14
“என் நிலைமையில் நீங்கள் இருந்தீர்களானால் என் வேதனை புரிந்திருக்கும்”
“என்ன பெரிய நிலைமை?” அலட்சியமாய் உதடு சுழித்தான். “உண்மை இதுதான் என்று தெரிந்த பின்னும் இப்படியா ஒருத்தி கற்பனையிலேயே உழன்று கொண்டிருப்பாள்?”
“கற்பனை அல்ல, அது என் தாய் தந்தையின் காதல் வாழ்க்கை. அது போல் ஒரு ஆத்மார்த்தமான காதல் வாழ்வு எனக்கும் அமைய வேண்டுமென்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?”
“ஆத்மார்த்தமான… அடடா இந்த பதம் சரியென்று உனக்கே தோன்றுகிறதா?” கேலியும் கிண்டலுமான அவன் குரலில் வாணியின் கண்களில் மளமளவென்று நீர் வழிய துவங்கியது.
“அடச்சீ அழுகையை நிறுத்து.எப்போதும் இதென்ன மூசு மூசென்று…” வள்ளென்றான்.
அமுதவாணியின் கண்ணீர் கூடியது.”இல்லைதான்… நான் முட்டாள்தான்… எனக்கு எதுவும் புரியாது..தெரியாது. உறவு காதல் எல்லாமே பொய் தான்.எனக்கு எதையும் பிடிக்கவில்லை, யாரையும் பிடிக்கவில்லை” ஒரு மாதிரி வெறியுடன் கத்தியவள் விபீசனின் கையைப் பிடித்திழுத்து அறைக்கு வெளியே கொண்டு போய் தள்ளி விட்டு கதவை பூட்டிக் கொண்டாள்.
“அம்மு இதென்ன முட்டாள்தனம்? கதவை திற” மெல்லிய குரலில் வெளியிருந்து அவன் அதட்டல் சத்தம் கேட்டதும் மேல் தாழ்ப்பாளையும் சேர்த்து போட்டாள். “இந்த முட்டாளுடன் வாழும் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்” கத்தி விட்டு கட்டிலில் விழுந்து கண்களை மூடிக்கொண்டாள்.
மறுநாள் காலை அறைக்கதவை திறந்து வெளியே வந்தவள் மொட்டை மாடி செல்லும் படிகளில் அமர்ந்து அறையையே பார்த்திருந்தவனை கண்டு திகைத்தாள்.
” ஏன்டி இந்த விஷயம் நம் வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?” அவளருகே வந்து சீறினான்.
“உங்கள் அம்மா, அப்பாதானே? கவலைப்படட்டுமே”
“உன்னுடைய அம்மாவும் இருக்கிறார்கள்.இன்னமும் ஒரு தடவை கூட நீ அம்மா என்று அழைக்காவிட்டாலும் உன்னுடைய அந்த அழைப்பிற்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.உனது ஒரு வயதிலேயே தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு உனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு நீ காட்டும் நன்றி கடன் இதுதானா?”
வாணி இயலாமையுடன் நிமிர்ந்து அவனை பார்த்தாள். இவன் ஏன் எப்போதுமே அவளுடைய பலவீனங்களை மட்டுமே சுட்டிக் காட்டுகிறான்?
மகேஸ்வரி தான் தன்னை பெற்ற தாய் என்பது தெரிந்து விட்ட போதும் பட்டென்று அம்மா என்றழைத்து அவளுடன் கலந்து கொள்ள முடியவில்லை அமுதவாணியால். ஏனெனில் தெய்வானை அவளிடம் இத்தனை வருடங்களாக காட்டி வந்த தாய் அன்பு அப்படிப்பட்டது. ஒருவகையான அடிமைப்படுத்தும் தாழ்மை அன்பு.தெய்வானையை வெறுத்தாலுமே இன்னமும் அந்த அன்பின் இறுகிய முடிச்சிலிருந்து அமுதவாணியால் வெளிவர முடியவில்லை என்பதே உண்மை.
தன்னையே மறந்து எதிராளியிடம் சரணடைந்து விடும் ஒருவகை அன்பு. தெய்வானை அப்படித்தான் இருந்தாள்.நீயே ஆதிமூலம் என கால்களைப் பற்றியேனும் அன்பு செய்யும் பாணி அவளுடையது. இதே பாணியில்தான் அப்பாவையும் அவள் வசப்படுத்தியிருக்க வேண்டுமென்று எண்ணினாள் அமுதவாணி.
ஆண்கள் பொதுவாக தன்னை சரனடைந்து அன்பு காட்டுபவர்கள் பக்கமே ஈர்க்கப்படுவார்கள். மகேஸ்வரியின் அன்போ அதிகார ஆளுமையுடையது.நீ அன்பு செலுத்த நான் தகுதியானவளே எனும் தலை நிமிர்வுடையது. செல்வ வளமும் அழகும் படிப்பும் ஒருங்கே அமைந்திருந்த மகேஸ்வரியிடம் பணிதல் என்பது இல்லாமல்தான் போனது.
ஆனால் படிப்பு பணம் பலம் என எல்லாம் வாய்க்கப் பெற்ற ஆண் உன்னைப் போலுண்டா என தன்னில் சரணடைபவளையே விரும்புகிறான்.விழுந்து விழுந்து காதலித்து மணந்து கொண்ட போதும் ஒரே வருடத்தில் சுந்தர்ராமன் மகேஸ்வரியின் மணவாழ்க்கை கசந்து போனதன் காரணம் இதுதான்.
இந்த விவரங்கள் எல்லாமே வாணிக்கு விளக்கியது மகேஸ்வரியேதான்.
