Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 9

9

 


 

வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் குடில் போல் இருந்தது .உள்ளே ஒரு நட்சத்திர ஹோட்டலின் உயர்தர அறையை போல் வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தக் குடில் .

நவீன குளியலறை ,சமையலறை , மின் சாதன பொருட்கள் என அனைத்து வசதிகளும் இருந்தன .

அந்த குடிலின் ஒரு நாள் வாடகையை கேட்ட சுடரொளியின் தலை சுற்றியது.” நாலு நாள் தங்குவதென்றால் என் சொத்து முழுவதும் எழுதி வைக்க வேண்டும் போலவே ” முணுமுணுத்தாள் .

” நீ சொத்துக்காரிதான் .எனக்குத் தெரியும் ” தாழ்ந்த குரலில் இவள் பக்கம் குனிந்து பேசியவனின் குரலில் பாம்பின் சீற்றம் .சுடரொளி திகைத்தாள்.சாதாரண பேச்சுத்தானே …? இதற்கெதற்கு இந்த கோபம் ?

மழை அதிகமாகத் தொடங்கியது .

” நீங்கள் எங்கே தங்குவீர்கள் ? ” குடிலில் இவர்களது வசதிகளை கவனித்துக் கொண்டிருந்த ராஜாவிடம் கேட்டாள்.

” எனக்கு இந்த மழை , வெயிலெல்லாம் பழக்கம்தான் மேடம் .நான் கிடைக்கும் இடத்தில் தங்கிக் கொள்வேன் .இது போல் காஸ்ட்லியான இடத்தில் தங்க என் சம்பளம் அனுமதிக்காது ” ராஜா புன்னகையோடு விடை பெற்றான் .

ஆனந்தபாலன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள , அமிர்தனின் உடைகளை மாற்றி , எதற்கும் இருக்கட்டுமென கையோடு கொண்டு வந்திருந்த உடையை அவனுக்கு அணிவித்தாள் சுடரொளி .

சப்பாத்தி , இடியாப்பம் , கோழிக் குழம்பு என இரவு உணவு வந்தது. இந்த மரவீடு தங்கும் விடுதி நடத்துபவர் , இங்குள்ள சில மலைசாதி ஜனங்களின் உதவியுடன் இந்த உணவு தயாரிப்பை செய்வதாக சொன்னபடி ஆனந்தபாலன் உணவை இவர்கள் இருவர் தட்டிலும் பரிமாறினான் .




அவனது முகம் பார்க்க பிடிக்காமல் , இடியாப்ப தட்டோடு வெளிப்புறமிருந்த பால்கனி அமைப்பில் அமிர்தனோடு போய் நின்று அவனுக்கு ஊட்டத் தொடங்கினாள் . வானில் தெரிந்த நிலவிற்குள் தெரிந்த கரும்புள்ளிகளை காட்டி , மலைகள் , நிலப்பரப்பு என விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்த போது ஆனந்தபாலன் வந்தான் .

” தூரத்து நிலவுகளை நெருங்கும் போதுதான் தெரிகிறது மேடு , பள்ளங்கள் “

மீண்டும் குத்தலாய் பேச்சு . சுடச்சுட பதில் சொல்ல நினைத்தவள் அமிர்தனுக்காக வாயை மூடிக் கொண்டாள் .அமிர்தனை அவள் தூங்க வைத்துக் கொண்டிருந்த போது , ஆனந்தபாலன் அந்த பால்கனியில் நின்று வானை வெறித்துக் கொண்டிருந்தான் .

அமிர்தன் தூங்கியவுடன் போர்வையோடு சோபாவிற்கு நடந்தவளை அழைத்தான் .” சுடர் ” அவன் வலது கரம் ஏந்தலாய் அவளை நோக்கி நீண்டது .

சுடரொளி திகைப்பாய் பார்த்தாள் .இவன் …இப்போது எதற்கு இப்படி நிற்கிறான் ? .அவனைப் பார்த்தபடியே மழையில் நனைந்ததால் ஈரமாயிருந்த தலைமுடியை கோதி விரித்து விட்டபடி

நடந்து போய்  சோபாவில் அமர்ந்தாள் .கண் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு தூங்க தயாரானாள் .ஆனந்தபாலன் அவளைப் பார்த்தபடியே நடந்து வந்து அவள் முன் தரையில் மண்டியிட்டான் .

” ஐ அம் அலோன் ” பிசிறாய் வெளி வந்தது அவன் குரல் .

