pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 31

31

” தேவயானி மருதாணியை கூப்பிட்டுக் கொண்டு வெளியே போ ” ரிஷிதரன் சொல்ல கீழே சிதறிக் கிடந்த மருதாணியின் உடைகளை அள்ளிக் கொண்டு அவளைத் தன்னோடு அணைத்து இழுத்தபடி அறையைவிட்டு வெளியேறினாள் தேவயானி .வாசலில் நின்று தயக்கத்துடன் திரும்பி ரிஷிதரனை பார்த்தாள்.

” என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் இரண்டு பேரும் காருக்கு போங்க ” அதட்டலாக சொன்னான் அவன்.




அடுத்த அறைக்கு போய் மருதாணியை உடை அணிந்து கொள்ள வைத்து விட்டு , அவளை கூட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள் .  வீட்டின் வாசல்படி தாண்டும்போது மருதாணி திடுமென்று நின்றாள் .தேவயானியின் கையை உதறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடினாள்.

” மருதாணி என்ன செய்யப்போகிறாய்  ? ” கத்தியபடி தேவயானியும் அவள் பின் ஓடினாள் .மீண்டும்  அறைக்குள் வந்த மருதாணி இன்னமும் அவனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி எதிரில் நின்று கொண்டிருந்தவர்களிடம் மிரட்டலாக விசாரித்துக் கொண்டிருந்த ரிஷிதரனின் முன் வந்து நின்றாள்.

” மருதாணி ஏன் திரும்பவும் வந்தாய் ? வெளியே போ . தேவயானி கூட்டிக்கொண்டு போ ” 




” போகமாட்டேன் அண்ணா ” அழுத்தமாய் சொன்னாள் மருதாணி .” இதோ இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் தண்டனை கொடுக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன் ” சொல்லிவிட்டு அப்படியே தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டாள்.




” மருதாணி அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவர்களை ரிஷி போலீசில் ஒப்படைத்து விடுவார் .நாம் முதலில் இங்கிருந்து போய்விடலாம் ” தேவயானி அவள் இரு தோள்களையும் பற்றி எழுப்ப முயன்றாள் .அவள் கையை உதறிய மருதாணி தீர்மானமாக ரிஷிதரனை பார்த்தாள்.

” போலீஸில் அவர்களை பிடித்துக் கொடுங்கள் அண்ணா .அதற்கு முன்பாக என்னை நம்ப வைத்து இங்கே கூட்டி வந்து… தப்பு தப்பாக …”  மேலே பேசமுடியாமல் நிறுத்தி முகத்தை மூடி கேவினாள் . தேவயானி அவள் தோள்  பற்றினாள். ” கவலைப்படாதே தேவயானி ” 

” எனக்கு ஆறுதல் வேண்டாம் அக்கா .நியாயம் வேண்டும் ” தேவயானியின் கைகளை எடுத்து விட்டவள்  ரிஷிதரனை நோக்கினாள்.

”  நம் எதிர்காலத்தை பற்றி பேசி முடிவெடுப்போம் என்று சொல்லித்தான் இந்த ராஜேந்திரன் என்னை இங்கே அழைத்து வந்தான். இங்கே வந்தால் முன்பே இவனுடைய நண்பர்கள் இரண்டு பேரையும்  வரவழைத்து இருக்கிறான் .மூன்று பேருமாக முதலில் மிகவும் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தனர் .அதிலும் இந்த இருவரும் தங்கச்சி… சிஸ்டர் என்று என்னை கூப்பிட்டு…”  தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்தினாள் .

” போதும் மருதாணி. இங்கே நடந்ததை நாங்கள் உணர்ந்து கொண்டோம். நீ அதனையே மேலும் பேசி உன்னை வேதனை படுத்திக் கொள்ள வேண்டாம். நாம் இங்கிருந்து போய்விடலாம் ”  தேவயானி மீண்டும் அவளை எழுப்ப முயன்றாள் .தலையசைத்து மறுத்து மேலும் அழுத்தமாக அமர்ந்தாள் மருதாணி.  

