18
“அத்தை இங்கே வாங்க”வெளியில் நின்று மகதி அழைக்க வீட்டு வாசலுக்கு வந்த மீனாட்சி திகைத்தாள்.நான்கைந்து பிள்ளைகளுடன் நின்றிருந்தாள் மகதி.
“உங்க ஸ்டூடன்ட்ஸ் அத்தை”
“என்னது?” மீனாட்சி வாயை பிளந்தாள்.
“ம்…ஷாக்கை குறைங்க.அன்னைக்கு டீச்சராக ஆசைன்னு சொன்னீங்கதானே?டியூசன் அனுப்புங்கன்னு இந்த பிள்ளைங்களோட அம்மாக்களிடம் பேசி கூட்டி வந்திருக்கறேன்.ஒழுங்கா பாடம் எடுக்க ஆரம்பிங்க” மிரட்டல் தொனியில் சொன்னவளை வியப்பாக பார்த்தாள் மீனாட்சி.
“மகி நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா”
“என்னது விளையாட்டா? இந்த மாதிரி பிள்ளைங்களை கூட்டி வந்து பாடம் எடுக்கிற வரை அன்றே திட்டம் போட்டு விட்டு இப்போ பயந்து எஸ்கேப்பாக பார்க்கறீங்களா? உண்மையை சொல்லுங்க,டீச்சர் டிரெயினிங் அது இதுன்னு அன்னைக்கு விட்டதெல்லாம் கதையா?”
“ப்ச் விளையாடாதே மகி,எத்தனை வருசமாயிடுச்சு..இனில்லாம் அப்படி பாடமெடுக்க முடியாது”
அதெப்படி முடியாமல் போகும் ? படிச்ச படிப்பு சாகிற வரை உடம்பிற்குள் ஊறிக் கிடக்கும்.ம்ம் ஆரம்பிங்க”
“மகி இது விளையாட்டில்லை.இனி டீச்சராகும் வயதும் எனக்கில்லை.இந்த பேச்சை விடு.”
“அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு ? அதெல்லாம் எல்லா வயதிலும் எல்லாவற்றையும் செய்யலாம்.அதோ அந்த மாமரத்திற்கடியில் உங்கள் டியூசனை வச்சுக்கோங்க .ப்ளாக் போர்டு இன்று சாயந்தரம் வாங்கி வர்றேன்.அங்கேயே செட் செய்துடலாம்.பசங்களா அந்த மரத்தடி பெஞ்சில் போய் உட்காருங்க.உங்க டீச்சர் வருவாங்க”
“ஏய் நிறுத்து.நான் வேண்டாங்கிறேன்.நீ பாட்டுக்கு திட்டம் போட்டுட்டே போறியே”குரல் உயர்த்திய மீனாட்சி முறைத்து நின்று மருமகளை பார்த்து குரலை குறைத்தாள்.
“வேண்டாம் மகிம்மா, இதெல்லாம் சரி வராது.முதல்ல குணா சம்மதிக்கனும்.பிறகு எனக்கே இது கொஞ்சம் பயமாக இருக்குது”
“உங்கள் மன திருப்திக்காக ஒரு வேலை செய்வதற்கும் உங்கள் மகனிடம் அனுமதி வாங்க வேண்டுமா அத்தை?”
“அது…அப்படித்தானேம்மா.குடும்பமாக நாம் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவரின் திருப்தியும் அடுத்தவருக்கு அவசியம்தானே?”
“ஏன் அத்தை உங்கள் மகன் ஐந்து வருடங்கள் ராணுவத்தில் போய் உட்கார்ந்து கொணடாரே !உங்களிடம் கேட்டா போனார்? அவரும் இந்த குடும்ப உறுப்பினர்தானே? ஓ…அவர் ஆண்பிள்ளை.அதனால் நினைத்ததை செய்யும் உரிமை அவருக்குண்டு.அப்படித்தானே அத்தை ?”
