19
“ஆரா தூங்கிட்டியாடா..?” தாயின் குரலுக்கு வெறுமனே “ம்” என்றாள் ஆராத்யா..
அவளுக்கு அப்போது விழி திறக்க பிடிக்கவில்லை..
“உன்னிடம் கொஞ்சம் பேசனுமேடா..”
“பச்.. தூங்கு ரமா.. நாளைக்கு காலையில் பேசிக்கலாம்.. எனக்கு தூக்கம் வருது..” சொன்னபடி தாயின் கழுத்தில் கையைப் போட்டு படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்..
ஆராத்யாவின் நாசிக்குள் இன்னமும் நெல் மணத்துக் கொண்டிருந்தது.. பத்தாயத்தின் நெற்குவியலை இன்னமும் அவள் தேகம் உணர்ந்து கொண்டிருந்தது.. ஏனோ சிலிர்க்கும் தன் தேகத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.. இந்த அனுபவம் அவளுக்கு புதியது..
நெல் மணத்தை தாண்டி நாசி தாண்டி அவள் மனம் முழுவதும் மணத்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.. அவனது வலுவான, இளஞ்சூடான, தேகம் இன்னமும் ஆராத்யாவின் உடலெங்கும் அப்பிக் கிடந்தது.. அவள் விழி மூடி துளித் துளியாய் அவனை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்..
அன்று காலை.. அவளை அப்படி தனியே விட்டு இருளுக்குள் மூடிக் கொண்டு போவானென எதிர்பார்க்காத ஆராத்யா பெருங் குரலெடுத்து அலறினாள்.. ஆனால் தனது அலறல் வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்குமா.. என்ற நிச்சயம் அவளுக்கு இல்லை காரணம் இந்தப் பந்தாயம் வீட்டின் பின்புறம் யாரும் அதிகம் வராத பகுதியில் இருந்தது.. இப்போது அதனை மூடி விட்டு வேறு போய்விட்டான்.. உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் எலி வேறு.. ஆராத்யா கத்தலை நிறுத்தி எப்படி வெளியே போவதென யோசித்தாள்..
சற்று முன் மிக சுலபமாக மேலே தவ்விய ஆர்யனின் நினைவு வந்தது.. பொறுக்கிப் பய போன ஜென்மத்தில் குரங்காக பிறந்திருப்பான் போல.. ஐய்யோ அவனை வைது என்ன பிரயோஜனம்.. இப்போது வெளியே போகனுமே.. தன்னைச் சுற்றிலும் எலிகள் ஓடுவதாக உணர்ந்தாள் அவள்..
உடல் வியர்த்து நனைய தன்னைத்தானே குறுக்கிக் கொண்டு உள்ளே இருந்தவனின் காலடியில் ஏதோ அசைவு தெரிய வாய் திறந்து அலறினாள்.. கால்களுக்கடியில் நெல் குழிய பாதங்கள் திடீரென கீழே இறங்கத் தொடங்கின.. புதைகுழிக்குள் மூழ்கும் அனுபவத்தை பெற்றவள் இன்னமும் கத்தினாள்.. இப்போது அவள் கால் எதிலோ மாட்டிக்கொள்ள, இல்லை எதுவோ அவள் காலை கவ்விக் கொள்ள, ஆராத்யாவின் அலறல் உச்சத்தை தொட்டது.
அவளது கால்களை கவ்வி கீழே இழுக்கப்பட, அவள் உடல் கீழ் நோக்கி நகர்ந்து ஒரு குறுகிய வழி ஊடாக வழிந்து ஐந்து விநாடிகடிகளில் வெளியே வந்தது.. வெளிக் காற்று உடம்பில் பட்டதும்தான் தான் வெளியேறி விட்டதை உணர்ந்தவள்.. நம்ப முடியாமல் கண்களை விரித்துப் பார்த்தாள்..
“சூ.. ஏன்டி கத்துற..? வாயை மூடு..” ஆர்யனின் அதட்டலை கேட்டதும்தான் தான் இன்னமும் கத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து வாயை மூடினாள்..
நடுங்கிய கால்களை சமாளிக்க அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.. “ஏன் இப்படி செய்தீர்கள்..?” நடுங்கலான குரலில் கேட்டாள்.
