17
மிருதுளா எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆதாரம் அவளுக்கு கிடைத்துவிட்டது ஆனால் அதனால் சந்தோஷம் வராமல் மிகுந்த துன்பம் வந்தது இப்படி பொய்த்துப்போனீர்களே மகி …புலம்பலாய் மனதிற்குள் அவனிடம் கேட்டுக் கொண்டாள். அந்த சேலை நன்றாக கசங்கி மண் போன்ற கறைகளுடன் அழுக்காக இருந்தது.
இந்த சேலையை மதுரா கட்டிக் கொண்டிருக்கும்போது தான் அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது .அதனால் தான் இது இவ்வளவு அழுக்காக இருக்கிறது …இப்படி நினைத்த மிருதுளா அந்த சேலையை உதறி மடித்து எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
அன்று இரவு உணவுக்காக எல்லோருமாக அமர்ந்தபோது டேபிளின் மேல் அந்த சேலையை கொண்டு வந்து வைத்தாள் ” இது யாருடைய சேலை ? ”
” என்ன குட்டி இது… ஏதோ அழுக்குச் சேலையை கொண்டு வந்து சாப்பிடும் இடத்தில் வைத்துக் கொண்டு … அந்தப் பக்கம் எடுத்துப்போ ” மாரீஸ்வரி அதட்டினாள்.
” இது அழுக்குத்துணி இல்லையம்மா .மதுராவின் சேலை…”
” என்னது …? ” மாரீஸ்வரி வேகமாக அந்த சேலையை கையில் எடுத்து பார்த்தாள் .
” ஆமாம் அம்மா .இந்த சேலையை நானும் அக்காவும் ஆசையாக ஒரே மாடலில் டிசைனில் வாங்கினோம் .இந்த சேலை இப்போது இப்படி அழுக்காக கசங்கி பழைய துணி போல் இருக்கிறது.”
” மதுரா கட்டிக் கொண்ட பின் துவைக்க எடுத்துப் போட மறந்திருப்பாள் குட்டி. இது ஒரு விஷயமா ? ” கலிவரதன் கண்டிப்பாக பேசினார் .
” இந்த சேலையை கட்டிக்கொண்டு அக்கா எதுவும் கட்டிட வேலை பார்த்தாளா அப்பா ? இங்கே பாருங்கள் எவ்வளவு அழுக்கு …தூசு ” சேலையில் படிந்த கறைகளை காட்டினாள் .
” சரி விடும்மா அது ஏதாவது அழுக்காகி இருக்கும் ” இன்னமும் கலிவரதன் சமாதானப்படுத்தலிலேயே இருந்தார் .
” இந்த சேலை எனக்கு எங்கே கிடைத்தது தெரியுமா அப்பா ? ” மிருதுளாவின் பார்வை மகிபாலன் மேல் திரும்பியது .
அவன் எங்கே நடக்கும் விஷயங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முக பாவனையோடு தட்டில் இருந்த சப்பாத்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் .
” இந்த சேலையை நான் உங்கள் தங்கை மகனின் அறையிலிருந்து எடுத்தேன் ”
அதிர்ச்சியை எதிர்பார்த்து தந்தையின் முகம் பார்க்க கலிவரதன் லேசாக புருவம் சுருக்கியதோடு சரி .மாரீஸ்வரியின் முகத்தில் குழப்ப பாவனைகள் .
” துணிகள் துவைத்து மடித்து என்று வரும்போது நம் வீட்டிற்குள் ஒருவர் அறையிலிருந்து இன்னொருவர் அறைக்கு மாறுவது சகஜம்தானே மிருது ? “
” அது துவைத்து வந்த துணிகள். இது இன்னமும் அழுக்காக இருக்கும் துணி .அத்தோடு இது எங்கே இருந்தது தெரியுமா ? மகிபாலனுடைய பழைய பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ”
கலிவரதன் மெல்ல சிரித்தார் .”இந்த அழுக்கு சேலையை அவன் பெட்டிக்குள் பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது ? எதையாவது நினைத்து குழப்பிக் கொள்ளாதே குட்டி சாப்பிட்டுவிட்டு போய் படு ” கலிவரதன் எழுந்து சென்றுவிட …
மிருதுளா இப்படி சொன்னால் எப்படி என திரும்பிப் பார்க்க மகிபாலன் சாப்பிட்டு முடித்துவிட்டு பதட்டம் இன்றி கை கழுவிக் கொண்டிருந்தான் .” அம்மா ” அடுத்த முயற்சியாக மிருதுளா தாயின் புறம் திரும்ப , அவள் தன் உதடுகளின் மீது விரல் வைத்து ” உஷ் ” என்றாள் .
