பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன்.
இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன்.
அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணி திவ்விய தேசத்தில்!
ஒருவேளை போர் முனைக்கு ஸ்ரீருக்மிணிதேவியும் வந்திருந்தால் என்னாகியிருக்கும்?
அவனுக்கு முன்னே நின்றபடி, அத்தனை அம்புகளையும் தடுத்திருப்பாள் தழும்புகள் இல்லாத கிருஷ்ண பரமாத்மாவாக இருந்திருப்பார், பகவான்!
ஸ்ரீருக்மிணிதேவி வராததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான்! அப்படி அவள் வராததால்தான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் தழும்பேறிய முக தரிசனம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
அர்ஜுனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிக்கொள்வான்; எதனையும் ஏற்றுக் கொள்வான் ஸ்ரீகிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் அல்லவா அது?!
ஒருகட்டம் வரை அமைதியாக இருந்து, அத்தனை அம்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்ட கண்ணன், அடுத்து அர்ஜுனனுக்கு பீஷ்மர் குறி வைத்தபோது, பொங்கியெழுந்தான். விறுவிறுவென தேரில் இருந்து இறங்கினான். பீஷ்மரை நோக்கி வேகம் வேகமாக நடந்தான். சட்டென்று அவன் கையில் சக்ராயுதம் சுற்றியது. ‘ஆயுதத்தையே எடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே கிருஷ்ணா…’ என்று எல்லோரும் கேட்பதாக ஒருகணம் தோன்றியது அவனுக்கு.
ஆனாலும், அவன் ஆயுதத்தை எடுத்தான்; சத்தியத்தை மீறினான். ‘எனக்கு ஆபத்து வந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன். என் அடியவருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், ஆயுதம் எடுக்கவும் தயங்கமாட்டேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, உலகுக்கு உணர்த்தினான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் கண்ணபிரானுக்கு ‘சூன்யஹ:’ எனும் திருநாமம் அமைந்தது.
சூன்யஹ என்றால், ஒரு தீமையும் துர்க்குணமும் இல்லாதவன் என்று அர்த்தம். தீமைகளுக்கும் துர்க்குணங்களுக்கும் ஆட்படாதவன் என்று பொருள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1