Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-10

10

கணவன் மனைவியின் தாம்பத்திய விசயத்தை அவனிடம் நேரடியாக பேச கூச்சப்பட்டு தூக்கம் என்ற போர்வையில் முதல் நாள் பொழுதை தள்ளிய வைசாலியின் மனதில் ஒரு படபடப்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. ஏதேதோ காரணம் காட்டி சித்தார்த்தை மணக்க சம்மதித்திருந்தாலும் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியவன் என்பதனை வைசாலியால் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை சித்தாத்திற்கு எப்படி புரிய வைப்பது என்ற குழப்பத்துடனே இருந்தவள் அவனுடன் நேரடியான பேச்சுக்கு கூச்சப்பட்டாள்.

 மறுநாள் இரவும் தூக்கம் என்று அவள் முதுகை திருப்பி படுக்க இயல்பாக அதை ஏற்றுக்  கொண்டான் சித்தார்த்தன். இவ்வாறு முதுகு காட்டும் மனைவிக்கான எரிச்சலை அவள் குடும்பத்தினர் மீது காட்டுவதுதானே ஆண்களின் வழக்கம்! ஆனால் சித்தார்த்தன் அப்படி எந்த உணர்வும் காட்டாது சகஜமாக தேவகியுடனும்  முகுந்தனுடனும் பழகினான்.

 தன்னுடைய சொந்த வீடு போல் வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டான்.டிவி பார்க்க, வீட்டை சுற்றி நடக்க ,மொட்டை மாடியில் காற்று வாங்க என இயல்பாக தன்னை அந்த குடும்பத்து உறுப்பினராக பொருத்திக் கொண்டான்.முகுந்தனுக்கும்,தேவகிக்கும் மிகவும் பிடித்த மருமகனாக மாறிப் போனான்.

இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டு மூன்றாவது நாள் அவனுடைய அலுவலகத்திற்கு கிளம்ப வைசாலியும் வேலைக்கு கிளம்பினாள். “நான் ட்ராப் செய்யவா?” கேட்டவனுக்கு “எனக்கு ஸ்கூட்டி இருக்கிறது” புன்னகையுடனே மறுத்துவிட்டு வேலைக்கு வந்தாள்.

பிற்பகல் 3 மணியளவில் வைசாலி தேவகிக்கு போன் செய்ய ஹால் டீப்பாயில் ஒலித்த போனை எடுத்தவன் சித்தார்த்தன். “சொல்லு வைசாலி” 

தாய்க்கு பதிலாக கேட்ட கணவனின் குரலில் திகைத்தவள் “வந்து… அம்மாவிடமே கொடுங்களேன்” என்றாள்.

” அத்தை தூங்குறாங்க, எனக்கு சமைத்து போட்டு அலுத்து போய் விட்டார்கள். ரெஸ்ட் எடுக்கட்டும் பாவம். போனில் உன் பெயரை பார்த்ததும் நானே எடுத்தேன். சொல்லும்மா என்ன விஷயம்?”

” இந்த நேரத்தில் நீங்கள் இங்கே எங்கே?”

” ஆபீஸ் வேலை முடிந்தது. அத்தையின் கை சமையல் நினைவு வந்துவிட்டது. சாப்பிட வீட்டிற்கு வந்து விட்டேன். செம சாப்பாடு, அப்படியே தூக்கம் கண்ணை அசத்த சோபாவில் தூங்கிக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். உன் போன்.”

” என்ன விஷயம் வைஷு? என்னிடம் சொல்லக்கூடாதா?”

” நான்…வந்து…”அவள் தடுமாற,

” சரி போனை கட் பண்ணு. நான் உன் ஷோரூமிற்கு கிளம்பி வருகிறேன்”

” ஐயோ வேண்டாம் சாதாரண விஷயம்… இதற்கு போய்..”

” என்ன விஷயம் ?”அழுத்தமான அவன் குரலில் உதட்டை கடித்தவள் “வ…வந்து எனக்கு கொஞ்சம்…வந்து நாப்கின் வேண்டும்” தட்டு தடுமாறி சொல்லிவிட்டாள்.

இரண்டு வினாடிகள் மௌனம் சாதித்தவன்” இதற்கு ஏன் இவ்வளவு தயக்கம் வைஷு? இதோ இப்போதே வாங்கி வருகிறேன்”




“ம்கூம்  நான் வீட்டிற்குத் தான் வந்து கொண்டிருக்கிறேன். அங்கே என் கப்போர்ட்டில் இருக்கும்.என் டிரஸெல்லாம், வந்து எனக்கு பாத்ரூமில் தேவையானதை எடுத்து வைக்க வேண்டும். அதுதான் அம்மாவை…” சொல்லி முடிப்பதற்குள் கூச்சத்தில் வைசாலிக்கு உயிர் போவது போல் இருந்தது.

