karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள்-21

21

டாக்டர் போட்ட மயக்க ஊசியால் பொன்னி அசந்து தூங்கிக் கொண்டிருக்க , அவளருகில் அமர்ந்து அம்மாவை பார்த்து விசும்பியபடி இருந்தாள் கீர்த்தனா .அவளது தலையை வருடி அணைத்து தேற்றிய சொர்ணத்தாய் ” இந்த ராத்திரி நேரம் இவள் எதுக்கு மொட்டைமாடிக்கு போனாள் …? ” என்றாள் .

” நாம எல்லோரும் இன்னைக்கு தோட்டத்துக்கு போயிட்டோமே ,காலையில் காயப்போட்ட துணியை எடுக்க மறந்துடுச்சுன்னு , வேகமாக மாடிக்கு போனாங்க சொர்ணாம்மா.நான் போயிருக்கனும் .பின்வாசலை பூட்டி சரிபார்த்துட்டிருந்தேன் ….” செண்பகம் குரல் தழுதழுக்க பேசினாள் .

” சரி சரி ஏதோ தவறுதலா கால் வச்சிட்டா போல .எல்லோரும் இங்க நின்னு  நொய் நொய்யுன்னு   பேசி அவள்தூக்கத்தை கெடுக்காதீங்க .போய் படுங்க .டேய் கதிர்வேலா நீ ராத்திரி முழிச்சிருந்து உன் வீட்டுக்காரியை கவனிச்சுக்கோ ….” பொன்னுரங்கத்தை இடைமறித்தாள் பூந்தளிர்.

” வேண்டாம் மாமா .மச்சான் தூங்கட்டும் .நான் அக்கா கூட படுத்துக்கிறேன் .அக்காவை கவனிச்சுக்கிறேன் …”

” ம் …சரி யார் கவனித்தால் என்ன …எல்லோரும் வாங்க .சொர்ணா கீர்த்துக் குட்டியை நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வா ….”

” வேண்டாம் ஐயா . அவளை நாங்க கூட்டிட்டு போறோம் .அனு கீர்த்தனாவை கூட்டிட்டு நம்ம ரூமுக்கு வா …” முருகேசன் சொல்லிவிட்டு போக , அனுராதா மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள் .

” நான் வெளியே ஹாலில் படித்திருக்கிறேன் .எதுவும் தேவையென்றால் கூப்பிடு பூந்தளிர் …” கதிர்வேலன்  அந்த அறைக்கு நேராக ஒரு மடாக்கட்டிலை விரித்து போட்டு படுத்துவிட்டான் .




கட்டிலில்  துவண்டு கிடந்த பொன்னியை யோசனையாய் பார்த்துவிட்டு , பூந்தளிரின் முகத்தில் தன் பார்வையை ஊன்றினான் குருபரன் .அவன் விழி கேள்வியை கவனிக்காதவள் போல் போர்வையை இடுப்பு வரை போர்ரத்தியபடி படுத்துக்கொண்டு , ” எனக்கு தூக்கம் வருகிறது …” என்று கண்களை மூடிக் கொண்டாள் .

டியூப்லைட்டை அணைத்துவிட்டு , விடிவிளக்கை எரியவிட்டவன்  ” கதவை பூட்ட வேண்டாம் .சாத்தி வைத்து விட்டு போகிறேன் .நான் ஆழ்ந்து தூங்கமாட்டேன் .எப்போது வேண்டுமானாலும் என்னை எழுப்பு .ஒரு சத்தத்தில் எழுந்துவிடுவேன் ….” என்றுவிட்டு போனான் .

இரண்டு மணி நேரம் தூக்கம் வராமல் இமைகளுக்குள் கருவிழி உருள படுக்கையில் புரண்டபடி இருந்த பூந்தளிர் , சுற்றுப்புறம் அமைதியாகி , இரவுப்பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க , மெல்ல எழுந்து கட்டிலை விட்டு இறங்கி அறைக்கதவை திறந்து வெளியேவந்தாள் .ஹாலில் படுத்திருந்த கதிர்வேலனின்   அருகில் வந்து நின்றாள் .

” தூங்கிட்டீங்களா மச்சான் …? “

பதிலில்லை .

” நீங்க தூக்கியிருக்க மாட்டீங்க .உங்களால் தூங்க முடியாது …”

” உனக்கு என்ன வேணும் …? ” கதிர்வேலனின்  குரலில் எரிச்சல் இருந்த்து.

