20
“ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது அம்மு. உன்னை பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?” விபீசன் அமுதவாணியை பற்றி இழுக்க அவள் மறுத்தாள்.
“போக வேண்டும். அம்மா என்று கதற வேண்டும் ,அணைத்துக் கொண்டு தேம்ப வேண்டும். எனக்கும் இந்த எண்ணமெல்லாம் இருக்கிறது. ஆனால் இன்னொரு முறை மகேஸ் அம்மாவின் முன்னால் அவர்களை அம்மா என்றழைக்கும் பாவத்தை செய்ய நான் விரும்பவில்லை. என்னை விட்டு விடுங்கள். ப்ளீஸ்…” கைகூப்பி அழுதவளை கண்கலங்க பார்த்துவிட்டு தான் மட்டுமே போனான் விபீசன்.
விழிக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த கடைசி நொடியிலும் மகளை எதிர்பார்த்து காத்திருந்த தெய்வானையின் உயிர் நிராசையுடனேயே பிரிந்தது.
“ஆனாலும் நீ செய்தது அநியாயம் அம்மு” இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்த விபீசன் குற்றம் சாட்டினான்.
“முன்பே செய்துவிட்ட அநியாயங்களுக்கு இப்போது நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறேன். என்னை வற்புறுத்தாதீர்கள்”
அமுதவாணியின் ஆணித்தரமான முடிவிற்கு பிறகு தெய்வானையின் உடல் மகளுக்குரிய சடங்குகள் செய்யப்படாமலேயே இறுதிப் பயணம் புறப்பட்டது.
அப்போது அங்கே வந்து சேர்ந்து கொண்ட சுந்தர்ராமனை யாரும் எதிர்பார்க்கவில்லை. “உனக்கு இங்கே என்ன வேலை?” மாணிக்கவேல் சுந்தர்ராமனை விரட்ட முயல விபீசன் இடையில் வந்தான்.
“இருக்கட்டும் விடுங்கப்பா. மகள் செய்ய வேண்டிய சடங்குகள் இல்லாமல் போனாலும் கணவர் கையால் கொள்ளியாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்”
உலகை விட்டு நீங்கிய ஒரு உயிருக்கான மரியாதையாக அனைவரும் மௌனம் காத்து சுந்தரராமனை அனுமதித்தனர். 20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையின் பலனோ என்னவோ குனிந்த தலையும் கலங்கிய கண்களுமாகவே சடங்குகளில் கலந்து கொண்டார் சுந்தர்ராமன்.
தெய்வானைக்கான இறுதிச்சடங்குகள் நிறைவாக செய்யப்பட்டு அவள் திருப்தியாக மேலுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
சடங்குகள் முடிந்து திரும்ப வந்த மகேஸ்வரி தலை வழியே தண்ணீரை ஊற்றிக் கொண்டு,நெற்றியில் திருநீறுடன் பூஜையறையில் அமர்ந்து விட்டாள்.
அமுதவாணி ஒரு மாதிரி் இறுகிப் போயே இருந்தாள்.ஆறுதலுக்கென அருகே நெருங்க முயன்ற விபீசனை கூட இடக்கையால் ஒதுக்கி விட்டு தனிமையையே நாடினாள்.
அன்றிலிருந்து நான்காவது நாள் அவர்கள் வீட்டிற்குள் வந்து நின்றார் சுந்தர்ராமன்.
“அம்மு,மகி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்”அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது குரலில்.
மகேஸ்வரி தீப்பார்வை பார்க்க,அமுதவாணி நிதானமாக” முதலில் அம்மாவை கூப்பிடுங்கப்பா” என்றாள்.
விபீசன் “அம்மு என்ன சொல்கிறாய்?” அதட்டினான்.
“உஷ் கணவன் – மனைவி விசயம்.நாம் தலையிடக் கூடாது.நீங்க சும்மாயிருங்க”
மகேஸ்வரி இப்போது குழம்பிவிட்டாள்.தடுமாற்றத்தோடு அமுதவாணியின் முகம் பார்த்தாள்.அருகிலிருந்த விபீசனிடம் மெல்லிய குரலில் கவலையாக கேட்டாள்.
” அம்மு என்ன நினைக்கிறாள் விசா? நான் அவருடன் போகவில்லை யென்றால் என்னை அம்மாவென்று கூப்பிடவே மாட்டாளோ?”
விபீசனுக்கும் குழப்பமே…அன்றொருநாள் அம்மாவும் ,அப்பாவும் சேர்ந்தாலென்ன என்றாளே!கேள்வி கேட்டவனின் பாரவையை அமுதவாணி சந்திக்கவேயில்லை.
“மன்னிப்பு கேளுங்கப்பா” தந்தைக்கு வழி காட்டிக் கொண்டிருந்தாள்.
“ம்…வந்து…நம் வாழ்க்கையில் ஏதேதோ நடந்துவிட்டது மகேஸ்.எல்லாவற்றிற்கும் காரணம் அந்த தெய்வானைதான்.நீ பக்கத்தில் இல்லாத போது என்னென்னவோ செய்து என்னை மயக்கி…வந்து மாற்றிவிட்டாள்.நம்ம அம்முவை கூட அவளுடைய மகளென்றே சொல்லிக் கொண்டாள்.நாம் எவ்வளவு தூரம் உயிருக்குயிராய் காதலித்தோம்? அந்த உண்மைக் காதலை அவளுடையது என்று நம் மகளிடம் சொல்லிக் கொண்டாள்.அந்த மொகரையை பார்த்தால் எனக்கு அப்படி உருகி காதலிக்க தோன்றுமா என்ன? நீயே சொல்லு “
மகேஸ்வரி வெறித்த விழிகளுடன் சிலையாக நின்றிருக்க,”மன்னிப்பு கேளுங்கள் அப்பா” மீண்டும் தூண்டினாள் அமுதவாணி.
“அட நீ என்னம்மா…சும்மா மன்னிப்பு மன்னிப்புன்னு…?எனக்கும் மகேஸிற்குமிடையே அதெல்லாம் தேவையில்லை.நான் தவறே செய்திருந்தாலும் மகேஸ் என்னுடன் வந்துவிடுவாள்.ஏனென்றால் அவள் என்னை அவ்வளவு காதலித்தாள்.ஏதோ போதாத காலம்,இடையில் கொஞ்சநாட்கள் பிரிந்து விட்டோம்.இப்போதுதான் அந்த துரோகி தெய்வானை இல்லையே!இனியென்ன…
நம்ம காதல் பொய்யில்லைதானே மகேஸ்.அப்போ என்னுடன் வா.திரும்பவும் வாழ ஆரம்பிக்கலாம்.நம் காதல் தோற்கக்கூடாது ”
உணர்ச்சி பொங்க பேசியபடி சுந்தர்ராமன் மகேஸ்வரியின் கை பற்றினார்.
What’s your Reaction?
+1
21
+1
28
+1
3
+1
2
+1
3
+1
6
+1
1