health benefits

ஆஸ்பிரின் மாத்திரை பற்றி தெரிந்து கொள்ளலாம்!

நம் வீட்டில் அவசர காலத்திற்கென்று சில மாத்திரைகளை முன்பே வாங்கி வைப்பதுண்டு. தலைவலி, சளி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளை குணப்படுத்த பேராசிட்டமால், மெப்தால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவதுண்டு. எனினும் மாத்திரைகளை பயன்படுத்தும்போது கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்பேரிலேயே உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஆஸ்பிரின் மாத்திரையின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.




ஆஸ்பிரின் மாத்திரை ஸ்டீராய்ட் இல்லாத அழற்சி எதிர்ப்பு மாத்திரையாகும். இது வலி, வீக்கம், மூட்டுவலி போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தும் மாத்திரையாகும். அதுமட்டுமில்லாமல் மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தம் உறைதலை குணப்படுத்தக்கூடியதாகும்.

குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினர் இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்துவது ஆபத்தாகும். இது ரெய்ஸ் சின்ட்ரோம் என்ற தீவிர நிலையின் ஆபத்தை ஏற்படுத்தும். சளி, காய்ச்சல், சிக்கன் பாக்ஸ் போன்ற வைரஸ் நோய்க்கு பிறகு இது வரும். ரெய்ஸ் சின்ட்ரோம் நிரந்தர மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஆஸ்பிரினை ‘அசிட்டில் சாலிசில்லிக் ஆசிட்’ என்றும் கூறுவார்கள். ஆஸ்பிரின் மாத்திரைகள் சாதாரண மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். அதில் சிலது மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஆஸ்பிரின் மாத்திரை, பவுடர் மற்றும் ஜெல் வடிவில் கிடைக்கிறது. மாரடைப்பு பிரச்னையிருப்பவர்களுக்கு மருத்துவர் தினமும் பயன்படுத்துவதற்கு குறைந்த டோஸேஜ் உள்ள ஆஸ்பிரினை பரிந்துரைப்பார்கள். கர்ப்பமான பெண்களுக்குமே குறைந்த அளவிலான டோஸேஜ் உள்ள ஆஸ்பிரினை பரிந்துரைப்பதுண்டு. ஆஸ்பிரினை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்வதே சிறந்ததாகும்.




16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் ஆஸ்பிரின் மாத்திரையை கொடுக்கக் கூடாது. ஆஸ்பிரின் எடுத்து கொண்ட 20 முதல் 30 நிமிடங்ளில் குணமாவதை உணர்வீர்கள். நீண்டகால சிகிச்சைக்காக குறைந்த டோஸேஜ் 75mg ஆஸ்பிரினை பயன்படுத்துவார்கள். இது இரத்த தட்டுக்கள் இரத்தத்தை உறைய வைப்பதை தடுக்கிறது. அதாவது, இரத்தத்திலிருக்கும் பிசுபிசுப்பு தன்மையை குறைப்பதால் இதை இதயம் சம்பந்தமான மாரடைப்பு, ஸ்ட்ரோக், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் போன்றோருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஆஸ்பிரின் சாப்பிடுவதால் பொதுவாக மக்களுக்கு எந்த பிரச்னையும் வருவதில்லை என்றாலும், சிலருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. ஆஸ்துமா, வயிற்றில் அல்சர் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரக பிரச்னையுள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், 16 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள், 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் டாக்டரை பரிந்துரைக்கச் சொல்வது நல்லதாகும்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறுவார்கள். அது மாத்திரைகளுக்கும் சரியாகவே பொருந்தும். எனவே, உடல் உபாதைகள் வரும்பொழுது மாத்திரைகளை அளவாக எடுத்து கொள்வதே சிறந்ததாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!