“ஏய்.. ஆரா.. சும்மாடா.. சின்ன கலாட்டா.. ரொம்ப பயந்துட்டியா..? இரண்டே நிமிடம்தான் இருக்கும்.. அதற்குள் இத்தனை அலறலா..?” ஆர்யன் பரிவுடன் அவள் தலையை வருடினான்..
“ரொம்ப பயமாயிருந்தது தெரியுமா..? இரண்டு மணி நேரமாகி விட்டது போலிருந்தது..” அவள் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன் மென்மையாக அவளைத் தன் மேல் சாய்த்து அணைத்துக் கொண்டான்..
“எப்படி வெளியே வந்தேன்..?”
“இதோ இப்படி..” அவளைத் திருப்பி பத்தாயத்தின் அடியில் நெல்லை எடுப்பதற்காக இருக்கும் வழியைக் காட்டினான்..
“இது நெல்லை வெளியே எடுக்கும் வழி.. இந்த வழியாக உன்னைக் கீழே இழுத்தேன்..” சொன்னபடி அவள் தலை முகத்தில் இருந்த நெல் மணிகளை தட்டிவிட ஆரம்பித்தான்..
“அ.. அந்த எலி..”
“அது எப்பவோ ஓடிப் போயிடுச்சு.. எங்க ஆராகிட்ட இருக்க அதுக்கு அவ்வளவு தைரியம் வருமாக்கும்..?” செல்லமாய் கேட்டு அவள் மூக்கு நுனியை வருடினான்..
“உனக்கு உன் அப்பாவின் மூக்கா ஆரா..? நம் குடும்பத்தின மூக்கு போலவே இல்லையே.. நம் குடும்பத்தில் எல்லோருக்குமே கொஞ்சம் எடுப்பான மூக்கு..” அவனுடைய விவரித்தலின் போதே ஆராத்யாவின் பார்வை உயர்ந்த அவனுடைய மூக்கினை ஆராய்ந்தது..
உண்மைதான்.. ஆர்யனின் மூக்கு கொஞ்சம் அதிகப்படியாக விரிந்து, உயர்ந்து இருந்தது.. டக்கென முகத்தைப் பார்த்ததும் மூக்கே முதலில் தெரிவது போல்.. தான் அவனை முதலில் பார்த்த போதே இந்த மூக்கு தன் கவனத்தில் பட்டது ஆராத்யாவின் நினைவிற்கு வந்தது.. அவளது அம்மாவின் மூக்கை ஞாபகத்திற்கு கொண்டு வந்தாள்.. அது கூட கிட்டதட்ட இப்படித்தான் இருப்பதாக அவளுக்கு தோன்றியது..
இது இவர்கள் குடும்ப மூக்காக்கும்.. பரந்து விரிந்து குடை மிளகாய் போலொரு மூக்கை வைத்துக் கொண்டு அதிலென்ன பெருமிதம்..? அலட்சியமாக சுழித்த உதடுகளை ஆர்யனின் பார்வை மரங் கொத்தியாய் பார்த்தது.. அவனது அந்தப் பார்வையை கவனித்து விட்ட ஆராத்யாவிற்குள் ஏதோ ஓர் மின்னல் ஊடுறுவியது போலிருந்தது.. அதே நேரத்தில் அவள் மூளையில் பளிச்சென ஒரு ஞாபகம் தோன்றியது..
இது இவர்கள் குடும்ப மூக்கென்றால், அந்த ஆல்பத்தில் புகைப்படத்திலிருந்த பெண் குழந்தை.. உடனே அந்த போட்டோவை மீண்டும் பார்த்து உறுதி செய்து கொள்ள பரபரத்தாள்.. சட்டென ஆர்யனின் அணைப்பிலிருந்து விலகியவள் அவனது அழைத்தல்களை காதில் வாங்காமல் தங்கள் அறைக்கு ஓடிவந்தாள்..
வேகமாக அந்த ஆல்பத்தை எடுத்துப் பார்த்தவளின் முகத்தில் “யுரேக்கா” புன்னகை.. ஓ.. விசயம் அப்படிப் போகுதா..? இருக்கட்டும், இதை வைத்தே இந்த வீட்டில் எல்லோரையும் கலக்குகிறேன்.. தனக்குத் தானே கையுயர்த்திக் காண்பித்துக் கொண்டாள்..
