Serial Stories

நந்தனின் மீரா-27

27

கோடை வெம்மையின் வெளுத்த பூக்களை
அந்த ஒரு கோடை இரவே அறிமுகப்படுத்தியது ,
முடிவற்றதாக வேண்டுமென என விரும்பும்
மனதினையும் …
இமைக்குள் வெயில் மறைக்கும் வித்தையையும்
அதன் பிறகுதான் கற்றுக்கொண்டாள்
,அடர் வெக்கை நாளொன்றில்
இதழோடு இதழுரசி தீயொன்று வளர்த்த
அந்தக் கணத்திலிருந்துதான்
இவையெல்லாமே ….

அந்த மரத்தில் பச்சைக்கிளிகள் கூடு கட்டியிருந்திருக்கின்றன. இப்போது குஞ்சு பொரித்து விட்டன போல .பின்பக்கம் வந்ததுமே கீச் கீச்சென்ற சத்தம் .ஏதோ வினை முடித்த திருப்தி நிலவும் மனத்துடன் அந்த வேப்பமரத்தடி கல்லில் அமர்ந்து அந்த சத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் மீரா .

” மீரா …உன்னை வீடு முழுவதும் தேடுகிறேன் .இங்கே என்ன பண்ணுகிறாய் …? ” வந்து நின்றான் நந்தகுமார் .

” கிளிங்க …மரத்தில் கூடு கட்டியிருக்குது .பாருங்க ஒரே சத்தம் …இத்தனை சத்தத்திற்கு ஒரு கிளி கூட கண்ணில் பட மாட்டேங்குதேன்னு பார்க்கிறேன் .சும்மா மின்னல் மாதிரி அங்கிட்டும் …இங்கிட்டும் பறக்குது .முழுதா கண்ணில் பட மாட்டேங்குதே …” குறை சொன்னபடி அமர்ந்திருந்த கல்லின் மேலேறி நின்று எட்டி  பாரத்தாள் .

” கிளிதானே ..இதோ இங்கே இருக்குது பாரு …” அவள் இடையை பற்றி தூக்கியவன் தாழ்வாக இருந்த கிளையொன்றில் அவளை அமர வைத்தான் .

” அங்கே பார் கண்ணா …” அவள் முகவாயை பற்றி முகத்தை நிமிர்த்தி  மேலே  காட்டினான் .

அவன் காட்டிய இடத்தில் சிறு குஞ்சாய் ஒரு கிளி அமர்ந்து சிவப்பு அலகால் உடல் கோதிக்கொண்டிருந்தது .இடையிடையே சிறகுகளை படபடத்து பறக்க முயற்சி செய்தது .

” ஹை …..”இரு கைகளையும் கன்னம் தாங்கி வியந்தவள் …

” ஏங்க …உங்க போன் குடுங்க …போட்டோ எடுக்கலாம் ….” அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து போனை எடுத்தவள் போட்டோ எடுக்க துவங்கினாள் .

இரண்டொரு போட்டோக்களுக்கு அவளுக்கு போஸ் கொடுத்த அந்த குஞ்சு , பிறகு சலித்தாற் போல் அவளை முறைத்துக்கொண்டு குட்டிச் சிறகடித்து பறந்து போய் மரப்பொந்தொன்றுக்குள் புகுந்து கொண்டது .

” ப்ச்  …” ஏமாற்றத்துடன் எடுத்த போட்டோக்களை பார்த்தவள் கணவனிடமும் அதை காட்ட திரும்பினாள்.
தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்து மேலே அண்ணாந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தவளை கீழே நின்று கொண்டு அவன் பார்த்தவிதம் ….அந்த பார்வை ….இன்னமும் அவள் இடையை வருடியபடியிருந்த கரங்கள் ….




சட்டென மேலிருந்து குதித்தாள் .

” ஏய் …அதற்குள் ஏன் இறங்கினாய் …? ” ஏமாற்றமாய் கேட்டான் .

” சை …நீங்களும் ..உங்கள் பார்வையும் …” திடீரென மேனி முழுவதும் பரவி மின்சாரம் பாய்ச்சிக் கொண்டிருந்த மின்னலை ..வெளிக்காட்டாமல் சமாளிக்க…உள்ளே ஓடினாள் .

” இவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சினை முடியும்னு நினைக்கலைம்மா ….”

ஹாலில் அமர்ந்து சுந்தரியுடன் பேசிக்கொண்டிருந்தார் சண்முகசுந்தரம் .இவர் எப்போது வந்தார் என நினைத்தபடி …

” வாங்க பெரியப்பா …என்ன சாப்பிடுறீங்க …? ” விசாரித்தாள் .