” உண்மை வேணும் .அக்காவை எதற்காக மாடிப்படியிலிருந்து தள்ளிவிட்டீங்க ..? “

கதிர்வேலன்  எழுந்து அமர்ந்துவிட்டான் .” என்ன உளர்ற …? “

” உளறலை மச்சான் .நான் பார்த்தேன் .அக்கா படியில் உருண்டு வரும்போது நீங்கள் மேல் படியில் நின்றிருந்தீர்கள் ….”

” உனக்கென்ன கண்ணுல காமாலையா …? நான் அங்கே இல்லை …”

” பொய் சொல்றீங்க.அது நிச்சயம் நீங்கதான் …”




” ஏய் …உனக்கென்ன கொழுப்பா …? பெரிய மனுஷியா நீ …? என்னைக் கேள்வி கேட்க நீ யாரு …? “

” என் மனைவி அண்ணா …” சொன்னபடி வந்தான் குருபரன் .” அவள் உங்கள் தம்பி மனைவி அண்ணா .இந்த குடும்பத்தில் ஒருத்தி .இந்தக் குடும்பத்தின் மூத்த மருமகளுக்காக பேசுகிறாள் .அந்த மூத்த மருமகள் உங்கள் மனைவி என்பது ஞாபகத்திலிருக்குமென்று நினைக்கிறேன் ….”

” ஏய் என்னடா நீயும் மட்டி மாதிரி இவளுடன் சேர்ந்து கொண்டு பேசுகிறாய் .எப்போதுமே நீ உன் பொண்டாட்டி பக்கம்தான் என்பது தெரியும் .இப்போது உன் கூடப்பிறந்தவனை விட பொண்டாட்டி பெரிதாக போய்விட்டாளா …? “

வினாடியில் கதிர்வேலன் பேச்சின் திசையை மாற்றியதில் பூந்தளிர் அயர்ந்தாள் .செய்த தப்பை மறைக்க எப்படி பேச்சை மாற்றுகிறார் …கவலையாய் கணவனை பார்க்க , அவன் அண்ணனை பார்த்தபடி லேசாக தலையசைத்தான் .

” வேண்டாம்ணா பேச்சை மாற்றாதீர்கள் .மாடியில் சத்தம் கேட்டதும் முதலில் வந்து பார்த்தது பூந்தளிர் .அவள் பின்னாலேயே நானும் வந்துவிட்டேன் .அவள் உங்களை பார்த்திருக்கிறாள் .நான் மேலே ஏதோ ஓர் ஆள் அரவம் பார்த்தேன் …கேட்டேன் .அது நீங்களென இவள் சொன்னால்…ம் …பூந்தளிர் பொய் சொல்லமாட்டாள் அண்ணா …”

” ஓஹோ …உன் பொண்டாட்டி பொய் சொல்லமாட்டாள் .ஆனால் உன் அண்ணன் …நான் சொல்வேன் .உன்னை பொண்டாட்டி பித்து பிடித்து ஆட்டுகிறதென்று எங்களுக்கு தெரியும் .ஆனால் இந்த அளவிற்கா …சீச்சி .உங்க இரண்டு பேரையும் பார்க்கவே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது .நீங்கள் இங்கே என் கண் முன்னால் நிற்காதீர்கள் போய்விடுங்கள் …”

பூந்தளிருக்கு உடல் கூசியது .என்ன மாதிரி வார்த்தைகள் இவை .கோபத்துடன் கதிர்வேலனை பார்த்தவளை கண்களால் சமாதானப்படுத்தினான் குருபரன் .

” உங்கள் ஆத்திரம் தீர எங்களை   பேச நினைப்பதை எல்லாம் பேசிவிடுங்கள் அண்ணா .பிறகு நடந்த்தை சொல்லுங்கள் .நாங்கள் காத்திருக்கிறோம் …” பூந்தளிர் அருகே நகர்ந்து அவள் தோள்களை வளைத்து தன்னோடு இழுத்துக்கொண்டு அண்ணன் எதிரில் அவன் விழிகளை நேருக்கு நேர் தயக்கமின்றி நோக்கியபடி நின்றான் .