இதோ இப்போதும் அந்த மூக்கின் நினைவில் கண்களை மூடியிருந்தாலும் ஆராத்யாவின் இதழ்கள் புன்னகைத்தன.. விழி திறந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த அன்னையின் மூக்கை பார்த்தாள்.. அதே மூக்கு.. விரல் நுனியால் மெல்ல அன்னையின் மூக்கை தொட்டு பார்த்தவள் விழி மூடித் தூங்க ஆரம்பித்தாள்..
மறுநாள் காலை உணவின் போது தன் கையில் அந்த போட்டோ ஆல்பத்தோடு இறங்கி வந்தவள் “தாத்தா நான் அந்தக் குட்டிப் பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்..” என்றாள்..
பரமசிவத்தின் முகத்தில் ‘அட’ தெரிய, மற்றவர்கள் எந்த போட்டோ எனப் பரபரத்தனர்.. எல்லோர் முன்பும் அந்த ஆல்பத்தை தன் கையில் வைத்தபடியே அந்த போட்டோவை மட்டும் காட்டினாள் பெரியவர்கள் புரிந்து கொண்டு புன்னகைக்க சிறியவர்கள் விழித்தனர்..
மனோரமாவிடம் காட்டிய போது அவள் இதழ் பிரித்து நன்றாக சத்தமாக சிரிக்கவே ஆரம்பித்தாள்.. தள்ளி நின்று இந்தக் கலாட்டாக்களை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் வேகமாக வந்து அந்த ஆல்பத்தை பிடுங்கி பார்த்தான்.. உடனே அவன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..
அவன் அந்த ஆல்பத்திலிருந்து அந்த போட்டோவை எடுக்க முயல, ஆராத்யா பாய்ந்து ஆல்பத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்..
“ஹேய் இங்கே வாங்கப்பா.. இந்தக் குடும்பத்தின் பொறுப்பான மூத்த பேரன்.. என்ன அழகாக சிறு வயதில் போஸ் கொடுத்திருக்கிறார்னு.. வந்து பாருங்க..” இளையவர்களை அழைக்க, அவர்கள் தேனீயாய் அவளையும் ஆல்பத்தையும் சுற்றினர்..
“அத்தானா இது..? அண்ணாவா இது..?” ஆளாளுக்கு ஆச்சரியப்பட ஆராத்யா அவர்கள் ஒவ்வொருவருக்கும் வசதியாக ஆல்பத்தை பிரித்துத் தெளிவாக காட்டினாள்..
“அப்போது ஆர்யாவுக்கு இரண்டு வயது.. மொட்டை போடுவதற்காக முடி வளர்த்து இருந்தோம்.. மொட்டை போடுவது தள்ளிப் போய் கொண்டே இருக்க முடி வளர்ந்து தோள் வரை வந்து விட்டது.. பிறகு மொட்டை போட முடிவான போது எனக்கு இந்த ஐடியா வந்தது.. என்னுடைய பழைய கவுன் ஒன்றை அவனுக்கு போட்டு விட்டு, தலை முடியை வாரி உச்சியில் குடுமியிட்டு சுற்றி மல்லிகைப்பூ வைத்து, பொட்டு, கண் மை வைத்து, அவனை அழகான பொண் குழந்தையாக்கி இந்த போட்டோ.. அப்போ அவன் எவ்வளவு அழகாக இருந்தான் தெரியுமா..?” மனோரமா அந்த போட்டோ எடுத்த கதையை சிறியவர்களுக்கு விளக்கமாக சொல்ல, அவள் பக்கத்திலிருந்த ஆர்யன் பட்டென செல்லமாக அவள் தோளில் தட்டினான்..
“மனோ செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது விளக்கம் வேறு கொடுக்கிறாயா..? நீ அன்று செய்த வேலை.. இன்று இங்கே நம் வீட்டில் என்னோட இமேஜே போச்சு போ..”
“அடப் போடா பெரிய இவன்.. உனக்கெல்லாம் எனக்கு தெரியாமல் ஒரு இமேஜ் இருக்காக்கும்..”
