kadak katru Serial Stories

Kadal Kaatru – 41

                                                 41

” ஐய் …ஐயா …” தடுமாறினான் மாடசாமி .

” உன்னை என்ன செய்ய சொல்லிவிட்டு வந்தேன் .என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ..? “

திடீரென ஒரு முடிவுக்கு வந்தவன் போல் நிமிர்ந்த மாடசாமி ” ஐயா , எனக்கு என் பொண்ணு வேணுங்கய்யா .நான் அவளை என் கூட கூட்டிக்கொண்டு போகப் போகிறேன். ….” என்றான் .” ஆ ” வென கன்னத்தை பிடித்துக் கொண்டு அலறினான் .

ஆத்திரமாய் அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு அவன் சட்டையை பிடித்து உலுக்கினான் யோகேஷ்வரன். ” ராஸ்கல் உனக்கு எவ்வளவு தைரியம் ..? உன் பெண்ணின் வாழ்க்கையை நீயே கெடுத்துக் கொண்டிருப்பது தெரியவில்லை ..?”

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த செல்லியை அருகில் சென்று அணைத்துக் கொண்டாள் சமுத்ரா .யோகனின் பிடியிலிருந்து வர திமிறிக் கொண்டிருந்தான் மாடசாமி .
” இங்கே பார் உனக்கு துபாயில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன் .ஒழுங்காக அங்கே போய்விடு .பிறகு உனக்கு அங்கேயே ஒரு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்கிறேன் .போய்விடு …” யோகேஷ்வரன்.

” போய்விடுகிறேன் என் மகளை என்னுடன் அனுப்பிவிடுங்கள் .நான் போய்விடுகிறேன் ” மாடசாமி .
” உன் …பெண்ணா ..? அவள் உன் தம்பி மகள் .அவள் அருகில் நெருங்க கூட நான் விடமாட்டேன் ” யோகேஷ்வரன்.

” இல்லை …என் மகள் …”

சமுத்ராவிற்கு இப்போது இங்குள்ள நிலைமையின் தீவிரம் புரிந்த்து .நடுங்கியபடி தன் மேல் சாய்ந்திருந்த செல்லியிடம் மெல்லிய குரலில் பேசினாள் .பின் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரிடமும் வந்தாள் .

” நிறுத்துங்க …” யோகனின் மார்பில் கை வைத்து இருவரையும் பிரித்து தள்ளினாள் .” யோகன் இதற்கான முடிவை எடுக்க வேண்டியது நாம் அல்ல .செல்லிதான் .அவள்தான் சொல்லவேண்டும் .செல்லி நீயே சொல்லும்மா .நீ உன் அப்பாவுடன் துபாய் போகிறாயா ..? “

உடனே மாடசாமி மகளிடம் போனான் ” ஆமாம்னு சொல்லும்மா .அப்பா கூட வந்திடும்மா .” கெஞ்சினான் .செல்லி விழித்தபடி அமர்ந்திருந்தாள் .

” செல்லி நான்தான்மா உன்னோட உண்மையான அப்பா .உன்னோட அம்மா ரொம்ப கெட்டவ.நான் செத்தேனான்னு கூட தெரியாமல் உடனே உன் சித்தப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா.உன் தம்பியையும் பெத்துக்கிட்டா .இப்போ அவுங்க மூணு பேரும் ஒரு குடும்பமா ஆகிட்டாங்க. நாம் இரண்டு பேரும் தனி குடும்பமாகிட்டோம் .அதனால் என் கூடவே வந்திடும்மா …” மெல்ல பிஞ்சு மனதில் நஞ்சை கலந்தான் .




யோகனின் உடல் கோபத்தில் இறுகுவது அவனருகில் நின்றதால் சமுத்ராவிற்கு நன்கு தெரிந்த்து .மீண்டும் கைகளை முறுக்கியபடி அவன் மாடசாமி மேல் பாய தயாராக , அவன் இடையில் கை கோர்த்து இழுத்தபடி அவனை தடுத்தாள் சமுத்ரா .” கொஞ்சம் பொறுங்க “

” ராஸ்கல் …இப்படி பேசிப் பேசிதான் அந்த சிறு பெண்ணை குழப்பி தற்கொலை வரை கொண்டு போயிருக்கிறான் .இவனை …” நறநறத்த அவன் பற்களை கண்டு அவன் இதழ்கள் மேல் தன் விரல் வைத்தாள் சமுத்ரா .

