Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 41

41

” அண்ணனுக்கென அண்ணியை பெண் பார்க்க அம்மாவுடன்  நான்தான் முதல் முறை போனேன் . பார்த்தவுடனேயே சட்டென எங்கள் வீட்டு பெண் எனும் உணர்வு மனதில் தோன்றிவிட்டது . நிச்சயம் இவர்களைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென அண்ணனுக்கு உத்தரவே போட்டேன் . பெண் பிள்ளைகள் இல்லாத எங்கள் வீட்டிற்கு பெண்ணாக வந்தார்கள் அண்ணி . அவர்களிடம் எனக்கு ஒரு சகோதர பாசம் எப்போதும் உண்டு . எனக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் இவரைப் போலத்தான் இருந்திருப்பார் என நிறைய சந்தர்பங்களில் நினைத்திருக்கிறேன் .”. 

” அண்ணன் இறந்த பிறகு அண்ணியின் பிறந்த வீட்டினர் அவர்களை தங்களுடன் அழைத்துக் கொண்டு போக பேசிய போது , நானும் அம்மாவும் முழு மூச்சாக மறுத்து விட்டோம் .அவர்களை அண்ணனின் மனைவியாக பார்த்திருந்தால்தானே பிறந்த வீடு அனுப்ப நினைப்போம் ? நாங்கள் எங்கள் வீட்டு பெண்ணாகத்தான் அவர்களை நினைத்தோம் .நடத்தினோம் . இன்று வரை ஒரு மலரை போல் அவர்களை பத்திரமாக பார்த்து வருகிறோம்.இப்போதோ  எங்கிருந்தோ வந்த எங்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத ஒருவன் அவர்களிடம் உரிமை கொண்டாடுவதா ? அதனை என்னால் எப்படி ஏற்க முடியும் ? ” 




கமலினி பதில் பேசவில்லை .புலம்பி முடி என்பது போல் மௌனமாகவே அமர்ந்திருந்தாள் .தன் மேல் சரிந்திருந்தவனை தள்ளவும் செய்யாது , கொள்ளவும் செய்யாது உடல் இறுக  அமர்ந்திருந்தாள்.

” சந்தானபாரதியை பற்றிய உங்களது அபிப்ராயம் ? ” 

விஸ்வேஸ்வரன் வாய் திறக்கும் முன்பே ” உண்மையாக மனதை தொட்டு சொல்ல வேண்டும்…” எச்சரிக்கை விடுத்தாள் .

விஸ்வேஸ்வரன் இன்னமும் அவள்புறம் சாய்ந்து அவள் மீது அப்பி படிந்து தன் முகத்தை அவள் கழுத்து வளைவிற்குள் புதைத்துக் கொண்டான்.

” குத்தீட்டி முனை ஒன்று கண்ணுக்குள்  குடைந்து கொண்டே இருப்பது போல் சதா ஒரு உறுத்தல் .கண்களை மூடி தூங்க முடியவில்லை .உன்னைப் பார்த்தாலாவது பாரம் விலகுமோ என்றுத் தோணியே உடனே இங்கே கிளம்பி  வந்தேன் .” 

” நான் கேட்ட கேள்விக்கு பதில் …? ” 

கமலினியின் கறார்தனம் அவன் முகத்தை அவளது நோக்கி நிமிர்த்தியது 

.கண்ணருகே தெரிந்த இதழ்கள் அவனை தடுமாற வைத்தன போலும் .

” நிகிதாவிற்காக மெனக்கெட்டு …முடியாமல் , உனக்கு இயல்பாக தர முடிந்த்தே அன்று … நாம் ஒருவரையொருவர் உணர்ந்து கொண்ட  அந்த காலகட்டத்திலேயே நாம் உறைந்து இருந்திருந்திருக்கலாம் கமலி . எதற்காக அந்த நேரங்கள் கடந்தது ? பிறரென ஒருவரின்றி நம்மை நாம் மட்டுமே உணர்ந்திருந்த  அந்த காலங்கள் ஏன் கடந்து போயின ? அந்த நேரங்கள் …கவிதையான அந்தக் காலங்கள் மீண்டும் வேண்டும் கமலி ” வேண்டலும் , தாபமுமாக முடிந்த குரலின் இறுதியில் அவள் கழுத்தில் ஆழப் பதிந்தன அவன் இதழ்கள் .

