Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-23

23

இரவு நேரம் வேறு, தேவியம்மாவை உறங்கச் சொல்லிவிட்டாள், ஹாட்பேக்கில் சூடாய் சப்பாத்தியும் குருமாவும் தானே செய்து வைத்திருந்தாள். மனதில் இனம் புரியாத படபடப்பு நான் மனம் மாறியதை அவரைத் தவறாய் எண்ணியதை உணர்ந்து விட்டதையெல்லாம் ஆனந்தனிடம் தெரிவிக்கப் போகிறோம் என்ற தவிப்பு அவளுள் எழுந்தது.

நேரம் பத்து முப்பதைத் தொடும் போது வாசலில் கார் சத்தம் கேட்டது. துள்ளிக் குத்திதோடி கதவைத் திறந்தாள். எதிர்பார்த்தபடி ஆனந்தன் தான்.

இவளைக் கண்டதும் புருவம் உயர்த்தினான். “நீ தூங்கலையா மலர்?”

“உங்களுக்காகத்தான் காத்து இருக்கேன்.”

“ஏன்?” திடீர்ன்னு கேள்வி கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“நீங்க இன்னும் சாப்பிடவில்லையே?”

“தேவியம்மா எங்கே?” கையைக் கழுவியபடி வந்தவனுக்கு துண்டை எடுத்து தந்தபடி,

“அம்மாவின் அறையில் உறங்குகிறார் என்றாள்.” எழுப்ப மனம் வர வில்லை.

ஆனந்தன் ஏதும் பேசாமால் கைலியை கட்டிக் கொண்டு வெறும் பனியனோடு வந்தமர்ந்தான்.

“நீ போய் தூங்கு மலர், நான் சாப்பிட்டுக்கிறேன் உனக்கேன் சிரமம்”

“இதிலென்ன சிரமம் நானும் இன்னும் சாப்பிடல”

“ஏன்? இத்தனை தாமதம் “

“பசியில்லை!” என்றபடியே தட்டில் சப்பாத்தியை வைத்து குருமாவை பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடலாமே!?”

தனக்கு இரண்டு வைத்துக் கொண்டு அமர்ந்தாள் மலர். மவுனாமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை,பார்வையால்நனைத்தாள். இறுக்கமான பனியன் அவனின் மார்பு பிரதேசத்தை இறுகத் தழுவியிருக்க ஆண்மையின் கம்பீரம் கண்டு அவள் கண்கள் வெட்கத்தில் தாழ்ந்தன.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற எண்ணம் அவளை அரித்தது.

“மலர் வர்ற புதன் கிழமை நம்ம வீட்டுக்கு ஒரு முக்கியமான விருந்தாளி வர்றாங்க”

“யாரு?”





ரத்னா என்னோட தோழி, நம்ம ராஜ்ஜோட ஒர்க்கிங்க் பார்ட்னரோட பொண்ணு.

“ரொம்ப பழக்கமோ?”

“கேள்வியே சரியில்லையே?”

“எப்படி சரியாக இருக்கும். எந்நேரமும் பெண்களைப் பற்றி பேசிஎன்னை கஷ்டபடுத்துவதே உங்களுக்கு வேலையாகி போச்சு” கோபத்தோடு பாத்திரங்களை ஒதுக்கினாள். அவள் கோபத்தை ரசித்தவன், “தேவியம்மா எனக்கு எப்போதும் இரவு பால் தருவது வழக்கம்.”

“நான் ஒண்ணும் தேவியம்மா இல்லையே?”

“அது எனக்காக காத்திருக்கும் போது தெரியவில்லையா? ம்…! அவன் குனிந்து அவள் முகம் நோக்கி கேட்கவும், புன்னகையோடு அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள் மலர்.

“ஆனந்தனுக்கு மலரின் பேச்சு வியப்பை தந்தது.அந்தமானிற்கு வந்து இத்தனை நாட்களில் மலர் இவ்வளவு அமைதியாய் அவனுடன் பேசியதே இல்லை, என்னை காணும் போதே அவளுள் எள்ளும் கொள்ளும் வெடிக்கும், ஆனால் இன்றைய தினம் அவள் என்னைப் பார்த்த பார்வையில் இனம் தெரியாத ஏதோ ஒன்று இருந்தது. இயல்பான பேச்சு,குறு குறுவென்ற பார்வை இவையெல்லாம் பழைய மலரை நினைவூட்டின.

