27
மோகன் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்த அதே நேரத்தில் டாக்டர். வில்லியம் டெய்லரை சிந்திக்க வைத்தது..
“சார் ..”
“நீங்க என்னுடைய அறிவு, புத்திசாலித்தனம், நேர்மை,விடாமுயற்சி இதில் ஏதோ ஒன்றை வைத்து தானே உங்களுடன் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறீர்கள்..??”
“ஆமாம். இந்த வயதில், இந்தத் துறையில் உன்னுடைய ஆழ்ந்த அறிவு என்னை வியக்க வைக்கிறது..”
“அதனால் தான் வழி காட்டி உன்னை பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் கூறினேன்!!!” “ஆனால்….இப்போது நீ…..”
“எனக்கு ஆராய்ச்சி செய்ய ஆசை தான்…”
“இதனால் என் ஒருவனுக்கு மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். அந்த பல்கலையோ, நீங்களோ இனிதான் புதியதாக பேரெடுக்கப் போவதில்லை, தேவையில்லை.”
“என்னுடைய இந்த உழைப்பு உங்களுக்கு தெரிந்ததே இப்போதிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மூலமாகத்தானே?”
“நீங்கள் நினைத்தால் இந்தியாவில் ,ஏன்….? இங்கேயே ஒரு ஆராய்ச்சி கூடம் அமைக்கலாமே…”
“இதனால் இந்தத் தொழில் நுட்பம் இன்னும் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமே.”
“நூறு பேர் ஆராய்ச்சி செய்தால் ஒரு நல்ல மாணவன் கிடைக்கலாமே.”
“இது பயோடெக் துறையில் ஆர்வமுள்ள என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கும் உதவுமே.”
” உங்களுக்கு பணம் பெரிதில்லை.”
“எனக்கும் அங்கே வந்தால் புகழ் , பணம் எல்லாம் கிடைக்கும்.”
“ஆனால் எனக்காகவே வாழும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விட்டு விட்டு, அங்கு வந்து, பின்னர் வருடம் ஒரு முறை வந்து பார்த்துப் போவது எனக்கு முடியாத காரியம் சார்..”
“மன்னியுங்கள்.
இது தான் காரணம்.”
இரண்டு மணி நேரம் கழித்து மோகன் வந்து காத்திருந்தான்.
மதிய உணவு இடைவேளையில் , கல்லூரிக்கு வந்திருக்கும் ‘மிக முக்கிய விருந்தினர்கள் ‘ என, இவர்களின் தேவையை நேரடியாக வந்து கண்ணும் கருத்துமாக உபசரித்தார் கோவிந்தன்.
சாப்பிட்டு எழும் போது , ” உங்களது விருந்தோம்பலில் நான் திக்கு முக்காடிப் போனேன், மிக்க நன்றி” என வார்த்தைகள் மூலம் தன் மகிழ்ச்சியை தெரியப் படுத்தினார் வில்லியம் டெய்லர்.
வெளியே வரும் போது,
“நீங்க பார்த்தவர் பேர் கோவிந்தன்…”
“இவர்தான் அந்த மோகன் என்ற மாணவனின் தந்தை…”
“மிகுந்த நம்பிக்கையானவர்….”
“தான் சார்ந்த நிறுவனத்திற்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணிப்பவர்…” என்றார் சேர்மன்.
“அப்படியா…??”
இப்போது மீண்டும் திரும்பப் போய் ,
கோவிந்தனைப் பார்த்து கை குலுக்கி,
” மீண்டும் நன்றி…”
அருமையான மகனை கொடுத்தற்கு “
என்றார்.
கோவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் ‘மோகன் இவரை ஏதோ கவர்ந்திருக்கிறான்..!’ என்பது மட்டும் புரிந்தது.
மோகன் அழைக்கப்பட்டான்.
” நீ கூறினது என்னை மிகவும் பாதித்து விட்டது.”
“நீ அங்கே வர வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்யலாம் என நான் யோசித்து ஒரு வாரத்தில் உன்னை உங்க கல்லூரி மூலம் தொடர்பு கொள்கிறேன்….”என சொல்லிவிட்டு மோகனை அனுப்பி வைத்தார்.
இரவு வீட்டில் வந்து நடந்தவற்றை சொன்னான்.
கோவிந்தனுக்கு அப்போது தான் புரிந்தது.
” உனக்கு முன்னேற்றம் இருக்கும் என்றால், நீ அங்கே போய் ஆராய்ச்சி செய்யலாமே….”