” ஷ் …அமைதி …நிச்சயம் நல்ல முடிவு வரும் .வெயிட் பண்ணுங்க ” தனக்கு மிக அருகில் நின்றபடி கெஞ்சிய மனைவியின் வட்டமுகம் யோகனை வெகுவாக சமாதானப்படுத்த அமைதியானான் .கிடைத்த வாய்ப்பினை விடாமல் தன் இதழ்களின் மேலிருந்த மனைவியின் விரல் மீது இதழ்களை குவித்தான் .

சட்டென ஷாக்கடித்தாற் போல் தன் விரல்களை எடுத்துக் கொண்ட சமுத்ரா அவனை முறைத்தபடி தள்ளி நின்று கொண்டாள் .அந்த கோப பார்வை சிறிதும் பாதிக்காமல் ,முந்தைய வேகம் முற்றிலும் வடிந்து விட ,தன்னை விட்டு சிறிது முன் நகர்ந்து நின்ற மனைவியை ஒட்டியபடி நின்று லேசான மனதுடன் மாடசாமியையும் , செல்லியையும் கவனிக்கலானான் .

சமுதராவின் கணிப்பு தப்பவில்லை .தன் அம்மாவின் மீது அப்பா போட்ட அபாண்டங்களை செல்லியால் தாங்க முடியவில்லை .முதலில் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு பேசாமலிருந்த்து வசதியாகிவிட , மேலும் , மேலும் சாயாவின் மேலும் தன் தம்பி மேலும் சேற்றினை வாறி இறைத்தான் மாடசாமி .

” போதும் …..” காதுகளை மூடிக்கொண்டு கத்தினாள் செல்லி. ” பொய் …நீங்க ரொம்ப பொய் சொல்றீங்க .போங்க இங்கேயிருந்து போங்க …இனிமேல் என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க ” என்றாள் .

மாடசாமி அதிர்ந்து நின்றான் .தடுமாறியபடி கட்டிலில் இருந்து இறங்கிய செல்லி மாடசாமியின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு போய் அறைக்கு வெளியே தள்ளிவிட்டு வந்து கட்டிலில் படுத்து அழத்துவங்கினாள் .

” முத்ரா நீ செல்லியை பார்த்துக்கோ .நான் மாடசாமியை பார்க்கிறேன் ” என்றுவிட்டு வெளியேறினான் யோகேஷ்வரன்.

படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்த செல்லியை தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டு சமாதானப்படுத்த தொடங்கினாள் சமுத்ரா  .யோகேஷ்வரன் திரும்ப வரும் வரை இந்த சமாதானப்படுத்துதல் தொடர்ந்த்து .

” என்ன இரண்டு ரிப்போர்ட்டரும் என்ன பண்றீங்க ்..? கேலி பேசியபடி திரும்ப வந்தான் யோகேஷ்வரன்.கேள்வியாய் நோக்கிய மனைவியிடம்  ஒன்றும் பிரச்சனை இல்லையென கண்களால் சொன்னான் .

” அது யாரு ..இரண்டு ரிப்போர்ட்டர் ….? ” சமுத்ரா .

” நீங்க இரண்டு பேரும்தான்மா .ஒருத்தர இப்போ ரிப்போர்ட்டராக கலக்கிட்டிருக்காங்க .இன்னொருத்தர் எதிர்காலத்தில் பெரிய ரிப்போர்ட்டரா கலக்க போறாங்க ” இந்த வார்த்தையில் சோர்ந்து போய் சமுத்ரா மடியில் படுத்திருந்த செல்லி எழுந்து விட்டாள் .

” நிஜம்மா நான் அக்காவை மாதிரி பெரிய ரிப்போர்ட்டராயிடுவேனுங்களாய்யா ..?” ஆர்வம் மின்ன கேட்டாள் .

” அட உங்க அக்கால்லாம் பெரிய ரிப்போர்ட்டரா என்ன …? சும்மா அப்படி சொல்லிக்கொண்டு இருக்காங்க .ரிப்போர்ட்டர்ங்கிறதுக்கு கரெக்டா ஸ்பெல்லிங் தெரியுமான்னு கேளுங்க செல்லி …” சமுத்ராவை குறும்பாய் பார்த்தபடி யோகன் கூற அவனை செல்லமாக முறைத்தாள் அவள் .