எங்களை தவிர்ப்பதற்கென்று ஏதேதோ பேசுகிறாயே …சரி பேசி முடி …உன் அபவாத பேச்சுக்காகவெல்லாம் நான் என் மனைவியை ஒதுக்கமாட்டேன் .இப்போது எங்களுக்கு தேவை உண்மை மட்டுமே …சொல்லாமல் சொன்னபடி தனக்கு பாசமிகு தம்பியாகவும் , மனைவிக்கு கடமை செய்யும் கணவனாகவும் நிமிர்ந்து நின்ற உடன்பிறந்தவனை கண்ணெடுத்து பார்க்கவே கூசியது கதிர்வேலனுக்கு .கணவனின் உணர்வையே தன் முகத்திலும் பிரதிபலித்து நின்ற பூந்தளிரையும்தான் .சரியான ஜோடிதான் சேர்ந்திருக்கிறார்கள் ….தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் .

சிறிது நேரம் மௌனத்திலேயே கழிய தான் வாய் திறக்காமல் இவர்களிருவரும் நகரப் போவதில்லையென்பதை உணர்ந்தவன் மெல்ல வாய் திறந்தான் .




” நான் சும்மா மொட்டைமாடியில் காற்று வாங்க நின்றிருந்தேன் .பொன்னி துணிகளை எடுக்க வந்தாள் .நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் .ஒரு சிறிய பிரச்சனை .எங்களுக்குள் வாக்குவாதமாக மாறியது .நான் கோபத்தில் அவளை தள்ளினேன் ….அவள் அவ்வளவு இலகுவாக நின்றிருப்பாள் என நினைக்கவில்லை . நான் கை நீட்டி பிடிக்க பார்த்தும் முடியாமல் படியில் உருண்டுவிட்டாள் ….” கதிர்வேலன்  உண்மையைத்தான் சொன்னான் .

பூந்தளிர் திரும்பி கணவனின் முகம் பார்க்க , குருபரன் கடினமான முகபாவத்துடன் வெறுமனே ” ம் ….” என்றான் .

” என்ன …ம் …? “

” அப்புறம் …? “

” என்னடா …அப்புறம் .நான்தான் நடந்த்தை சொல்லிட்டேனே …பிறகென்ன …? “

குருபரன் தலையசைத்து மறுத்தான் .” நடந்த்து இதுவாகவே இருந்துவிட்டு போகட்டும் .அப்படி படியில் தள்ளி விடுகிற அளவு உங்களுக்கு மதினி மேல் என்ன கோபம் அண்ணா …? ”
கதிர்வேலனுக்கு  கோபம் வந்த்து . ” டேய் புருசன் , பொண்டாட்டிக்குள் ஆயிரம் இருக்கும் .அதையெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டா இருப்பார்கள் …? முதலில் நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமுக்கு போங்க .என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும் .,..” எழுந்து தன் அறைக்குள் நடக்க போனவனை அறை வாசலில் குறுக்கிட்டாள் பூந்தளிர.

” இல்லை மச்சான் .உங்களை அக்காகிட்ட விட மாட்டேன் .எனக்கு உங்க மேல் நம்பிக்கை இல்லை ….” கைகளை அறைக்கு குறுக்காக அவனை தடுப்பது போல் வைத்துக் கொண்டாள் .

” ஏய் …” என்ற கத்தலோடு கதிர்வேலன் கத்த வாய் திறந்த போது , அவளை மறைத்தபடி முன்னால் வந்தான் குருபரன் .” அண்ணா நீங்க கட்டில்ல போய் படுங்க .அவள் உள்ளே படுக்கட்டும் …வாங்க …” அண்ணனின் கையை பற்றி இழுத்தான் .

” டேய் என் கையை விடுடா .நீ என்னடா இப்படி பொண்டாட்டி முந்தானையை பிடித்துக் கொண்டே திரிகிறாய் …? வெட்கமாக இல்லையாடா உனக்கு …? “

” வெட்கப்படும் அளவு எந்த வேலையும் நான் செய்யவில்லை .நீங்க வாங்க .இனி நாம் நாளை பேசலாம் ….” அண்ணனை அணைத்து இழுத்தபடி , பூந்தளிரிடம் ” நீ உள்ளே போய் படு . கதவை சாத்தி வை ….,” என்றான் .

திமிறியபடி இருந்த கதிர்வேலனை கொஞ்சம் பயமாக பார்த்தபடி அவள் நிற்க , அண்ணனை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு தனக்கு ஒரு மடாக்கட்டிலை விரித்து அண்ணன் அருகிலேயே போட்டுக் கொண்டவன் , ” நான் இங்கேதான் படுக்க போகிறேன் .நீ உள்ளே போய் தூங்கு …” என்றான் .

நிம்மதி பெருமூச்சுடன் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து படுத்த பூந்தளிருக்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாக தூக்கம் வந்த்து .