” இவர்கள் எனக்கு செய்த அநியாயத்திற்கு எனக்கு பதில் வேண்டும் அக்கா .நாம் எல்லோருமாக டிவியில் படம் பார்ப்போம் என்று சொல்லி இவன் போட்ட படம் …அ…அது முன்பே இவன் நாங்கள் இருவரும் தனியாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்திருக்கிறான் .அதனை இப்போது போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று என்னை ….” மருதாணி மீண்டும் விம்மினாள்.

தேவயானி கண்களில் நீர் வழிய அவளை பார்த்தபடி இருக்க , ரிஷிதரனின் முகம் பாறையாய் இறுகிப் போய்க் கிடந்தது.

” நான் மறுத்தபோது பெல்ட்டை கழட்டி என்னை அடித்து …இ…இதோ பாருங்கள் அக்கா என் உடம்பெல்லாம் எவ்வளவு காயங்கள் …இங்கே பாருங்கள்….தோல் உரிந்து ரத்தம் வருகிறது .வலி தாங்க முடியவில்லை .அதனால்தான்  நா…நான் அவர்கள் சொன்னபடி ….” சொல்லிவிட்டு இரு கைகளாலும் தன் முகத்தில் அறைந்து கொண்டு கதறினாள் மருதாணி.

” எவ்வளவு ரத்தம் …? எப்படி வலிக்கிறது தெரியுமா …? இங்கே பாருங்கள் …என்கை , கால் , முதுகு எல்லா இடத்திலும் அடித்தார்கள் ….” சொன்னபடி தேவயானி ரிஷிதரனிடம் தன் உடல் காயங்களை திருப்பி திருப்பி காட்டி அழுதாள் .தேவயானி அழுகையுடன் மருதாணியை இழுத்து ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.




” ஏய் போதும்டி ரொம்ப பத்தினி வேஷம் போடாதே .நான் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் கூப்பிட்ட போதெல்லாம் வந்தவள் தானே நீ  ? இப்படி எத்தனை பேரின் பின்னால் போனாயோ ? கைகளில் கூடுதலாக 100 ரூபாய் இருந்துவிட்டது தெரிந்தால் உன்னை போன்ற பெண்கள் எல்லாம் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பின்னாலேயே வந்து விடுவீர்கள்  .ஒரு போனை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னதும் ஈ என்று இளித்துக்கொண்டு எல்லாவற்றிற்கும் சரி சொன்னவள்தானே நீ …” இகழ்ச்சியாக  பேசிய ராஜேந்திரனை நின்ற நிலையிலேயே கால் உயர்த்தி  ஓங்கி வாயில் மிதித்தான் ரிஷிதரன் .அவன் கையிலிருந்த கேமரா கீழே விழுந்து உடைந்தது.




” பேசாதேடா நாயே ….தெரு நாய் நீ …உனக்கெல்லாம் ஒரு நியாயமாடா ? உன்னிடம் கூடுதலாக 100 ரூபாய் கொடுத்தால் நீ  ஈ என்று இளித்துக் கொண்டு  பின்னாலேயே வர மாட்டாயா ? நீ வந்தால் சரி …இவள் வந்தால் தவறா ?  அது என்னடா ஆணுக்கு ஒரு நியாயம் , பெண்ணுக்கு ஒரு நியாயம் ? ”  கழுத்தில் கத்தி வைத்து இருந்தவனை  விடாமல் உடன் இழுத்தபடி மீண்டும் ராஜேந்திரனின் முகத்தில் தனது காலால் மிதித்தான் .அவனது பல் உடைந்து ரத்தம் வாயிலிருந்து ஒழுகியது.

” அப்படித்தான் அண்ணா. அடியுங்கள்… அவனை மிதியுங்கள் .என் உடம்பில் இருந்து ரத்தம் வருவது மாதிரி இவர்கள் எல்லோருடைய ரத்தமும் கீழே வடிய வேண்டும் .அடியுங்கள் ….குத்துங்கள்  ” மருதாணி ஆவேசமாக கத்தினாள்.

” அப்படியா ….? ஆரம்பிக்கவா…? ” கேள்வியை மருதாணியிடம் கேட்டு பார்வையை தேவயானிக்கு கொடுத்தான் ரிஷிதரன்.