புளகாங்கிதமடைந்த தன் உடலை …உருவெடுத்து ஆடிய உணர்வுகளை அவனிடமிருந்து மறைக்க முடியாமல் திணறினாள் கமலினி .வாயேன் என்பதான அவனது செல்ல அழைப்பிற்கு சரியென்றுதான் சொல்லேன் என அவள் உடல் உள்ளத்தை அரித்தது . உணர்வுகளை அடக்க உள் மடிந்து அழுந்திய அவளுதடுகளை வருடின அவன் விரல்கள்

” நம் இருவரின் உடலும் , உணர்வுகளும் ஒரே நேர்கோட்டில் சிந்திப்பவை கமலி .எதையும் மறைக்கவோ , அடக்கவோ முயல வேண்டாம் .தவிர நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறாய் .உன் விருப்பத்தை நிறைவேற்றினால் என் விருப்பத்தை நிறைவேற்றுவதாக …”  அடம் பிடித்து நின்ற அவன் விழி பாப்பாக்கள் அவளிதழ் மொய்த்தன .

” நாம் பேச வேண்டும் ” முணுமுணுத்தன அவளிதழ்கள் .” முதலில் சந்தானபாரதியை பற்றி சொல்லுங்கள் .பிறகுதான் …” முழுதாக முடிக்க முடியாமல் தயங்கி நிறுத்தினாள் 

” இப்போது …அதுவும் இன்று இந்த உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத முதல் ஆள் அவன் தான். ஆனால் உனக்காக எனது வெறுப்பை குறைத்துக்கொண்டு ….”பேசி சற்று நிறுத்தியவன் ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான் .

“அவன் நல்லவன்தான். நேர்மையும் ,பொறுப்பும் ,உண்மையும் அவனிடம் இருக்கின்றன. இத்தனை வருட தொழில் பழக்கத்தில் அடுத்தவர்களை கணிக்கும் எனது குணம் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த சந்தானபாரதிக்கு நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் கொடுக்கலாம் ” விஸ்வேஸ்வரன் பேசி நிறுத்திய அடுத்த கணமே கமலினி யின் இதழ்கள் அவன் உதடுகள் மேல் மென்மையாக படிந்து விலகியது.

” உண்மையை ஒலிக்காது சொன்னதற்கு .என்னுடைய வாக்கை கூட நிறைவேற்றி விட்டேன் “குயிலின் ஆழ்மன கூவலாய் ரகசியம் பேசியது அவள் குரல்.

தேனுண்ட வண்டின் மோக மயக்கமாய் மின்னிய அவனது விழிகள் பிரகாசித்து விரிந்து அவள் முகத்தை நெருங்கியது. அடுத்த கணமே  மென்மையான உதடுகளுக்கு இத்தனை வலிமை எப்படி வந்தது ? திணறிப் போனாள் கமலினி.

” முத்தம் என்றால் இப்படி இருக்க வேண்டும் .திரும்பவும் சொல்லித்தரவா ? ” கேட்டுவிட்டு பேராசை விழிகளில் மினுங்க மீண்டும் தன்னை நெருங்கியவனை மார்பில் கை வைத்து தள்ளினாள்.

” விடலைப் பையனின் முதல் காதல் போல் இதென்ன பொறுப்பில்லாதனம் விஸ்வா ?  நாம் இருவரும் பொறுப்புகள் சுமப்பவர்கள். சலனங்களை குறைத்துக்கொண்டு நமது கடமைகளை முதலில் செய்வோம் .பிறகு மற்றதை யோசிக்கலாம்” 




” நான் விடலைப் பையன் இல்லை என்றாலும் இது என்னுடைய முதல் காதல் .உண்மையான காதலுக்கான வேண்டல்கள் சற்று அதிகமாகவே தான் இருக்கும் ”  கொஞ்சம் உஷ்ணம் கலந்து வெளிப்பட்டது அவன் குரல்.

