6
தாரிகாவிற்கு விழிப்பு வந்த போது அறையினுள் சூரிய வெளிச்சம் நிறைந்திருந்தது. அந்த டியூப்லைட், சான்டிலியரெல்லாம் என்ன ஆயிற்று …? ஆப் செய்து விட்டார்களா என்ன …? யோசித்தபடி படுத்துக் கொண்டே கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள். புரண்டு பக்கவாட்டில் படுத்த போது எதிரே சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மயில்வாகனன் கண்ணில் பட்டான் . வீலென்று எழுந்த அலறலை கையால் மூடி வாய்க்குள்ளேயே அமிழ்த்தினாள். ஏனென்றால் அந்த அலறலை எதிர்பார்த்து முகம் உயர்த்தி அவளை கொலை பார்வை பார்த்தான் மயில்வாகனன் . அந்தப் பார்வைக்குப் பிறகும் அவளிடமிருந்து கீச்சென்ற சத்தமாவது வருமா ?
பேப்பரை கீழே போட்டு விட்டு எழுந்து வந்தவன் கட்டிலில் மண்டியிட்டு நேரடியாக அவள் கழுத்தையே பிடித்தான் .” எதுக்குடி கத்துற …? உன்னை என்ன கற்பழிக்கவா போகிறேன் ? “
தாரிகாவின் விழிகள் பயத்தில் விரிந்தன. அப்படிக் கூட செய்வாயா நீ ? கேட்டன .
” உன்னைத் தொட எனக்கு உரிமை இருக்குடி .எதற்காக வலுக்கட்டாயம் செய்ய போகிறேன் ? ம் …” அவள் கழுத்து தாலியை தூக்கி காண்பித்தான் .
உ…உரிமையா …? அதை இ…இவன் இப்போது எடுத்துக் கொள்வானா ..?இந்தப் பட்டப் பகலில் …? திறந்திருந்த சன்னல் வழியாக புகையாக உள்ளே வந்து கம்பி கம்பியாக தரையில் படிந்திருந்த வெயிலை பார்த்தாள் தாரிகா .
” புருசன் பொண்டாட்டி கூடலுக்கு பகலென்ன…இரவென்ன ? ” கூச்சமற்ற அவனது கேள்விக்கு கூச்சத்தோடு அழுகையும் சேர்த்து வந்தது தாரிகாவிற்கு .
” எ…என்னை இங்கே அழைத்து வந்து கொடுமை படுத்துகிறீர்கள் .” தயக்கமின்றி குற்றஞ்சாட்டினாள் .
” யார் …நீயா…நானா …? நேற்று இரவு ஏன் அப்படி நடந்து கொண்டாய் …? “
எப்படி நடந்து கொண்டேன் ..? தாரிகா இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தாள் . முந்திக் கொண்டு போய் கதவை பூட்டி விட்டு , தன்னை நோக்கி நடந்து வந்தவனை பார்த்ததும்…புறங்கையை வாய்க்கு கொண்டு போய் அலறினாள்.
அவளது அலறலில் மயில்வாகனன் ஒரு நொடி திகைத்து நின்று , பின் நடையில் துரிதத்தை கூட்ட , இப்போது மீண்டும் அலறினாள் தாரிகா. மயில்வாகனன் எட்டுக்களை அகலமாக்கி அவளை நெருங்கி தோள் பற்றி உலுக்கினான். மீண்டும் ஒரு கத்தலுடன் கண்கள் சொருக மயஙகினாள் தாரிகா . இதோ இப்போதுதான் கண் விழிக்கிறாள் .
” நே …நேற்று …எ…எனக்கு ஒரே பயமாக இருந்தது ” திக்கி திணறினாள் .
” உன்னைக் கற்பழித்து விடுவேனென்று தானே …? ” ஈவிரக்கமற்ற இந்தக் கேள்விக்கு மீண்டும் அவள் தேகம் நடுங்கியது .
