14
” இப்போது எப்படி இருக்கிறாய்டா குட்டி ? ” கண் விழித்ததும் பார்த்த முகம் மகிபாலனுடையதுதான். கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
” உடம்பு பலவீனமாக இருக்கிறது .தனியாக வெளியே போக வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன் தானே? ஏன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே போனாய் ? ”
‘ எனக்கு சிறையில் அடைபட்டு கிடப்பது போல் இருந்தது. அதனால் தான் போனேன் ” அவள் தலையை வருடிக் கொண்டிருந்த மகிபாலனின் கை மெல்ல விலகியது.
” இது என்ன உளறல் மிருதுளா ? ” கண்டிப்பாக கேட்டான்.
” நினைத்தபோது நினைத்த இடத்திற்கு போக முடியாத நிலை இருந்தால் சிறையில் அடைபட்டு கிடப்பது போன்று தானே தோன்றும் ”
” இல்லைடா உன் உடல் நிலையை நினைத்துதான்…”
” என் உடலுக்கு என்ன கேடு ? பைத்தியம் போல் நடுத்தெருவில் துணியைக் கிழித்து கொண்டு அலைந்து விடுவேன் என்று பயந்தீர்களோ ? ”
” மிருதுளா ” அதட்டினான்.
” சும்மா அதட்டாதீர்கள் மகி .இனி என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடுங்கள் .இவ்வளவு இறுக்கமாக பிடித்தீர்களானால் எனக்கு மூச்சு முட்டுகிறது ”
” இன்னமும் உன்னை அவ்வளவு டைட்டாக பிடிக்கவே இல்லையே ” சட்டென காதல் பேச ஆரம்பித்துவிட்ட அவனிடம் திணறினாள் மிருதுளா.
அது எப்படி இவனுக்கு இவ்வளவு வெறுப்புடன் பேசிக்கொண்டிருக்கும்போது காதல் வருகிறது..?
” சொல்லு குட்டி இறுக்க பிடித்துக் கொள்ளவா ? ” மகிபாலனின் மூக்கு நுனி அவள் கன்னத்தை உரசியது.
லேசான இந்த சீண்டலுக்கே பிரளயங்கள் புரள தொடங்கிவிட்ட தனது தேகத்தை வெறுத்தாள் மிருதுளா .இல்லை இவனை நெருங்க விடக்கூடாது …இவன் இப்படிப் பேசி… இப்படி தொட்டே என் புத்தியை மழுங்கடிப்பான் . அவன் தோள் பற்றி தள்ளினாள்
” மூச்சு முட்டுகிறது .தள்ளி போங்க ”
” மிருது என்னடா ? ” மீண்டும் தொட வந்தவனை முறைத்தாள் ” உங்களுக்கு ஒரு முறை சொன்னால் புரியாது ? நீங்கள் இப்படி அருகில் இருப்பதை நான் விரும்பவில்லை ”
முகத்தில் அறை வாங்கிய பாவனை அவனிடம் தெரிந்தது” உங்களுக்கு பிடித்த தொழிலை போய் பாருங்கள். என்னை விட்டு விடுங்கள் ”
மகிபாலன் எழுந்துகொண்டான்” ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய் .கொஞ்சம் ஓய்வெடு சரியாகிவிடும் ” அறை வாயிலை நோக்கி நடந்தவன் பாதி வழியில் நின்று ” எனக்கு தெரியாமல் இனி எங்கேயும் வெளியே போகாதே .போகவும் முடியாது ” உறுதியாக சொல்லிவிட்டு தட்டென்ற சத்தத்துடன் கதவை பூட்டிக் கொண்டு போய் விட்டான்.
மிருதுளாவிற்கு ஆத்திரமாக வந்தது .இவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னை கட்டுப்படுத்த முயற்சி செய்வான் …இவன் விஷயம் உடனடியாக அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் என்று எழுந்தவள் தயங்கினாள்.
தன்னைப்போலவே இவன் அவர்களையும் ஏதோ சொல்லி ஏமாற்றி வைத்திருக்கிறான் என்று நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படி எங்கள் குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறான் என்பதற்கான சரியான ருசு எதுவும் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இவனுக்கு எதிரான விஷயங்களை சேகரித்துக்கொண்டு தான் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் தீர்க்கமான முடிவு எடுத்தாள் .