மீனாட்சி தடுமாறி நிற்க “என்ன நடக்கிறது இங்கே?” கேட்டபடி வந்தான் குணாளன்.அவர்கள் பேச்சு கேட்டு விட்ட அறிகுறியாய் அவன் முகம் இறுகி கிடந்தது.
“அத்தை படித்திருக்கிறார்கள்.அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை பார்க்க விரும்புகிறார்கள்.அதனால் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க போகிறார்கள்”.மகதி அறிவிக்க,அவன் முகம் சுளித்தான்.
மீனாட்சி பதட்டமானாள். “நான் சொன்னேன்ல குணாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. வேண்டாம்மா விட்டுடலாம்” முணுமுணுத்தாள்.
ஆதரவாய் அவள் கைப்பற்றி ஆசுவாசப்படுத்திய மகதி என்ன சொல்றீங்க என்றாள்.
” இத்தனை வயதிற்கு பிறகு இதெல்லாம் எதற்கு? பேசாமல் அம்மா ஓய்வெடுக்கட்டும்” குணாளன் மாடியேறி போய் விட்டான். மீனாட்சி முகம் வாடி நிற்க மகதி வேகமாக மாடியேறினாள்.
” எனக்கு ஓய்வு வேண்டுமென்று அத்தை உங்களிடம் கேட்டார்களா? அதென்ன நீங்களே ஒரு முடிவு எடுத்துக் கொண்டு செயல்படுத்துவது..” சண்டைக்காரியாய் முன் நின்ற மனைவியை விழிகளால் அளந்தான் குணாளன்.
* சாதாரண விஷயம் இதை எதற்காக பெரிதாக்குகிறாய்?”
*சொந்த வீட்டில் ஆசைப்பட்டதை செய்ய முடியவில்லை.இது சாதாரண விசயமா?”
“இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய் ?”
“அத்தை டியூசன் எடுக்கத்தான் செய்வார்கள். அதற்கு நீங்கள் தடை சொல்லக்கூடாது”
” நான் அம்மா உடல் நலத்தை நினைத்தேன். சரி அவர்கள் ஆசைப்பட்டால் செய்யட்டும். ஒரு கிஸ் கொடுத்து விட்டு போ”
குணாளன் கொடுத்த அனுமதியில் முகம் மலர்ந்து திரும்பியவள் அவன் இறுதி வார்த்தைகளுக்கு விழித்து நின்றாள் “என்ன கேட்டீங்க?”
” ஒரு முத்தம் கொடுத்து விட்டு போன்னு சொன்னேன்” அழுத்தமாக அவன் திரும்பி கேட்க செல்லமாய் முறைத்தாள்.
” இப்போ எதற்கு?”
” ஏன் இதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டுமா?” குணாளன் நெருங்க மகதி பின்னடைந்தாள்.
” வேண்டாம் பட்டப் பகலில் என்ன இதெல்லாம்…?”
” பகல் நேரத்தில் முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?” அவள் இடைப்பற்றி தன்னருகே இழுத்தான்.
” நான் பத்து கொடுத்தால் இங்கிருந்து ஒன்றோ இரண்டோ… அதுவும் கெஞ்சி கேட்ட பிறகு கிடைக்கிறது. இதெல்லாம் பத்தாது எனக்கு. வேறு வழியில்லை இது போன்ற சூழ்நிலையை உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான். உன் மாமியாருக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றால் எனக்கு கொடுத்துவிட்டு போ…” நெற்றி கன்னம் மூக்கு வாய் என்று எல்லா இடங்களையும் தொட்டுக் காட்டினான்.
மகமி வெட்கத்தில் சிவந்தாள். குணாளன் சொல்வது போல் அவன் கணவனின் இயல்புடன் அவளுடன் பழக ஆரம்பித்து விட்டாலும் ஏனோ அவளால் இன்னமும் இயல்பாக அவனுடன் ஒன்ற முடியவில்லை.