சுடரொளி இந்த ஆனந்தபாலனை இதற்கு முன் சந்தித்திருக்கிறாள் .இதோ இப்போது அவன் சொன்ன வார்த்தைகளையும் .”நான் தனித்திருக்கிறேன் …”இப்படித்தான் அன்றும் சொன்னான் .

ஆனந்தபாலனும் , சுடரொளியும் தங்களது காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திய பின்பு , இருவருக்குமே இந்த உலகமே வேறாக தெரிந்தது . எந்நேரமும் கசகச சத்தமும் , வம்பிழுப்புகளும் , பஞ்சாயத்துகளுமாக இருக்கும் அவர்கள் குடியிருப்பு வீடுகளே தேவலோகம் போல் காட்சி தந்தது .




சுடரொளிக்கு அந்தப் பெரிய காம்பௌன்டிற்குள் எந்நேரமும் அங்குமிங்கும் நடந்து கண்காணித்தபடி இருக்கும் தாய் , தந்தைக்கு தெரியாமல் காதலிப்பது பெரிய சாதனை செய்தாள் போல் தெரிந்தது .வாசல் திண்ணையில் அமர்ந்து தந்தை யாருடனாவாது பேசிக் கொண்டிருக்கையில் இவள் மாடி பால்கனியில் நின்று , எதிர்புற வீட்டு வாசலில் நிற்கும் ஆனந்தபாலனுக்கு சைகை செய்வதை ஒரு ரைடில் ஓடும் குழந்தையை போல் உற்சாகமாக உணர்ந்தாள் .

ஆனந்தபாலன் இது போன்ற  சிறு பிள்ளை விளையாட்டுக்களுக்கு வருவதில்லை என்றாலும் , சுடரொளியின் ஆசை பார்த்து பெரும்பாலும் அவளுடன் ஒத்துப் போய்விடுவான் .அன்று சுடரொளியின் வீடு மட்டுமல்ல அவர்கள் காம்பௌன்டே பரபரப்பாக இருந்தது. அங்கே குடியிருக்கும் ஒருவரின் வீட்டில் திருமணம் .எல்லோரும் அந்த திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் .

ஆனந்தபாலன் பரீட்சை சமயமென்பதால் நண்பனோடு சேர்ந்து அவன் அறையில் தங்கிப் படிக்கப் போவதாக சொல்லி விட்டு சென்றவன் , பத்து நாட்களுக்கும் மேலாயிற்று வரவில்லை .அவனில்லாத கொடிய பொழுதை தள்ள திருமண நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்வதாக கூறிக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சுடரொளி.

அப்போது ஆனந்தபாலன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான் .அவன் முகம் மிகவும் சோர்ந்து , கலங்கி இருந்தது. பட்டுச்சேலை , நகை என பளபளவென அலங்காரம் செய்திருந்த சுடரொளி அவனை வாசலில் பார்த்ததும் துள்ளலுடன் அவனருகே போனாள்.

” பாலா ஊரிலிருந்து வந்து விட்டீர்களா ? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் ? ” அப்பா , அம்மா காதில் விழாமல் கிசுகிசுப்பாக கேட்டாள் .

ஆனந்தபாலன் பதில் சொல்லாமல் தனது வலது கையை அவளை நோக்கி நீட்டினான் .என்னைத் தாங்கிக் கொள்ளேன் என்ற அந்த நைந்த பார்வையில் சுடரொளி உருகிப் போனாள் .அவன் அப்பா , அம்மா இருக்கும் போது  இப்படியெல்லாம் வீடு வரை வந்து நிற்பவனல்ல .அவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என உணர்ந்தாள் .

” சுடர் ஐ அம் அலோன் .எ…என்னுடன் வருகிறாயா ? நாம் எங்கேயாவது போய்விடலாமா ?” அவன் குரல் கரகரத்தது.

” நீங்க உங்க போர்ஷனுக்கு போங்க பாலா .அப்பா , அம்மா ,காம்பௌன்டில் எல்லோரும் கல்யாண வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர் .அவர்கள் போனதும் நான் வருகிறேன் ” என அவனை அனுப்பியவள் , பிடிவாதமாக திருமணத்திற்கு வர மறுத்து நின்று கொண்டு , அனைவரும் சென்றதும் அவன் இருப்பிடம் சென்றாள் .

வேகமாக எழுந்து அவளை இறுக அணைத்துக் கொண்டவன் அப்படியே அவளை தன் அணைப்பில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான் .பிறகு ” சுடர் நான் கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா ..?ப்ளீஸ் ” என்றான் .