வெளியே போக கூடாது என்றால் வீட்டிற்குள் ஆராய்ந்தால் என்ன மிருதுளா ஆராய்வதற்கு முதலில் தேர்ந்தெடுத்த இடம் மகிபாலனின் மாடி அறை.
தன் மேல் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்று உறுதியாக நம்பினானோ என்னவோ அவனது அறை கதவு அலமாரிகள் என எல்லாமே பூட்ட படாமல் திறந்தே இருந்தன .ஒவ்வொரு இடமாக ஆராய்ந்தாள .அடுக்கடுக்காக சலவை மடிப்போடு அடுக்கப்பட்டிருந்த உயர்ரக உடைகளை பார்த்ததும் இந்த ஆடம்பர உடைகளுக்காகத்தான் ஏதோ தப்பாக நடந்து கொண்டீர்களா மகி ? தனக்குள் புலம்பலாக பேசிக்கொண்டாள் .
உடைகள் மட்டுமன்றி வாட்ச் மோதிரம் செயின் ஷூக்கள் போன்ற அணிகளும் கூட உயர் வகையில் விதம்விதமாக அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தோலினால் ஆன ஒரே செருப்புடன் அவன் தங்கள் வீட்டிற்கு வந்து போனது மிருதுளாவிற்கு நினைவு வந்தது .அப்போதெல்லாம் அவள் அவனை பார்த்து பரிதாபப்பட்டு இருக்கிறாள் .ஆனால் அவனோ …வெறுப்புடன் அந்த அலமாரியை மூடி அடுத்த அலமாரியைத் திறந்தாள் . திடுக்கிட்டாள்.
அந்த அலமாரி முழுவதும் விதம் விதமான உயர்ரக போன்கள் .சின்னதாய் ஒரு பேசிக் போனோட இருந்தவன்… இப்போது இத்தனை போன்கள் எதற்கு ? சிறு பிரச்சனை வந்ததும் ஒன்றை தூக்கிப் போட்டுவிட்டு அடுத்ததை வாங்கிக் கொள்வானோ… எரிச்சலுடன் அந்த அலமாரியை மூட போனவள் கடைசி நிமிடமே அதனை கவனித்தாள்… அந்த போன்…
இதோ இது அக்காவின் போன் போல் தெரிகிறதே… வேகமாக மற்ற போன்களை தள்ளிவிட்டு அந்த போனை கையில் எடுத்தாள .ஆம் அது மதுராவின் போன் தான். புதியது வாங்கும்முன் மதுரா உபயோகித்துக் கொண்டிருந்த இந்த போனை நான் எவ்வளவு தேடினேன் …?இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடினால் எப்படிக் கிடைக்கும் ?
இது எப்படி இவனிடம் வந்தது ? தான் அவனிடம் இதைப் பற்றி முன்பு ஒருமுறை பேசியது நினைவு வந்தது.
ஐயையோ அன்று நிறைய உளறி விட்டேனே …மிருதுளா வேகமாக போனை ஆன் செய்ய அது சார்ஜ் இல்லாமல் செத்துக் கிடந்தது. அவசரமாக சார்ஜரை தேடி எடுத்து சார்ஜில் போட்டு ஐந்து நிமிடங்கள் பொறுமையில்லாமல் காத்திருந்து பரபரப்பாக போனை ஆன் செய்தாள் .அது முழு வெறுமையாக இருந்தது .உள்ளே எந்த தகவல்களும் அடிப்படை ஆப்களை தவிர வேறு எந்த ஆப்களும் கூட இல்லை.
முதலில் இருந்திருக்கலாம் …அன்று நான் சொன்ன பிறகும் அதனை இவன் விட்டு வைத்திருப்பானா ? மிருதுளா இயலாமையுடன் போனை மீண்டும் அந்த அலமாரிக்குள்ளேயே எறிந்தாள். வேறு என்ன …பரபரப்பாக அவள் கண்கள் சுற்றிலும் தேடியது.
” என் அறைக்குள் என்ன செய்கிறாய் ? ” மகிபாலன் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டாள்.
இவன் இப்போதுதானே போனான் அதற்குள் ஏன் திரும்ப வந்தான் ? விழித்தபடி நின்றாள்.
