16
” அக்காவை பற்றி தப்பு தப்பாக சொல்ல அந்த முத்து மாணிக்கத்தை நீங்கள் தானே ஏற்பாடு செய்தீர்கள் ? ” ஒரு வேகத்துடன் கேட்டவளை சலனமின்றி திரும்பிப் பார்த்தவன் மெல்லிய புன்னகையுடன் ஸ்டியரிங்கை வளைத்தான்.
” ம்… அப்புறம் வேறு என்ன கண்டுபிடித்தாய் ? ”
கார் கதவை திறந்து அப்படியே அவனை வெளியே உருட்டிவிட வேண்டும் போல் மிருதுளாவிற்கு வேகம் வந்தது.
” நீங்கள்தான் …எனக்கு நன்றாக தெரியும் அன்று ரோட்டில் வைத்து முத்துமாணிக்கத்திடம் இதைத்தான் பேசியிருக்கிறீர்கள். என்னுடைய போனை கூட அன்று கட் செய்தீர்கள் ”
” ம் சரி அப்புறம் ”
” கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தீர்களா ? ” அவன் தோளில் குத்தினாள்.
” ஸ் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் குட்டி. இப்போது இப்படி தாக்கினால் நான் என்ன செய்வது ? எங்காவது கொண்டு போய் மரத்தில் மோத வேண்டியதுதான் அன்று உன்னைப்போல…”
மிருதுளாவிற்குவ அன்று தான் ரோட்டில் மதுராவை பார்த்த நினைவு வந்தது நினைவு வந்தது .அன்றைய பயம் இன்றும் கண்களில் தோன்ற நடுங்கும் இமைகளுடன் எதிரே தெரிந்த சாலையை ஆராய்ந்தாள.
” யாரைத் தேடுகிறாய் ? ” கேட்டதோடு பட்டென்று அவள் தோளில் அடிக்கவும் செய்தான் மகிபாலன்.
” பிசாசு எதற்கு இப்படி அடிக்கிறீர்கள் ? ”
“ரொம்ப வலிக்கிறதா குட்டி ” அடித்த இடத்தை தடவியவன் கை நகராமல் அங்கேயே தங்கி விட சட்டென்று அவன் கைகளைத் தள்ளி விட்டாள்.
” மதுராவிற்கும் உங்களுக்கும் இடையில் என்ன ? ”
மகிபாலன் அவளை லேசாக திரும்பி பார்த்துவிட்டு சாலைக்கு திரும்பிக் கொண்டான் ” அவள் என் மாமா மகள் ”
” அவ்வளவுதானா …?வேறு எதுவும் …வந்து நீங்கள் ..?இருவரும் …” காதலிக்கிறீர்களா என்று கேட்கவும் மனம் வராமல் தயங்கி நிறுத்தினாள்.
” மன குப்பைகள் எல்லாவற்றையும் வெளியே கொட்டி விடு மிருது .அப்போதுதான் மனம் லேசாகும் ”
” உங்கள் மாமன் மகளை நீங்கள் காதலித்தீர்களா ? ” அவனை பார்க்காமல் நடுங்கும் குரலில் இதை கேட்டாள்.
” ஆமாம் ” அவனது பதிலில் அதிர்ந்தாள் .மேலே என்ன கேட்கவும் தோணாது அவன் முகம் பார்த்தபடி அமர்ந்து விட்டவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன் அவள் தோளை சுற்றி கையை வளைத்து தன் அருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டான்.
” உன்னை நான் காதலிப்பது உனக்குத் தெரியாதா குட்டி ? ” மிருதுளா அவனை நிமிர்ந்து பார்க்க்…
” நீ என் மாமன் மகள் தானே ” என்றான் .சற்றுமுன் பாரம் ஏறியிருந்த மனம் இப்போது சிறகு பெற்று பறப்பது போல் ஒரு உணர்வு உண்டாக மிருதுளா அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் .ஒரே நிமிடம்தான் அடுத்த நிமிடமே அவன் தன்னை திசைதிருப்பி விட்டதை உணர்ந்து வேகமாக அவன் அணைப்பிலிருந்து நகர்ந்தாள்.
” நீங்கள் என்னை குழப்பிக் கொண்டே இருக்கிறீர்கள் ” குற்றம் சாட்டினாள் .
” என் மனதை நான் சொன்னேன். இதில் உன்னை திசை திருப்ப என்ன இருக்கிறது ? ”
” எனக்கு நீங்கள் நியாயமான பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை இல்லை ”
” நியாயமான கேள்விகள் கேட்டால் சரியான பதில்கள் கிடைக்கும் ‘
” சரி இப்போது சொல்லுங்கள் .காணாமல் போய்விட்ட மதுராவை தேடுவதற்காக என்ன முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? ”
” நிறைய செய்து கொண்டிருக்கிறேன்…. என் நண்பன் முத்துமாணிக்கம் மூலமாக ”
மிருதுளாவிற்கு சை என்று ஆகிவிட்டது .மகிபாலன் வாயிலிருந்து சிறு விபரம் கூட வாங்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.
