Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 3

3

” வேலைதான் போயிடுச்சே .இன்னமும் காலங்கார்த்தாலேயே  எங்கே மினுக்கிக்கிட்டு  கிளம்பிக்கிட்டு இருக்காங்களோ …? ” கனகம் ஜாடையாக கேட்ட கேள்வி தனக்குத்தான் என உணர்ந்தும் காதில் வாங்காமல் கிளம்பினாள் கமலினி .

குனிந்து தன்னை பார்த்துக் கொண்டாள் .க்ரே கலர் உடம்பில் மெரூன் நிற பார்டர் ஓடிய மிக எளிமையான காட்டன் சுடிதார் .கழுத்தில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் சிறிய முத்துக்கள் கோர்த்த கழுத்தணி .  நெற்றியின் மையத்தில் சிறிய மெரூன் நிற பொட்டு . மிக சாதாரணமான இந்த தோற்றத்தைத்தான் கனகம் மினுக்குவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் .

வீட்டில்  தங்கிக் கொள்ள வாடகை எதுவும் தர வேண்டாமென குணசீலன் பெருந்தன்மையாக சொல்லி விட்ட போதும் , ஆளுக்கு ஐந்தாயிரம் சாப்பாட்டு செலவிற்கு வேண்டுமென மூவருக்குமாக பதினைந்தாயிரம் கனகம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் .அந்த பணத்தை மாதா மாதம் வெற்றிவேலன் கனகத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவான் . ஆனால் தாங்கள் பெரிய மனது பண்ணி அவர்களுக்கு சாப்பாடு போடுவதாக ஊருக்கு , உறவுக்கு காட்டிக் கொள்வாள் கனகம் .

வேறு செலவேதும் இல்லாமல் தந்தை , மகன் ,மகள்  என மூவரும் பணம் சேர்க்கின்றனரே …ஒரு வேளை வீட்டை மீட்டு விடுவார்களோ …என்ற பயம் அவ்வப்போது கனகத்திற்கு வரும் .அதனால் அவள் கமலினி வேலைக்கு போவதை ஆதரிக்கமாட்டாள் . பார்த்துக் கொண்டிருந்த வேலை போய் அவள் வேறு வேலை தேடுவதை ஒத்துக் கொள்ள முடியாமல் எதையாவது குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள் . கமலினி சுவரில் ஓடும் கரப்பானை போல் சித்தியை பார்த்து விட்டு தனது பேகை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அம்மாவிடமும் , நைட் டியூட்டி முடிந்து வந்த அப்பாவிடமும் சொல்லி விட்டு வெளியேறினாள்.

பஸ்ஸில் போய்  ஸ்வர்ணகமலம் நகை கடை வாசலிலேயே இறங்கினாள் .அக்கடை அருகிலேயே ஒரு பஸ் ஸ்டாப் வைக்கும் அளவு அந்த கடை முக்கியமானதாக இருந்த்து .எதிர்சாரியில் நின்று கொண்டு பிரம்மாண்டமான அந்த நகை கடையை  அண்ணாந்து பார்த்தாள் .ஹப்பா …எவ்வளவு பெரிய நகை கடை .இது போன்ற நகை கடைகள் வந்து கொண்மிருப்பதால்தான் சிறு நகை வியாபாரிகள் நலிந்து விடுகிறார்கள் …குறைபட்டபடி பளபளவென வெண் பளிங்காய் மின்னிய   கடையின் அகன்ற படிக்கட்டுகளை வெள்ளியோ என சந்தேகித்தபடி  மிதித்து ஏறி உள்ளே போனாள் .

கண்ணாடிக்கதவுகளை திறந்து உள்ளே போனதும் ஜில்லென்ற குளிர் உடலை அணைக்க , சட்டென உடல் ரிலாக்சாக மனதும் தளர்ந்து குழைந்த்து .இப்படி சூழலை குளிர வைத்து வாடிக்கையாளர்களின் மனதினையும் குளிர வைப்பது  இது போல் பெரிய நிறுவனங்களின் வியாபார யுக்திகளில் ஒன்று போலும் .நினைத்தபடி நின்றவளை அந்த கடை ஊழியை நெருங்கினாள் .