” என்னடா என்ன வேண்டும் ? எதை தேடுகிறாய் ? ” இயல்பாய் கேட்டபடி அவளை நெருங்கினான்
இவனுக்கு என் மேல் சந்தேகம் வந்துவிட்டதோ… அதனால்தான் என்னை வேவு பார்ப்பதற்காக திரும்ப வந்து விட்டானோ …விழித்தபடி நின்றவளின் முன் விரல்களை சொடுக்கினான்.
” மிருது உன்னிடம் தான் கேட்கிறேன் ”
” இப்போது எதற்கு சின்ன பிள்ளைக்கு போல் சொடக்கு போட்டு காட்டி கொண்டிருக்கிறீர்கள் ” தனது கள்ளத்தை மறைக்க எரிந்து விழுந்தாள்.
லேசாக புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவன் பிறகு மென்மையாக புன்னகைத்தான் ” ஆமாம் குட்டி இன்னமும் நீ சிறுமி இல்லையே …அத்தோடு தள்ளி நின்று பார்க்க மட்டுமே செய்ய வேண்டுமென்ற விதியும் எனக்கு இல்லையே ” சொல்லி முடித்த மறுகணமே அவளை இழுத்து ஆரத்தழுவி இருந்தான் .அதே வேகத்தில் அவள் கழுத்தில் தன் இதழ் பதித்தான்.
அவனது இந்த திடீர் வேகத்தில் மிருதுளா திணறினாள் .மறுப்பு சொல்லக்கூட அவளுக்கு அவகாசம் கொடுக்காமல் இன்னமும் இன்னமும் அவளை இறுக்கினான் .தோள்கள் கழுத்து காது என அவனது முத்தங்களும் தொடர்ந்தன .அவன் பிடியிலிருந்து நழுவி மிருதுளா நகர சிறிதும் விலகாமல் தானும் அவளுடனேயே நகர்ந்தான் .இருவருமாக மர அலமாரியில் மோதி நிற்க ” ஸ் ” என்று அலமாரி கொடுத்த தனது முதுகுவலிக்கு சத்தம் கொடுத்தாள் அவள்.
” வலிக்கிறதா குட்டி ” கேட்ட அவனின் கைகள் வலியை சமாதானம் செய்யும் போர்வையில்அவள் முதுகு முழுவதும் பரவி அழுந்தியது .இந்த ஸ்பரிசங்கள் தாளாமல் தடுமாறியவள் கை நீட்டி தன் அருகே இருந்த அலமாரி டிராவை சர்ரென்ற சப்தத்துடன் இழுத்தாள்.
” இவைகள் எல்லாம் என்ன ” கண் கன்னமென்று அவள் மேல் படிந்து கொண்டிருந்த அவன் முகத்தை அலமாரி பக்கம் திருப்பினாள்.
மனமின்றி ஒரு ஓரமாக பார்வையை அங்கே திருப்பியவன் ” தெரியவில்லையா …பழைய போன்கள் ” சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.
” அதற்குள் இத்தனை போன்களை உபயோகித்து விட்டீர்களா ? ” கன்னத்து கதகதப்பை தேய்த்து போக்க முயன்றாள் .
” நான் உபயோகித்ததா இல்லைடா குட்டி …இவைகள் நம் வீட்டினர யூஸ் செய்து போட்ட போன்கள். நம் வீட்டை பற்றிய அலுவலகத்தை பற்றிய ஏதாவது தகவல்கள் அவற்றில் இருக்கலாம் என்று இவற்றை எல்லாம் எங்கேயும் போடாமல் பத்திரமாக இங்கே வைத்திருக்கிறேன் ”
அவனுடைய விளக்கத்தில் மிருதுளா விற்கு சப்பென்று போய்விட்டது .எல்லோருடைய போனோடு சேர்த்து அக்காவின் போனையும் வைத்திருக்கிறான் காரணம் அவன் சொன்ன அதே தகவல்கள் பாதுகாப்பிற்காக இருக்கலாம்.
” அக்காவின் பழைய போனை இங்கேதானே வைத்திருக்கிறீர்கள் …அன்று என்னிடம் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ” துருவினாள்.
” எது உன் அக்காவின் போன் …எனக்கு தெரியாதே …நான் தொழில் பொறுப்பிற்கு வந்ததும் வீட்டிற்குள் ஆங்காங்கே கிடந்த போன்களை எல்லாம் எடுத்துவந்து இந்த டிராவுக்குள் போட்டேன் .இதில் இருப்பவை யாருடைய போன்கள் என்று கூட எனக்கு தெரியாது ”
மிக எளிதாக தன் சந்தேகத்தை உடைத்துவிட்டவனை இயலாமையுடன் பார்த்தாள்.