” டாக்டர் மாலதியும் உங்க ஏற்பாடு தானே ? அதுவும் உங்களுடைய திட்டங்களில் ஒன்றுதான் ” சோபாவில் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த மகிபாலனின் முகம் இறுகியது.
” மாலதி என்னுடைய பள்ளித்தோழி .அவளை உன் நன்மைக்காகத்தான் ஏற்பாடு செய்தேன் .இந்த விஷயத்தில் என்னை தவறாக பேசுவாயானால் ஜாக்கிரதை ” ஒற்றை விரல் ஆட்டினான். அவனது அந்த வகை குரலுக்கு
அடிமனதுவரை ஒருவித பயக் குளிர் பரவ மாலதி பற்றிய மேற்கொண்ட விசாரணைகளை நிறுத்திக்கொண்டாள் மிருதுளா.
கால்களின் நீளம் பற்றாது சோபாவின் கைப்பிடி மீது கால்களை தூக்கி போட்டுக்கொண்டு படுத்திருந்தவன் கண்களை மூடிக்கொண்டு கால்களை ஆட்டிக்கொண்டு விதானத்தை பார்த்தபடி இருந்தான் .கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவது போல் கண்களை அறைகுறையாக மூடியபடி அவனை கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு பய பதற்றங்கள்.
இவன் இப்போது என்ன யோசிக்கிறான் என்று தெரியவில்லையே… ராத்திரி நேரம் தூங்காமல் கண்ணை உருட்டிக்கொண்டு பிசாசு போல் இப்படி கிடக்கிறானே ….அவளுக்கு தூக்கம் வர மறுத்தது .மகிபாலன் அவள் பக்கம் சாய்ந்து திரும்பி படுக்க அவள் அவசரமாக கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தூங்கும் பாவனை செய்தாள்.
மகிபாலன் எழுவதை அசைவில் உணர முடிய இம்மலாக கண்களை திறந்து பார்த்தாள் .அவன் நடந்து போய் அறைக்கதவு தாழ்பாழை சரி பார்த்தான் .பின் கட்டிலுக்கு வந்து அவளைப் பார்த்தபடி நின்றான் .மிருதுளாவின் இதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது .இப்போது ஏன் இங்கே வருகிறான்…?
” மிருது ” மெல்ல அழைத்தான் .மூச்சை கூட மெல்லமாகத்தான் வெளியேற்றினாள் அவள் .” எனக்கு ஒரு சந்தேகம் .இப்போது சில நாட்களாக மதுரா உன்னை பார்க்க வரவே இல்லையே ஏன் ? ”
மிருதுளா விருட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள் ” ஆமாம் மகி ஏன் ? ” அவனிடமே கேட்டாள்
” என்னையே கேட்கிறாயா ? உன்னை மட்டுமே பார்க்க வருபவள் அவள் .எனக்கு எப்படி அவளைப் பற்றி தெரியும் ? ”
மிருதுளா தீவிரமாக யோசிக்க தொடங்கினாள் .ஒருவேளை தான் வந்த வேலை முடிந்தது என்று நினைத்து போய்விட்டாளோ ? “
“அப்படி எந்த வேலையாக அவள் வந்தாளாம்? “
“உங்களிடமிருந்து என்னை காப்பாற்றும் வேலை “சொல்லிவிட்டு அவன் முகம் போன போக்கிற்கு வாயை மூடிக் கொண்டாள்.
“எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ” தலைகுனிந்து முணுமுணுத்தாள்.
” நாம் வேறு ஒன்றை முயற்சித்துப் பார்த்தால் என்ன ?கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் .அவனுடைய முகபாவனை அவளுக்கு ஒருவித சந்தேகத்தை கொடுத்தது .இவன் எதற்கு இப்படி ஒரு மாதிரி பார்க்கிறான் ? குனிந்து தான் அணிந்திருந்த இரவு உடையை கவனித்து எதற்கும் இருக்கட்டும் என்று உடையின் கழுத்தை சரி செய்து கொண்டாள்.
“உன் அக்காவை வரவைக்கத்தான் வேறு எந்த தவறான நோக்கத்திலும் இல்லை குட்டி ” சொல்லி முடித்த மறு கணமே அவளை கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தான்.