” என்ன பார்க்க வேண்டும் மேடம் ..? “




” நான் கஸ்டமர் இல்லை .வேலைக்கு வந்திருக்கிறேன்  “ஆழ்ந்த மஞ்சளில் அடர் பச்சை பார்டர்  ஓடிய அந்த பெண்ணின் சேலையை பார்த்தபடி சொன்னாள் முகிலினி.இதுதான் யூனிபார்ம் சேலையோ …?

அவள் பதிலில்  அந்த பெண்ணிடம் உடனே ஒரு அலட்சியம் வந்து விட்டிருந்த்து .பவ்யத்தை துடைத்து எறிந்து விட்டு , ” அதோ அங்கே போய் வெயிட் பண்ணுங்க ” எனக் கை காட்டிவிட்டு தனது இடத்தில் போய் நின்று கொண்டாள் .

கமலினி அந்தப் பெண் கை காட்டிய கதவை தள்ளித் திறந்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள் . அங்கே இருந்த சிறிய அறைக்குள் கிட்டதட்ட முப்பது பெண்கள் இருந்தனர். அங்கே கிடந்த இருக்கைகளில் இடம் பற்றாமல் நின்று கொண்டு கூட இருந்தனர் .ஐய்யோ இத்தனை பேரும் இந்த வேலைக்குத்தான் இன்டர்வியூ வந்திருக்கின்றனரா …? கமலினியை சிறு பயம் தொற்றிக் கொண்டது .




எல்லா பெண்களும் அதீத அலங்காரத்தில் இருந்தனர் .அழகிற்கு முக்கியத்துவம் தரும் வேலையல்லவா …அதனால் அனைவரும் முடிந்த அளவு தங்களை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர. மிக சாதாரண தோற்றத்தில் இருக்கும் தனக்கு இந்த வேலை கிடைக்குமா …என்ற சந்தேகம் கமலினிக்கு வந்து விட்டது .அவள் டென்சனுடன் நகம் கடித்தபடி இருந்தாள் .

அவள் போன் ஒலித்தது .மணிகண்டன்தான் அழைத்தான் .” கமலினி  சதாசிவம் சாரிடம் உன் போட்டோவை காண்பித்து உன்னை பற்றிய விபரங்கள் செல்லி விட்டேன் .நீ சாதாரணமாக இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு .நிச்சயம் செலக்ட் ஆகி விடுவாய் ” தைரியம் சொல்லி வைத்தான் .

ஒரு சாதாரண வேலைக்கு எவ்வளவு போட்டி …? அது சரி சம்பளம் பத்தாயிரம் ஆயிற்றே , கமலினி எண்ணமிட்டபடி இருந்த போது அந்த சதாசிவம் அவர்களை கடந்து உள்ளே போனார் .சராசரியாக ஒரு பெண்ணிற்கு பத்து நிமிடங்கள் .படபடவென கேள்விகள் கேட்டு அனுப்பினார் .கமலினியிடமும் அடிப்படை கேள்விகள் மட்டுமே .தெரிந்த்தாக காட்டிக் கொள்ளவில்லை .

முப்பது பேர்களில் கமலினியையும் சேர்த்து ஐந்து பெண்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவர்கள் அனுப்பப்பட்டு விட்டனர் .” உங்கள் ஐந்து பேருக்கும் அடுத்த இன்டர்வியூ  நம் எம்.டியுடன்  ” என்றார் சதாசிவம் .

ஐந்து பெண்களையுமே டென்சன் பற்றிக் கொண்டது .ஐவரும் உட்கார்ந்து ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்துக் கொண்டனர் .விபரம் கேட்டுக் கொண்டனர் .எம்.டி எப்படியோ …என கவலைப்பட்டுக் கொண்டனர் .

