உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் நெல்லிக்காய் சாகுபடி செய்வது எப்படி என்றும், பராமரிக்கும் முறையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் காண்போம்.
மாடி தோட்டம் அமைக்க தேவைப்படும் பொருட்கள்:
75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம், அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா, நடுவதற்கு ஏற்ற ஒட்டு செடிகள், நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான் ஆகியவை மாடி தோட்டம் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் ஆகும்.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – தொட்டியில் மணல் நிரப்பும் முறை:
டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுக்கமாகாமல் இலகுவாக இருக்கும்.
இதன் மூலம் வேர்கள் நன்கு வளரும். தயார் செய்துள்ள டிரம்களில் 10 நாட்களுக்கு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – விதை விதைக்கும் முறை:
நெல்லியை நடுவதற்கு ஒட்டுச் செடிகளை பயன்படுத்த வேண்டும். செடிகளை தொட்டியின் நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – நீர் பாசனம்:
நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பயன்படுத்தும் டிரம்மின் அடிப்பகுதியில் இரு துளைகளை இட வேண்டும்.
இதனால் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறி விடும். இல்லை எனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேர்கள் அழுகி விட வாய்ப்புள்ளது.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – உரமிடுதல்:
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
ஒரு கையளவு சாணத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும். சாணம் அதிகமாக இருந்தால் எறும்புகள் வர வாய்ப்புள்ளது. குறைந்தளவு சாணத்தை தான் பயன்படுத்த வேண்டும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – பயிர் பாதுகாப்பு முறை:
பூச்சிகளிடமிருந்து செடிகளை காக்க சமையலறை குப்பைகளில் இருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.
பின்பு மாதம் ஒரு முறை வேப்ப எண்ணெயை செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
நுனிகளை கிள்ளி விட்டு பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். மூன்று கிளைகளுக்கு மேல் வளர அனுமதிக்க கூடாது.
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
மாடித்தோட்டம் நெல்லிக்காய் சாகுபடி – அறுவடை:
இது நன்கு வளரும் தன்மை கொண்டது. இதை மாடியின் ஒரு மூலைப்பகுதியில் வைப்பது நல்லது. அறுவடைக்கு சுலபமாக இருக்கும். நன்கு திரண்ட காய்களை பறிக்க வேண்டும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1