” காதல் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர அதுவே வாழ்க்கை ஆகிவிடாது இப்போது சொல்லுங்கள் .உங்கள் வீட்டுப் பெண் என்று வாய்க்கு வாய் சொல்கிறீர்களே ? அந்தப் பெண்ணின் நிறைவான எதிர்காலம் உங்கள் கருத்திற்கு வரவில்லையா ? “

“எங்கள் சொத்துக்களில் பாதியை அண்ணியின் பெயருக்கு மாற்றியாயிற்று .முழு சொத்துக்களையும் கூட அவர்களுக்குக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். கூடவே அவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்து அவர்களை உயர்ந்த நிலையில் வைப்பதற்கும் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் அவர்களது எதிர்காலம் இல்லையா ? ” 

” நிச்சயம். பணம் ஒருவரது வளத்திற்கு முக்கியமான ஒன்று தான். உங்கள் செயலை நான் மனமார பாராட்டுகிறேன். உங்களுக்கு அண்ணியின் மீதுள்ள அக்கறையை உணர்கிறேன். ஆனால் பணம் மட்டுமே ஒருவரது எதிர்காலம் இல்லை அல்லவா ? உணர்வுகளும் ஊக்கங்களும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. பெண் என்பதால் மட்டுமே தன் ஊக்கங்களை குறைத்துக் கொள்வதற்கும் உணர்வுகளை மரத்துப் போக செய்வதற்கும் கட்டாயப்படுத்த படுவார்களா ?  அதற்கு நீங்களும் துணை நிற்பீர்களா ?” 

 குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்ற குரலில்தான் விளக்கினாள். அந்த பாவனை தந்த எரிச்சலோ என்னவோ …சரிந்து அமர்ந்திருந்தவன் பட்டென நிமிர்ந்தான் .அவளை பிடித்து தள்ளினான் .கார் கதவில் தொம்மென மோதினாள் அவள் .

” என்னடி திமிரா உனக்கு ? எனக்கு டியூசன் எடுக்கிறாயா நீ ? மார் தட்டி கை உயர்த்தி நீ மேடை பேச்சு பேசுவதை ரசிக்க , இது யாரோ தெருவில் போகிறவர்களின் வாழ்க்கை கிடையாது .எங்கள் குடும்பம் …எங்கள் பாரம்பரியம் . அண்ணி …அண்ணி என்று அவர்களையே பேசுகிறாயே …? அந்தக் குழந்தை சௌபர்ணிகாவை மறந்து போனாயே ? அவள் எங்கள் குடும்ப வாரிசு . என் அண்ணனின் ரத்தம் . ஸ்வர்ணகமலத்தின் வருங்கால முத்து .அவளை எவளோ விலாசமில்லாத தெருவில் போகிறவனுடன் அனுப்பி முத்திரை இல்லாத தபால் போல் அலைக்கழிக்க வைக்க சொல்கிறாயா ? இதையெல்லாம் உன்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம் ? பெற்ற தாய்க்கு அல்லவா பிள்ளையின் மீது அக்கறை இருக்க வேண்டும் ? பிள்ளையின் வளத்தைக் கூட கருத்தில் எண்ணாது அப்படி என்ன சுயநலம் அவர்களுக்கு ? சீச்சி …இதெல்லாம் …” 

” விஸ்வாவாவா …” பொங்கிய ஆத்திரத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் .

” யூ ராஸ்கல் ..எவ்வளவு கேவலமானவன் நீ …?பெண்ணென்றால் உங்களுக்கெல்லாம் அவ்வளவு அலட்சியமா? புருசனுக்கு …பிள்ளைகளுக்கு என்று எப்போதுமே அவள் மட்டுமே தன் வாழ்வை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா ? கொஞ்சம் தன்னைப் பற்றியும் அவள் சிந்திக்க ஆரம்பித்தால் …நீங்களெல்லாரும் சேர்ந்து அவளுக்கு கொடுக்கும் பெயர்கள் ஓடுகாலி , வாழாவெட்டி , விபச்சாரி், வேசி .நாற்றம் பிடித்த இந்த சமூகம்தான் இப்படி அழுகிப் போய் கிடக்கிறதென்றால் …இன்று நானும் அந்த குட்டையில் ஊறிக் கிடக்கும் மட்டைதானடி என நீ தெளிவாக்கி விட்டாய் .அதுவும் திமிர் பிடித்த உளுத்துப் போன ஆண் கொழுப்பேறிய மட்டை . உன்னை என்றேனும் என் மனதில் நான் ஒரு நிமிடமாவது வரித்திருந்தேனானால் அந்த நிமிடங்களுக்காக வருந்துகிறேன் .உன்னிடம் மயங்கி நின்ற நேரங்களுக்காக வெட்கப்படுகிறேன். நீ எனக்குரியவன் இல்லை . நான் உன்னை வெறுக்கிறேன் .” 