—————————-

ஒரு பக்கம் தலை இதமாக வருடப்பட ,மறுபக்கம் ஆணி வைத்து இறக்கியது போல் வலிக்க பொன்னிக்கு ஒன்றும் புரியவில்லை .உடல் முழுவதும் அசைக்க முடியாமல் நோக எதுவும் கற்பாறைக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறேனா …பலவீனமாய் யோசித்தபடி .சிரம்ப்பட்டு விழி திறந்தாள் .மேலே கட்டைக்குத்து கட்டைகள் வரிசை வரிசையாக தெரிய …கட்டைகளினிடையே தெரிந்த மஞ்சள் வர்ணம் அவளது அறைதான் என்பதை கூற ,   நெற்றி சுருக்கி தனக்கு என்ன நடந்த்து …யோசித்தாள் .




” என்னத்துக்கு  அப்படி மூஞ்சியை போட்டு சுளிக்கிறாய் ..தையல் போட்டிருக்காங்க …வலிக்கும்ல ….” .மாமியாரின் குரலில் படபடவென எழ முயன்று முடியாமல் வலியில் துடித்தவளை தோள்களை அழுத்தி மீண்டும் படுக்க வைத்தாள் சொர்ணத்தாய் .இவ்வளவு நேரமாக தன் தலையை வருடியது மாமியார்தான் என்பதை ஆச்சரியமாக உணர்ந்த பொன்னி ” அத்தை …” என்றபடி மீண்டும் எழ முயல , ” படுங்கிறேன்ல …” அதட்டி படுக்க வைத்தாள் .

” என்னம்மா ….பொன்னி பார்த்து படியில் இறங்கியிருக்க கூடாதா …? நேற்று உன்னை அப்படி ரத்தம் சொட்ட சொட்ட பார்த்ததும் என் மனசு அப்படியே துடிச்சிருச்சு தெரியுமா …? ” சொர்ணத்தாயின் விரல்கள் திரும்ப இதமாக பொன்னியின் நெற்றியை வருட தொடங்கியிருந்தன .

” அத்தை ….” நெகிழ்வுடன் மாமியாரின் கையை தன் நெற்றியில் அழுத்திக் கொண்டாள் பொன்னி, ” நேற்றெல்லாம் நான் வாழனுமான்னு நினைச்சிட்டிருந்தேன் .இன்னைக்கு உங்களுக்காக இன்னும் நூறு வருசம் வாழனும்னு இருக்கு .

” ஏய் …என்னடி …என்ன சொல்ற …என்ன பிரச்சனை உனக்கு …எதுக்கு இப்படி பேசுற …? ” சொர்ணத்தாய் படபடக்க , பொன்னி தன் தலையை தூக்கி சொர்ணத்தாயின் மடியில் வைத்துக் கொண்டாள் .” கொஞ்சநேரம் இப்படி படுத்துக்கிறேன்த்தை …”

சொர்ணத்தாய் மருமகள் தலையை மடியில் தாங்கிக் கொண்டு வருடினாள் .” பொன்னி நீ நம்ம வீட்டுக்குமருமகளா வந்து பதினைஞ்சு வருசம் ஆச்சுடி .இத்தனை வருசத்துல ஒரு நாள் ஒரு வேலைக்கு முகம் கோணினதில்லை . அம்மா வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்கிட்டதில்லை .நான் நினைச்சிட்டிருந்தேன் …இந்த வீடு என்னை சுற்றித்தான் இயங்கிட்டு இருக்குன்னு .இன்னைக்குத்தான் தெரிந்த்து . இந்த வீட்டின் மைய புள்ளி நீயாகத்தான் இருந்திருக்கிறாய் .ஒரு நாள் படுத்தாய் .வீடே ஸ்தம்பிச்சு வெறுமையாய் இருக்கு .நான் உன்னிடம் நிறைய நேரம் கடுமையாகத்தான் பேசியிருக்கேன் .அனுராதா , பூந்தளிர்கிட்ட கூட சாதாரணமாக பேசியிருக்கிறேன் .ஆனால் உன்னிடம் …உனக்கு நிறைய வசவுகள்தான் கொடுத்திருக்கிறேன் .அதற்கெல்லாம் காரணம் ..நான் உன் மேல் எடுத்துக்கொண்ட உரிமைதான் .எனக்கு அனுராதாவும்  , பூந்தளிரும் மருமகளகள். ஆனால் நீ என் மகள் .எனக்கு பெண்குழந்தை இல்லாத்தால் இந்த வீட்டிற்குமுதலில்  வந்த உன்னை எனது மகளாகவே மனதில் வைத்துவிட்டேன் .அந்த உரிமையில்தான் உன்னிடம் நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இதெல்லாம் உன் மனதை பாதித்துவிட்டதா …? அந்த விரக்தியில்தான் இப்படியெல்லாம் பேசுகிறாயா …? …” சொர்ணத்தாயின் குரல் அழுகையில் முடிந்த்து .

