21
வாசல் கதவை திறந்தவுடன் திபுதிபுவென உள்ளே நுழைந்த இரு பெண்களையும் பார்த்து அதிர்ந்தாள் சுகந்தி.
” ஏய் என்ன எதற்கு இப்படி வருகிறீர்கள்?”
திவ்யாவின் கையை பற்றி கூட்டிப் போய் சோபாவில் அமர்த்தி தானும் அமர்ந்தாள் மகிதா.
“எங்க ரெண்டு பேருக்கும் சூடாக காபி கொண்டாங்க” கேட்டவளை அறையும் எண்ணம் வந்தது சுகந்திக்கு.
“போய் கலந்து குடிப்பதுதானே ?”கேட்டுவிட்டு எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டவளை வினோதமாக பார்த்தாள் திவ்யா.
” இவங்க உன் அண்ணி தானே?”
“அங்கே பார் அதிகாரமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்தாலே தெரியவில்லையா? நான்தான் இந்த வீட்டு உரிமைக்காரி என்று சொல்லாமல் சொல்லும் போஸ் இது”
அருகருகே அமர்ந்து குசுகுசுவென பேசிக்கொள்ளும் இருவரையும் பார்த்த சுகந்தி “உன் நாத்தனார் தானே?” என கேட்டாள்.
“ஆமாம் அண்ணி ரொம்ப டயர்டாக இருக்கிறோம். அரை கப் காபி கொடுங்களேன். ப்ளீஸ்” கெஞ்சலாய் கேட்க ,பார்வையால் இருவரையும் அளந்தபடி உள்ளே எழுந்து போனாள் சுகந்தி.
“இவங்க கல்யாணத்தையே நீதானே செய்து வைத்தாய்? அப்படித்தான் கேள்விப்பட்டேன். ஆனால் உன்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்களே?
“கழுத்தில் தாலி ஏறியதும் கணவனை கைக்குள் போட்டுக்கொண்டு வீட்டு அதிகாரத்தை கைப்பற்றியாயிற்று .இந்த சூட்சுமம் உனக்கும் எனக்கும் தெரியவில்லை பார்த்தாயா?”
அவளையும் தன்னோடு இணைத்து பேசிய மகிதாவை அந்நேரத்திற்கு எப்படியோ திவ்யாவிற்கு பிடித்தாம் போனது. தன்னைப் போலவே அவளும் கணவனுடன் சேர்ந்து வாழும் வகையற்ற நிலையில் இருக்கிறாள் என்பது மகிதா மேல் கூடுதல் கரிசனத்தை திவ்யாவிற்கு கொண்டு வந்தது.
இளகலாய் தன்னை பார்த்த திவ்யாவின் பார்வையில் அவள் மனதை உணர்ந்து கொண்ட மகிதா மென்மையாய் அவள் தோள் வருடினாள். “எதற்கும் கவலைப்படாதே திவ்யா. உனக்கு நான் இருக்கிறேன்”
மனது நொந்து போயிருந்த திவ்யா இந்த சிறு ஆறுதலில் உடைந்தாள். அப்படியே மகிதாவின் தோள் சாய்ந்து விம்ம தொடங்கினாள். அவள் தலையை முதுகை வருடியபடி “அழாதே அழாதே” என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் மகிதா.
கையில் காபியோடு வந்த சுகந்தி இவர்களைப் பார்த்ததும் ஆச்சரியமாய் நின்றாள். சுவரோவியம் போல் இவர்களது அன்பும் அன்யோன்யமும் சுகந்தியின் மனதில் பதிந்து போனது. அண்ணி நாத்தனார் உறவு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்தானே என எண்ண ஆரம்பித்தது அவள் மனம்.
“காபியை குடிங்க .சாப்பாடு தயார் செய்கிறேன்” என்றபடி உள்ளே போன சுகந்தியை வியப்பாய் பார்த்தால் மகிதா.
வேலையிலிருந்து திரும்பி வந்த சுப்பிரமணியும் சாவித்திரியும் திவ்யாவை வரவேற்று உபசரிக்க, மனபாரம் வெகுவாக இறங்கி லேசாக உணர்ந்தாள் திவ்யா.
தெரிந்த இடங்கள் அறிந்த இடங்கள் என முழுவதும் தேடி களைத்துப் போன கதிரவன், சத்தியேந்திரன் இனி போலீசில் கம்பளைண்ட் கொடுக்க வேண்டியதுதான் என்ற முடிவிற்கு வந்தபோது ,ஆதித்யன் அவர்களை மகிதாவின் அம்மா வீட்டில் பார்த்துவிடலாம் என அழைத்துக்கொண்டு வந்தான்.
“வாங்க” என்ற ராஜேந்திரனின் வரவேற்பை கவனிக்காமல் சோபாவில் அமர்ந்திருந்த திவ்யா மேல் தந்தைக்கும் கணவனுக்கும் பார்வை போனது. உள்ளே நிம்மதி பெருமூச்சாய் படிந்தது.
“திவ்யா” வேக எட்டுடன் உள்ளே வந்த கதிரவன் சுற்றி இருந்தவர்களை பற்றிய கவலையின்றி மனைவியை தோள் தொட்டு எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“என்னம்மா இப்படி பண்ணிட்டியே? நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?” கண்கள் கலங்க குரல் கரகரக்க அவன் பேசியதை அனைவரும் திருப்தியாக பார்த்திருந்தனர்.
“என்னை காணாவிட்டால் இவ்வளவு தவிப்பீர்களா?”
“அப்படித்தான் போல, எனக்கே இப்போதுதான் புரிகிறது” திவ்யாவின் கண்களை பார்த்தபடி கதிரவன் சொல்ல…
“எனக்கெல்லாம் என் மனைவி வீட்டை விட்டுப் போன மறுநாளே புரிந்து விட்டது” என்றான் ஆதித்யன்.
“அவள் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு அனுப்பினீர்களே… அதற்கு மறுநாளா?” குத்தலாக கேட்டான் ராஜேந்திரன்.
சத்யேந்திரன் “அதன் முழு காரணமும் நான் தான் ராஜா. என் மருமகளை தவறாக நினைத்ததற்கு உங்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மருமகளை வீட்டிற்கு அழைத்துப் போக அனுமதி கேட்கிறேன்” என்றார்
“உங்கள் மருமகள் உங்கள் உரிமை .கூட்டிப் போங்க மச்சான்” விளம்பர வாசகங்கள் போல் சுப்ரமணி சொல்ல அனைவரும் சிரித்தனர்.
” சாப்பாடு தயாராயிடுச்சு. எல்லாரும் சாப்பிட வாங்க” என்ற சுகந்தியின் முகத்திலும் புதிதாய் புன்னகையே மலர்ந்திருந்தது.
What’s your Reaction?
+1
68
+1
35
+1
1
+1
5
+1
1
+1
+1
1