” எல்லாம் உங்கள் பேச்சுத்திறன் தான் அண்ணா .நிச்சயம் நீங்கள் மாப்பிள்ளை மனதிற்கு உரைக்கிற மாதிரி சொல்லியிருப்பீங்க . அதை மாப்பிள்ளை தனக்குள்ளாக யோசித்து பார்த்து இந்த முடிவிற்கு வந்திருப்பார் .உங்கள் திறமையை தவிர ..இதில் வேறு ஒன்றுமில்லை அண்ணா ….” அண்ணனின் தலையில் கூடை கூடையாக பூக்களை கொட்டிக் கொண்டிருந்தாள் சுந்தரி .

இதென்ன அத்தைக்கு என்ன நடந்தாலும் அதற்கு அண்ணன்தான் காரணமா …உள்ளே வந்து நின்ற கணவனின் முகம் பார்த்தாள் .அவன் தன் உதட்டின் மேல் விரல் வைத்து காட்டினான் .எதையும் சொல்லவேண்டாமாம் ….போயேன் …எனக்கென்ன …என தோள்களை குலுக்கியபடி உள்ளே போனவளிடம் ….

” எனக்கு டீ கொண்டு வாம்மா …மிருணாவிற்கு காபி …,” என்றார் சண்முகசுந்தரம் .

மிருணாவா ….அவளுமா வந்திருக்கிறாள் .எங்கே காணோம் ….யோசித்தபடி விழிகளை சுழற்றிய போது அவர்களுடைய படுக்கை அறையினுள்ளிருந்து வெளியே வந்தாள் மிருணாளினி .

குத்தீட்டி ஒன்று அடிவயிற்றில் தைத்தது போலிருந்தது மீராவிற்கு.வந்ததும் …எதற்காக எங்கள் அறைக்குள் போனாள் .மனம் மூண்ட எரிச்சலில் .வா என்று அழைக்கவும் மனமன்றி லேசாக இதழை மட்டும் இழுத்து இளித்து விட்டு அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் .

பாலை சுட வைத்தபடி அடுப்பு நெருப்பை பார்த்தவளுக்கு சற்று முந்திய கணவனின் பார்வை நினைவு வந்தது .என்ன பார்வை அது …. நடுக்கும் குளிரில் இதோ இப்படித்தான்  அடுப்பு அருகே நிற்பது போலிருந்தது .பார்வையாலேயே இவ்வளவு வெப்பத்தை உடம்பிற்கு கடத்துகிறானே …வெட்கத்துடன் நினைத்த மீரா கட்டின்றி பாயும் தன் நினைவுகளை கட்டுக்குள் அடக்க தன் கையிலிருந்த கணவனின் போனை ஆன் செய்தாள் .அந்த கிளி போட்டோவை பார்க்க எண்ணினாள்.

போன் பாஸ்வேர்டு கேட்டது .அப்போது என்ன சொன்னார் ?….யோசித்தவளருகே ….

” 9…8…7…3 …அதுதான் பாஸ்வேர்டு போட்டு பாரு ….” என்று வந்து நின்றாள் மிருணாளினி .

அவளை வெறித்தபடி கை நடுங்க நின்றிருந்தவளிடமிருந்து போனை வாங்கியவள் தானே நம்பரை அழுத்தி போனை திறந்தாள் .

” இந்த நம்பர் எங்கள் இரண்டு பேருக்குமிடையே சீக்ரெட் கோட் தெரியுமா …?” கண்களை சிமிட்டினாள்.

காது கேட்காதவள் போல் டீயை பில்டர் பண்ண தொடங்கிய மீராவின் உள்ளம் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது .

சலனமின்றி போனை நோண்டிக் கொண்டிருந்த மிருணாளினி ..அத்தான் ….பொத்தான் …என ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள் .தன் செவிகளை தானே செவுடாக்கிக் கொண்டு கப்புகளை டிரேயில் அடுக்கிய மீரா , திடீரென மிருணாளினியின் பேச்சு நின்று போனதை உணர்ந்து அவளை பார்த்தாள் .




மிருணாளினி விழிகள் நிலை குத்தியது போல் போனை பார்த்தபடி இருந்தாள் .எட்டி போனை பார்த்த மீராவிற்கு உடல் முழுவதும் புன்னகைக்க வேண்டும் போலிருந்தது .அவள் …அந்த போனில் …நந்தகுமாரும் , மீராவுமாக சேர்ந்து அன்று எடுத்துக்கொண்ட அந்த போட்டோவை பார்த்தபடி இருந்தாள் .

” புருசன் …பொண்டாட்டி போட்டோவை அடுத்தவர்கள் பார்க்கலாமா மிருணா .அதுவும் நீங்கள் இன்னமும் மணமாகாத சின்னபெண் .எங்களின் அந்நியோன்யம் உங்களுக்கு எதற்கு …!? ” கேலியாய் சொன்னதோடு போனையும் பிடுங்கிக்கொண்டு காபி தம்ளர்களோடு நகர்ந்தாள் .