பொன்னி ” அத்தை ….,” என்ற கேவலுடன் அவள் மடியில் தலையை புதைத்துக் கொண்டாள் .” நான் தப்பாக பேசிட்டேன் அத்தை . இனி அப்படி பேச மாட்டேன் .நானும் உங்களை என் அம்மாவாகத்தான் பார்க்கிறேன் அத்தை .அதனால்தான் என் அம்மா வீட்டிற்கு போகனுங்கிற எண்ணமே எனக்கு வந்த்தில்லை .எனக்கு நம்ம வீடு , நீங்கெல்லாம்  போதும் அத்தை .உங்களுக்கு மகளாகவே நான் இந்த வீட்டில் கடைசி வரை வாழ்ந்துட்டு போயிடுறேன் …”

சொர்ணத்தாய் பொன்னியை மடியில் வைத்து அணைத்தபடி லேசான விசும்பலுடன் நிமிர்ந்த போது பூந்தளிர் பக்கத்தில் படுத்தபடி ஆச்சரியம் தாளாமல் விழிகளை விரித்து இருவரையும் பார்த்தபடி இருந்தாள் .

” நீ எதுக்குடி அப்படி எங்களை பார்த்துட்டு இருக்கிற …? நீ கூடத்தான் இவகிட்ட என்னை பத்தி கோள் மூட்டி விட்டு எங்க ரெண்டு பேரையும் பிரிக்க பார்த்த …? உன் கூனி வேலையெல்லாம் என் மருமகள்கிட்ட ஆச்சா ..? நீ என்ன பேசினாலும் எங்களை பிரிக்க முடியாது தெரியுமா …? “

” அத்தை ….” பூந்தளிருக்கு பிரமிப்பு போகவில்லை. அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை .

” என்னடி திக்குவாயா உனக்கு …? முதல்ல எந்திரி …மணி ஏழாகுது …இன்னமும் எந்திரிக்காம கட்டில்ல படுத்துட்டே ரங்கநாதர் மாதிரி என்ன தலையில் கை வச்சு போஸ் …? எந்திரி ….” மடியில் பொன்னியோடு எட்டி பூந்தளிரின் முதுகில் ஒரு அடி வைத்தாள் .

” ஆ ….” என அலறியபடி எழுந்த பூந்தளிர் ” முடியாது அத்தை .அக்காவிற்கு ஒரு நியாயம் , எனக்கொரு நியாயமா …? நானும் உங்களுக்கு மகள் மாதிரிதான் ….” என்றபடி அவளும் சொர்ணத்தாயின் மறுபக்கம் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் .

” ஏன் பொன்னி இவளை எந்த கணக்கில் சேர்க்கிறது …? பெரிய மனுஷி மாதிரி ஸ்கூல் நடத்துறா …கார் ஓட்டுறா …இப்போ சின்னக்குழந்தை மாதிரி மடியில் படுத்துக்குறா …”

” அத்தை பூவு நம்ம வீட்டுக்குள்ளதான் குழந்தை .நீங்க கவனிச்சிருக்கீங்களோ இல்லையோ …நான் பார்த்திருக்கேன் . நம்ம வாசப்படி தாண்டி இறங்கவும் அப்படியே திமிரா தலையை நிமிர்த்தி சுத்தி ஒரு பார்வை பார்த்துட்டு கர்வமா நடப்பா பாருங்க …அட..அடா ..”

” ஓஹோ …மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னை ஓட்டுறீங்களா …? இப்படி பேசி என்னை அடக்கலாம்னு பார்க்காதீங்க .அப்படி அடங்குறவ நானில்லை ….”

” அதானே ஒரு சொல்லுல அடங்குறவளா நீ …உன்கிட்ட மாட்டிக்கிட்டு என் மகன் என்ன பாடுபடுறானோ தெரியலை ….? “

” என்ன உங்கள் மகன் படுகிறாரா …? நான்தான் அவர்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் .நேத்து கூட என்னை கிணத்துக்குள்ள தள்ளி விட்டாரு தெரியுமா …? ” பூந்தளிர் ரோசமாய் குரல் கொடுத்தாள் .

