இந்த மாத குடும்பநாவல் தீபாவளி சிறப்பிதழை இப்போது உங்கள் ஊர் கடைகளில் வாங்கி படிக்கலாம் தோழமைகளே… கொஞ்சம் திகில் கொஞ்சம் மர்மம் கலந்த குடும்ப கதை .ஆகச் சிறந்த ஆளுமைகளின் படைப்புகளோடு எனது கிறுக்கலும்…..
” சம்பளத்திற்கான தொகையை உன்னுடைய பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றி விட்டுவிடுகிறேன் .ஏடிஎம்மில் எடுத்துக்கொள் .வேலை பார்ப்பவர்கள் எல்லோருக்கும் சம்பளம் போட்டுவிட்டு , அங்கே வேலை நிலவரத்தையும் தெரிந்து கொண்டு வா .உனக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய நேம் லிஸ்ட் தருகிறேன் ” எழுந்து உள்ளே சென்றார்
மிருதுளா அவனை ஆச்சரியமாக பார்த்தாள் ” மகிபாலன் அப்பா உங்களை எங்கே போகச் சொல்கிறார் ? ” மகிபாலனின் முகத்தில் மிகச் சிறிதாய் ஒரு சலனம் .கண் இமைப்பதற்குள் மாறிப்போனது.
” கோயம்புத்தூருக்கு. மது காட்டன் மில்ஸ் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மேலும் சில வேலைகளையும் பார்த்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறார் ”
” என்ன உங்களையா ? ‘ மிருதுளாவின் பிரமிப்பில் பாறையாய் இருந்த அவன் முகத்தில் லேசான மின்னல் கீற்று.
” ஆமாம் என்னையேதான். ஒருவழியாக என்னை நம்பி விட்டார் உன் அப்பா… ” மிக லேசாக பிரிந்த அவனது இதழ்கள் இடையே முன் பற்களின் வெண் நுனி .
” அப்பாவின் நம்பிக்கையை பெற்றதற்கு வாழ்த்துக்கள் ” புன்னகைக்க முயன்று தலைவலியின் தொல்லையால் முகம் சுளித்தாள் மிருதுளா.
மகிபாலன் மெல்ல எழுந்து வந்து அவள் உச்சந்தலையில் கை வைத்தான்.” நான் கொஞ்ச நேரம் தலையை பிடித்து விடட்டுமா மிருது ? ”
மிருதுளா அகன்ற விழிகளுடன் அவனைப் பார்த்தபடி இருக்க மகிபாலனின் கைகள் மெல்ல அவளது தலையை அழுத்தி விட துவங்கின .நெற்றி , நெற்றி பொட்டு உச்சந்தலை , பின்னந்
பின்னந்தலை என்று அவன் கைகள் இதமான அழுத்த தொடங்க மிருதுளாவின் இமைகள் தாமாக மூடிக்கொண்டன.
————–
ஸ்லீவ்லெஸ் அடர் சிகப்பு கலர் முட்டிவரை தொட்ட மினி கவுனில் நாகரீகமும் நறுவிசுமாக அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள் மதுரா .அந்த போட்டோவில் குடை போல் விரிந்து நின்ற அவள் இமைகளை மெல்ல வருடிய மிருதுளா ” அழகுடி நீ ” என்று அக்காவிற்கு ஒரு பாராட்டை கொடுத்துவிட்டு கதவை தாழிட்டாள் .
குளித்துக்கொண்டிருந்த போது மிருதுளாவினுள் அந்த உணர்வு .யாரோ அவளை கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உள்ளுணர்வு .கண்களை சுழற்றி அறையை ஆராய யாரும் இல்லை .மிருதுளா தனது குளியலை தொடர்ந்தாள் . மீண்டும் அதே உணர்வு ஈட்டியாய் அவள் உடலில் பாய்ந்த பார்வை.
மிருதுளா சட்டென திரும்பிப் பார்க்க உடனடியாக அவள் பார்வையில் பட்டது பாத்ரூம் கதவில் இருந்த மதுராவின் போட்டோ .சற்று முன் பார்த்தபோது புன்னகை மலர்ந்திருந்த போட்டோ மதுராவில் இப்போது இறுக்கமான முகம் தென்பட்டது போல் இருந்தது .அவள் மெல்ல நடந்து போட்டோவின் அருகே வந்து நின்று பார்த்தாள்.
உற்சாகம் வழிந்து கொண்டிருந்த முன் பார்வை இப்போது மதுராவில் இல்லை .மிருதுளாவை முறைத்தபடி தெரிந்தன நிழல்பட விழிகள். திக்கென்று அதிர்ந்தது மிருதுளாவின் இதயம் .இது எப்படி சாத்தியம் …? கண்களை சிமிட்டிக் கொண்டு மீண்டும் பார்த்தாள் .இன்னமும் அவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தன போட்டோ விழிகள். கூடுதலாக கோபத்தின் சாயல் கூட அந்த விழிகளில் இப்போது தெரிய ஆரம்பிக்க மிருதுளாவின் உடல் நடுங்க தொடங்கியது
———
அக்காவின் குணங்களை மனதிற்குள் பட்டியல் போட்டபடி அவளுடைய அலமாரி மேஜை இழுப்பறை என எல்லா இடங்களிலும் தேடினாள் மிருதுளா. ஏதோ எதிர்பார்த்த அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை . சலிப்புடன் அவள் கட்டிலில் அமர்ந்த போது அந்த சத்தத்தைக் கேட்டாள்.