” இந்தாங்க உங்க போன் …” கணவனிடம் நீட்டியவள் அவன் கைகளில் காபி கப் இருந்ததால் …தானே அவன் பாக்கெட்டில் சொருகினாள் , ஓரக்கண்ணால் முகம் வெளிறி இருந்த மிருணாளினியை பார்த்தபடி .

” மிருணாவிற்கு மாப்பிள்ளை பார்த்தீர்களாண்ணா …? ” கேட்ட சுந்தரிக்கு …

” என் மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்திருக்கறேன் ….” என்ற சண்முகசுந்தரம் ஓரக்கண்ணால் நந்தகுமாரை ஆராய்ந்தார் .

” அப்படியா மாமா .அப்போது கல்யாணத்திற்கு பிறகு மிருணா அமெரிக்கா போய்விடுவாளா …? ” கவனமாக தன் மீசையில் படிந்த காபி நுரையை சலனமின்றி துடைத்த கணவனை கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது மீரா .

இவன் கல்லுளிமங்கன் .இவனது ரியாக்சனை பார்க்க வேண்டுமென்றே ,சண்முகசுந்தரம் இதை கூறியது போலிருந்தது மீராவிற்கு .அதையே தானும் உணர்ந்தே இது போலொரு பதில் சொன்னான் நந்தகுமார் .

” ஆமாம் அமெரிக்கா போய்விடுவேன் .இங்கே இருக்க எனக்கு பிடிக்கவில்லை .உங்கள் யார் முகத்தை பார்க்கவும் எனக்கு பிடிக்கவில்லை .அப்பா …இப்போது சொல்கிறேன் உடனே அந்த மாப்பிள்ளையை முடிவு பண்ணுங்கள் .நான் ஒரேடியாக போய்விடுகிறேன் எல்லோரும் நிம்மதியாக இருங்கள் …” ஆங்காரமாய் கத்திவிட்டு வெளியே ஓடினாள் மிருணா.

” மிருணா …நில்லும்மா …” கத்தியபடி சண்முகசுந்தரம் பின்னாலேயே போய்விட ..சுந்தரி அழத் துவங்கினாள் .

ஒரு நிமிடம் அம்மாவை பார்த்த நந்தகுமார் பிறகு எழுந்து அவளருகே அமர்ந்து அவளை சமாதானப்படுத்த தொடங்கினாள் .

இரவு…

சன்னல் வழியே வேப்ப மரத்தை பார்த்து நின்றிருந்த மீரா..பின்னிருந்து அவளை தாபத்துடன் அணைத்த கணவனின் அணைப்பை எதிர்பார்த்தே இருந்தாள் .இன்னமும் முழு ஒப்புதலற்ற மனமிருந்தாலும் …அன்று போல் கணவனை தள்ளும் மனதுமில்லாததால் ….குழைந்த உடலை மனதுடன் சேர்க்க முயற்சித்தாள் அவள் .

சன்னல் வழியே கண்ணில் பட்ட வேப்பமரக் கிளை அன்று மாலை அவளை நந்தன் அந்த கிளையில் ஏற்றி அமர வைத்ததை நினைவூட்ட ,அந்த நேரம் மிருணாளினி இந்த அறையினுள்தானே இருந்தாள் .ஒருவேளை எல்லாவற்றையும் பார்த்திருப்பாளோ ….? அதுதான் அவ்வளவு வேகமோ …?

சன்னல் கதவுகளை மூடினான் நந்தகுமார் .

” ஏன் பூட்டுகிறீர்கள் …? “

” வா .சொல்கிறேன் .” அவளை அள்ளி போய் கட்டிலில் கிடத்தினான் .

“மீரா …நிறைய நாட்களை வீணாக்கி விட்டோம் . இனி ஒரு நொடியை கூட வீணாக்க போவதில்லை…. ” கைகளில் ஆரம்பித்து கழுத்தடியில் வரிசையாக பதித்த முத்தங்களை கன்னத்திற்கு மாற்றியவன் …. பேச முயன்ற மீராவின் இதழ்களையும் முடக்கினான் .

” உன்னை பேசவிட்டால் , கண்டதையும் யோசித்து பேசி வைப்பாய் .அது எனக்குத்தான் பாதகமாக மாறி தொலையும் …” முணுமுணுத்தபடி வேகமாக அவளுள் மூழ்க ஆரம்பித்தான் .

முதலில் மிருணாளினி …போன் …பாஸ்வேர்டு என ஒவ்வொன்றாக சுற்றி வந்த மனதில் நேரமாக ஆக கணவனும் …அவன் கொஞ்சல்களுமே நிரம்பி தளும்ப எல்லா நெருடல்களும் மறந்து கணவனை மனதிலும் , உடலிலும் நிரப்பிக்கொள்ள ஆரம்பித்தாள் மீரா .




What’s your Reaction?
+1
29
+1
23
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!