” இங்கே பாருடி உன் அம்மாவிற்காகத்தான் உன் கழுத்தில் தாலி கட்டினேன். நீயெல்லாம் எனக்கு ஒரு கணக்கே கிடையாது. உன்னையெல்லாம் தொடும் எண்ணமே எனக்கு கிடையாது .தூக்கி எறியும் சுவரொட்டி மாதிரி எனக்கு நீ. அதனால் அதீதமாக கற்பனைகளை வளர்த்துக் கொண்டு திரியாதே. இரவு அப்படிக் கத்துகிறாயே …வெளியே இருப்பவர்களுக்கு கேட்டால் என்னவாகும் ? இந்த அறைக்குள் நாம் எப்படியோ …அறைக்கு வெளியே புருசன் – பொண்டாட்டி .காதலித்து மணந்து கொண்டவர்கள். இனி இந்த வீட்டில் உன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்க வேண்டும். புரிகிறதா ? “
கழுத்தை பிடித்து அழுத்தியபடி ஒருவன் கேட்கும் போது ஒருத்தி என்ன செய்வாள். கண்களை தாண்டி நீர்த்துளி வழிய, தலையாட்டினாள் .பிறகே அவள் கழுத்து விடுபட்டது .
” ம் …போ .போய் குளி ” பாத்ரூமை கை காட்டி விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்து பேப்பரை கையில் எடுத்தான் . எழுந்து மாற்றுத் துணிகளை எடுத்தபடி ஓரக் கண்ணால் அவனை ஆராயந்தாள் .ஏதோ வினை முடித்த பாவம் அவனிடத்தில். அவளை அதட்டி அடக்கி விட்டானாம். அதெப்படி அந்த வெற்றியை அவனுக்கு கொடுக்கலாம் …கனன்றது தாரிகாவின் உள்ளம்.
தோளில் மாற்றுத் துணிகளுடன் பாத்ரூம் கதவின் கைப்பிடியை பிடித்து திறந்தவள் ” ஒரு சின்னப் பொண்ணை இப்படி மிரட்டுகிறாயே மயிலு …? உனக்கெல்லாம் புத்தியே கிடையாதா ?” கத்தலாய் கேட்டு விட்டு …அவன் ” அடியேய் …” என்ற கூச்சலுடன் அருகே வரும் முன் பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள். ஏதோ ஓர் மன நிறைவுடன் ஆனந்தமாக குளிக்கத் தொடங்கினாள் .
குளித்து முடித்து வெளியே வரும் போதுதான் அந்த பயம் வந்தது. இன்னமும் அறைக்குள் தான் இருப்பானோ ? வெளியே கிளம்ப தோதாக குளித்து முடித்து அமர்ந்திருந்தவனை பார்த்த பின்தான் அவள் தைரியமாக கை நீட்டி வைதுவிட்டு குளியலறையினுள் பதுங்கியிருந்தாள். இப்போதோ…பழி வாங்கவெனவே அறைக்குள் இருப்பானோ …முதல் நாள் இரவு உள்ளே வருபவளுக்கு இடுப்பில் கை வைத்து காத்து நின்றானே அதே போல் ….? மெல்லிய பயத்துடன் கதவை இம்மலாக திறந்து பார்த்தாள் .கட்டில் , சோபா எங்கும் பார்வையை அலைய விட்டு அவனில்லையென அறிந்ததும் பெருமூச்சுடன் வெளியே வந்து தயாராகி கீழே இறங்கி வந்தாள் .
” வீட்டுக்கு விளக்கேத்த வந்த மகராசி எந்திரிச்சு வர்ற நேரத்தை பாரு ” சங்கரேஸ்வரி கரித்துக் கொட்டினாள். தாரிகா இறங்கி வருவதை கண்டு கொள்ளாமல் ஏதோ வேலை செய்தபடி இருந்த தமயந்திக்கு அவளது தாமத எழுதலை தெரிவிப்பதே சங்கரேஸ்வரியின் நோக்கமாக இருந்தது. அந்நோக்கம் நிறைவேறியது .தமயந்தி தாரிகாவை திரும்பி பார்த்து முறைத்தாள் .