“எங்களுக்கு தேவையானதை செய்ய நீங்களென்ன அனுமதி கொடுப்பது?” அவனது அணைப்பில் திணறினாலும் வீம்பு பேசினாள்.”வாய்டி உனக்கு…” குணாளனின் பதில் வீம்பு மகதியின் இதழ்களில் அழுத்தமாக சிவந்தது.
“அதெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் அத்தை,நீங்க பாடத்தை ஆரம்பிங்க” மீனாட்சிக்கு தைரியம் சொல்லியபடி தண்ணென்றிருந்த தன்இதழ்களை மடித்துக் கொண்டாள் மகதி.
மீனாட்சியின் முகத்தில் பரவசமும் பயமும் ஒன்றாக வந்தன. “என்னால் முடியுமா மகி?”
” ஏன் முடியாது. இந்த பிள்ளைகளின் எல்லா பாட புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து தருகிறேன். ஒரு வாரம் படித்து பழகிக் கொள்ளுங்கள்.பிறகு ஈசியாக பாடம் எடுக்கலாம். இவர்களது எளிமையான அரசு பள்ளி பாடம்தான் அத்தை. நீங்கள் பயப்படாமல் வேலையில் இறங்குங்கள்”
மாமியாருக்கு தைரியம் சொன்னதோடு சொன்னது போல் பாடப் புத்தகங்களையும் வாங்கி வந்து கொடுத்தாள் மகதி. சில தடுமாறும் இடங்களில் மீனாட்சிக்கு உதவினாள். ஒரே வாரத்தில் மீனாட்சிக்கு எல்லாம் பிடி பட்டு விட முன்பு அவள் கற்றிருந்த கல்வியும் கை கொடுக்க ஒரே வாரத்தில் மீனாட்சி திறமையான வாத்தியாரம்மாவாக மாறி இருந்தாள்.
டாக்டர் குணாளனின் வீடாக அறியப்பட்டு வந்த இடம் ஓரிரண்டு மாதங்களிலேயே டீச்சரம்மா மீனாட்சியின் வீடாகவும் மாறியது. பெருமையுடன் தலைநிமிர்த்தி வீட்டிற்குள் வலம் வந்த தாயை ஆச்சரியமாக பார்த்திருந்தான் குணாளன்.
மாடிப்படி ஏறியதும் சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி முன் ஒரு நிமிடம் நின்று தன் உருவத்தை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பின்னிருந்து இறுக அணைத்தான். “இந்த குட்டியூண்டு உருவத்திற்குள் இவ்வளவு திறமைகளா?” மெச்சுதலாய் கண்ணாடியில் மனைவியை பார்த்தவனின் கண்கள் நகர்ந்து ஓரத்தில் இருந்த அவள் சிறு பிள்ளை கிறுக்கலின் மேல் படிந்தது.
ஆட்காட்டி விரல் நீட்டி அந்த கோடுகளை வருடியவன் “இவளும்… இவளும் ஒன்றுதானா?” மாற்றி மாற்றி காட்டி கேட்டான்.
இடுப்பை இறுக்கிய அவன் கைகளை தளர்த்திக் கொண்டவள் “விடுங்க மூச்சு முட்டுது” சிணுங்கினாள்.
“ம்…” என்றபடி அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் “நான் சொன்னதை யோசித்தாயா மதி?”என்றான்.
இலகுவாக அவன் கைகளுக்குள் நெகிழ்ந்திருந்த அவள் உடல் விரைத்தது. “எனக்கு பிடிக்கவில்லை” பலவந்தமாக அவன் கைகளை விலக்கினாள்.
” லூசாடி நீ ?எவ்வளவு நல்ல ஆப்பர்சூனிட்டி. வேண்டாம் என்கிறாயே” குணாளனின் கத்தல் கீழே வரை கேட்க மீனாட்சி பதறி மேலே ஏறி வந்தாள்.
What’s your Reaction?
+1
50
+1
22
+1
2
+1
+1
2
+1
+1
1