gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 43 திருஈங்கோய்மலை லலிதாம்பாள்

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருஈங்கோய்மலை லலிதாம்பாள் சமேத மரகதாசலேஸ்வரர் கோயில், சாயா சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் இம்மலை திருஈங்கோய்மலை என்று அழைக்கப்படுகிறது.

பார்வதி தேவி இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதால், சிவசக்தி மலையாகவும் இம்மலை போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 65-வது தலமாகும். காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், ஈங்கோய்மலையை மாலையிலும், ஒரே நாளில் நடந்துசென்று வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.




சக்திக்கு தன் இடப்பாகத்தை தர சிவபெருமான் உறுதி அளித்த மலை என்பதால் இம்மலை சக்திமலை என்று அழைக்கப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக கோயிலின் முன்மண்டபம் மற்றும் மலையில் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் காணப்படுகின்றன. லலிதாம்பிகை எனவும், மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படும் அம்பிகை, கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் உள்ள விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் இரண்டு துர்கை வடிவங்கள் காணப்படுகின்றன.




தல வரலாறு

சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருகு முனிவர், எப்போது வழிபட்டாலும் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார்; அருகில் இருக்கும் அம்பாளை வழிபட மாட்டார். பக்தர் வழிபாட்டில் சக்தி வழிபாடும் உண்டு என்பதையும், சக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் பக்தர்களுக்கு உணர்த்த நினைத்த சிவபெருமான், பிருகு முனிவரின் இச்செயலைக் கண்டதும் பார்வதி தேவிக்கு கோபம் வரவழைத்தார். சிவபெருமானின் எண்ணப்படி பார்வதி தேவிக்கு கோபம் வந்தது.

உடனே கைலாய மலையை விட்டு பூலோகம் வந்தடைந்த பார்வதி தேவி, திருஈங்கோய்மலையில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், தனது இடப்பாகத்தை சக்தி கொடுத்துவிடுவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்.




மரகதாசலேஸ்வரர்

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி எழுந்தது. வாயு பகவான் தனது பலத்தை, உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக, காற்றை பலமாக வீசச் செய்தார். இதைக் கண்ட ஆதிசேஷன், தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அந்த சமயத்தில் மலையில் இருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியன சிதறி விழுந்தன, அவற்றுள் மரகதம் (பச்சைக் கல) விழுந்த இடமே ஈங்கோய் மலை என்பர். பிற மணிகள் விழுந்த இடங்களும் சிவத்தலங்களாக மாறின. வைரம் திருப்பாண்டிக் கொடுமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும், நீலம் பொதிகை மலையிலும் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் விழுந்தன.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் மோதல் வலுப்பெற்ற நிலையில், சிவபெருமான் இம்மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளி, இருவரையும் சமாதானம் செய்தார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்று பெயர் பெற்றார் சிவபெருமான். ‘திரணத் ஜோதீஸ்வரர்’ என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.




வழிபாட்டுச் சிறப்பு

ஈங்கோய் மலைக்கு வந்து ஈங்கோய் நாதரை வழிபாடு செய்வதால் மறுமைப் பலன்கள் பெற்று உத்தம லோகத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது. நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் பிரகாசிக்கலாம். லட்சுமி தீர்த்தத்தைக் காண்பவர்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தீர்த்தத்தில் நீராடி பாயசான்னம் செய்து தானம் செய்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, சிவபெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, பக்தர்கள் வழிபடுகின்றனர். திருஈங்கோய் மலை மீதாக சம்பந்தர் அருளிய 10 பதிகங்களைப் பாடினால் அனைத்து கவலைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

தைப்பூச தினத்தில் சுவாமி, அம்பாள் இருவரும் காவிரிக்கரையில் எழுந்தருள்வது வழக்கம். ஆடிக் கிருத்திகை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். பங்குனி பிரம்மோற்சவம், மாசிமகம் உற்சவம் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வருவது உண்டு.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!