” வ…வந்து கொஞ்சம் லேட்டாயிடுச்சு ” தாரிகா தலை குனிந்து நின்றாள் .
இது அவளது பழக்கம் கிடையாது . யார் முன்பும் தலை குனிந்து நிற்பவள் அவள் கிடையாது .இப்போதோ …இப்படி …தான் மிகவும் பரிதாபமான பிறவியாகி விட்டதாக அவளுக்கு தோன்றத் தொடங்கியது .
” வீட்டு ஆம்பளைங்க சாப்பிட்டு வேலைக்கு கிளம்பியே போயிட்டாங்க .இதுதான் கொஞ்சம் லேட்டா ? ” தமயந்தியின் கேள்விக்கு கிளுக்கென்றோர் சிரிப்பு .திரும்பிப் பார்க்க அந்த சுகந்தி நன்றாக பல் தெரிய சிரித்து விட்டு பிறகு வாயை கையால் மூடிக் கொண்டாள் .அண்ணாந்து விட்டத்தை பார்க்க தொடங்கினாள் .இங்கே கவனிக்கவில்லையாம் .தாரிகாவின் மடக்கப்பட்ட கை விரல் முட்டி அவள் தலையை தேடி துறுதுறுத்தது.
தமயந்தியின் அதிகாரத்திற்கு பதில் சொல்ல பிடிக்காமல் நகர்ந்து போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் .விழி சுழற்றி வீட்டினுள் தேடி அன்பரசியும் , அனந்தநாயகியும் இல்லையென கண்டு கொண்டாள். அவர்கள் வீட்டிற்கு போயிருப்பார்களாயிருக்கும். அவள் வயிற்றினுள் பசியின் ஓலம். இங்கே இருப்பவர்கள் யாருக்கும் அவளை சாப்பிட சொல்லும் எண்ணமிருப்பதாக தெரியவில்லை .ஐய்யோ எனக்கு பசி தாங்காதே …தனக்குத் தானே பரிதாப்பபட்டுக் கொண்டாள் .
முன்தினம் இரவு அவர்கள் அறையின் டேபிள் மேல் அடுக்கப்பட்டிருந்த பழங்கள் , பலகாரங்கள் நினைவு வந்தது. காலையில் அவள் குளித்து முடித்து வரும் போது பழங்கள் மட்டுமின்றி, அறையின் அலங்காரங்களும் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. எனக்கு சாப்பிட எதுவும் கிடைக்க கூடாதென்றே அவன் எல்லாவற்றையும் ஒதுக்கி சுத்தம் செய்திருப்பான். கசப்புடன் மயில்வாகனன்னை நினைத்தபடி தன் வயிற்றின் மேல் கைகளை அழுத்தி வைத்து கட்டிக் கொண்டாள் .
தமயந்தியும் , சங்கரேஸ்வரியும் உள்ளே போய்விட சுகந்தி அவளுக்கு எதிர் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து டிவியை அலற வைத்துக் கொண்டிருந்தாள் . இடையிடையே இவளை கர்வமாக ஒரு பார்வை வேறு
தாரிகாவிற்கு தலை வலி வந்தத . வேகமாக எழுந்தவள் சுகந்தியின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி டிவியை ஆப் செய்து சோபாவில் போட்டாள் .
” ஏன் இவ்வளவு சவுண்ட் வைக்கிறாய் ? எனக்கு தலையை வலிக்கிறது “
ஒரு நிமிடம் திகைத்த சுகந்தி மறு நொடியே வாயை அகலமாக திறந்தாள் . ” அத்தைய்ய்ய்ய்யீயீயீயீ….”
