8
பொதுவாக ‘குறளி’ மாமிசத்தை விரும்பி உண்பவை தான் என்றாலும், அவல், பொரி, வெல்லம் என்றால் அவற்றிற்கு உயிர். அதன் ருசியில் அது தன்னையே மறந்து விடும்.
இதை நன்றாக உணர்ந்து தான் அய்யர் ,அதற்காக அவல், பொரி, வெல்லத்தை படையலிட்டார். அதன் சுவையில் குறளி மூழ்கி இருந்த நேரம், தான் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த குறளி சக்கரத்தை வேகமாக எடுத்து விரித்தார்.
செப்புத் தகட்டில் வரையப்பட்டிருந்த அந்த சக்கரம் அய்யரால் சிறிய உருளையாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. ஐயர் அதை விரித்தவுடன் கோரைப் பாயை விரித்தது போல் நீண்டு விரிந்து நம்மை ஆச்சரியப்பட வைத்தது. அது எப்படி செப்புத்தகடு மீண்டும் சுருண்டு கொள்ளாமல் கோரைப் பாயை போல் விரிந்து கிடப்பது எவ்வாறு ?அய்யரின் ஜாலத்திற்கு அளவில்லை.
ஒரு பிளாட்பாரக் கடைக்காரன் தன் கடையை பரப்புவது போல், மடமடவென்று செப்புத் தகட்டை சுற்றி பூஜை பொருட்களை விரிக்கலானார்.
அய்யர் பூஜை பொருட்களை விரித்துக் கொண்டிருந்த போதும் அவருடைய வாய் குறளி மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந்தது.
ராஜநாகத்தின் நாக்கை விட நீளமாக தன்னுடைய நாக்கை வெளியே நீட்டி வெல்லத்தையும் அவளையும் சுவைத்துக் கொண்டிருந்த குறளி தன் கோழி முட்டை கண்களை உருட்டி அய்யரின் நடவடிக்கைகளை கவனித்தபடிதானிருந்தது.
குறளியின் ‘முகத்திற்கும்’ அதன் ‘கண்ணின் அளவிற்கும்’ சிறிதும் சம்பந்தம் இருக்காது .அதன் முகத்தில் முக்கால் பாகம் கண் தான் என்பது போல் அது அமைந்திருக்கும். மேலும் ,கண் முழுவதும் ரத்த சிகப்பு ஏறி செந்நிறமாய் தோற்றமளிக்கும். அது தன் விழியை உருட்டும் பொழுது கருவிழி நகராமல் ஒட்டுமொத்த கோழி முட்டைக்கண்ணும் கருவிழயோடு சேர்ந்து நான்கு பக்கமும் சுழன்று கொண்டிருக்கும்.
சாமானியர்களுக்கு குறளியின் இந்த பார்வையை தாங்கும் வல்லமை கிடையாது.. ஆனால், அய்யர் குறளிக்கு பயப்படாதவராய் அதனை ஏறிட்டுப் பார்த்த படி பூஜையை ஆரம்பித்திருந்தார்.
” ஓம் க்ரீம் க்ரீம்”;
மந்திர உச்சாடனம் ஆரம்பித்திருந்தது .வசியத்தின் பொழுது முதலில் செய்யவேண்டியது ‘சுய கட்டு’. அதாவது, தன்னைச் சுற்றிலும் காவல் தெய்வங்களை நிறுத்திவைத்து தன்னை முதலில் பாதுகாத்துக் கொள்வது, இந்த மந்திரம் ‘கவச மந்திரம்’ எனப்படும்.
” என்ன செய்து விடுவாய் நீ ” என்பதுபோல் குறளி அய்யரை பார்த்து விழித்தபடி இருந்தது . .ஐயரோ ,அதே கேள்வியை குறளியை பார்த்து கேட்டபடி பூஜையை துரிதப் படுத்திக் கொண்டிருந்தார்.
சுடுகாடு போன்ற இடங்களில் குறளி போன்ற துஷ்ட சக்திகள் முழு வல்லமையோடு இருக்கும் .மேலும், இரவுவேலை என்றால் அவைகளை கட்டி இழுத்து வருவது என்பது மிகவும் கடுமையானது ., ஆனால், அந்த நேரத்தில் அவைகளை ஆவாகனம் செய்வதும், துஷ்ட சக்தியின் உருவங்களை கண்ணால் காண்பதும் எளிதானது. அதனாலேயே ,பல மந்திரவாதிகள் நடுநிசி நேரத்தையும், சுடுகாட்டையும் துஷ்ட சக்திகளை வசியம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஐயர் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை வித்தியாசமானதாக இருந்தது. அதனால், வெற்றி நிச்சயம் ஐயருக்கு தான். ‘ஆம்’ இதோ 108 உச்சாடனங்கள் முடிந்துவிட்டது.