தேவயானி சரி என மெல்ல தலையசைத்தாள். அடுத்த நொடி கைப்பிடியில் இருந்தவனை ஒரு சுற்று சுற்றி கீழே தள்ளி இடுப்பில் ஏறி மிதித்தான் ரிஷிதரன் .அவன் அலறலுடன் கீழே போய் ராஜேந்திரன் மேல் விழுந்தான் .அங்கே அவன் கீழே விழுந்து உடைந்து விட்ட தனது கேமராவை ” ஐயோ என் காஸ்ட்லி கேமரா ” என்ற புலம்பலோடு பார்த்துக்கொண்டிருந்தான் .குனிந்து இருவரையும் ஒன்றாக தூக்கி சுவற்றில் மோதினான் ரிஷிதரன்.

” என்னடா கேமரா ? இதை வைத்து எத்தனை பெண்களோட வாழ்க்கையை அழித்தாய் ? ” மீண்டும் மீண்டும் அவர்கள் இருவரையும் சுவற்றில் மோத தள்ளி நின்றிருந்த மூன்றாவது ஆள் பின்னால் வந்து ரிஷிதரனின் கழுத்தை வளைத்து  நெறித்தான் . ” அவர்களை விடு ” 

ரிஷிதரன் சற்றும் தயங்காமல் தன் கையிலிருந்த  கத்தியால் அவனது கையில் ஆழமாக கோடு இழுத்தான். அவன் அலறி பின்வாங்க …இப்பொழுது அவனையும் சேர்த்து மூன்று பேரையும் சுவரில் வைத்து அழுத்தி அவர்களது தலைகளை சுவற்றில் முட்டினான்.

” சொல்லுங்கடா , மருதாணியுடைய போட்டோ வீடியோ எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள் ? ” 




அவர்கள் திணறியபடி பேசாமல் இருக்க , கத்தியை எடுத்து மூவரின் முதுகிலும் வரிசையாக கோடு கிழித்தான் .” சொல்லாவிட்டால் அடுத்து கத்தி உங்கள் நெஞ்சில் இறங்கும் ” 

ரத்தம் வடிய வடிய மூவரும் கதறுவதை ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள் மருதாணி .இடையில் கைகளை கூடத் தட்டிக்கொண்டாள்.

” அதோ …அங்கே …அந்த டிராவில் …”. ஒருவன் திணறியபடி விரல் நீட்ட , ரிஷிதரன் தேவயானிக்கு கண் காட்டினான்.  தேவயானி ஓடிச் சென்று அந்த டிராவை திறந்தாள் .உள்ளே இரண்டு லேப்டாப்கள் , ஐந்து போன்கள் , நிறைய பென்டிரைவ்கள் …எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வந்து தரையில் வைத்தாள்.

” இதில் மருதாணியுடைய வீடியோ எங்கே இருக்கிறது ? ரிஷிதரன் கேட்க…

” பென்டிரைவ் மேல் ‘எம் ‘  என்று எழுதி இருக்கும் ” முனங்கினான் ராஜேந்திரன்.

தேவயானி லேப்டாப்பை ஓபன் செய்து பென்டிரைவை  அதில் போட்டு சரிபார்த்து முகம் கன்ற  அந்த பென்டிரைவை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு சரிதான்  என்று தலையாட்டினாள்

லேப்டாப்பை மூட போனவள் , சற்று நிதானித்து ” ரிஷி இதில் இன்னமும் நிறைய வீடியோ பைல்கள் இருக்கின்றன ” என்றாள் .

”  அது எல்லாம் மூவிஸ் ” என்று அவசரமாக பதிலளித்தவன்  கூடுதலாக இன்னும் ஒரு கத்தி கீறல் வாங்கினான்  ரிஷிதரனிடமிருந்து….

” வாயை மூடு .தேவயானி அந்த வீடியோக்களையும் ஓபன் செய்து பார் .டேய்  பாஸ்வேர்டு சொல்லுங்கடா ” கத்தியை அவர்கள் கழுத்தில் வைத்து அழுத்த திணறியபடி அவர்கள் சொன்ன பாஸ்வேர்டு அடித்து வீடியோக்களை திறந்து பார்த்த தேவயானி அதிர்ந்தாள்.

