Serial Stories

Vanavil Dhevathai – 6

6

உதட்டோரம் சிகரெட்டை தொங்கவிட்டபடி கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு நின்றிருந்தான் பாலன் .”ஏய் எம் டிக்கு எவ்வளவு குலையடிக்கனுமோ அவ்வளவு அடிச்சிட்டேன் .இனிமே அந்த மனுசன் உன்னை ஒரு கணக்காவே எடுத்துக்க மாட்டான் .இனி நீ எனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகனும் “என்றான் திமிராக .

 

போடா போக்கத்தவனே என வைய துடித்த நாவை அடக்கியபடி “அப்படிங்களா சார் .ரொம்ப சந்தோசம் “நக்கலாக கூறியபடி விலகி நடந்தாள் .

 

“அப்ப அடுத்த வாரம் வச்சுக்கலாமா …?”ஆவலுடன் இளித்தான் அவன் .

 

“எதை …”கொதிப்பை அடக்கியபடி பொறுமையாகவே கேட்டாள் .

 




“நம்ம கச்சேரியை தான் .அநேகமா முதல் ஆள் நான்தான்னு நினைக்கிறேன் .நீ கை படாத ரோஜாங்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை .பயப்படாத பக்குவமா மொட்டை மலர வைக்கிற வித்தை ….”விலாவரியாக பேசியபடி போனவன்என எரிந்த கன்னத்தை பிடித்தான் .

 

“ஏய் “என ஆவேசமாக பாயப்போனவன் “என்னடா செய்வ ..?”பார்வையுடன் நின்றவளை பார்த்து தன்னை அடக்கியபடி ” ஆடுடி எத்தனை நாள்னு பார்க்கிறேன் “கறுவியபடி சென்றான் .

அவனது முறையற்ற பேச்சால் விளைந்த ரௌத்ரம் அவன் விலகவுமே வடிந்து விட ,மெஷின் துப்பிய கரும்பு சக்கையாய் தன்னை உணர்ந்தாள் சபர்மதி .

 

கண் கொத்தி பாம்புகளும்

பிணம் தின்னும் வௌவால்களும்

மிச்சமின்றி நகம் வரை தின்னும்

எச்சங்கள் துப்ப

எரிந்து நிற்கும் பிணமல்ல

எழுந்து நடக்கும் எரிமலை நான் .

 

தனக்கு தானே உரமேற்றிக் கொண்டு மூங்கிலாய் நிமிர்நது நின்றாள் சபர்மதி .

 

இந்த சேனல் அலுவலகத்திற்குள் இனி அவள் நுழையப்போவதில்லை முடிவெடுத்தபடி வீட்டிற்கு கிளம்பினாள் .

 

வழக்கத்திற்கு மாறாக வீடு மிக அமைதியாக இருந்தது .பெருந்தேவியின் பிள்ளைகள் வீட்டிலிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு அமைதி சாத்தியமில்லையே யோசித்தபடி உள்ளே நுழைந்தாள் சபர்மதி .

 

“அக்கா ” மெல்ல அழைத்தாள் .

 

சட்டென உள்ளே பீரோ மூடப்படும் சத்தம் .அவசர காலடி ஓசையுடன் பெருந்தேவி தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் .

 

“வாடா …சப்பு …என்னடா ஷூட்டிங் முடிந்ததா …? போயி முகம் கழுவிட்டு வா ,டிபன் தர்றேன் ..”

 

இன்னமும் இந்த குழைவைக் கண்டு குழம்பியபடி உள்ளே சென்றாள் சபர்மதி .சேனலை விட்டு நிற்க போவது தெரிந்தால் அக்கா ஆட்டமா ஆடப்போகிறாள் என்றெண்ணியபடி உள்ளே சென்றாள் .

 

முகம் கழுவி வந்தவள் முன் தட்டில் வடைகளையும் சட்னியையும் வைத்து நீட்டினாள் பெருந்தேவி .”நைட் உனக்கு ஷூட்டிங் இருக்கே .இதை சாப்பிட்டுட்டு கொஞ்சம் நேரம் படுத்து எந்திரி .நைட் சப்பாத்தி போட்டு வைக்கிறேன் .சாப்பிட்டு ஷூட்டிங் போகலாம் “என்றாள் .

 

ஷூட்டிங்கா …சபர்மதிதான் போகப்போவதில்லையே…இப்போதே எல்லாவற்றையும் பெருந்தேவியிடம் சொல்லி விட வேண்டியதுதான் என எண்ணி வாயை திறந்த போது வடையை சிறிது பிய்த்து அவள் வாயில் திணித்தாள் பெருந்தேவி .

 




“சாப்பிடும்மா காலைல சாப்பிட்டது முதல்ல சாப்பிடு “என்றாள் .

 

மதியம் சாப்பிடாததே அப்போதுதான் சபர்மதிக்கு நினைவு வந்தது .இவ்வளவு நேரம் தெரியாத பசி இப்போது மேலெழும்ப ,வாயில் திணிக்கப்பட்ட வடையால் உமிழ்நீர் சுரக்க தொடங்கியது.

 

வேகமாக மூன்று வடைகளை தின்று பிளாஸ்கிலிருந்து பெருந்தேவி ஊற்றிக்கொடுத்த காபியையும் குடித்தாள் .