” ஆமாமா…அதையெல்லாம் நானும் பாக்கத்தானே செய்தேன் …..முதல்ல நீ எந்திரி …”சொர்ணத்தாய் பூந்தளிரை தள்ள முயன்றாள் .

” அத்தை நானும் பார்த்தேன் …” பொன்னியும் சேர்ந்து கொள்ள ……இவர்கள் எதை பார்த்தார்கள் …குழம்பிய பூந்தளிர அவர்களிடமே கேட்கலாமா என யோசித்து  சை வேண்டாம் என்ற முடிவெடுத்து .. .எல்லாம் அவனால் வந்த்து , இப்போது முகம் தூக்கி இவர்களை பார்க்க முடியவில்லையே , பொங்கிய வெட்கத்துடன் சொர்ணத்தாயின் மடியில் அழுத்தி முகம் பதித்து , தன் விரலை அவள் முகத்திற்கு நேராக உயர்த்திக் காட்டினாள் .

” மூன்று மாதம் பத்து நாளாச்சு .எங்கள் கல்யாணம் முடிஞ்சு ..ஒரே ஒரு தடவைதான் என் அம்மா வீட்டிற்கு போயிருக்கேன் . பொன்னி அக்காவை மட்டும் பெரிசா சொல்றீங்களே …என்னை சொல்லமாட்டீங்களா …? ” என்னை சொல்லாமல் விட்டுடுவியா நீ …என சண்டையிடும் பாவனை காட்டியவளை பார்த்து சொர்ணத்தாய்க்கு சிரிப்பு வந்த்து .

” சரிதான்டி நீயும்தான் ….எனக்கு மகள் மாதிரி .எனக்கு பொண் குழந்தைங்க இல்லை .நீங்க எனக்கு மருமகள்க மட்டுமில்லை .மகளும்தான் சரியா …? ” இரண்டு பேரையும் தன் மடியில் வைத்து அணைத்துக்  கொண்டாள் .

” ஆஹா ….நம்ம வீடு இன்னைக்கு ஜெகஜ்ஜோதியா மின்னுதே .என்ன பாசம் …என்ன பாசம் …? ” கிண்டல் செய்தபடி உள்ளே வந்தான் குருபரன் .கையில் போன் வைத்திருந்தான் .




” அப்படியே இருங்க . உங்களை போட்டோ எடுக்குறேன் …” போட்டோ எடுக்க துவங்கினான் .

” நாங்க பொண்ணுங்களா இருக்கிறப்ப நீங்கபாட்டுக்கு ஏன் உள்ளே வர்றீங்க …? ” பூந்தளிர் சண்டையிட ஆரம்பிக்க , சொர்ணத்தாய் அவள் தலையில் கொட்டினாள்.

” ஏய் அடங்குடி . அவனென்ன வெளி ஆளா …? நீ எடுடா …” மருமகள்களை அணைத்து போஸ் வேறு கொடுத்தாள் சொர்ணத்தாய் .

மனைவியிடம் கட்டைவிரலை ஆட்டி காண்பித்தவனுக்கு உதட்டால் வெவ்வெவ்வே சொன்னாள் பூந்தளிர் .அந்த உதடுகளை பிடித்து நசுக்கும் ஆசையை அடக்கியபடி போட்டோ எடுத்த குருபரன் , ஐயா …அண்ணா …என எல்லோரையும் அழைக்க , ஐந்தே நிமிடத்தில் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் அந்த அறையில் கூடிவிட்டனர் .மருமகள்களை அணைத்தபடி நெகிழ்வாய்  அமர்ந்திருந்த மனைவியை நிறைவாய் பார்த்தார் பொன்னுரங்கம் .

” அம்மா …நீங்களா …? ” நம்பமுடியாமல் கண்களை தேய்த்து விட்டுக்கொண்டான் முருகேசன் .அவன் பின்னால் நின்று கொண்டிருந்ழ அனுராதா கண்களில் குரோத்த்துடன் பெண்கள. மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் .

” ஏய் …நீயும் இந்த வீட்டு மனுசிதான்டி . ஆளோடு சேர்ந்து ஒண்ணாயிரு ….” அர்த்தம் பொதித்து சொல்லியபடி அனுராதாவை கட்டில் பக்கம் முருகேசன் தள்ளிவிட , அவள் அவஸ்தையான சிரிப்பு ஒன்றுடன் அவர்களை நெருங்கி பட்டும் படாமல் அமர்ந்தாள் .

பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்களை நிமிர்ந்து பார்த்தனர் .இப்போதுதான் நான் முழுநிறைவடைந்தேன் என்ற நெகிழ்வு பார்வையை சொர்ணத்தாயும் , இந்த வீட்டில் எனக்கிருக்கிற இடத்தை பார்த்தாயா என்ற சவால் பார்வையை பொன்னியும் , என்னை இப்படி கும்பலோடு சேர்த்து கூத்தடிக்க விடுகிறாயே என்ற எரிச்சல் பார்வையை அனுராதாவும் ,    கைலியும் , கையில்லா பனியனுமாக நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டிருந்த கணவனின் எளிய தோற்றத்தில் பொங்கிய காதலை மறைக்க வீசிய ஊடல் பார்வையுடன் பூந்தளிருமாக நான்கு வித மனநிலைகள் முகத்தில் பிரதிபலிக்க நான்கு பெண்களும் போட்டோவில் பதிந்தனர் .

——————————

வலது கை முட்டியில் லேசாக இழைத்திருந்த காயத்திற்கு கஷ்டப்பட்டு உடலை திருப்பி மருந்து தடவ முனைந்து கொண்டிருந்தாள் பொன்னி .

” அக்கா நான்தான் வந்துட்டிருக்கேனே …ஏன் கஷ்டப்படுறீங்க ….? ” கையில் பால் தம்ளருடன் உள்ளே வந்த பூந்தளிர் மருந்தை தன் கையில் வாங்கினாள் .

” இதோ தடவிட்டேன் பூவு .முடிந்த்து ….” இடுப்பை இறுக்கியசேலையை  தளர்த்திய பொன்னியை ஏற இறங்க பார்த்தாள் .

” நைட்டி போட்டுக்கோங்க்க்கா ….உங்களுக்கு வசதியாக இருக்கும் …”

” சீச்சி அதெல்லாம் நான் போட்டதில்லை ….”

” அதென்ன அது ஏதோ பெரிய குத்தம் மாதிரி சீச்சிங்கிறீங்க .இருங்க என்கிட்ட இரண்டு புது நைட்டி இருக்கு ,எடுத்துட்டு வர்றேன் .இன்னைக்கு நாம ரெண்டு பேரும் நைட்டி போட்டுக்கலாம் ….”

பூந்தளிர் தனது அறைக்கு போய் நைட்டியுடன் வந்த போது , அறைக்குள் அனுராதா இருந்தாள் .ஒப்புக்கு பொன்னியின் உடல்நிலையை விசாரித்து கொண்டு நின்றவள் பூந்தளிர் கையில் நைட்டியை காணவும் கண்களை உருட்டினாள் .

” இது எதற்கு …? “

” நாங்க ரெண்டு பேரும் போட்டுக்க போறாம் அனுக்கா ….” கையிலிருந்த நைட்டியை அவள் முன் ஆட்டினாள் பூந்தளிர் .

” எனக்கு வேண்டாம் பூவு …” பொன்னி மறுத்தாள் .

” நானுந்தான் நைட் தினமும் போட்டுக்கிறேன் ….” அனுராதா முகத்தை நொடித்தாள் .

” அப்போ என்ன அனுக்கா …போங்க …போங்க சீக்கிரம் போய் போட்டுக்கோங்க ….” விளையாட்டு போல் நிஜம்மாகவே அவள் கைகளை இழுத்து போய் அறைக்கு வெளியே விட்டு விட்டு கதவை பூட்டினாள் பூந்தளிர் .

” எதற்கு வேண்டாம் ….இன்னைக்கு நீங்க கண்டிப்பாக போடனும் ….” கட்டாயப்படுத்தி பொன்னியை நைட்டியை போட வைத்து , தானும் போட்டுக் கொண்டாள் .

” கொடி போல் அழகாக இருக்கிறாய் பூவு .நைட்டி உன் உடம்பில் சிக்கென பொருந்தியிருக்கிறது .எனக்கு உடம்பு சதை போட்டிருக்கிறது . பொது பொதுவென மூட்டை மாதிரி தெரிகிறேன் ” கண்ணாடியில் தன்னை பார்த்தபடி சொன்னாள் பொன்னி .