கமலினி யின் ஆதங்க குரல் கார் முழுவதும் எதிரொலிப்பாய் ஒலித்து அடங்கியபின் சிலகணங்கள் அங்கே அமைதி நிலவியது. மறு கணமே ரிமோட்டால் கார் கதவை திறந்தவன்  ” என்னை வெறுப்பவளுக்கு என் காருக்குள் என்ன வேலை ? வெளியே போடி …” ஆத்திரம் பொங்க பேசியதோடு அவள் தோள்களைப் பற்றி வெளியே தள்ளி விட்டு விட்டான் . உருண்டு விழுந்த கமலினி அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அப்படியே கிடந்து பின் சுதாரித்து எழுந்தாள். நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவள் கையை உயர்த்தி..

”  போடா ” வைதாள். விஸ்வேஸ்வரனின் கார் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் அந்த இடத்தை விட்டு சீறிப்பாய்ந்து மறைந்தது.

இந்த சண்டி குதிரையை அடக்குவது எப்படி ? சிந்தனையோடு தன் வீட்டிற்குள் நடந்தாள் கமலினி.

” அம்மா சௌபர்ணிகா மேல் உயிராக இருக்கிறார்கள் கமலினி .தன் மகனை பேத்தியிடம் பார்க்கிறார்கள் .அவர்களிடம் நான் எப்படி இந்த விசயத்தை கொண்டு செல்ல முடியும் ? நீயே சொல்லேன் ” மறுநாள் இவளை தெருமுனையிலேயே காத்திருந்து தனது காரில் ஏற்றிக் கொண்ட விஸ்வேஸ்வரன் தயவாய் பேசினான் 

முன்தினம் அவன் காரிலிருந்து தள்ளி விட்டதற்கு கமலினி இன்று அவன் கார் பக்கமே திரும்பியிருக்கமாட்டாள் . ஆனால் நமக்கு காரியம் ஆக வேண்டும் அமைதி …அமைதி என முரண்டிய மனதை அடக்கியபடி காரில் ஏறியிருந்தாள் . இப்போது அவனது பேச்சை கவனிக்காமல் சுவாரஸ்யமாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .

இரண்டு நிமிடங்கள் அவளது பதிலுக்காக காத்திருந்து பார்த்து விட்டு மெல்ல தொண்டையை செருமிக் கொண்டான் ” ஸாரி கமலினி “




” எத்தனையோ அபவாதம் செய்தாயிற்று 

. அவற்றில் எதற்கு இந்த சாரி ? ” 

” நேற்று உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு ” 

” அதாவது என்னை தெருவில் தள்ளி விட்டுப் போனதற்கு…” அவனது தவறை துல்லியமாக சுட்டினாள்.

” என் மனப் போராட்டங்களை நீ அறிய மாட்டாய் பெண்ணே ” விஸ்வேஸ்வரனின் கைகள் ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தது. கைகளில் தெறித்த நரம்புகள் அவனது அலையாடும் மனதை சொன்னது .கமலினி அசரவில்லை. அலட்சியமான கீழ் உதட்டு சுழிவுடன் அவனைப் பார்த்தாள் .

” உன் பாரிஜாத அக்காவிடம் காட்டும் கருணையில் சிறிதை என்னிடமும் காட்டக்கூடாதா ? என்னைப் பார்த்தால் மட்டும் பரிதாபம் வரவில்லையா ? ” தயைந்து ஒலித்த அவன் குரலுக்கு …

” முடியாது ” தலை நிமிர்த்தி திமிராகவே பதிலளித்தாள் .” பெண்களை அடக்கி அடிமையாக வைத்துக் கொள்ள நினைக்கும் உன் போல் ஆண்களிடமெல்லாம் எனக்கு பரிதாபம் வராது .என்ன சொன்னாய் …அம்மாவிடம் எப்படி சொல்லுவேனா ..? அப்போ  இது வரை உன் அம்மாவிடம் பேசவே இல்லையா ? ” 

விஸ்வேஸ்வரனின் பார்வை சாலையிலேயே படிந்து கிடந்த்து . இல்லை என தலை ஆடி மறுப்பு சொன்னது .கமலினியின் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது.

What’s your Reaction?
+1
24
+1
23
+1
2
+1
2
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Kamali ivanukku eppo konjam varum enna seivaanne teriyalai.aanalum un vidaa muyarcikku vaalthukal.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!