“இப்போது கூட அவரிடம் நீ சொல்லலாம் மோகா” என்றார் கோவிந்தன்.
“அப்பா !!! நீங்க எல்லா தந்தையும் மாதிரி யோசிக்கறீங்க, உங்க சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என.”
“ஆனால் நான் எனக்கு பின் வரும் சந்ததிகளின் ஆராய்ச்சியும், நம் நாட்டிற்கு அதன் தேவை பற்றியும் யோசிக்கறேன்.”
வில்லியம் டெய்லரிடமிருந்து தகவல் ஒன்றும் தெரியவில்லை .
ஒரு நாள் ,சேர்மனின் அலுவலகத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் என அழைக்கப்பட்டான் மோகன்.
” நான் யோசித்து பார்த்தேன்…”
‘நாங்களும் எங்க குழுமமும் உங்க நாட்டில் முதலீடு செய்ய இதனை வாய்ப்பாக பயன் படுத்தலாம் என நினைத்தோம்.”
“இதற்கு இடம், உங்க நாட்டு அனுமதி போன்றவை கிடைக்க வேண்டுமே.”
‘அதற்காகத் தான் யோசிக்கிறேன்…”என்றார் வில்லியம்.
” அனுமதி பற்றி கவலை பட வேண்டாம்.”
“நான் ஏற்பாடு செய்கிறேன் ” என்றார் சேர்மன்.
பல்கலை கழகம் மூலம் கல்விச் சாலை, தொழில் நிறுவனம் இரண்டிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி,
மோகன் அதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேல் படிப்பு படிக்க உதவி புரியலாம் என முடிவு செய்யப் பட்டது..
இந்த கல்லூரி பயோடெக் பேராசிரியர் ஒருவர் இங்கே இருந்து மோகனுக்கு வழிகாட்டவும் முடிவு செய்யப்பட்டது.
புதியதாக கட்டப் பட்டிருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி ஒரு ஆறு மாதத்தில் இதற்காகவே தயார் செய்ய முடிவாகியது.
தேவையான உபகரணங்கள் முதலியவை கலிபோர்னியா விலிருந்து அனுப்பி வைத்து ஒரு மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு நல்ல நாளில் கையெழுத்தாகின.
இதற்கு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் ரகோத்தமன்.
இது தெரிந்து அடுத்த நாள் தனம் பாட்டி ஊரிலிருந்து வர,
வீணா காரில் போய் பாட்டியை அழைத்து வந்தாள்.
மோகன் வீட்டில் ஏற்கனவே விஜியும் ரகோத்தமனும் இருக்க சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் கோவிந்தன்.
“வீணா நம்ம வீட்டுக்கு வரப் போற வேளைதான்,
எல்லாம் நல்லபடியா நடக்கிறது…” என்றாள் ருக்கு.
“வீணா கிட்ட கேளுங்க….” “மோகனை மாப்பிள்ளைனு சொன்ன வேளைதான் அப்பாவுக்கு பிரமோஷன் வந்தது என்கிறாள்..” என்றாள் விஜி.
ரகோத்தமன் இப்போது மோகனைப் பார்த்து,
“பாரு மோகன், நாம எவ்வளவு உழைத்தாலும் இவர்களுக்கு நம்மை விட மத்தவங்க பேர்ல தான் நம்பிக்கை…”என்று சொல்ல எல்லோரும சிரிக்கிறார்கள்.
தனம் , “யாருடி வீணா, அந்த ஆளு உன்னைப் போலவே , இந்த மோகாவிடம் ஏமாந்துட்டாரு…” தனம் பாட்டி கிண்டலை ஆரம்பிக்க,
வீணா , “அதானே…..நான் தான் நீ சொல்லி சொல்லி இவனிடம் ஏமாந்தேன்.”
“இவரு பேரு வில்லியம் டெய்லர்…” இவரு எப்படி ஏமாந்தாருனு தெரியலயே.”
“உன் பேரன் கிட்ட நிஜமாவே ஏதோ சரக்கு இருக்கு தான் போல பாட்டி..”
“அது யாருடி வில்லியம் டெய்லர் ??? “
“எனக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம ஊர்ல இருந்த ‘வில்லியனூர் டெய்லர்’ தான்…”
” அவன் தான் என் கல்யாணத்துக்கு, அந்த காலத்திலேயே எம்பிராய்டரி லாம் செஞ்சு ரவிக்கை தைச்சான்…”
முரளி போய் பாட்டியை கட்டிக்கொண்டு…. ,
“செம காமெடி பாட்டி….”