தமயந்தியும் , சங்கரேஸ்வரியும் ஓடி வந்து மூச்சிரைக்க நின்றார்கள்.” இவள் என்னை டிவி பார்க்க விட மாட்டேனென்கிறாள் “
” பார்த்தீங்களா மதினி .இவள் வந்த மறுநாளே என் மகளுக்கு இந்த வீட்டில் டிவி பார்க்கும் உரிமை கூட போய்விட்டது .” சங்கரேஸ்வரி மூக்குறிஞ்சி கண் துடைக்க , தமயந்தி டிவியை திரும்ப ஆன் செய்து சுகந்தியிடம் ரிமோட்டை கொடுத்தாள்.
” ஏய் நீ மாடிக்கு போ .கூப்பிடும் போது வந்தால் போதும் ” விரலை மேலே காட்டி உத்தரவிட அவமானத்தில் தாரிகாவின் உடல் எரிய வேகமாக மாடியேறி வந்துவிட்டாள் .கீழே டிவி அலற துவங்கியது . முன்னிலும் அதிக சத்தம் அதில் இருந்தது.
மாடி சோபாவில் அமர்ந்தபடி போகாத நேரத்தை நெட்டித் தள்ளியபடி தாரிகா சிறிது நேரம் இருந்தாள் .அப்போது கீழே தர்மராஜாவின் குரல் கேட்டது .
” அம்மா மருமகப் பொண்ணே ..எங்கே இருக்கிறாய் தாயி ? ” கீழிருந்து அழைக்க , மெல்ல இறங்கி வந்தாள் .
அவளது முகத்தை கூர்ந்து பார்த்தவர் ” போராடிக்குதா மருமகளே …? என் கூட வெளியே வர்றியா ? ” கனிவாக கேட்டார் . கங்கடுப்புக்குள் உட்கார்ந்திருக்கும் உணர்வில் இருந்தவள் உடனே தலையாட்டி அவருடன் கிளம்பிவிட்டாள். அவருடைய ஜீப்பில் ஏறி உட்கார்ந்து வீட்டு காம்பவுண்டை விட்டு வெளியே வந்ததும் ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.
” ஊருல முக்காவாசி நெலம் நம்முடையதுதான் மருமகளே. நெல்லு , கருது , சோளம் எல்லாமே பயிரிடுறோம். ஊடு பயிராக துவரையும் , தட்டானும் .நமக்கு வாழைத் தோப்பு , தென்னந்தோப்பு , மாந்தோப்பு எல்லாமே இருக்கு …” கலகலப்பான அவரது பேச்சில் முழுதுமாக மனம்செல்லாது வெறுமனே ” ம் ” என்றாள். ஆனால் போகுமிடமெல்லாம் அடர்ந்திருந்த பசுமை நான் வளமான பூமி என அவளுக்கு செய்தி சொன்னது .
ஜீப்பை விட்டு இறங்கியதுமே அவள் பார்வையில் பட்டவன் மயில்வாகனன் தான் . போடா …வாயசைத்து விட்டு தலை திருப்பிக் கொண்டாள் .பொண்டாட்டி சாப்பிட்டாளா ? என்ன …ஏதுன்னு பார்க்க முடியலை …நீயெல்லாம் …வைதபடி இருந்தவள் , அவன் திடுமென அவளை நோக்கி வேகமாக வரவும் திடுக்கிட்டாள் .நான் சொன்ன ” டா ” கேட்டுடுச்சா ? இ …இவன் இப்போது இத்தனை பேர் முன்னால் அடித்து விடுவானோ …? அநிச்சையாக அவள் கை கன்னம் பொத்த மயில்வாகனனின் நடை வேகம் கூடியது.
அந்த வேகத்தில் தாரிகாவின் தலைக்குள் குடைராட்டினங்கள் சுழல ஆரம்பிக்க அவள் மெல்ல மயங்கி சரிய ஆரம்பித்தாள் .
What’s your Reaction?
+1
16
+1
16
+1
1
+1
2
+1
1
+1
+1