” ரிஷி இதில் நிறைய பெண்கள்… நிறைய வீடியோக்கள்… எல்லாமே ரொம்பவுமே தப்புத் தப்பாக இருக்கிறது ” கண்கள் கலங்கி குரல் நடுங்கியது அவளுக்கு.

” என்னடா இதெல்லாம் ? இதுதான் உங்கள் தொழிலா ?  ” ரிஷிதரன் அவர்கள் தலைகளை மீண்டும் சுவற்றில் மோதினான்.




” ஆமாம் ” ஒருவழியாக ஒத்துக் கொண்டனர் அவர்கள் .பள்ளியில் படிப்பவர்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை நிறைய பெண்கள் இவர்களது வலையில் விழுந்து இருப்பது தெரியவந்தது .பணத்தில் குறைவாக இருப்பவர்களுக்கு பணத்தை காட்டி ஏமாற்றுவது , வாழ்க்கையில் ஏதோ ஒரு ஏமாற்றத்தை சந்தித்து இருப்பவர்களை அவர்களது அந்த பலவீனங்களை பயன்படுத்தி தங்கள் வலைக்குள் இழுத்துக் கொண்டு பிறகு அவர்களை மீள முடியாமல் கட்டிப் போடுவது , வசதி படைத்த பெண்களிடம் மிரட்டி பணம் பறிப்பது , வசதியற்ற இளம்பெண்களை இதுபோல் வீடியோக்கள் எடுத்து அவற்றை விற்று பணம் சம்பாதிப்பது….




திக்கி திணறி அவர்கள் வெளிப்படுத்திய குற்றங்கள் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது .மருதாணி தலையில் அடித்துக்கொண்டு கதறினாள் ” ஐயோ எப்படி ஏமாந்து  இருக்கிறேன் ” 

சில நிமிடங்கள் யோசித்தபடி நின்ற ரிஷிதரன் ” தேவயானி இது பெரிய நெட்வொர்க் போல் தெரிகிறது .இவர்களை வேரோடு பிடுங்க வேண்டுமென்றால் நாம் போலீஸிடம் தான் போயாக வேண்டும் .நீ இந்த லேப்டாப் , போன் பென்டிரைவ்களில் மருதாணி சம்பந்தப்பட்டவைகள் இருந்தால் அவற்றை மட்டும் நீக்கிவிடு .மற்றவற்றை நாம் போலீசில் ஒப்படைத்து விடலாம் ” என்றான்.

தேவயானி அவன் சொன்னவற்றை வேகமாக செய்ய ஆரம்பித்தாள் .பென் டிரைவில் இருந்தது தவிர லேப்டாப் , போன் போன்றவற்றில் இருந்த மருதாணியின் வீடியோக்களையும் தேடி அழித்தாள். மருதாணி பென்டிரைவை கையில் எடுத்து ஆத்திரத்துடன் கீழே போட்டு ஓங்கி மிதித்தாள். மீண்டும் மீண்டும் மிதித்தாள் . ஓரமாக அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பூ ஜாடியை எடுத்து அதன் மேல் குத்தினாள். பென்டிரைவ் நசுங்கி சிதறி  விழுந்தது.

ரிஷிதரனும் , தேவயானியும் அவளது ஆத்திரத்தை கண்டும் காணாததுபோல் தங்கள் வேலைகளில் கவனமாக இருந்தனர்.

” முடித்துவிட்டேன் ரிஷி ” 

”  எல்லாவற்றையும் எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வை ” 

தேவயானி அவற்றை மீண்டும் டிராவினுள் கொண்டு போய் வைத்தாள்.

” இனி நீங்கள் இருவரும் போய் நம் காரில் ஏறி காத்திருங்கள் .நான் இவர்களை இங்கே கட்டிப் போட்டுவிட்டு வருகிறேன் ”  சொல்லிவிட்டு கத்தியை சிறிது  விலக்க   உடனடியாக

 அவனது பிடியில் இருந்து நழுவிய ஒருவன் அந்த கத்தியை தட்டிவிட்டு விட்டு 

வேகமாக திரும்பி அவன் கழுத்தை வளைத்து பிடித்தான்.