இதோ இப்போதும் அதையேதான் கேட்டுக் கொண்டிருக்கிறான் .” கொஞ்சநேரம் என்னை அமிர்தனாக நினைத்துக் கொள் சுடர் .” சொல்லிவிட்டு அவள் அனுமதியை எதிர்பாராமல் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் .




சுடரொளி அன்றெல்லாம் அவன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தாள் .அவன் அருகே செல்ல , ஒரு வார்த்தை பேசக் கூட விருப்பமற்றவளாக இருந்தாள் .ஆனால் இப்படி மடியில் துவண்டு கிடப்பவனை உதறும் மனது வரவில்லை .

” நானும் அமிர்தனை போல் சிறு பையனாகவே இருந்திருக்கலாம். இப்படி உன் மடியை விட்டு இறங்காமலேயே சுகமாக இருந்திருப்பேன் ” சொன்னபடி தன் மடியில் தலையை புதைத்துக் கொண்டவனை என்ன செய்வதென தெரியாமல் தவித்திருந்தாள் .

” என்னைத் தள்ளி விடாதே சுடர்.  எனக்கு நிறைய பேச வேண்டும் “

சுடரொளி தொட்டும் தொடாமல் அவன் உச்சந்தலையில் கை வைத்தாள் .” ம் …சொல்லுங்க “

” அம்மா , அப்பா இருந்தும் நான் அநாதை போல் உணர்ந்திருந்தேன் .அப்போதுதான் உன்னை சந்தித்தேன் . என்னை மீட்டு இந்த உலகில் வாழும் ஆசையை உண்டாக்கியது நமது காதல்தான் .உங்கள் வீட்டில் வசித்த நாட்கள்தான் என் வாழ்வின் வசந்தகாலம் .”

சுடரொளி நெகிழ்ந்தாள் .மெல்ல அவன் தலையை வருடிக் கொடுக்கத் தொடங்கினாள் .ஆனந்தபாலன் தன் மன பாரத்தை இறக்கி வைக்கத் தொடங்கினான் .

” நான் பிறந்ததிலிருந்து தனிமையில்தான் வளர்ந்தேன் சுடர் .விவரம் தெரிந்த போதிருந்து ஹாஸ்டலில்தான் இருந்தேன் .நல்ல உயர்ரக பள்ளி ,கல்லூரி .யாரோ பெரிய மனிதர் என்னை தத்தெடுத்துக் கொண்டிருப்பதால் எனது படிப்பு , உடை , உணவு என அனைத்து செலவும் அவரே பார்த்துக் கொள்வதாக எனக்கு தகவல் தரப் பட்டது .நான் கல்லூரியினுள் நுழைந்த பிறகு தடையின்றி எனக்கு வந்த பணத்தின் மூலத்தை தெரிந்து கொள்ள மிகவும் அடம் பிடித்து , பல முயற்சிகள் செய்து கண்டிபிடித்த இடம் மிஸ் .அமலா தேவி “

சுடரொளி திடுக்கிட்டாள் .” அமலா தேவி ..! அ…அவர்கள் …? “

” ஆமாம் .இந்திய திரைவானின் தவிர்க்க இயலாத மிகப் பெரிய நட்சத்திரம் மிஸ் .அமலா தேவி .என் அம்மா . திருமணமே செய்யாமல் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்தவர்கள் “




” என்ன …? ” அதிர்ந்தாள் .அமலா தேவியின் மகனா இவன் ? ஆனந்தபாலனுக்கு பொதுவாக திரைப்படங்களின் மேலிருந்த வெறுப்பு இப்போது புரிந்தது .

” என் அம்மாவை பற்றித் தெரிந்ததும் அவர்கள் வாழ்வு முறையில் எனக்கு விருப்பம் இல்லை .நமக்கென தாய் , மகனென  ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளலாமென அவர்களை அழைத்தேன் .தேவைக்கு அதிகமான பணத்தை சம்பாதித்த பிறகும் , இந்த தொழிலில் வரும் புகழ் போதை அவர்களை விடவில்லை .இந்த இடத்தை பிடிக்க நான் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் தெரியுமா ? அப்படியெல்லாம் இந்த உலகை விட்டு வர முடியாது என்று விட்டார்கள் . நான் மனமுடைந்து அவர்களை பிரிந்து வந்தேன் .அப்போதுதான் உன்னை சந்தித்தேன் “

ஆனந்தபாலன் தன் மனந்திறந்து கொண்டிருக்கும் போது , கீழே ஏதோ பலத்த சத்தம் கேட்டது .யானையின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்க , இருவரும் அதிர்ந்தனர் .




What’s your Reaction?
+1
50
+1
45
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!