19
” மதனி ” வீட்டிற்குள் வந்ததும் தன் கழுத்தை கட்டிக் கொண்ட சுமித்ராவை மெல்ல விலக்கினாள் நர்மதா .
” என்ன சுமித்ரா இது …? நன்றாக நனைந்து விட்டாயே …வெளியே போனாயா என்ன …? ” அப்பாவியாக கேட்டாள்…
” ஆமாம் மதினி. நமது தோப்புக்கு போயிருந்தேன் .அங்கே அவரைப் பார்த்தேன் ” செக்கச் சிவந்து பவளமாக மின்னியது சுமித்ராவின் முகம்.
” எவரை…? ”
” அவர் தான் .என் கணவர் .நம் தோப்பிற்கு வந்திருந்தார் …நாளையே அவர்கள் அம்மா அப்பாவை கூட்டி கொண்டு நம் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துப் போவதாக சொன்னார்
.
” எதற்காக சுமி ? ” இமைகள் சிமிட்டிய அண்ணன் மனைவியை முறைத்தாள் சுமித்ரா.
” உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாக சொல்ல வேண்டுமா ? லேசாகச் சொன்னால் புரியாதா ? ”
” நான் என்னம்மா செய்யட்டும் ? நேற்றுவரை அவராக வந்து கூப்பிட்டாலும் நான் அங்கே போகப் போவதில்லை என்று சபதம் போட்டு கொண்டிருந்தவள் நீ .இப்போது ஏதோ சொல்கிறாய் .இதை நான் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது ? ”
” போங்க மதினி .நான் அப்படி சொல்லவில்லை .நீங்களாக எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ” நர்மதா மேல் குற்றம் சாட்டிவிட்டு ஒரு துள்ளலுடன் உள்ளே போனாள் சுமித்ரா.
கணவன் மனைவியின் சண்டை தீர ஒரு சிறு மழை போதுமானதாக இருக்கிறது. புன்னகையோடு நினைத்துக் கொண்ட நர்மதாவின் உடலும் சிலிர்த்துக் கொண்டுதான் இருந்தது.
” அதோ எங்கள் வீடு …உள்ளே போய் பார்க்கலாமா ? ” உடலை அலைக்கழித்த உணர்வலைகளை கட்டுப்படுத்த கவனத்தை வேறு பக்கம் திருப்ப நினைத்தாள் நர்மதா .திரும்ப நடந்து வரும் வழியில் இருந்த அவர்களது வீட்டை காட்டி கேட்டவளுக்கு தலையசைத்தான் மாதீரன்.
” சாவி நம் வீட்டில் இருக்கிறதோ ” உள்ளே போக முடியாத ஏமாற்றத்துடன் பூட்டியிருந்த கதவருகே நின்றாள் .இந்த வீட்டின் சாவியை தன் நண்பன் சடையாண்டியிடம்தான் ஒப்படைத்திருந்தார் சுப்பையா.
” இல்லை இங்கேதான் இருக்கிறது .” சொன்னபடி அந்த பெரிய மரக் கதவின் மேலே கையைவிட்டு இடுக்கிலிருந்த சாவியை எடுத்தான் மாதீரன் .” தினமும் வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்து இருக்கிறேன் .அதனால் சாவி இங்கே தான் இருக்கும் ”
அவன் சொன்னது உண்மை போல் சிறு தூசு தும்புகள் இன்றி வீடு வழவழவென்று இருந்தது .நர்மதா மகிழ்ச்சியோடு முதலில் வீட்டிற்குள் ஓடிப் போய் பார்த்த இடம் அந்த பால்கனி .அங்கே… அவள் விழிகள் விரிந்தன. அந்த தொட்டி செடிகள் சிறிதும் பசுமை குறையாமல் மென்மேலும் வளர்ச்சியை காட்டியபடி பூக்களை பூத்து குவித்தவாறு காற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருந்தன.