” ஏழாவது மாடியில் புட் கோர்ட் இருக்கிறதாம்பா . வாங்க எல்லோரும் போய் ஒரு கூல்ட்ரங்க்ஸ் குடிச்சுட்டு வரலாம் . இந்த டென்சனாவது குறையும்…” ஒரு பெண் அழைக்க மற்றவர்களும் கிளம்பினர் .கமலினி தொண்டை சரியில்லையென மறுத்து விட்டு அங்கேயே அமர்ந்திருந்தாள் .

அப்போது அறையை விட்டு வெளியே வந்த சதாசிவம் ” என்னம்மா கமலினி தனியாக உட்கார்ந்திருக்கிறாய் …? ” எனக் கேட்டார் .

” சார் …எல்லோரும் ஜஸ்ட் ரிலாக்சேசனுக்காக புட் கோர்ட் போயிருக்கிறார்கள் சார் …”

” ஓ.கேம்மா .நீ போகவில்லையா …? “

” இல்லை சார் . எனக்கு கொஞ்சம் தொண்டை சரியில்லை …”

” பார்த்தும்மா . உன் வேலைக்கு குரல் ரொம்ப அவசியம் ” அவர் புன்னகைக்க கமலினிக்கு சிறிது தைரியம் வந்த்து .

” சார் என் வேலை …,”

” மணியிடம் சொல்லியிருந்தேனேம்மா . அநேகமாக  நீ செலகட் ஆகி விடுவாய. …” சதாசிவம் கடைக்கு உள்ளே போக கதவை திறக்க ஆரம்பிக்க , கமலினி வேகமாக அவர்ருகே போனாள் .

” சார் நம் எம்டியை பற்றி கொஞ்சம் சொன்னீர்களானால் எனக்கு இன்டர்வியூ கொஞ்சம் ஈசியாக இருக்கும் .அவர் யார் சார் …? அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் …? “

சதாசிவம் கமலினியை ஆச்சரியமாக பார்த்தார் .” என்னம்மா கமலினி உனக்கு தெரியாதா..? நம்ம எம்டி ஒரு பெண் . ..” இது கூட தெரியாதா என்பது போல் சதாசிவம் பார்க்க கமலினிக்கு தன்னை தானே கொட்டிக் கொள்ளும் வேகம் வந்த்து .

வேலைக்கு வரும்  இடத்தை பற்றிய முழு விபரங்களும் விசாரித்து தெரிந்து கொண்டு வருவதுதானே புத்திசாலித்தனம் .குரலை இறைஞ்சலாக்கினாள் .” சாரி சார் …”

” பரவாயில்லைம்மா .மணி உன்னை உன் குடும்பத்தை உன் புத்திசாலித்தனத்தை பற்றி நிறைய சொல்லியிருக்கிறான் . நீ சூட்டிகையாக எல்லாவற்றையும் கற்றுக் கொள்வாயென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .நம் எம்டி மேடத்தின் பெயர் பாரிஜாதம் .மிகவும் நல்லவர்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீ நேர்மையாக பதிலளித்தாலே போதும் .இப்போது இருக்கும் ஐவரில் மூவரை அவர் செலக்ட் செய்வார் .அதில் நிச்சயம் நீயும் இருப்பாய் .பயப்படாமல் இரு …” சொல்லவிட்டு சென்றுவிட்டார் .

அவர் பின்னேயே கமலினியும் கடையினுள் சென்று ஓர் ஒரமாக நின்று கொண்டு நடந்து கொண்டிருந்த வியாபாரத்தை கவனித்தாள் .அவள் நின்ற தளம் மோதிரங்கள் மற்றும் கம்மல்களுக்கானது .தங்க நகைகள் குவியல் என்பார்களே …அது போல் அங்கே அடர் ஊதா நிற டிரேக்களில் ஆபரணங்கள்  குவிக்கப பட்டு வாடிக்கையாளர்கள் பார்வைக்கு காட்டப்பட டுக் கொண்டிருந்த்து . அந்த பகுதியில் மட்டுமே அந்த காலை வேளையிலும்  ஏறக்குறைய நூறு  வாடிக்கையாளர்கள் இருந!தனர் .விசேசங்களோ ,முகூர்த்தங்களோ இல்லாத இன்றே இவ்வளவு வியாபாரமா …கமலினி ஆச்சரியமாக அவர்களை பார்த்தபடி நின்றாள் .