 

கை கழுவ அடுப்படிக்குள் நுழைந்தவளுக்கு வித்தியாசமாக ஏதோ பட்டது .

 

“அட இங்கே ஏன்மா வந்த …கை கழுவ தண்ணி அங்கேயே வச்சிருந்தேனே” .என்றபடி பின்னாலேயே வந்து நின்றாள் பெருந்தேவி .

 

“வாம்மா வெளியே “கை பற்றி அழைத்து வந்தவள் போய் உன் ரூம்ல போய்  படும்மா ” உள்ளே தள்ளினாள் .

 

தலையாட்டியபடி வந்தவள் ரூமில் விரித்திருத்த பாயைக்கண்டதும் யோசனையாய் பெருந்தேவியை நோக்கினாள் .

 

“அது வந்தும்மா …கட்டில் கால் உடைஞ்சிடுச்சு .சரி பண்ண தூக்கி விட்டுருக்கேன் ….நைட் வந்திடும் இந்த ஒரு தடவை பாய்ல அட்ஜஸ் பண்ணிக்கோ “என்றாள் .

 

ஏதோ ஒன்று குழப்ப பாயில் படுத்தவள் நான்  அங்கே சாப்பிடாததது இங்கே அக்காவுக்கு எப்படி தெரிந்தது …?,யோசித்துக்கொண்டிருக்கையிலேயே கண்கள் சொருக தூங்கிப்போனாள் .

 

சுள்ளென்று வெயில் முகத் திலறைய சபர்மதி கண் விழித்தாள் .என்ன இது அந்தி மாலை வெயில் இப்படி அடிக்கிறதே .இன்னுமா இருட்டவில்லை குழம்பியபடி கைகளில் கட்டியிருந்த கை கடிகாரத்தில் மணி பார்த்தாள் .

 

எட்டு பத்து காட்டியது .எட்டு மணிக்கு ஏது வெயில் ?.சோம்பலுடன் படுத்தபடி சிந்தித்தவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் .

 

விடிஞ்சிடுச்சா ? அப்படியே காலைல வரை தூங்கிட்டேனா?அக்கா எப்படி தூங்க விட்டாள் ?…

 

“அக்கா “சற்று உரக்க குரல் கொடுத்தபடி அறையை விட்டு வெளியே வந்து நின்றவளின் கண்களில் வித்தியாசம் பளீரென அடித்தது .

 

ஒரு சின்ன துரும்பு கூட இல்லாமல் வீடு துடைத்தாற் போலிருந்தது .இருந்த நான்கு அறைகளையும் மாற்றி மாற்றி சுற்றி வந்து விட்டாள் சபர்மதி .வீடு காற்றினாலும் ,சூரிய ஒளியாலும் மட்டுமே நிறைந்திருந்தது .

 

கூடத்தின் தரையில் செய்வதறியாது அமர்ந்து விட்டாள் .

 

என்னவோ ஆகப்போகிறது …எதுவோ நடக்க போகிறது …சபர்மதியின் இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது .

 

“கிர்ர்ர்ர் …”காலிஙபெல்லின் நீண்ட ஒலி அநாதரவாய் தரையில் உட்கார்ந்திருந்த சபர்மதியை தூக்கி வாரிப்போட வைத்தது .

 

எழுந்து போய் திறக்க வேண்டுமென கூட தோணாமல் கதவை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் அவள் .மூடப்படாத கதவு திறக்கப்பட்டு உள்ளே வந்தாள் பக்கத்து வீட்டு பெண் .

 

கடவுளே இரவு முழுவதும் கதவு மூடாமலா இருந்தது .நெஞ்சம் நடுநடுங்கியது சபர்மதிக்கு .உள்ளே வந்த அந்த பெண் சபர்மதியை பார்த்து ,”என்னடா காலைல ஆறு மணிக்கெல்லாம் நம்ம அபார்ட்மெண்ட் டை சுத்தி நடக்க ஆரம்பிச்சிடுவியே இன்னும் காணோமேன்னு வந்தேன் ” என்றாள் வனஜா அந்த பெண் .

 

புரியாத மொழி பேசுவதைப்போல் விழித்தபடி அவளை ஏறிட்டாள் சபர்மதி .

 




அறியா அந்த பார்வையில் என்ன நினைத்தாளோ “ஏம்மா இப்படியா நானே தனியா இருந்துப்பேன்னு எல்லா சாமானையும் பேக் பண்ணி கொடுத்து  உங்க அக்காவை அனுப்புவ என்னவோம்மா இந்தக்கால பொண்ணுங்க எல்லாத்திலும் ப்ரீயா இருக்கனும்னு நினைக்காங்க ம்ம் …”என்றபடி சென்றாள் அப்பெண் .

 

தலை சுற்றியது சபர்மதிக்கு .என்ன நடக்கிறது இங்கே …?

 

அக்கா ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கிறாள் என தெரிகிறது .கிட்டத்தட்ட அதனை ஊகிக்க முடிந்தாலும் சேச்சே அப்படியெல்லாம் இருக்காது என தன்னைத்தானே வேறு வழியின்றி சமாளித்துக்கொள்கிறாள் .

 

வரவே மாட்டாள் என தெரிந்தபோதும் இதோ இப்போது வந்து விடுவாள் என கதவை வெறித்தபடி வெறுந்தரையில் அமர்ந்திருக்கிறாள் .

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!