” விடுங்க மகி என்ன பண்றீங்க ? “
” நாம் எப்படி நெருக்கமாக இருந்தால் தானே மதுரா வருவாள் என்று சொன்னாய் குட்டி .இப்போது தான் கதவை கூட செக் செய்துவிட்டு வந்தேன்.. பூட்டிய கதவை திறந்துகொண்டு தானே உன் அக்கா வருவாள் .நீ அங்கே கவனி …நான் இங்கே …” பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அவள் மேல் கவிழ்ந்தான் .
உடலெங்கும் வியர்த்து ஊற்ற அவனது வேகத்தில் தடுமாறினாள் மிருதுளா. இப்போது இவனை தடுக்க வேண்டுமே …என்ன செய்யலாம் …தள்ளிவிடலாம் ஆனால் அப்படி எளிதாக தள்ளுவது போல் இவன் இல்லையே ..்..ஆனால் தள்ள வேண்டுமே… இன்னும் கொஞ்ச நேரம் போனால் மிருதுளாவிற்கு நினைக்க நினைக்க பயமாக இருந்தது .எந்த நிமிடத்திலும் மகிபாலனின் கட்டுப்பாட்டிற்குள் போய் விடுவோம் என தெளிவாக அவளால் உணர முடிந்தது.
இல்லை அப்படி நடக்கக்கூடாது இவனிடம் இப்படி விழக்கூடாது… மீண்டும் மீண்டும் தனக்குள் உரு போட்டுக் கொண்டவள் பலவீனமான கைகளால் அவன் தோள் பற்றி தள்ள முயன்றாள் ” என்னடா குட்டி மதுரா வருகிறாளா ? ” கேட்டவனின் இதழ்கள் அப்போதுதான் அவள் கன்னத்தை மென்மையாக கவ்வி விட்டிருந்தன.
மிருதுளா சட்டென்று மதுராவின் ஞாபகம் வர பார்வையை அறை வாயிலுக்கு திருப்பி மூடப்பட்டிருந்த கதவை பார்த்தாள்.
” மதுரா வருகிறாளா குட்டி ? அன்று இப்படித்தானே வந்தாள் …?பூட்டியிருந்த கதவை எப்படி திறந்தாள்…? எப்படி வந்தாள் …? ” ஒவ்வொரு கேள்விக்கும் அவளுக்கு ஒரு முத்தமிட்டான்.
அவன் முத்தங்கள் தந்த கிறுகிறுப்போ என்னவோ மிருதுளாவின் விழிகள் சொருகியபடி அறை வாசலை பார்த்துக்கொண்டிருந்தன .வந்தாள அன்று இப்படித்தான் வந்தாள் …அந்த சிகப்பு சேலையை கட்டிக்கொண்டு தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ….” மகிபாலனை உள் வாங்கியபடி அன்றைய மதுராவின் வரவை குழப்பமாக சொல்லிக் கொண்டிருந்தவள் உடல் முழுவதும் அந்த அதிர்வை வாங்கினாள்.
சொடுக்கிய மின்னல் போல் அவள் உடல் அதிர்வை தானும் உணர்ந்த மகிபாலன் தன் பிடியை தளர்த்தி அவளை மெல்லிய கவலையோடு பார்த்தான் ” குட்டி என்னடா ? ” பரிவுடன் தலை வருடினான்.
மிருதுளா அவனை விலக்கிக் கொண்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள் ” மகி அன்று அக்கா ஒரு சேலை கட்டி இருந்தாள .அது சிகப்பு கலர் சேலை. அந்தச் சேலை …அதுபோல் ஒரு சேலை என்னிடமும் உண்டு. நாங்கள் இருவரும் சேர்ந்துதான் ஒன்றுபோல் அந்த சேலை எடுத்தோம் .இப்போது அந்த என்னுடைய சேலை…” பரபரத்தவள் வேகமாக எழுந்து தனது அலமாரியை திறந்து அங்கிருந்த உடைகளுக்குள் தேடத் துவங்கினாள் .மகிபாலன் அமைதியாக அவளை பார்த்தபடி இருந்தான்.