இன்னொரு பெண்ணைப் பற்றி பேச்செடுத்தாலே அப்பப்பா எத்தனை கோபம்! மலர், இந்த அன்பும், ஆசையும் நிரந்தரம் என்றால் உன் மடியிலேயே ஆயுள் முழுக்க விழுந்து கிடப்பேனே. ஆனந்தனின் மனம் சந்தோஷத்தில் தவழ்ந்தது.

காலை,

மலர்ந்து புலர்ந்த காலை சூரியன் தன் வெப்பக் கரங்களால் பூமிக் காதலியைத் தழுவிக் கொள்ள மறு நிமிடமே வெயில் குழந்தைப் பிறந்தது விட்டிருந்தது. அவுட் ஹவுஸிலிருந்து கார் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள் மலர், பெரிய வீட்டு வாயிலில் வரிசையாய் நின்ற கார்களை கண்டதும், ஆனந்தன் சொன்ன அந்த முக்கியமானவர்கள் வந்து விட்டதற்கான அறிகுறி தென்பட்டது. நீலவேணி அதிர ஓடி வந்து அக்கா “பெரியம்மா உடனே உங்களை வரச் சொன்னாங்க” என்றாள்.

“மலர் வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த ஆர்கண்டி சேலையில் பளீரென்று தயாரானாள், ஹாலை அடையும் போதே பேச்சும், சிரிப்பும் வெளியே வரை கேட்டது. இவளைக் கண்டதும், பெரியம்மா கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

“மலர் இவர் தான் தேவசாகாயம் அண்ணா, இது அவர் மனைவி இவங்க மகளை நம்ம ஆனந்தனுக்கு கேட்டு வந்திருக்காங்க. “அதற்கு மேல் பெரியம்ம பேசியது எதுவும் மலரின் காதில் விழ வில்லை.

“ஆமா இந்த பொண்ணு தானே ராஜ்ஜோட மனைவியின் தங்கை”




“ஆமா.. மலர் ரொம்பவும் நல்ல பொண்ணு அமைதியாய் அதே நேரத்தில் ஆழமாய் சிந்திக்கறவ”

“அம்மா சாப்பாடு தயாராயிருக்கு, தேவியம்மா வந்து குரல் தரவும், மலர் நீ போய் ஆனந்தனையும், ரத்னாவையும் கூட்டிட்டு வாம்மா”

மலர் கண்களில் பொங்கிய நீரை அடக்க முயன்று உள்ளே நடந்தாள் இயந்திரத்தனமாய்!

மலர் என்னை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் தரக் கூடாதா என்று ஆனந்தன் வேண்டும் போது மறுத்தாளே அந்த உண்மை அன்பை மறுத்ததற்கு இன்று தன் மனமாற்றத்தைத் தெரிவிக்க அவகாசம் இல்லாமல் கடவுள் தன்னை தண்டித்து விட்டாரே!

ஆனந்தனின் அறையை நோக்கி செல்லவும், திறந்திருந்த கதவு வழியே பேச்சுக் குரல்கள் கசிந்தது.

“ஆனந்த் இன்னமும் நீங்க உங்க பழைய காதலியை மறக்கலை அப்படித்தானே!”

“காதலுக்கு கால நேரம் எதுவும் கிடையாது ரத்னா, என்னுள் ஆழமாய் விழுந்து விட்ட அவளை மறக்கவே முடியாது, என்றுமே அவள் என் காதலிதான்.”

“என்னயிது? ஆனந்தன் இன்னமும் பிடிவாதம் பிடிச்சிகிட்டு, எங்கிட்ட என்ன இல்லை, அழகு, படிப்பு, அந்தஸ்து எதில் நான் குறைந்து விட்டேன்.”

“நீ என் மலர்செல்வி இல்லையே?”