“வேண்டாம் மனோ என் வம்புக்கு வராதே.. ஏய் ஆரா அந்த போட்டோவை கொடு..” ஆர்யன் ஆல்பத்தை பிடுங்க வந்தான்..
“ஆரா கொடுக்காதடி.. அந்த போட்டோ பொக்கிசம்.. ஓடு அவன் கையில் சிக்காதே..” மனோரமா குரல் கொடுக்க, ஆராத்யா ஓடத் துவங்க..
“டேய் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க..” தம்பிகளை அழைத்தபடி ஆர்யன் ஆராத்யாவை விரட்ட..
“நாங்க ஆரா பக்கம்..” அறிவித்தபடி பெண்கள் ஆராத்யாவின் பின் சேர்ந் கொள்ள, கொஞ்ச நேரம் வீடு முழுவதும் கீச் மூச்சென்ற சத்தங்களால், நிறைந்திருந்தது..
“அண்ணா பாருங்கண்ணா நம்ம பிள்ளைங்களை..” ததும்பிய கண்ணீரோடு சிரித்தபடி சதுரகிரி அருகில் போய் அமர்ந்தாள் மனோரமா..
சதுரகிரிக்கும் சிரிப்புதான்.. வாஞ்சையுடன் தங்கையின் தலையை தடவியபடி தந்தையை பார்த்தார்.. பரமசிவம் நெடு நாட்களுக்கு பிறகு முன்னால் விழுந்திருந்த பற்களிருந்த வெற்று இடம் பொக்கையாய் தெரிய தனை மறந்து வாய் விட்டு சிரித்தபடியிருந்தார்.. பிள்ளைகள் எல்லோரும் தங்கள் அப்பாவை நெகிழ்வாய் பார்த்தபடி இருந்தனர்..
“ஏய் நீ அந்தப் பக்கம் போ, நான் இந்தப் பக்கம் போகிறேன்.. சுற்றி போய் அவளைப் பிடித்து விடலாம்..” ஆளுக்கு ஒரு பக்கமாக பிரித்துக் கொண்டு மாடியேறிய ஆராத்யாவை தொடர்ந்தனர் இளையவர்கள்..
ஆர்யன் சரியாக அவளைக் குறி வைத்து மாடிப்படி கைப்பிடி சுவர் ஓரமாக அவளை மடக்கி அவள் இரு பக்கமும் தன் இரு கைகளையும் ஊன்றி அவளை சிறை செய்தான்.. மிக அருகாமையில் அவளை உரசியபடி இருந்த ஆர்யனின் தேகச் சூட்டை உணர்ந்த ஆராத்யாவின் தொண்டை வறண்டது..
இவன் ஏன் இப்படி உரசிக் கொண்டு நிற்கிறான்..? அவ்வளவு நேரத்தில் ஆராத்யா ஒன்றை உணர்ந்திருந்தாள்.. இதற்கு முன்பே சில முறை அவள் ஆர்யனிடம் சிக்கியிருந்தாலும், அவனே அவளை விடுவித்தது போல் உணர்ந்தாள்.. நீ ஓடுவியாம்.. நான் பிடிப்பேனாம் என குழந்தைக்கு விளையாட்டு சொல்லி பாவனையாக குழந்தையை விட மெல்ல ஓடி பிடிக்க முடியாதது போல் பாவனை காட்டுவோமே, அப்படி ஒரு பாவனையை முன்னால் சில நேரங்களில் ஆர்யனிடம் உணர்ந்தாள்..
இப்போது இவ்வளவு அருகில் இருந்தும் அவள் கை ஆல்பத்தை அவன் பிடுங்க முயலவில்லை.. அவன் பார்வை வேறு எங்கோ இருந்தது.. சுத்தமாக ஷேவ் செய்யாமல் மெல்லிய கரும்படலமாய் அவன் தாடைகளில் பரவியிருந்த முடிகளை பார்த்தபடி நின்ற ஆராத்யாவை கண்களால் கீழே பார்க்குமாறு காட்டினான்..
What’s your Reaction?
+1
8
+1
3
+1
+1
2
+1
+1
+1