” உண்மையைத்தான் சொல்கிறீர்களா ? “கம்மலாக வந்தது அவள் குரல்.
மகிபாலன் அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான் ” குட்டி இங்கே பாருடா உன் மனதில் என்னைப் பற்றி ஏதோ ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது .ஒன்றுமில்லாமல் நம் வீட்டு வாசலில் நின்றவன் இன்று நம் குடும்பத்தையே நடத்துகிறான் என்று நினைக்கிறாயா ? ”
” இல்லை எங்கள் குடும்பத்தையே உங்கள் நுனி விரலால் ஆட்டுவிப்பது போல் உணர்கிறேன் ”
மகிபாலன் திகைத்தான். ” உன் அம்மாவை அன்று அதட்டியதால் இப்படி நினைக்கிறாயா ? அன்று நான் உனக்காகத்தான்…”
“:அந்த ஒரு காரணம் மட்டும் இல்லை .எனக்கு நிறைய நெருடல்கள் இருக்கிறது அவைகள் எல்லாம் தீர்ந்த பிறகு தான் நாம் ஒன்று சேர்ந்து வாழமுடியும். முகத்தை அவனிடமிருந்து திருப்பிக்கொண்டு நின்றாள் .ஓடிவிடும் எண்ணம்தான் அவளுக்கு… ஆனால் இன்னமும் அவளை நகர விடாமல் அழுத்திப் பிடித்தபடி தான் இருந்தான் அவன்.
தன்னிடம் இருந்து திரும்பி இருந்த அவள் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தபடி நின்றவன் பின் மெல்ல புன்னகைத்தான் ” ஒன்று சேர்ந்து வாழ்வது இதன் உள்ளர்த்தத்தை நான் தெரிந்து கொள்ளலாமா குட்டி ? ” குறும்பாக சீண்டினான்.
மிருதுளா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள் .நான் எவ்வளவு பெரிய விஷயம் பேசிக்கொண்டிருக்கிறேன் இப்போதும் எப்படி இவனால் இப்படி குறும்பு பேச முடிகிறது ?
” இப்படி குட்டி குட்டி என்று கூப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள் .என்னை பெயர் சொல்லி அழையுங்கள் ”
” ஏன் குட்டி எனக்கு அத்தான் போல் உனக்கு இந்த குட்டியா…? ”
அவனுடைய உடனடி கணிப்பில் உதடு கடித்தாள் .உண்மைதான் குட்டி என்ற அவனது ஒவ்வொரு கொஞ்சலான அழைப்பின் போதும் தான் கரைந்து அவனுடன் சேர்வது போல் உணர்ந்தாள் .தனது இந்த பலவீனத்தை மாற்றவே அப்படி அழையாதே என்றாள்.
பரீட்சையில் பார்த்து எழுதி மாட்டிக் கொண்டு விழிக்கும் மாணவி போல் நிற்பவளை சுவாரஸ்யமாக பார்த்தவன் …” அப்படியே பார்பி பொம்மை போல் இருக்கிறாய் குட்டி ” சொன்னதோடு அவள் கன்னம் பற்றி எழுத்து இதழ் கவ்வினான்.
இவ்வளவுதான் இதோ இப்போது என்னுடைய உயிர் போகப்போகிறது …இதோ இந்த வேம்பையர் என் உயிரை ரத்தத்தோடு உறிஞ்சி எடுத்து விடப் போகிறான்… இப்படித்தான் அவளை நினைக்க வைத்தது அந்த முத்தம்.
“உன் விதிப்படி அந்த ஒன்று சேர்ந்து வாழ மட்டும்தானே கூடாது .இப்படி முத்தம் கொடுத்துக் கொள்ளலாமே ” கேட்டுவிட்டு அவள் இதழ்களை சுண்டியவன் ” இன்னமும் வேறு என்ன வேண்டுமோ தேடிக்கொள் ” அறையைச் சுற்றி கைகளை விரித்து காட்டி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.
உண்மையிலேயே அவன் தன் ரத்தம் முழுவதையும் உறிஞ்சி விட்டாற் போன்ற களைப்புடன் மிருதுளா சரிந்து கீழே அமர்ந்துவிட்டாள்.
What’s your Reaction?
+1
2
+1
2
+1
+1
+1
+1
+1