” சரி நீ போனை வை” 

தனக்குள் தானே குறுகி தன் உடையை மறைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவளை “எதற்கிந்த கூச்சம்?” அதட்டியபடி தோள் பற்றி பாத்ரூமிற்குள் தள்ளினான்.

” எல்லாம் உள்ளேயே எடுத்து வைத்திருக்கிறேன். குளித்துவிட்டு வா” நாப்கினில் இருந்து அவள் மாற்றிக் கொள்ளும் ஆடைகள் வரை நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாத்ரூமில் இருக்க ஒரு நிமிடம் கண்கள் கரித்தது வைசாலிக்கு.

 இவற்றையெல்லாம் தாயால் மட்டுமே புரிந்து கொண்டு செய்து வைக்க முடியும் என்று நினைத்திருந்தவள், அந்த நேரத்தில் கணவனுக்கு தன் தாயின் ஸ்தானத்தை மனதிற்குள் கொடுத்தாள்.

“திருமணம்,அது சம்பந்தமான அலைச்சல்,பரபரப்பு இதில் நாள் கணக்கை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். ஆபீஸில் வைத்து திடீரென்று பீரியட்ஸ் வந்துவிட்டது. உடனே வேகமாக கிளம்பி விட்டாலும் உடையெல்லாம் பாழாகி விட்டதோ என்று ஒரு கூச்சம். அதனால்தான் அம்மாவை எதிர்பார்த்தேன்”

 சோபாவில் அவனருகில் வந்து அமர்ந்தவள் மெல்லிய குரலில் பேச ,மென்மையாய் அவள் கைப்பற்றி வருடினான், “என்னிடம் என்ன கூச்சம் வைஷு? நான் உன் கணவன் தானே! தாய் தந்தைக்கு அடுத்து கணவனிடம் தானே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும்”  வைசாலியின் கண்கள் லேசாக கலங்கியது.

அப்போது தூங்கி எழுந்து அறையை விட்டு வெளியே வந்த தேவகி “எப்போது வந்தாய் வைஷு?” என்றபடி மகள் அருகில் வந்த உடனேயே மகளின் பீரியட்சை புரிந்து கொண்டாள்.

” இங்கே வாம்மா” அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனவள் “மாப்பிள்ளையிடம் சொல்லி விட்டாயா?” என்றாள்.

” இப்போது தான் சொல்லிக் கொண்டிருந்தேன்”  

“வந்து… அவர் எதுவும் கோபப்படவில்லையே?” கவலையாக கேட்டாள்.

” இதில் கோபப்பட என்ன இருக்கிறதும்மா?”

“கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் இப்படி என்றால் எல்லா ஆண்களுக்கும் கோபம் வரத்தானே செய்யும்”

 வைசாலி திகைத்தாள். “இது இயற்கைதானேம்மா! இதற்கு ஏன் கோபம்?”

“ம்… அது என்னவோம்மா இந்த ஆண்களுக்கு நாம் என்னவோ இதை  நாமே உருவாக்கிக் கொள்வது போல் ஒரு எண்ணம். எப்போது வந்தாலும் எரிச்சல் படுவார்கள். உன் அப்பாவும் அப்படித்தான், உன் அக்காவின் புருஷனும் அப்படித்தான் என்று சொல்லி இருக்கிறாள். கிழமை, கால, நேரம் இல்லாமல் தலையை சொறிந்து கொண்டு நிற்பாய் என்று திட்டுவார்கள்”

 இந்த வலியை மாதாமாதம் அனுபவிப்பதே பெரிய கொடுமை. இதில் இந்த வசவுகளை வேறு வாங்கிக் கொள்ள வேண்டுமா? வைசாலிக்கு சற்று முன் சித்தார்த்தன் நடந்து கொண்ட இதமான அணுகுமுறை நினைவு வர மனதிற்குள் செம்பருத்தி மலர்ந்தது.

கண்களை இறுக மூடி படுத்திருந்த கணவனை புன்னகையோடு பார்த்தவள் தயங்காமல் கைநீட்டி மெல்ல அவன் நெற்றியை வருடினாள்.

அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஆதிக்கம் செலுத்த எண்ணும் ஆண்களிடையே சித்தார்த்தன் வித்தியாசமானவன்.அவன் நிச்சயம் முதல் மனைவிக்கு தேவையான சுதந்திரத்தை,தாய்,தகப்பன்,தமையனை தாண்டி கொடுத்திருப்பான்.தவறு முழுவதும் அந்த மாயாவிடம்தான் இருந்திருக்க வேண்டும்.

பழக இனிமையாய் ,கண்ணியமாய் ,தோழமையாய் இருந்த கணவனை முழுவதுமாக மனதிற்குள் ஏற்றுக் கொள்ளத்தான் விரும்பினாள் வைசாலி.ஆனாலும்…ஏதோ ஒரு நெருடல்.

 


What’s your Reaction?
+1
48
+1
25
+1
4
+1
1
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!