” செல்லி நீ என்னை விட நிச்சயம் பெரிய ரிப்போர்ட்டரா வருவாய் .பெரிய சேனலில் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் .அந்த கவலையெல்லாம் எங்களிடம் விட்டு விட்டு நீ படிக்கிற வேலையை மட்டும் பார் ” தலையை வருடியபடி கூறினாள் .சந்தோசமாக தலையாட்டினாள் செல்லி .

மேலும் சிறிதுநேரம் செல்லியிடம் சமாதானமாக பேசிவிட்டு ,செல்லியின் அம்மாவும் ,அப்பாவும் வரவும் அவர்களிடம் செல்லியை ஒப்படைத்து விட்டு இருவரும் வெளியேறினர் .

” மாடசாமியை என்ன செய்தீர்கள் ..? ” காரில் ஏறியதும் கேட்டாள் சமுத்ரா .

” அவனைக் கொன்றுவிடவில்லை ….”  கோபம் தெறித்தது அவன் குரலில் .சமுத்ரா வாயை மூடிக் கொண்டாள் .

” ராஜபாண்டி ஐயா ஒரு வேலை சொல்லியிருக்கிறார் .உடனடியாக ஊர் திரும்பும் பயணம் உனக்கும் அலுப்பாக இருக்கும் .அதனால் …” என்றபடி காரினை அந்த நட்சத்திர ஹோட்டலினுள் திருப்பி பார்க்கிங்கில் நிறுத்தினான் .அப்படியே ஸ்டியரிங்கை பிடித்தபடி அமர்ந்திருந்தான் .

” மாடசாமி புரிந்து கொண்டான் சமுத்ரா .துபாய் போக ஒத்துக்கொண்டான் ்இன்று இரவு அவனை ப்ளைட் ஏற்றி விட்டு விட்டு நாளைதான் நாம் ஊருக்கு போக வேண்டும் .” முன்னே பார்த்தபடி இதனை கூறியவன் திரும்பி பார்த்து ” உன் உதவியில்லாமல் இதனை என்னால் முடித்திருக்க முடியாது சமுத்ரா .சரியான நேரத்தில் பிரச்சனையை மென்மையாக கையாண்டு நல்லபடியாக முடித்துவிட்டாய் .இதற்கு உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் ” அவளருகில் நெருங்கி அமர்ந்தான் .

மனம் படபடக்க அவனை ஏறிட்டாள் சமுத்ரா .” உன் அனுமதியோடு …” என்றவன் சமுத்ராவின் முகத்தை உயர்த்தி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் .” நன்றி செல்லம் …” என்றவனின் இதழ்கள் அவள் கன்னங்களருகே தயங்கி நின்றது .




அன்றொருநாள் இந்த பார்க்கிங்கில் யோகன் அளித்த அவசர முரட்டு முத்தம் இப்போது போல் சமுத்ராவின் இதழ்களில் வந்து நின்றது .இதழ்கள் குறுகுறுக்க திரும்பி பார்த்த போது , ,”இறங்கு …” என்றபடி  யோகேஷ்வரன் காரை விட்டு இறங்கிக் கொண்டிருந்தான் .இவன் நிறைய மாறிவிட்டான் ..ஒரு நிறைவுடன் நினைத்தபடி இறங்கினாள் சமுத்ரா .

அறையில் அவளை விட்டு விட்டு , பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு யோகன் வெளியேறினான் .அவன் போனதும் அறையை பூட்டி சாவியை ரிசப்சனில் கொடுத்து விட்டு ஒரு கால்டாக்ஸி பிடித்துக் கொண்ட சமுத்ரா கருணாமூர்த்தி வீட்டு விலாசத்தை சொன்னாள் .அங்கே அவளுக்கு நிறைய விவரங்கள் தெரிய வேண்டியிருந்த்து .

திடீரென சமுத்ராவை அங்கே கண்டதும் கருணாமூர்த்தியும் , செண்பகமும் திணறினார்கள் .எங்கேயோ வெளியே கிளம்பும் ஏற்பாட்டில் அவர்கள் இருந்த்து போல் சமுத்ராவிற்கு தோன்றியது .

” அட …சமுத்ரா வாம்மா ..வா …” முதலில் சுதாரித்துக் கொண்டவள் செண்பகம் .விரைவில் கருணாமூர்த்தியும அவளுடன் இணைந்து கொள்ள இருவருமாக அவளிடம் மாறி ..மாறி குலைந்தனர் .