” எப்படி …? நான் செடிகள் எல்லாம் வாடி இருக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் ”
” சொன்னேனே இதற்கென்று ஒரு ஆளை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று ” மாதீரன் பிச்சி கொடியின் அடியில் இருந்த பால்கனி கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.
” இவையெல்லாம் உனக்குக் கொடுத்த கல்யாணப்பரிசு நர்மதா .இவற்றை நான் வாட விடுவேனா ? அவனது கேள்வி பனிமலையின் கடும் தூறலாய் நர்மதாவின் மனதிற்குள் நுழைந்தது .அந்த கேள்வியில் கவனம் இல்லாததுபோல் தலைக்குமேல் போன பிச்சி கொடியில் இருந்த மலர் கொத்தை கையை உயர்த்தி இழுத்து வாசம் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
உயர்ந்திருந்த கரங்களினால் வெளித் தெரிந்த அவளது இடையில் படிந்தது மாதீரனின் விழிகள் .
” இங்கே எனக்கு செடிகள் வைக்க பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் ? ”
” நீ சொல்வதை நான் கேட்டேனே. இந்த வீட்டிற்கு நீங்கள் வந்த அன்று தாண்டவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாய் ”
என்ன அப்போது இவன் எங்கள் வீட்டிற்கு வந்தானா…? ஆனால் ஏன் உள்ளே வரவில்லை நர்மதா குழம்பிக் கொண்டிருந்தபோது…
கட்டுப்படுத்த முடியாத ஆவலுடன் ஒற்றை விரல் நீட்டி அவள் இடையை தொட்டான் மாதீரன் .
” என்ன செய்கிறீர்கள் ? ” திடுக்கிட்டு கேட்டாள் நர்மதா.
” ஏதோ தூசு ” சொன்னபடி நகர்ந்த அவன் விரல் இடையிலிருந்து வயிற்றிற்கு வந்தது .ஒரு நிமிடம் அங்கேயே தங்கிய ஆட்காட்டி விரலின் பின்பு மெல்ல மெல்ல மற்ற விரல்களும் வயிற்றில் படிந்தன .பின் மெல்ல வருடின .நர்மதா கண்களை இறுக்க மூடி உதட்டை கடித்து தன்னைக் கட்டுப்படுத்தி நின்றாள்.
திடுமென அவள் உடல் முழுவதும் சடசடவென எரிமலைகள் விழுந்தாற் போல் உணர்ந்தாள் .மாதீரன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் இதழ்களை அவள் வயிற்றில் பொருத்தியிருந்தான் . .இதமாய் மீசை முடிகள் இம்சிக்க , இளஞ்சூடாய் தன் வயிற்றில் பதிந்த இதழ்கள் கொடுத்த உணர்வுகள் தாளமுடியாமல் சட்டென்று அவன் தலையை பிடித்து தள்ளினாள் அவள்.
” என்ன செய்கிறீர்கள் ? ”
” சொன்னேனே …ஏதோ தூசு .ஊதி விட்டேன் ” உதடுகளை குவித்துக் காட்டினான்.
இவன் தூசு எடுத்த லட்சணத்தை பார்த்து விட்டாலும் …கதகதத்த தனது வயிற்றை மென்மையாய் வருடியபடி அவள் புத்தியை கெடுக்கும் அந்த பால்கனியை விட்டு நகர்ந்து வந்துவிட்டாள் .
கணவனுடனான அவளது முதல் கூடலை நினைவு படுத்திய அந்த அறை நர்மதாவினுள் நிறைய ஏக்கங்களை கிளறி விட்டிருந்தது .இதோ சற்று முந்தைய சுமித்ராவின் காதல் ஏக்கம் அவளுள்ளும் கனன்று கொண்டிருந்தது.
அவள் நினைத்து வந்த வேலை முடிந்து விட்டது .நாளையே சுமித்ரா அவளது கணவன் வீட்டிற்கு போய் விடுவாள் .அதன் பிறகு நான்… நர்மதா தன் வயிற்றை வருடி பார்த்துக்கொண்டாள்.