” அவ்வளவு எளிதாக நீங்கள் எல்லோரும் இங்கிருந்து போய் விடுவீர்களா ? ” எக்காளத்துடன்  அவன் கேட்க , தடை அகன்ற மற்ற இருவரும் ஆசுவாசத்தோடு தங்கள் கழுத்தை வருடிக் கொண்டு ரிஷிதரனை அடிக்கும்  முனைப்புடன் அவனுக்கு எதிரே தயாராக வந்தனர்.

அறை வாசலுக்கு போய்விட்ட மருதாணியும் , தேவயானியும் திடுக்கிட்டு அப்படியே நிற்க , ரிஷிதரன் தன் கழுத்தை வளைத்திருந்தவன் கையை மெல்லத் தட்டினான்.

” டேய் முண்டம் , கழுத்தை நெரிப்பதற்கு இதைவிட இன்னமும் இறுக்கமாக பிடிக்க வேண்டும் .இப்படி லூசாக பிடித்தாயானால் எதிரி இதோ இப்படி உன்னிடம் இருந்து நழுவி உன் கழுத்தையே பிடித்து விடுவான் ” சொன்னதையே நொடியில் செய்தும் காட்டினான் .உடனே மற்ற இருவரும் அவன் மேல் பாய….

” வெயிட் …வெயிட் …” என இரு கைகளாலும் மூவரையும் ஒருசேர தள்ளியவன்,  பேன்டின் பின் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய துப்பாக்கியை எடுத்தான் .அவர்கள் மூவரையும் நோக்கி குறி வைத்தான்.




” நிஜமான ரிவால்வர்தான்டா தடிக் கழுதைகளா . லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன் .மூன்று பேரையும் சுட்டு விட்டு என்னிடம் இருக்கும் பணத்தையும் நகையையும் கொள்ளையடிக்க வந்தீர்கள் என்று ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் .செய்யட்டுமா …? ” சொல்லிவிட்டு சற்றும் தயங்காமல் ஒருவனின் காலை நோக்கி சுட்டான் . அவன் அலறியபடி ரத்தம் கொட்ட காலை பிடித்துக் கொண்டு  கீழே விழுந்தான்.

இன்னொருவன் ஓடிப்போய் கீழே கிடந்த கத்தியை எடுக்க முயல ,  ரிஷிதரனின் துப்பாக்கி அவனுடைய கையில் வெடித்தது .அவன் அலறியபடி கீழே உருண்டான்.

” என் ஸ்பெசல் கத்திடா அது .அதை நீ தொடுவாயா ? ஆமாம் கதவை திறக்கும் போது ஏஞ்சல் என்று வசனம் பேசியவன் நீதானே …அதற்காக இது …” சொல்லிவிட்டு அவன் இடுப்பில் ஓங்கி ஒரு உதை கொடுத்தான் .  கீழே கிடந்த கத்தியை எடுத்து தனது பாக்கெட்டில் மீண்டும் சொருகிக் கொண்டான் .நிமிர்ந்து திகைத்து நின்றிருந்த பெண்கள் இருவரையும் பார்த்து லேசாக கண்களை சிமிட்டினான் .இப்போது தேவயானி ,  மருதாணி  இருவரது முகங்களிலும் புன்னகை வந்தது.

மீதமிருந்த ராஜேந்திரன் கீழே மண்டியிட்டு கையெடுத்துக் கும்பிட்டான் ” என்னை சுட்டு விடாதீர்கள் ” 

ரிஷிதரன் அவனருகே போனான்  .”  நீ மட்டும் ஸ்பெஷல் . உன்னை இங்கே சுடலாம் என்று இருக்கிறேன் ” என்றபடி அவன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.

” இல்லை… இல்லை… வேண்டாம் .நான் அப்ரூவர் ஆகி விடுகிறேன். எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு போலீஸில் சரண்டர் ஆகி விடுகிறேன் .என்னை கொன்று விடாதீர்கள் ” அலறினான்.