” மகிபாலனை பற்றி தவறாக எதுவும் பேசாதே குட்டி .அவனால்தான் உன் அப்பா இப்போது தொழிலில் நிமிர்ந்து நிற்கிறார் ” என்று விட்டு உள்ளே போய் விட்டாள்
மிருதுளாவிற்கு ஒன்று தெளிவாக புரிந்தது .அப்பாவிற்கு அவர் ஆரம்பித்த தொழில் முக்கியம் .அம்மாவிற்கு தொழில் கொடுத்த கௌரவமும் அந்தஸ்தும் முக்கியம் .தற்போது இவைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கும் மகிபாலனை எந்த விஷயத்திலும் பகைத்துக்கொள்ள அவர்கள் இருவருமே விரும்பவில்லை.
அன்று இரவு மகிபாலன் அவர்கள் அறைக்குள் நுழைந்ததுமே மிருதுளா அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் .
.” அக்காவின் சேலை உன்னிடம் எப்படி வந்தது ? அது ஏன் இப்படி இருக்கிறது ? அதனை எதற்காக நீ ஒளித்து வைத்திருக்கிறாய் ? ” மகிபாலன் அவளது குலுக்கலுக்கு அசராமல் அவளைப் பார்த்தான் .
” நீதான் பெரிய டிடெக்டிவ் வேலையெல்லாம் பார்க்கிறாயே… நீயே கண்டுபிடி ” அலட்சியமாக சொன்னான்.
மிருதுளா விற்கு அளவில்லாத கோபம் வந்தது” சை மனுசனா நீ ? ”
” இல்லை பிசாசு ” அசராமல் பதில் சொன்னான்.
” அடப்பாவி உன்னைப்போய் அம்மாவும் அப்பாவும் நம்புகிறார்களே .சொல்லு மதுராவை என்ன செய்தாய் ? அவளை கொன்று விட்டாயா ? ” மிருதுளாவின் குரல் நடுங்கியது.
” உனக்கு அப்படி தோன்றுகிறதா ? ” மகிபாலனின் குரலில் தெரிந்த ஆதங்கத்தில் ஒரு நிமிடம் திகைத்து பின் ஆங்காரமாய் கத்தினாள். ” ஆமாம் அப்படித்தான் …எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது .நீ மதுராவை ஏதோ செய்துவிட்டாய் .அதனால் தான் அதே சேலையை கட்டிக் கொண்டு வந்து எனக்கு உன்னைப்பற்றி சொல்ல முயன்றிருக்கிறாள் மதுரா ”
” சரி இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய் ? ”
” உங்கள் கையால் தாலி கட்டிக் கொண்டேன் என்பதற்காக மணாளனே மங்கையின் பாக்கியம் என்று வசனம் பேசிக்கொண்டே உங்களுக்கு தலையாட்டிக் கொண்டே இருப்பேன் என்று நினைத்தீர்களா ? ”
மகிபாலன் பக்கென சிரித்து விட்டான் .” நல்ல பேச்சு அழகாக வசனமாக பேச கற்று கொண்டு விட்டாயடா குட்டி ” செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டினான்.
மிருதுளா சட்டென அவன் கையைத் தட்டிவிட்டாள் ” என் கவனத்தை திசைதிருப்பாதீர்கள் . நான் உங்கள் மேல் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்க போகிறேன் ”
” எதிர்பார்க்கிறேன் ” மகிபாலன் தலை குனிந்து நிமிர மிருதுளாவிற்கு ஆத்திரம் அலையடித்தது.