முதலில் மிகவும் மெல்லியதாக கேட்ட அந்த சப்தம் நேரம் ஆக ஆக அதிகரித்தது .மிருதுளா படபடப்புடன் விழி சுழற்றி சத்தம் வரும் இடத்தை தேடினாள். அறைக்கு வெளியே இருந்து இல்லை…இதோ … இங்கே அறைக்குள்ளேயேதான். அதோ அந்த அலமாரியிலிருந்து இல்லை….பாத்ரூமிலிருந்து… இல்லை …அந்த டேபிளிலிருந்து.
ஆம் அந்த டேபிள் மேலே இருந்துதான் சத்தம் வருகிறது. கண்டுபிடித்து அந்த டேபிளை உற்றுப் பார்த்த மிருதுளாவின் உடல் நடுங்க துவங்கியது.
சற்று முன் அவள் ஷாப்பிங் செய்து வந்திருந்த பைகளை வேலைக்காரி அந்த டேபிள் மேல் கொண்டு வந்து வைத்துவிட்டு போயிருந்தாள் . இப்போது அதில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது .வளையல்கள் குலுங்கும் சத்தம் .கைநிறைய கண்ணாடி வளையல்கள் போட்டுக்கொண்டு அசைத்து காட்டும் சத்தம்.
திடுக் திடுக் என்று துடிக்கும் இதயத்துடன் அந்த ஷாப்பிங் பையை அணுகி மெல்ல பிரித்துப் பார்த்தாள் மிருதுளா. உள்ளே ஒரு பெட்டி நிறைய கண்ணாடி வளையல்கள் இருந்ததை பார்த்து அதிர்ந்தாள் .வளையல்களை பார்த்துகொண்டு இருந்தாலே தவிர அவற்றை வாங்கவில்லை .இடையில் பவித்ரா வந்துவிட அவளிடம் பேசிவிட்டு அதிர்ச்சியில் அப்படியே கிளம்பி வந்துவிட்டார்கள் .இப்போது வாங்கிவந்த சாமான்களில் இந்த கண்ணாடி வளையல் எப்படி வந்தது …அதுவும் சத்தம் கொடுத்து அவளை அழைத்ததே …அவள் கைகள் நடுங்க துவங்கின.
———-
ர்ராக் ….என்ற சப்தம் முதலில் மெலிதாக கேட்டு பின்பு அதிகமாகியது. மகிபாலனின் முத்தங்களில் தன் சுயம் இழந்து முழுதுமாக தன்னை அவனுக்கு ஒப்புக்கொடுத்து கொண்டிருந்தவள் அந்த போதையான நேரத்திலும் ஏதோ உள்ளுணர்வில் விழி திறந்து பார்த்தாள்.
அந்த அறையின் கதவு மெல்ல திறந்து கொண்டிருந்தது .உள்ளே நுழைந்ததும் கதவை தாள் போட்டது மிருநுளாவிற்கு நன்றாக நினைவில் இருந்தது .பிறகு எப்படி கதவு திறக்க முடியும் பயமாக விழி விரிய அந்த அறையை பார்த்தாள்.
இப்போது பெரிய பாறாங்கல் ஒன்று பாரமாக தன் தலைக்கு மேல் அமர்ந்திருப்பதாக உணர்ந்தாள் .வெறித்த விழிகளுடன் திறந்த கதவுகளை பார்த்தவள் உறைந்தாள் .திறந்து கொண்ட அறை கதவின் வழியாக மதுரா உள்ளே வந்தாள் .அவள் பார்வை கட்டில் மேல் இருந்த இவர்கள் மேல் இருந்தது .அவள் ஆழ்ந்த சிகப்பில் ஒரு சேலை கட்டி கொண்டு இருந்தாள் .தோள் வரை பாப் கட் செய்திருக்கும் அவள் கூந்தல் காற்றில் பறந்தபடி இருந்தது.
நிதான நடையுடன் உள்ளே வந்தவள் அவர்கள் கட்டிலுக்கு எதிரே இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள் .இவர்களை கூர்ந்து பார்க்கத் தொடங்கினாள் .முதலில் சாதாரணமாக இருந்த அவளது பார்வை நேரம் செல்லச் செல்ல கடுமையானதாக மாறியது .கொஞ்சம் கொஞ்சமாக தீப்பிழம்பாக மாறிய அவள் கண்கள் கொழுந்துவிட்டு எரியத் துவங்கின .அந்த பெரு நெருப்பின் வெப்பம் மிருதுளாவை கொடூரமாக தாக்கியது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
Ennapa pei kathaikku poitenga.