” ஐய்யய்யோ   மருதாணி படுத்தே விட்டானே … நீயே சொல்லு .இவனை என்ன செய்யலாம் ? ” ரிஷிதரன் மருதாணியிடம்  யோசனை கேட்க , மருதாணி புருவங்களை உயர்த்தி ராஜேந்திரனைப் பார்க்க அவன்  வேகமாக ஓடிவந்து அவள் கால்களில் விழுந்தான்.

” மருதாணி என்னை மன்னித்துவிடு .நான் தெரியாமல் செய்து விட்டேன் .இனி நீ இருக்கும் பக்கமே வரமாட்டேன். என்னை சுட வேண்டாம் என்று அவரிடம் சொல்லு .என்னை காப்பாற்று ” தன் காலடியில் விழுந்து கை கூப்பியவனை ஒருவகை திருப்தியோடு பார்த்த மருதாணி , வலது காலை உயர்த்தி அவன் மூஞ்சியில் மிதித்து அவனைக் கீழே தள்ளினாள்.




” இவனையும் சுடுங்கள் அண்ணா ”  அவள் சொல்லி முடித்த மறுகணமே ராஜேந்திரனின் கால்முட்டி துப்பாக்கி குண்டால் பெயர்க்கப்பட்டது.

முதலிருவரும் ரத்தப்போக்கும் , வலியுமாக மயங்கி இருக்க , ராஜேந்திரன் விழி திறக்க முடியாமல் முனகியபடி புரண்டு கொண்டிருக்க , துப்பாக்கியை தன் விரலில் சுழற்றிபடி வந்த ரிஷிதரனை விழி விரித்து,  நீரிலிருந்து பாலுருஞ்சும் அன்னப்பறவை பார்வை பார்த்தாள் தேவயானி .




” வேலை முடிந்தது .போகலாமா ? ” கேட்ட ரிஷிதரனின் கை பற்றி அவன் புஜத்தில் நெற்றி சாய்த்தாள் மருதாணி .

” தேங்க்ஸ் அண்ணா ” 

இடது கையால் அவள் உச்சி தொட்டான் . ” இதெல்லாம் ஒன்றுமில்லை மருதாணி .எல்லாவற்றையும் இங்கேயே உதறிவிட்டு வா . கூட்டி வா தேவயானி ” 

நகரப் போனவனிடம் தன்னிடமிருந்த அவன் சட்டையை நீட்டினாள் தேவயானி .” போட்டுக் கொள்ளுங்கள் ” 

போடுவதற்கு வசதியாக பிரித்து  வைத்திருந்த சட்டையினுள் கையை நுழைத்தவனின் பார்வை தேவயானியின் மேல் அப்பிக் கிடந்தது. சட்டையின் கடைசி பட்டன் வரை போட்டு விட்ட பின் ” போகலாம் ” எனக் கிளம்பிய தேவயானியின் கண்கள் முற்றிய நெல்லாய் நிலம் நோக்கியிருந்தன .

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த காட்டு பங்களா போலீஸ்காரர்களால்  சூழப்பட்ட போது , தேவயானி , மருதாணி , ரிஷிதரன் மூவரும் பசுமை குடிலில் நிதானமாக காபி அருந்திக் கொண்டு இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

4 Comments
Inline Feedbacks
View all comments
Padumanu
Padumanu
4 years ago

இதுங்க எல்லாம் இருந்து என்ன கிழிக்க போதுங்க, சும்மா சுட்டு தள்ளிட்டு தற்காப்புன்னு சொல்லனும்இந்த த‌ண்டனை பத்தாது

2
1
depa
depa
4 years ago

எனக்கு ஸ்டிக்கர் கமென்ட் வரவில்லை மேம்

depa
depa
4 years ago

எவ்வளவு மன அழுக்கான மனிதர்கள்.வெளியே நல்லவன் வேஷம் இதில் ரிஷி பரவாயில்லை தான் இப்படித்தான் என்று உண்மையானவன்

Priya
Priya
4 years ago

Super பத்மா சட்டம் இன்னும் கடுமையாக வேண்டும்

4
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!