” உங்களுக்கும் ஐந்து வயது குறைந்து தெரிகிறதுக்கா .நீங்களே மூட்டை மாதிரி தெரிந்தால் , அனுராதாக்காவை நைட்டியில் யோசித்து பாருங்கள் ….பாவம் முருகேசன் மச்சான். டெய்லி அவர்தான் அனுக்காவை நைட்டியில் பார்க்கிறார் ….” அனுராதா எப்போதும் வஞ்சனை வைக்காமல் தட்டு நிறைய நிரப்பி சாப்பிடுவாள் .அதனால் அவள் வயதுக்கு மீறி  உடல் உப்பி தெரிவாள் .பொன்னி வீட்டில் நிறைய வேலை செய்வதால் அனராதாவை விட  உடல் மெலிந்துதான் இருப்பாள் .

” வாயாடி .அவள் இல்லாதப்ப அவளை வாரி விட்டுட்டிருக்கியா …? அவள் காதில் விழுந்த்து உன்னை ஒரு வழி பண்ணிடுவாள் …”

” ஆமாம் ….வழி பண்ணி தார் ஊத்தி ரோடு போடுறாங்க . .வாங்க நாம் போய் படுக்கலாம் ….”

இருவரும் படுத்து இரண்டு நிமிடத்தில் கதவு தட்டப்பட அநிச்சையாக கைகளை மார்புக்கு குறுக்காக வைத்து மறைத்துக் கொண்ட பொன்னி ” யார் பூவு ்…? ” என்றாள் கலவரத்துடன் .

” நான் பார்க்கிறேன்கா .எதுக்கு பயப்படுறீங்க …? ” கதவை நோக்கி போனவளுக்கும் யோசனைதான் …கதிர்வேலனோ ….இரண்டு நாட்களாக அவன் வெளியேதான் படுத்துக் கொண்டிருந்தான் .இப்போது எதற்கு ….சிறு பயத்துடன்தான் கதவை திறந்தாள் .

கதிர்வேலன்தான் ….அவன் தோளில் கீர்த்தனா அரைகுறை உறக்கத்தில் .” பாப்பா …தூக்கத்திலேயே அம்மாவை தேடினாளாம் .அதுதான் ….” என்றவனின் பார்வை பூந்தளிரை தாண்டி உள்ளே கட்டிலில் உட்கார்ந்திருந்த  பொன்னி மேல் படிந்த்து .

” கொண்டாங்க ,  ….” கை நீட்டிய பூந்தளிரை தாண்டி …” நானே படுக்க வைக்கிறேன் ….” என உள்ளே நடந்தான் .

கட்டிலில் குழந்தையை படுக்க வைத்தவனின் ஓரப்பார்வை பொன்னியின் மேல் இருக்க , அவள் கொஞ்சம் கூச்சத்துடன் கால்களை கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் . கீர்த்தனாவிற்கு போர்வையை போர்த்தி விட்டு மெதுவாக   நிமிர்ந்தவனின் கண்கள் நிதானமாக மனைவியை அவள்புது  உடையை மொய்த்தன .பூந்தளிருக்கு அந்த நேரத்தில் கணவன் , மனைவிக்கிடையே தான் தடையாக நிற்கிறோமோ என  தோன்றியது .வெளியே போய்விடுவோமா …என அவள் யோசித்தபோது , கதிர்வேலன் பெருமூச்சுடன் வெளியேறினான் .

மெல்ல கதவை பூட்டியவள் கட்டிலுக்கு திரும்பி வந்த போது பொன்னி படுத்து கண்களை மூடியிருந்தாள் .சொல்லவியலா ஏக்கம் ஒன்று அவள் முகத்தில் தெரிய , பூந்தளிர் மெல்ல அவளை சீண்டினாள் .

” அக்கா நான் வேணும்னா …என் ரூமுக்கு போயிடவா…? “

” ம்பச் ….” பொன்னி புரண்டு படுத்தாள் .

” மச்சான் உங்களிடம் ஏதோ பேச நினைக்கிறார் போல …அது உங்கள் நைட்டியை பற்றி கூட இருக்கலாம் ..”

” பேசாம படு பூவு .எனக்கு தூக்கம் வருது ….” எரிந்து விழுந்து விட்டு கண்களை மூடிக்கொண்டாள் பொன்னி .ஆனால் வெகுநேரம் அவள் தூங்கவில்லையென்பதை அருகில் படுத்திருந்த பூந்தளிர் உணர்ந்தாள் .




What’s your Reaction?
+1
31
+1
19
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!