“நீ வந்தாலே ஜாலிதான் பாட்டி என்றான்.”
அதற்குள் வீணா,
” உங்க மோகா புராணத்துக்கு அடுத்தது இந்த ரவிக்கை புராணம் தான் அதிகம் கேட்டிருக்கேன் பாட்டி…” “ஆளை விடு..” னு சொல்ல,
” இல்லடி , இப்போ அவனுடைய பேரனாம்….”
“நல்ல ஃபேஷனா தைக்கிறானாம்… கல்யாண ரவிக்கைலாம்…”
“உன் கல்யாணத்துக்குக் கூட ஏதோ ‘ஜஹாங்கீராமே….’
அதெல்லாம் கூட தைச்சு குடுப்பான்..”
“பாட்டி, ஜஹாங்கீர், பாதாம் கீர் லாம் கிடையாது. அதும் பேரு ‘லெஹங்கா’ என்று வீணா சொல்ல , பாட்டி சொன்னதை நினைத்து எல்லோரும் சிரிக்க….”அன்றைய பொழுது
இனிமையாக கழிந்தது.
ஆறு மாதம் ஓட, மோகனுக்கு ரிசல்ட் வந்து ஆராய்ச்சிக் கூடம் நிறுவப்பட்டது.
வில்லியம் டெய்லர் முன்னிலையில், மோகன் கல்லூரியில் முதல் நாளே பேரெடுக்க காரணமாக இருந்த, முன்பு வேலூர் கலெக்டராக இருந்து இப்போது தொழிற்துறை செயலராக இருக்கும்
ஐ ஏ எஸ் அதிகாரி திறந்து வைக்கிறார்.
முரளியும், வீணாவும்
புல்லாங்குழலும், வீணையிலும் இசைக் கச்சேரி நடத்த ரகோத்தமன் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய,
கோவிந்தன் உணவு விருந்தோம்பலில் ஈடுபட,
சேர்மன்,
“ரகோத்தமன் சார்..”
“உங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட மோகன்,மற்றும் அவங்க குடும்பத்தாலும், உங்க குடும்பத்தாலும் இந்த விழா அமர்க்களமாக நிறைவேறிவிட்டது…இனி எல்லாம் நலமே ” என்றார்.
” எங்க ரெண்டு குடும்பமும் ஒன்றாக ஆகப் போகிறது சார். மோகன் எனக்கு மாப்பிள்ளை ஆகப் போகிறார் …” என அறிவிக்க,
சேர்மன்,
“அட அப்படி சொல்லுங்க…, நம்ம வளாகத்துலேயே கல்யாணத்தை நடத்தி ஜமாய்ச்சுடலாம் என சொல்ல”
” சில வருடம் பொறுக்கலாமே சார் அதற்கு ” என மோகன் சொன்னான்.
” என் பேத்தியை கூட மோகனுக்கு கட்டி கொடுப்பேன். நீங்க அதுக்குள்ள நிச்சயம் செஞ்சு வெச்சுட்டீங்க போல..”
என சொல்ல அனைவரும் திகைத்தனர்.
“கவலைப் படாதீங்க…நான் வேணா பண்ணிக்கறேன்…உங்க பேத்திக்கு இப்பவே என் மேல் ஒரு கண்ணு தான்..”
அங்கே பாருங்க….” என்றான் முரளி.
முரளியின் வெளிப்படையான பேச்சு இங்கேயும் ஏதாவது பிரச்சனை கிளப்பப் போகிறதே என மோகன் நினைக்க போது,
அவன் காட்டிய திசையில் முரளியின் புல்லாங்குழலை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்தது மூன்று வயது பெண் குழந்தை.
அனவரும் குதூகலமாக சிரிக்க விழா இனிதே நிறைவேறியது.
சில வருடங்கள் ஓடின. மோகன் ஆராய்ச்சியில் முன்னேறி எம்.எஸ் முடிக்க, வீணாவும் முதுகலை முடிக்க, முரளியும் இளங்கலை முடிக்க,
மோகன், வீணா திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.
தெரிந்த அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
ராமசாமிக்கும் அழைப்பிதழ் அனுப்ப பட,
அதே நாளில், பெரிய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பங்கு பெற முரளிக்கு அழைப்பு வந்தது.
What’s your Reaction?
+1
5
+1
11
+1
+1
+1
+1
+1