” சமுத்ரா அந்த கொலுசு பற்றி எதுவும் தெரிந்த்தா ..?” கண்கள் ஆசையினால் மின்னக் கேட்டாள் செண்பகம் .

இவர்கள் மகனை ஒதுக்கி இன்னொருவனை மணந்திருக்கிறேன் , அதைக் கேட்கவில்லை .மகளை பற்றி கேட்கவில்லை. இத்தனைக்கும் மகளை அழைத்து வா என்றுதான் அனுப்பியே வைத்தார்கள் …இதையெல்லாம் விட்டு விட்டு கொலுசினை விசாரிக்கிறார்கள் .

” கொலுசா …? எந்த கொலுசு அத்தை ்..? “இந்தக் கேள்வியில் செண்பகத்தின் முகம் கறுத்தது .

” அன்று உனக்கு ஒரு போட்டோ வாட்ஸ் அப்பில் அனுப்பினேனே …அதைக் கேட்டேன் “

” ஓ…அதை மறந்தே போனேனே …அந்தக் கொலுசுக்காகத்தானே யோகன் லாவண்யாவை ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டார் …? ” மெல்ல ஆழம் பார்த்தாள் .

” என்னது …? எது …? ஆ…ஆமாம் …ஆமாம் ்…அதேதான் அது கிடைத்ததா ….? ” செண்பகத்தின் குரலில் ஆர்வம் .

” தெரியவில்லையே அத்தை .ஒரு வேளை லாவண்யாவிற்கு தெரிந்திருக்குமோ என்னவோ …? ” இப்போதாவது மகள் நினைவு வருகிறதா என பார்க்கலாம் என்றே இப்படிக் கூறினாள் .

” அந்தக் கழுதைதான் எவனையோ இழுத்துட்டு ஓடிட்டாளே …அது அவளிடம் இருக்காது .நிச்சயம் அந்த ஈஸ்வர் அதை பிடுங்கிக் கொண்டு தான் அவளை அனுப்பியிருப்பான் .அது அவனிடம்தான் இருக்கும் .நீ அவனிடம் கேட்டாயா …? “

ஆக , லாவண்யாவை காரணம் காட்டி யோகனிடம் சமுத்ராவை அனுப்பிய காரணம் அந்த கொலுசுதான் .
மற்றபடி லாவணயா பற்றிய கவலை எதுவும் இவர்களுக்கு இல்லை .அறிந்து கொண்ட உண்மையில் மனம் கசந்த்து .ஆனால் என்னை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் …? அதற்கான விடையை செண்பகமே கொடுத்தாள் .

” நான் கேட்டால் எப்படி அத்தை அவர் கொடுப்பார் …? “

” அட முட்டாள் பெண்ணே …” என்ற செண்பகம் ” இங்கே என்ன வாய் பார்த்துக் கொண்டு கொஞ்சம் அந்தப்பக்கம் போங்கள் ” என கருணீமூர்த்தியிடம் எரிந்து விழுந்தாள் .

” சமுத்ரா அந்த ஈஸ்வர் இருக்கிறானே ..அவன் பொண்ணுங்கன்னா வாயை இளிப்பான் .நீ கொஞ்சம் அவன்கிட்ட அப்படி …இப்படி …அட ..அவன்தான் இப்போ உன் புருசனாச்சே ..அப்புறம் என்ன ..? அந்த லாவண்யாகிட்ட இதையே சொன்னப்ப அவன் என்ன என் புருசனான்னு கத்தினாள் .உனக்குத்தான் அந்த பிரச்சினையில்லையே …நீ அவனை அப்படியே உன் மடியில் போட்டுக்கொண்டு …” இன்னமும் ஏதோ விவரிக்க   ஆரம்பிக்க

” போதும் அத்தை …இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது “

” அப்போ என் கொலுசு என்ன ஆவது ..? ” ஆங்காரமாய் கத்தினாள் செண்மகம் .

