்டிருக்கிறாள். ரொம்பவே… அதனால் மன அழுத்தம் உண்டாகியிருக்கிறது. இங்கேயும் அவளுக்கு ஆதரவு இல்லையா? வேறு வழியின்றி கிளம்பி விட்டாள்.” ஓரக்கண்ணால் தந்தையை பார்த்தபடி சொன்னான் ஆதித்யன்.
“ஐயோ இதற்கெல்லாம் வருத்தப்படுவாள் என்று நான் நினைக்கவில்லையே ,நான் சாதாரணமாகத்தானே பேசினேன்”
“பொண்டாட்டிக்கு தேவையான அளவு சம்பாதிக்க வழி இல்லாமல் தண்டச்சோறு சாப்பிட்டு கொண்டிருக்கும் நீயே தைரியமாக இருக்கும்போது அவளுக்கு தைரியம் இல்லாமல் போய்விட்டது பாரேன்” பாட்டி சொல்ல கதிரவனின் கண்கள் சிவந்தன.
“பாட்டி வார்த்தைகளை யோசித்து பேசுங்கள். பெரியவர்கள் என்று பார்க்க மாட்டேன்”
“அடடா உன்னை தண்டச்சோறு என்று ஒரு சொல் சொன்னால் உனக்கு எப்படி வருகிறது ?வார்த்தைக்கு வார்த்தை அவளை அவள் தோற்றத்தை பேசினால் அவளுக்கு கோபம் வராதா”
கதிரவன் தலை குனிந்தான். “தப்பு தான்”
” தவறுகளை தைரியமாக ஒத்துக் கொள்ள பழகுங்கடா” பாட்டி சத்யேந்திரனை பார்த்தபடி சொன்னார்.
” திவ்யா எங்கே போயிருக்கிறாள் என்று யாருக்காவது தெரியுமா?”
“உங்க பொண்டாட்டியையும் காணோம் .என் பொண்டாட்டியும் என்னை விட்டு போய்விட்டாள் .நாம் இருவரும் இனிமேல் காலம் முழுவதும் சன்னியாசிகள்தான் “ஆதித்யன் சொல்ல சத்யேந்திரனின் கண்களில் வலி வந்தது.
” மாமா நான் திவ்யாவை ரொம்பவே விரும்புகிறேன். என்னை அறியாமல் இதுபோல் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் என் மனைவியை தேடி கூட்டிக்கொண்டு என் வீட்டிற்கு போகிறேன்”
வெளியேறியவனை தயக்கமாக அழைத்தார் சத்யேந்திரன்.
“மாப்பிள்ளை”
அனைவரும் ஆச்சரியமாக அவரை திரும்பிப் பார்க்க, “வாங்க நானும் வருகிறேன். திவ்யாவை தேடுவோம். அத்தோடு என் மருமகளையும் கூட்டி வர வேண்டும். காதல் திருமணமோ நிச்சயித்த திருமணமோ கணவன் மனைவி அன்பு ஒன்றுதான் அவர்கள் மண வாழ்வை செம்மையாக கொண்டு செல்லும் என்பதனை உணர்ந்து விட்டேன் .வாருங்கள் போகலாம்” ஆண்கள் மூவரும் கிளம்பினர்.
இலக்கற்று சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த திவ்யா தன் அருகே ஸ்கூட்டர் ஒன்று நிற்கவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். மகிதா “ஏறிக்கொள்” என்றாள்.
மாலை வெயிலை உள்வாங்கி கருப்பு நிற ஸ்கூட்டரின் மேல் தகதகக்கும் பொன் சிலை போல் வடிவாக அமர்ந்திருந்த மகிதாவை வெறுப்பாய் பார்த்தாள் திவ்யா.இவளை போன்ற அழகான பெண்களால் தான் என்னை போன்ற சாதாரண பெண்களால் இயல்பாக வாழ முடியாமல் போகிறது. முகத்தை திருப்பிக் கொண்டு கடக்க முயன்றவளின் கையை பற்றி இழுத்தாள்.
“மகிதா உன்னுடைய பொறுப்பை உன் அண்ணன் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். ஒழுங்காக என்னுடன் வந்துவிடு .இல்லாவிட்டால் என் கழுத்து சங்கிலியை பறித்துக்கொண்டு போகிறாய் என்று கத்தி ஊரைக் கூட்டுவேன். பரவாயில்லையா?”
மகிதா கேட்ட தொனி உடனே செய்வாள் என்பதை சந்தேகமின்றி சொல்ல “சரியான ரவுடி பொம்பளை” முனுமுனுத்தபடி அவள் பின் ஏறிக்கொண்டாள் திவ்யா.
“ஆமாம் ஹேண்ட் பேக்கில் கத்தியும் ஆசிட்டும் வைத்திருப்பேனாக்கும் “என்றபடி ஸ்கூட்டர் எடுத்தால் மகிதா.
What’s your Reaction?
+1
58
+1
31
+1
2
+1
14
+1
1
+1
2
+1
1