எதிர் வீட்டில் குடியிருந்து அவளுடனேயே வளர்ந்து வந்த உற்ற தோழியே அவள் வாழ்வை பறித்த கதையை வறண்டு போன குரலுடன் சொன்னாள் மகேஸ்வரி. குழந்தை உண்டானது தெரிந்ததும் தங்களது கோபம் மறைந்து அவளை பார்க்க வந்தனர் பெற்றோர் மற்றும் அண்ணன்.
மகேஸ்வரியின் பலவீனமான உடலை மனதில் கொண்டு ஏழாவது மாதத்திலேயே தங்கள் பிறந்தகத்திற்கு அழைத்து வந்தனர் .பால்ய தோழிகள் மீண்டும் ஆவலுடன் நட்பு பாராட்டிக் கொண்டனர். பிரசவத்தில் மகேஸ்வரியின் உடல் மிகவும் பலவீனமாக குழந்தையும் பலவீனமாகவே பிறந்தது. இன்னும் சில மாதங்கள் தங்கள் வீட்டில் வைத்திருந்து அனுப்புவதாக மகேஸ்வரி தாய் வீட்டில் கேட்க சுந்தர்ராமன் மறுத்தான்.
“எத்தனை நாட்களுக்கு பெண்டாட்டி பிள்ளை இல்லாமல் இருக்க முடியும்? உடனே அனுப்பி வையுங்கள் “பிடிவாதம் பிடித்தான்.
தெய்வானை தானே முன்வந்து மகேஸ்வரிக்கு சில நாட்கள் உடனிருந்து உதவுவதாக சொல்லி கிளம்பினாள். மகேஸ்வரியிடம் தாய்ப்பால் இல்லாமல் போக பாட்டில் பால் குடித்த குழந்தை எளிதாக தெய்வானை வசமானது.
தெய்வானை தோழியை, வீட்டை, குழந்தையை மிக நன்றாகவே கவனித்துக் கொண்டாள். கூடவே அவளது கணவனையும் சேர்த்து. ஒரு நாள் கணவனையும் தோழியையும் சேர்த்து பார்த்துவிட்ட மகேஸ்வரி கோபத்தில் கொதித்தாள்.
தெய்வானையை வீட்டை விட்டு வெளியேறச் சொல்ல, அவளில்லாமல் என்னால் வாழ முடியாது. போக வேண்டியவள் நீதான் என்றான் சுந்தர்ராமன்.
கைவிட்டு போய்விட்ட தன் வாழ்வை உணர்ந்த மகேஸ்வரி குழந்தையை தூக்க போக, ஒரு வயது குழந்தையோ அம்மா என்று அழுதபடி ஓடியது தெய்வானையிடம்.
அந்த நேரத்தில் சுக்கு நூறாக உடைந்து போனாள் மகேஸ்வரி.நடை பிணமாக தங்களிடம் வந்து சேர்ந்த மகளின் வாழ்வை நினைத்து நினைத்து மகேஸ்வரியின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மேலுலகம் போய் சேர்ந்தனர்.
மாணிக்கவேல் தங்கையை உள்ளங்கையில் தாங்கி பாதுகாத்தார். சுந்தர்ராமனிடம் பேசிப் பார்க்கலாம் என்ற உறவினர்களை மகேஸ்வரி தடுத்து விட்டாள். கணவனை விட பெற்ற பிள்ளை உரிமையை கேட்பது பிச்சை எடுத்து உண்பது போல் அவமானமாக இருக்கிறது என்று அவள் சொன்ன பிறகு அனைவரும் அமைதியாகி விட்டனர்.
பார்வதி தனது ஐந்து வயது மகன் விபீசனை மகேஸ்வரியின் கைபிடித்து கொடுத்தாள். “இனி இவன் உங்கள் பொறுப்பு இவனை நீங்கள் தான் வளர்க்க வேண்டும் அண்ணி”
மகளின் இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்க முடியாத மகேஸ்வரிக்கு அன்றிலிருந்து விபீசன் சிறந்த தோழனாகிப் போனான்.
மகேஸ்வரி அன்று விவரித்த இந்த வாழ்க்கை அவலங்களே மறுநாள் அமுதவாணியை, சுந்தர்ராமனையும் தெய்வானையையும் விரட்ட தூண்டியது. இந்த திருமணத்தையும் முடித்துக் கொள்ள சம்மதித்தாள்.
அம்மாவிற்காக என்றாலும் இருவருக்குமான தனிப்பட்ட கணவன் மனைவி வாழ்வென்ற நிலை வரும் போது அவள் மனம் பின்னடையவே செய்தது.
அதெப்படி என்ற ஆட்சேபத்தை எழுப்பியது.
பெற்ற தாயையே இன்னமும் முழு மனதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் அவள் மனதில்,தாலி கட்டி விட்டதாலேயே கணவன் என்ற பதவியுடன் எளிதாக உள் நுழைந்துவிட முடியுமா?
எத்தனையோ ஆண்டுகளாக கூர்மையாக திட்டங்கள் தீட்டி அவற்றை நிறைவேற்றிய விபீசன் அமுதவாணியிடம் எளிதாக தோற்றுக் கொண்டிருந்தான்.
“திருப்பியதும் மறைந்து விடும் முதல் புத்தக பக்கம் போலல்ல வாழ்க்கை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்” கத்தரியாய் வெட்டியவளை கோபமாக பார்த்தான்.
“எத்தனை நாட்கள்?”
“இந்த மக்கு மண்ணாந்தைக்கு மூளை வளரும் வரை” அமர்த்தலாக அறிவித்தாள்.
What’s your Reaction?
+1
33
+1
25
+1
1
+1
2
+1
2
+1
+1