தன் போனை எடுத்து சுப்பையாவிடம் பேசினாள் .தன் வாழ்வு சரியாகி விட்டதை சொல்லி விட்டு கண்களை மூடி தூணில் சாய்ந்து கொண்டாள் .
அன்று முல்லைக் கொடியை கொண்டுவந்து வைத்தவனை பார்த்து ” தேர் இல்லையா ? ” என்று குறும்பாக கேட்டாள் .புரியாமல் விழிப்பான் என்று நினைத்ததற்கு மாறாக பவ்யமாக தலைகுனிந்தான் அவன் .
” மகாராணி உத்தரவு கொடுத்தால் இப்போதே தேர் கொண்டு வந்து நிறுத்துகிறேன்” உடனே செய்யும் துடிப்பு அவனிடம்.
இதோ இப்போது அவள் கணவன் அவளுக்கு தேர் கொண்டு வந்து நிறுத்தியது போன்றே உணர்ந்தாள் நர்மதா .அவனது மனத் தேரின் மகாராணி நான் கர்வமாக சொல்லிக் கொண்டாள்.
எங்கள் குழந்தையை அவரிடம் சொல்ல வேண்டும். இங்கே வைத்து அல்ல …அங்கே அந்த பால்கனியில்… அந்த முல்லைக் கொடிக்கு அடியில்… முல்லை பூவின் வாசனையை நுகர்ந்து கொண்டு அவர் கையை எடுத்து என் வயிற்றில் வைத்துக்கொண்டு , காதுக்குள் ரகசியமாக சொல்லவேண்டும். என்னை தேருக்கு அழைத்து போ என உத்தரவு போடவேண்டும் .உடன் தேராய் மாறும் அவன் கரங்களின் கதகதப்பு நினைவில் உள்ளுக்குள் இன்ப சிலிர்ப்பை கொடுக்க நர்மதாவின் கண்கள் கிறக்கமாக சொருகிக் கொண்டன.
” நர்மதா ” ரகசியமாக அவள் அருகில் ஒரு குரல் கேட்க வேகமாக விழி திறந்து பார்த்தாள்.
” உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா அண்ணா ? ” துள்ளலாக கேட்ட தங்கையின் குரலுக்கு புன்னகையோடு நிமிர்ந்து பார்த்த மாதீரனின் முகம் பெரும் திருப்தியில் ஆழ்ந்தது.
இதோ தங்கையின் வாழ்வை சரி செய்தாயிற்று… இனி அவனுடைய வாழ்வை பார்க்க வேண்டும். நர்மதாவை நினைத்த மறுகணமே அவன் கேட்காமலேயே புன்னகை ஒன்று அவன் இதழ்களில் வந்து அமர்ந்து கொண்டது .என்று அவளுடைய போட்டோவை பார்த்தானோ அன்றிலிருந்தே இதே நிலைமை தான் அவனுக்கு .ஏதோ ஒரு வகையில் பித்தேறியது போல் இருந்தான்.
ராணுவத்தில் இருந்து உடனடியாக கிளம்பி வரமுடியாத நிலைமை .முதன்முதலாக அவளுடன் போனில் பேச விரும்பவில்லை அவன் .அவளுக்கு நேராக நின்றுகொண்டு படபடக்கும் அந்த இமைகளையும் துடிதுடிக்கும் அந்த இதழ்களையும் கண்களால் ஆசை தீர பார்த்துக்கொண்டு அவளிடம் சொல்ல நினைத்தான். நான் உன்னை காதலிக்கிறேன் , உன்னை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறேன் , உனக்கு சம்மதமா ? இப்படி கேட்பதற்கான கனவுகளை தனக்குள் வளர்த்துக் கொண்டிருந்தான்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அவனுக்கு விடுமுறை கிடைக்க , இங்கே வந்தபிறகும் மாட்டுவண்டி பந்தயம் போன்ற ஊர் விஷயங்கள் சில அவன் பார்க்க வேண்டியது இருந்தது. நர்மதா ஊருக்குள் வந்துவிட்ட நாளில் இருப்பு கொள்ளாமல் தவித்தான் அவன் .நேரடியாக அவர்கள் வீட்டிற்கு போய் பேசுவதற்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கவே தள்ளி நின்று அவளைப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று நினைத்தபடி அவர்கள் வீட்டிற்கு போனான்.