” அதை மறந்து விடுங்க …அது உங்களுக்கு கிடைக்காது …”

” ஏய் என்னடி எல்லாவளும் இதையே சொல்றீங்க , அந்த லாவண்யாவை கெஞ்சிக் கூத்தாடி இதை செய்ய சொன்னா ல் அவள் ஈஸ்வரை விட்டுட்டு , வேறு ஏதோ ஈஸ்வரமூர்த்தி பின்னாடி போய் விட்டாள் .சும்மாவாது போனாளா ..? அதிசயமாக எங்களிடம் சிலநேரம் இந்த மாதிரி பொருள் மாட்டும் . அப்படி தற்செயலாக மாட்டின  கொலுசையும் தூக்கிட்டு போயிட்டா .அந்த ஈஸ்வர் நிறைய பொருட்களை சேர்த்து வச்சிருக்கான் .அதை எப்படியாவது அவன்கிட்ட உரசிப் பேசி வாங்கிட்டு வான்னு அனுப்பினா இருந்த கொலுசையும் தூக்கிட்டு போயிட்டா .பிறகு உன்னை செட் பண்ணி அனுப்பி வைத்தோம் .இப்போது நீயும் இப்படி சொல்லிக் கொண்டு திரிகிறாய் என்னதான் நினைக்கிறீர்கள் …?” கொலுசு கிடைக்காது என்ற ஆத்திரத்தில் கருணாமூர்த்தி உள்ளதையெல்லாம் புட்டு புட்டு வைத்தான் .

” என்ன என்னையும் இதற்காகத்தான் அனுப்பினீர்களா ? ” அதிர்ச்சியுடன் கேட்டாள் சமுத்ரா .

” ஆமாம் பிறகு இப்படி கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணவா அனுப்பினோம் .லாவண்யாவிற்காவது அவனை மடக்குவதில் நிறைய கஷ்டம் இருந்த்து .தேடி தேடி கடைக்கு வந்தான் .ஆனால்  லாவண்யா பக்கமே திரும்பவில்லையே .ஒரு தடவை  உன்னைப்பார்த்ததிலிருந்து  டன் டன்னாய் ஜொள் விட்டுக் கொண்டிருந்தானென்றுதான் உன்னை அனுப்பினோம் .இப்போது நீயும் முடியாது என்றால் எப்படி …? “

சமுத்ராவிற்கு தலை சுற்ற தொடங்கியது .இவர்கள் என்ன சொல்கிறார்கள் …? செண்பகமும் , கருணாமூர்த்தியும் சுயநலவாதிகள் என்று தெரியும் .பெற்ற மகளையோ ..மகனையா ..எப்போதுமே அவர்கள் நினைத்ததில்லை .ஆனால் …இந்த அளவிற்கா இருந்தார்கள் …?

” இங்கே பார் …நீ எப்படியோ அவனை கைக்குள் போட்டுக் கொண்டு தாலி கட்டிக் கொண்டாய் .அவன் சொத்தையெல்லாம் அனுபவித்து விட்டு போ …ஆனால் அந்த கொலுசை மட்டும் கேட்டு வாங்கி எங்களுக்கு கொடுத்து விடு ” செண்பகம் .

” ஏய் ..அந்த ஜாடிடீ…அதை மறந்து விட்டாயே ..? ” கருணாமூர்த்தி இடையிட ” போகிறது அந்த கொலுசு மட்டும் போதும் நமக்கு ” என்றால் செண்பகம் .

” என்னது போகிறதா …? அந்த ஜாடி மதிப்பு தெரியுமா உனக்கு ..? அதோட மார்க்கெட் ரேட் தெரியுமா …? அதெல்லாம் முடியாது அந்த ஜாடியையும் சேர்த்துதான் வாங்கிட்டு வரணும் “

” இங்கே பாரு சின்னதுக்கு ஆசைப்பட்டு பெரியதை கோட்டை விட்டுடாதே …,சமுத்ரா நீ கொலுசு மட்டும் வாங்கிக் கொடு போதும் “

இந்தக் கொடுமையான சண்டையில் நொந்த சமுத்ரா ” போதும் நிறுத்துங்க , உங்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை ” என்றபடி எழுந்தாள் .

” என்னது ஒண்ணும் கிடைக்காதா ..? அப்போது உன்னாலே இங்கேயிருந்து போக முடியாது ” அவள் வழியை மறித்தபடி இளித்தான் கருணாமூர்த்தி .

ஐய்யய்யோ இப்படி மாட்டிக் கொண்டேனே .இதுதான் அவர்களை போய் பார்க்காதே என யோகன் சொல்லியபடியே இருந்தானோ…இப்போது என்ன செய்ய போகிறேன் …? குழம்ப ஆரம்பித்தாள் சமுத்ரா 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!