அப்போது கடை வாசல் முன்பு சத்தமில்லாமல் ஒரு பெரிய வெண்ணிற கார் வந்து நின்றது .மேடம்தான் என  கமலினி லேசாக பரபரப்படைய , கார் திறந்து அந்தப் பெண் வெளிப்பட்டாள் .நெகு நெகுவென வளர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் அழகாக இருந்தாள் .முடியை மொத்தமாக தூக்கி வாறி உச்சியில் கொண்டையாக போட்டிருந்தாள் .சிறிதாக கருப்பு பொட்டு புருவ மத்தியில் .மற்றபடி எந்த முக அலங்காரமும் இல்லை .கழுத்தை ஒட்டியபடி ஒரு மெல்லிய சங்கிலி ,காதை ஒட்டிக் கொண்டு ஒரு வளையம் .கைகளில் தடிமனான வளையல் ஒன்று .வெளிர் ஊதா நிறத்தில் ஒரு காட்டன் சேலை .இவர்களுக்கு என்ன வயதிருக்கும் …?

கமலினி அந்த பெண்ணை பார்த்தபடி யோசனையில் இருந்த போது , அவள் ஊழியர்கள் மரியாதையுடன் கதவை திறந்து பிடிக்க உள்ளே வந்து  கடையின் ஓரமாக இருந்த லிப்டில் ஏறி மேலே போக ஆரம்பித்தாள் .சுற்றிலும் கண்ணாடியாக உள்ளே இருப்பதை வெளியில் காட்டும் அந்த லிப்டில் ஏறி போய் கொண்டிருந்தவளை பார்த்தபடி நின்ற கமலினியினுள் திடீரென ஒரு மின்னல் .இவள் …இந்தப் பெண் …நேற்று மலைக்கோட்டையில் வைத்து பார்த்த பெண்தானே …

ஆம் …அவளேதான் .சௌபர்ணிகாவின் அம்மா .  பாறை மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள் . கமலினியிடம் ஒரு புது உறசாகம் புரண்டது .யாரோ ..எவரோ ஒரு அறியாதவர் என்ற பயமின்றி இந்தப் பெண்ணிடம் அவளால் பேச முடியுமெனத் தோன்றியது .இந்த சுமூக பேச்சே அவளுக்கு இந்த வேலையை பெற்றுத் தந்து விடாதா …? அவள் உற்சாகத்துடன் எம்டியுடனான  இன்டர்வியூவிறகு தயாரானாள் .

ஐவரையும் ஒன்றாக உட்கார வைத்தே கேள்விகள் கேட்டாள் பாரிஜாதம் .” அழகான தோற்றமுடையவர்களுக்கு , ஆங்கிலம் , தமிழ் இரண்டும் சரளமாக பேச தெரிந்தவர்களுக்கே இந்த வேலை .தெரியும்தானே …தோற்றத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த வேலைக்கு வரும் போது இப்படி எளிமையாக வரலாமா …? ,”

பாரிஜாத்த்தின் கேள்வி மறைமுகமாக தனக்கே என உணர்ந்தாள் கமலினி . அங்கே இருந்த ஐவரில் அவள் மட்டுமே உடை , மேக்கப் என அனைத்திலும் எளிமையாக இருக்கிறாள் .சித்தி கனகத்திற்கு பயந்து இப்படி வந்திருக்க கூடாதோ …உள்ளுக்குள் வருந்தினாள் .