அங்கே நர்மதா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் .அவளுக்கு எதிரே நின்றவன் மாப்பிள்ளை மாடும் கம்பும் ஆக சுற்றிக் கொண்டிருப்பார் என்று கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்க இப்படி ஒரு இடத்தில் வந்து மாட்டிக்கொள்ளும் விதி எனக்கு என்று வருந்திக் கொண்டிருந்தாள் அவள் ….அவன் மனம் கவர்ந்தவள் .
நர்மதாவிற்கு என்னை பிடிக்கவில்லையா ? அப்படி அவர்கள் வீட்டில் யாரும் சொல்லவில்லையே …? குழப்பத்துடன் அங்கிருந்து வந்து விட்டான். பிறகு அவளைப் பார்த்தது மாட்டுவண்டி பந்தயத்தின் போது திடுமென சாலையில் வந்து நின்றபோது தான் .இதயம் ஒரு நொடி தனது துடிப்பை நிறுத்திவிட பட்டென்று அவளை அள்ளி தன் அருகே அமர்த்திக் கொண்ட பின்புதான் அவன் இதயத்துடிப்பு சீரானது.
பந்தயத்தின் போது ஆதரவிற்காக அவனது தோள்களை கட்டிக்கொண்ட நர்மதா அவனுக்கு பெரும் ஆறுதலை தந்தாள். திருமணம் முடிந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் அப்போது பிறந்தது .ஆனால் அதன் பிறகு நடந்த ஊர் பஞ்சாயத்தில் நர்மதா சந்திரன் பக்கம் பேச அவனுக்கு மிகுந்த கோபம் வந்தது.
என்னை விட்டு இன்னொரு ஆணிற்கு பரிவாளா இவள்… மாதீரனின் ஆண் அகங்காரம் தலை விரித்து ஆடியது .தனது ஆண்மையை நிலைநாட்டுவதாக நினைத்து கருப்பண்ணசாமி கோவிலில் தான் நடந்து கொண்ட முறைக்காக இதோ இப்போது வரை அவன் வருத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறான்.
பின்பு பஞ்சாயத்தில் சொன்ன தீர்ப்பிற்காக அவள் வீட்டிற்கு போய் அப்பாவும் , சித்தப்பாவும் கண்டித்த போது , திருமணம் பற்றிய கவலையி்ல் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான் .அப்போது அங்கே வந்த நர்மதாவின் கண்களிலும் அந்தக் கவலையின் சாயலை உணர்ந்தவனுக்குள் சந்தோச நெருப்பின் பெரு ஆரவாரங்கள் .ஆனாலும் அடக்கமுடியாமல் அன்று அவளை முத்தமிட்டது …
அதற்கெல்லாம் இப்போது நர்மதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .நாளை சுமித்ராவை அவள் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின்பு நிச்சயம் நர்மதாவுடன் உட்கார்ந்து பேச வேண்டும் .மனதிற்குள் திட்டங்கள் வகுத்து கொண்டிருந்தவனுக்கு மிக உடனடியாக தன் மனைவியை பார்க்கும் ஆவல் வந்தது.
உள்ளறையில் படுத்துக் கொண்டிருப்பாள் .பாவம் அவளுக்கு உடம்பு ரொம்பவே படுத்துகிறது .அவள்மேல் கரிசனை பட்டபடி உள்ளே போனவன் அங்கே அவளைக் காணாமல் வீடு முழுவதும் தேடினான் .எங்கேயும் நர்மதாவைக் காணவில்லை.