“நானும் உங்க மனசு மாறுமின்னு பார்க்கிறேன். உங்களைப் புரிஞ்சிகிட்டாலும் பரவாயில்லை, ஆனா ஒரு தேர்ட் ரேட் பெலோவா உங்களை நினைக்கிற அவளுக்காக நீங்க காத்திருக்கிறது எனக்கு ஒண்ணும் நல்லதா தோணலை”

“ரத்னா வானம் மழையைப் பொழியறது யாரும் கேட்டு இல்லை, நான் என் அன்பை ஆறா ஓட விடறேன். அது நிச்சயம் ஒரு நாள் என் காதலை கரை சேர்க்கும்”

“ஆனந்த் திருமண வாழ்க்கைக்கு முக்கியமானதே நம்பிக்கை தான். அந்த அடிப்படை இலக்கே இல்லாத ஒரு பெண்ணை நீங்க அடைய நினைக்கிறீங்க? இப்போ அவ இருக்கிற இடமாவது தெரியுமா?’

“அவ வாழும் இடம் எதுவானல் என்ன, இந்த இதயம் முழுவதும் அவளுக்காகத் தானே!”

“இதுதான் உங்க முடிவா ஆனந்த்?’

“முடிவில்லை, உறுதி மலரை நான் என் வாழ்வில் முதன் முறையாய் எப்போது சந்தித்தேனோ, அப்போதே என் மனதை மட்டுமல்ல உயிரையும் தந்து விட்டேன். இனி அவள் மனம் மாறும் வரை நான் காத்திருப்பேன். “என் காதல் உண்மை, அது கட்டாயம் அவளை என்னிடம் வந்து சேர்க்கும்”

“உங்கள் நம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள். இந்த காதல் கானல் நீராக ஆகாமல் இருந்தால் நலம் நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்” ரத்னா வெளியே வரவும் மலர் நகர்ந்து விட்டாள்.

“வாம்மா ரத்னா என்ன ஆனந்தன் கிட்ட பேசிட்டியா? வாங்க முதல்லா போய் சாப்பிடலாம். கூடிய சீக்கிரமே நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறது உறுதியாடுச்சி இல்லையா?”

ரத்னா கவலையாய் கசப்பான புன்னகையை உதிர்த்தாள். “அத்தே நமக்கு அந்த ஆசை இருப்பது போல் உங்க பிள்ளைக்கு இல்லையே அவருடைய மனது வேறு ஒருத்தியிடம் இருக்கிறது.”

“ரத்னா…”




“அத்தை எனக்கு மனசே சரியில்லை, நான் இப்போ வீட்டுக்கு போறேன் அப்பா வர்றீங்களா?”

“ரத்னா தயவுசெய்து சாப்பிட்டு போகலாம்மா”

“இல்லே ஆனந்த் மனசு நிறைஞ்சா வயிறு தன்னால தன்னாலே குளிறும் ஆனா, விருந்து சாப்பாடு சாப்பிடற நிலையில நான் இல்லை வர்றேன்” ரத்னா வேகமாய் நகரவும், அவளோடு அவள் குடும்பமும் நகர்ந்தது.

“ஆனந்தன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் என்னை இப்படி சித்ரவதை செய்யப் போறே?”

“அம்மா….”

“வயசு மீறின பிள்ளை, உனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்ட்திட்டா நான் நிம்மதியா இருப்பேனே! ரத்னா ரொம்பவும் நல்ல பொண்ணு உன்னை நேசிக்கிறா,இன்னமும் பழசையே நினைச்சிட்டு இருந்தா எப்படிப்பா?”

“அம்மா மனசிலே வேற ஒருத்தி இருக்கும் போது நான் எப்படிம்மா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்”

“ஆனந்த் நான் உன் விருப்பத்திற்கு எப்போதுமே தடை சொன்னது இல்லையே? அந்த பெண்ணையே நீ திருமணம் செய்து கொள். எது எப்படியோ கூடிய விரைவில் நடக்கணும்,இல்லைனா உங்கம்மாவை நீ நல்லபடியா பார்க்க இயலாதுப்பா”

“அம்மா..”

“நான் சொல்றதை சொல்லிட்டேன்,பிறகு உன்னிஷ்டம்”

அம்மா போய்விட,ஹால் வெறிச்சோடிப் போய் இருந்தது. மலரும் ஆனந்தனும் தனித்து விடப்பட்டு இருந்தனர். அவள் மறுபடியும் அவுட் ஹவுஸில் அடைக்கலம் புகுந்து விட்டாள்.




What’s your Reaction?
+1
10
+1
21
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!