” இந்த இரவு நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம்டா குட்டி .நாளை காலையில் நானே உன்னை அழைத்துப் போகிறேன் .இப்போது வா படுத்துக் கொள்ளலாம்” ஆதரவாக அவன் கையை நீட்ட மிருதுளாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
” ஏதோ நடந்திருக்கிறது. என்னிடம் சொல்ல மாட்டீர்களா மகி ?” தன்னை படுக்கவைத்து தலையை மென்மையாக வருடியவனை பார்த்து கேட்டாள்.
” நான் சொல்வதை நம்புவாயா நீ ? ”
” நம்ப மாட்டேன் ” உறுதியாகச் சொன்னாள் .
” பிறகு ஏன் என்னிடமே கேட்கிறாய் ? ”
” ஏனென்றால் எனக்கு வேறு வழி இல்லை. என்னை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறீர்கள்
நீங்கள் .” மிருதுளாவின் குரல் உடையத் துவங்க மகிபாலன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
” இதுதான் உன் பிரச்சனை என்றால் நாளை நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வா மிருது ”
” நிஜமாகவா ? தனியாகவா ? ”
அவன் ஆமோதித்து தலையசைக்க மிருதுளாவின் உற்சாகம் புகுந்து கொண்டது .நாளை எதிர்பார்த்து இன்றைய இரவை நிம்மதியாக கடக்க ஆரம்பித்தாள் அவள்.
மறுநாள் அவள் போக தேர்ந்தெடுத்த இடம் அவர்கள் தொழிற்சாலை அமைந்திருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த மீனவர் குப்பம் .அங்கேதான் மகிபாலன் ஆறு மாதங்களாக மீனவர்களோடு ஒருவராக தங்கியிருந்து ஒரு கப்பலை உருவாக்கி முடித்திருக்கிறான் . அப்போது அவனுடன் மதுராவும் இணைந்தே பணிபுரிந்திருக்கிறாள் .
அந்த இடத்தில் அவனை பற்றிய தகவல்களை சேகரிக்க நினைத்தாள்.
தகிக்கும் வெயில் அவள் உடலின் உயிர் சத்தை உறிஞ்சி எடுக்க நான்கு பேரிடம் விசாரிப்பதற்குள் மிகவும் சோர்ந்து போனாள் மிருதுளா.
” பாலா சாரை பற்றி கேட்கிறீர்களா ? ” அவளாக தேடிப்போகும் அவசியமின்றி தானே வந்து அவள் முன் நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா.
இவ்வளவு நேரம் அவள் பார்த்த மீனவ பெண்களிடையே இவள் வித்தியாசமாக இருந்தாள .நாகரீகமாக சுடிதார் போட்டிருந்தாள் பேச்சில் படிப்பு வாசனை தெரிந்தது.
“நீங்கள் யார் ? ”
” என் பெயர் ரோஸலின் .நானும் இந்த குப்பத்தை சேர்ந்தவள்தான் .பிஏ படித்திருக்கிறேன் .அந்த கப்பல் கட்டும் ப்ராஜக்ட்டில் நானும் இருந்தேன் ”
” ஓ அப்படியா ரொம்ப சந்தோஷம் சொல்லுங்க .அந்த வேலை எப்படி போனது ? ”
” அந்த வேலையின் ஹெட் உங்கள் ஹஸ்பண்ட் தான். அவரிடம் கேட்காமல் எங்களிடம் கேட்கிறீர்களே ? ”
மிருதுளா விழித்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது ?
” நான்தான் அவளை அனுப்பி வைத்தேன் ரோசி .அவள் கேட்கும் தகவல்களை சொல்லு ” என்று சொன்னபடி வந்து நின்ற மகிபாலனை முறைத்தாள்.
இதுதான் என்னை தனியாக வெளியே அனுப்பும் லட்சணமா… முன்னால் போகச் சொல்லிவிட்டு பின்னால் வந்து நிற்பீர்களா ? எரிச்சலுடன் அவன் முகம் பார்க்க பிடிக்காமல் திரும்பியவளின் கண்களில் ரோஸ்லின் பட்டாள்.
அவள் ஒளிவீசும் கண்களுடன் நின்றிருந்தாள் .அவள் கண்களின் ஒளி வீச்சிற்கு காரணம் மகிபாலனாக இருந்தான்.
What’s your Reaction?
+1
2
+1
3
+1
+1
+1
+1
+1