இவள் எங்கே போனாள்…? வீட்டிலுள்ள யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மெல்ல மெல்ல விஷயம் எல்லோருக்கும் பரவி நர்மதாவை காணவில்லை என்ற விஷயத்தை அவர்கள் எல்லோரும் உணர்ந்து கொண்ட போது கிட்டத்தட்ட 2 மணி நேரங்களுக்கு மேல் ஆகியிருந்தது.
” அய்யய்யோ வயிற்றுப்பிள்ளைக் காரியை காணோமே …வீட்டு ஆம்பளைங்க ஒன்னும் செய்யாம இப்படி கல்லு மாதிரி நிற்கிறீர்களே ” கத்தினாள் சர்வேஸ்வரி .அனைவரும் திடுக்கிட்டனர்.
” அக்கா என்ன சொல்கிறீர்கள் ? நர்மதா பிள்ளைத்தாய்ச்சியா ? பதற்றமாய் கேட்டாள் முத்தாச்சி.
” ஆமாம் முத்து அன்று கூனி கிழவி நம் வீட்டிற்கு வந்த போதே நான் புரிந்து கொண்டேன் .ஆனால் இந்த விஷயத்தை சந்தோசமாக பேசும் நிலையில் நமது வீடு இல்லை .வீட்டிற்குள் ஒரு பெண் வாழாவெட்டியாக வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தை சந்தோசமாக பேச முடியுமா ?முதலில் சுமித்ராவின் வாழ்வை நல்லபடியாக சரி செய்துகொண்டு பிறகு பேசலாம் என்று நான் மௌனமாக இருந்து விட்டேன் “:
” ஐயோ அக்கா எனக்காகவா இப்படி செய்தீர்கள் ? கடவுளே முருகா நான் எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன் .எங்கள் வீட்டு வாரிசை சுமக்கும் பெண்ணை தங்கமாய் தாங்காமல் வார்த்தைகளால் குத்தி வேதனைப்படுத்தி விட்டேனே .இந்த பாவம் என்னை சும்மா விடுமா ? ” முத்தாச்சி கதறினாள்
” இந்த வீட்டில் என்ன நடக்கிறது ? இப்படி ஒரு முக்கியமான விஷயம் இருக்கும்போது அதனை ஆண்களுக்கு சொல்ல மாட்டீர்களா ? நீங்களாக எதையாவது யோசித்து நீங்களாக முடிவு எடுத்துக் கொள்வீர்களா ? ” முனியாண்டி சீறினார்.
” எனக்கும் தெரியும் அப்பா.” சொன்னபடி வந்து நின்ற மகனை நம்பமுடியாமல் பார்த்தார் .
” நீ ஏன்டா சொல்லவில்லை ? ”
” அம்மா சொன்ன அதே காரணம் தான் .ஆனால் இந்த கர்ப்பம் நர்மதாவிற்கு பிடிக்கவில்லையோ என்று சந்தேகப்படுகிறேன் .அவள் வந்த வேலை முடிந்துவிட்டது என்று வீட்டை விட்டு போய்விட்டாள் என்று நினைக்கிறேன் ”
” என்னடா உளறுகிறாய் ? ”
” ஆமாம் அப்பா .சுமித்ராவின் வாழ்விற்காகத்தான் அவள் இங்கே வந்தாள் . அது நல்லபடியாக முடிந்து விட்டது .போய் விட்டாள் .நீங்கள் அவள் அப்பாவிற்கு போன் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள் ” உணர்வுகள் செத்து மரத்துப் போய் கிடந்தது மாதீரனின் முகம்.
மகனின் பேச்சை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் தனது போனை எடுத்தார் சடையாண்டி .சுப்பையாவிற்கு நம்பரை அழுத்தி கொண்டிருந்தபோதே ” அப்பா அங்கே பாருங்கள் ” கத்தினாள சுமித்ரா.
அங்கே அவர்கள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர் சுப்பையாவும் விசாலாட்சியும்.
மலர்ந்திருந்த அவர்கள் முகங்களை கூர்ந்து பார்த்த மாதீரன் பரபரப்பானான் .
What’s your Reaction?
+1
7
+1
1
+1
+1
+1
+1
+1
1