” ஏய்! குறளி, இத்தோடு நீ என் ஏவலாளி ,இதை நீ உணர்ந்து கொள்” என்று உரக்கக் கூறிய படி நன்கு கூர்மையான ஆணி ஒன்றை எடுத்து குறளியின் நடு தலையில் தன் பலம் கொண்ட மட்டும் கைகளால் ஓங்கி அடித்தார்.
தான் மாட்டிக்கொண்டோம் என்ற எண்ணம் இப்பொழுதுதான் குறளிக்கு வந்து இருக்க வேண்டும். அது என்னென்னவோ வித்தியாசமான குரல்களில் ஏதேதோ சித்து வேலைகள் செய்து பார்த்தது. அழுதது , அரட்டியது, அகோரமான குரல்கள் ஓலமிட்டது. ஐயரின் கண்முன்னே கொடூர ரூபமெடுத்து கூத்தாடியது. ஒருகட்டத்தில் கோமளத்தம்மாளின் குரலிலேயே பேசியது .
” வேண்டான்னா விட்டுடுங்கோ!”
” நீங்க செய்றது பாவம், இதை செய்யாதேல்” என்று கூறிவிட்டு கோமளத்தம்மாளின் குரலிலேயே தேம்பித் தேம்பி அழுதது.
அந்த ஒரு வினாடி ஐயர் தன் நிலை தடுமாறித்தான் போனார் .ஆனால், உடனடியாக சுதாரித்துக் கொண்டார். அடடா!! மாயவித்தைகார நாடகமா ஆடுகிறாய்? என்று உரக்கக் கூவியபடி தன்னுடைய கையில் முடிந்த மட்டும் பலத்தை திரட்டி குறளியின் உச்சந்தலையில் மேல் நின்ற ஆணியில் மீண்டும் ஓர் அடி வைத்தார். ஆணி சதக்கென்று உள்ளே இறங்கியது. ஆணி இறங்கிய அடுத்த வினாடியே உச்சந்தலை மயிற்றில் ஒன்றை புடுங்கி வெளியே எடுத்தார்.
“நான் ஜெயித்து விட்டேன்” “குறளியை கட்டிவிட்டேன்’ . குருநாதா உங்களுக்கு என் வணக்கம் நான் ஜெயித்து விட்டேன்.
“நீங்கள் எனக்கு என்ன வேலை வைத்திருக்கிறீர்கள்”? கை கட்டியபடி நின்றது ‘குறளி’.
“போ ,போய் எனக்கு மாம்பழம் கொண்டு வா”?.
இதோ வந்தேன்… அடுத்த வினாடி அய்யரின் முன்னே ஏகப்பட்ட மாம்பழங்கள்.
ஐயரால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. குறளி வசப்பட்ட பிறகு இன்னும் வித்தையில் எவ்வளவோ சாதனைகள் செய்யலாம். அதை எண்ணி அவருடைய மனம் குதூகலித்தது.
ஐயா எனக்கு என்ன வேலை இருக்கிறது .கையைக் கட்டியபடி அவர் முன் நின்று கொண்டிருந்தது குறளி.
அடடாடா!!!இவன் துன்பம் தாங்காது போலிருக்கிறதே, இதற்கும் நான் ஒரு வழி வைத்திருக்கிறேன்.
தான் கொண்டு வந்திருந்த பைக்குள் கையை விட்டு கையை வெளியே எடுத்தார் அய்யர். அவருடைய கையில் ஒரு கொத்து கழுதை மயிர் இருந்தது.
இந்தா..,. இதில் எத்தனை எண்ணிக்கை இருக்கிறது என்பதை சரியாக எண்ணி எனக்குச் சொல்.
குறளி எல்லா விஷயங்களிலும் பலே கெட்டிக்காரனாக இருந்தபோதும், கணக்கு என்பது அதற்கு அவ்வளவாக வராது. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் அய்யர் கொடுத்த கழுதை முடியை அதனால் எண்ணி முடிப்பது என்பது அதற்கு இயலாத காரியம். இருந்தாலும் ,சொன்ன வேலையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கழுதை முடியை என்ன ஆரம்பித்தது குறளி.
(தொடரும்……)
What’s your Reaction?
+1
6
+1
8
+1
+1
+1
+1
+1