அர்ஜூனனின் வனவாச பர்வம் தொடங்கியது.
இதில் அவன் சந்திக்கப் போகும் பாத்திரங்கள், அதன் காரணமாக அவனுக்கு ஏற்படப் போகும் அனுபவங்கள் ரசமானவை.
இந்த யாத்திரையில் தான் “அரவான்’ என்னும் பாத்திரம் இந்த உலகிற்கு கிடைத்தது. அரவான் யாரோ அல்ல….. அர்ஜூன புத்திரன் தான் இவன்!
அர்ஜூனன் தன் வனவாசத்தில், ஒருநாள் கங்கை நதிக்கரையை அடைந்து அங்குள்ள அந்தணர்களோடு சேர்ந்து அக்னிஹோத்ரம் செய்யும் போது, நாகலோகத்தைச் சேர்ந்த கவுரவ்யன் என்பவனும் அக்னி ஹோத்ரம் செய்ய வருகிறான். கவுரவ்யனின் மகள் உலூபி. அவளும் தந்தையோடு சேர்ந்து கங்கைக்கரைக்கு வந்தாள். அவள் அர்ஜூனனின் அழகைக் கண்டு விக்கித்து நின்றாள். இத்தனைக்கும் அர்ஜூனன் ராஜகுமாரனுக்குரிய ஆடை, அலங்காரம் ஏதுமின்றி வனவாசியாக இருக்கிறான்.
உலூபி தன் மனதைப் பறி கொடுத்து அவன் மீது காதல் கொண்டாள். அர்ஜூனன் கங்கையில் மூழ்கிக் குளித்த சமயத்தில், கங்கைநதிக்கு கீழிருக்கும் தன் இருப்பிடமான நாகலோகத்திற்கு இழுத்துச் சென்றாள். அவள் ஒரு பெண் என்பதால் தன் பலத்தைக் காட்டாமல், “”யார் நீ?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“” யவ்வன குமாரனே! நான் உலூபி…. நாக கன்னி! இது நாகலோகம்…. உன்னைக் கண்ட மாத்திரத்தில் என்னுள் காதல் பிறந்து விட்டது. ஒரு நாளேனும் உன்னுடன் வாழ்ந்து ஒரு புத்திரனைப் பெற்று அவன் மூலம் கடைத்தேற விரும்புகிறேன். மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்,” என்று வேண்டினாள்.
அதைக் கேட்ட அர்ஜூனன்,””நாக கன்னியே… உன் விருப்பத்தை நிறைவேற்ற நான் ஒன்றும் யுவன் அல்ல….குடும்பஸ்தன். திரவுபதியின் மணாளன்” என்று சொல்லி வனவாசம் வந்திருப்பதைக் கூறினான்.
அதைக் கேட்டும் அவளது ஆசை எண்ணம் குறையவில்லை.
“”நான் பாக்கியசாலி…. சர்வ லட்சணம் பொருந்திய தாங்களை என் மனதில் வரித்து விட்டேன். வனவாசத்தில் யார் எதை தானமாக கேட்டாலும் மறுக்க கூடாது. இம்மட்டில் என் அவஸ்தையைப் போக்கும் மருந்தாகவே உங்களைப் பார்க்கிறேன். உங்கள் ஐவருக்குள் உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடு பூலோகத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த நாகலோகத்தைக் கட்டுப்படுத்தாது. என்னோடு இல்லறம் நடத்துங்கள் என்று நான் அழைக்கவில்லை. ஒரு நல்ல புத்திரப்பேற்றின் மூலம் என் வாழ்விற்கு அர்த்தம் தேட விரும்புகிறேன். அவன் நாகனாக இல்லாமல் நரனாகவும்(மனிதனாக) இருக்கவும் ஆசை. நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அக்னி வளர்த்து அதில் பாய்வதைத் தவிர வேறு வழி எனக்கு இல்லை”.
தன் பொருட்டு, அவள் அக்னியில் உயிர் விட்ட பாவத்திற்கு ஆளாக விரும்பாத அர்ஜூனன் உலூபியை ஏற்றுக் கொள்ள சம்மதித்தான். அவளும் அர்ஜூனனுக்கு மாலையிட்டு மணந்து கொண்டாள். அவள் வயிற்றில் கருக் கொண்டான் அரவான்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1