” இங்கே தானே இருக்கவேண்டும்… எங்கே போயிற்று ? ” தனக்குள் புலம்பியபடியே பீரோ முழுவதும் தேடிப் பார்த்து குழப்பமான முகத்துடன் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.” அதை காணவில்லை மகி எங்கே போயிருக்கும் ? ”
குழந்தையாய் தன்னிடம் கேட்டவளை வாஞ்சையாய் பார்த்தான் அவன் .” அங்குமிங்கும் உனது அறையை மாற்றியதில் எங்காவது தவறி இருக்கலாம் குட்டி .சின்ன விஷயம் இதற்காக நீ இவ்வளவு பதட்டப்பட வேண்டாம் ”
” இல்லை மகி அந்த சேலை …அது …அன்று மதுராவும் விரும்பி எடுத்த சேலை அது .அவள் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்னுடையது எங்கே….? ”
மகிபாலன் ஒரு பெருமூச்சுடன் கட்டில் டிராவை திறக்க ” என்ன செய்யப் போகிறீர்கள் ? மாத்திரையா ? நான் போட மாட்டேன். அதை போட்டால் தூக்கம் வருகிறது ”
” இப்போது உனக்கு தூக்கம் தான் வேண்டும் குட்டி .ப்ளீஸ் மாத்திரையை போட்டுக் கொள் ” வலுக்கட்டாயமாக அவள் வாயை திறந்து மாத்திரையை போட்டு தண்ணீர் ஊற்றினான்.
” என்னை ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள் ”
” ம் ” அவளது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டான்.
” அந்த மாலதியோடு சேர்ந்து பேசி ஏதோ மாத்திரையைக் கொடுத்து என்னை தூங்க வைக்கிறீர்கள் .”அதற்குள் சொக்க தொடங்கிவிட்ட தன் விழிகளை திறக்க முயன்றபடி குழறலாய் பேசினாள்.
” எதையாவது உளறாதே குட்டி .அமைதியாக தூங்கு ” இதமாக அவளது நெற்றியை பிடித்துவிட துவங்க மிருதுளா தூங்க ஆரம்பித்தாள்.
அவள் தூங்கிய பிறகு தன் போனை எடுத்த மகிபாலன் ” ஜான் உனக்கு ஒரு வாரம்தான் டைம் .அதற்குள் நீ ஊரை விட்டு ஓடி விட வேண்டும் ” மிரட்டலாக பேசி வைத்தான் .
மிருதுளாவின் சேலை தேடும் வேலை அன்று இரவோடு முடிந்துவிடவில்லை. மறு நாள் காலை மகிபாலன் அலுவலகம் கிளம்பி சென்ற பின் தனது மாடி அறைக்கு போய் சேலையை தேடத் துவங்கினாள்.
அங்கே அவளுடைய மாடி அறையிலும் அந்த சேலை இல்லை. கொஞ்சம் யோசித்தவள் அருகிலிருந்த மகிபாலன் அறைக்குள் நுழைந்தாள் .இங்கே இருக்குமோ… ஏனென்று தெரியாமல் அவள் மனம் படபடத்தது .மீண்டும் மீண்டும் இங்கே எதையாவது தேட வேண்டியிருப்பது அவளுக்கு மன சங்கடத்தை கொடுத்தது. அந்த அறையின் அலமாரிகள் இன்றும் அவளது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.
பெரும் சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தவளின் பார்வை கப்போர்டின் மேலே போக அங்கே இருந்த சூட்கேஸ் கண்ணில் பட்டது. அது மகிபாலன் அவர்கள் வீட்டிற்கு முதன் முதலில் வந்த போது கொண்டுவந்த சூட்கேஸ் .அதில் அவனுடைய சிறுவயது உடைகள் இருக்கலாம் என்று நினைத்திருந்தாள் . இப்போது அதனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஸ்டூலை இழுத்துப்போட்டு மேலேறி அந்த சூட்கேசை எடுத்தாள்.
அதற்குள் மிருதுளா எதிர்பார்த்தபடியே மகிபாலனின் சிறுவயது உடைகள் இல்லை .அவனுடைய அம்மா அப்பாவின் சில உடைகள் , மேலும் சில சிறு குழந்தைகள் உடைகள் .அவனுடைய அக்கா தம்பி இவர்களுடையதாக இருக்கலாம் .மேலும் சில பொம்மைகள் .அவர்கள் சிறுவயதில் விளையாண்டவைகளாக இருக்கலாம் .தனது குடும்ப ஞாபகார்த்தமாக இவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறான் போலும்… நெகிழ்வோடு நினைத்தபடி அந்த பெட்டியை கிளறிக் கொண்டிருந்தவளுக்கு அதன் அடியில் இருந்த அந்த சேலையை அடையாளம் தெரிந்துவிட்டது.
அது அவள் தேடிக்கொண்டிருந்த அதே சிகப்பு சேலை. கைகள் நடுங்க அந்த சேலையை எடுத்து உறுதி செய்து கொண்டவள் …அதனை மெல்ல தன்மீது போட்டு பார்க்க ஏதோ ஒரு வினோத உணர்வு உடல்முழுவதும் பரவுவதை உணர்ந்தாள்.
மகிபாலனின் குற்றத்தை உறுதிப்படுத்த இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் …மிருதுளாவின் கண்கள் கலங்கின.
What’s your Reaction?
+1
2
+1
3
+1
+1
+1
+1
+1