” ஆள் பாதி…ஆடை பாதி …இது உங்களது இந்த வேலைக்கு மிகப் பொருத்தமான பழமொழியாக இருக்கும் .உங்களுக்கான யூனிபார்மாக விலை உயர்ந்த பட்டுச் சேலை கொடுக்கப்படும் .கூடவே சில தங்க  நகைகளும் தருவோம் .அவற்றையெல்லாம் அழகாக அணிந்து கொள்ளத் தெரியும்தானே …? “

பாரிஜாத்த்தின் இந்த குறிப்பு கேள்வியும் தன.னை நோக்கியே என உணர்ந்தாள் கமலினி .பாரிஜாத்த்தின் பார்வையில் தான் உயர் வகை உடைகளோ …அழகான அணிகளோ அணியத் தெரியாத சாதாரண பெண்ணென்ற நிலையில் இருப்பதை உணர்ந!தவளின் மனது வலித்தது .உடையை வைத்துஒரு பெண்ணை மதிப்பிடுவது சரியா …? பாரிஜாதம் இந்த வேலையை தனக்கு தரப் போவதில்லலை என அறிந்து கொண்டவளின் முகம் வாடியது .

” உங்கள் ஐந்து பேரில் மூவரை மட்டுமே செலக்ட் செய்ய போகிறேன் . அது யாராக இருப்பீர்கள் ..? அதன் காரணம் என்னவாக இருக்கும் …? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம் “

ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினர் .” என் உடையமைப்பு அழகு .என் சிகையமைப்பு அழகு .என் நகையமைப்பு அழகு”  என தங்களை தாங்களே வெளிப்படுத்தினர் .கமலினியினுள் ஒரு வெளிச்சம் .இப்படி முயன்று பார்க்கலாமே என நினைத்தவள் உற்சாகமாக பேச தொடங்கினாள் .

” என்னை நீங்கள் செலக்ட் செய்து விடுவீர்கள் மேடம் .ஏனென்றால் நாம் இருவரும் முன்பே தோழிகளாயிற்றே .நேற்று மலைக்கோட்டையில் சௌபரணிகாவுடன் நீங்கள்  வந்த போது நாம் சந்தித்து கொண்டோமே ஞாபகம் இருக்கிறதுதானே ….? “

முதல்நாள் உங்கள் குழந்தையோடு விளையாடினேனே …அவள்தான் நான் என அவள் குழந்தையை முன் நிறுத்தி தனக்கான ஆதரவை பெற முயன்றாள் கமலினி .ஒவ்வொரு தாய்க்கும் அவளது குழந்தையென்றால் சிறு நெகிழ்வு இருக்கும்தானே…இப்படி நினைத்தே முதல்நாளை நினைவு படுத்தி பேசினாள் அவள் .

ஆனால் அந்த நினைவுறுத்தலில் பாரிஜாத்த்தின் முகம் கறுத்து பொலிவிழந்த்து. அவள் கமலினியை நன்றாக கூர்ந்து பார்த்தாள் .இப்போதுதான் அவள் தன்னை அடையாளம் காண்கிறாள் என உணர்ந்த கமலினி அழகாக புன்னகைத்தாள் . எவரையும் விநாடியில் உடன் சேர்த்து  மலர வைக்கும் புன்னகைதான் கமலினியுடையது . அந் நகை இப்போது பாரிஜாத்த்தை முகம் வெளுக்க வைத்தது .

இவர்கள் ஏன் இப்படி பார்க்கிறார்கள் ….கமலினி குழம்பியபடி இருந்த போது திறந்திருந்த  அறைக்கதவு வழியாக  அவன் உள்ளே வந்தான் .

” இன்டர்வியூ முடிந்த்தா …? ” கேட்டபடி வந்தவனும் கமலினிக்கு பரிட்சயமானவனே .முதல்நாள் அம்மாவை கேட்டபடி குழந்தை சௌபர்ணிகாவை தோளில் தாங்கி படியேறி வந்தவன் .

” ஓ .முடிந்த்தே .இந்த மூவரையும் செலக்ட் செய்திருக்கிறேன் .” அவசரமாக சொன்ன பாரிஜாதம் கை காட்டிய மூவரில் முதலில் இருந்தவள் கமலினி .

கூடவே அவளது கண்கள் கமலினியிடம் கெஞ்சின .எதையும் பேசாதே என சேதி அனுப்பின .இந்த ரகசிய சமிக்ஞையில் கமலினி குழம்பினாள் .




What’s your Reaction?
+1
19
+1
17
+1
2
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!