5
“ஏய் நில்லு உள்ளே எங்கே போற?” பின்னால் கேட்ட அலறல் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினான் உதயன்.அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“வீட்டிற்குள் போகிறேன்” தந்தியடிக்க துடித்த உதடுகளை அடக்கியபடி சொன்னான்.
“சாவுக்கு வந்த…பார்த்த…அழுத…இனி கிளம்புவதுதானே?”
நீர் சொட்டும் தலைமுடியுடன்,சட்டையற்ற ஈர உடலுடன் கருகருவென எதிரே நின்றிருந்தவன் உதயனுக்கு காண்டாமிருகத்தை நினைவுறுத்தினான்.அவன் பாரிஜாதத்தை பார்த்த பார்வைகள் நினைவு வர,உதயனின் உடல் சூடானது.
“வந்த கையோடு கிளம்ப,நான் நண்பனோ,தெரிந்தவனோ கிடையாது.உறவுக்காரன்.மிக நெருங்கியவன்…”
“யாரைடா நெருங்கியவன்?” உடன் உதயனின் தோள் பற்றி உலுக்கிவிட்டான் அவன்.
“உறவில் நெருங்கியவன் என்றேனடா முட்டாள்”
“யாரடா முட்டாள்?” அடுத்த அலறல்.
“நீதான்டா”
நொடியில் இரு ஆண்களும் கை கலப்புக்குள் புகுந்து விட்டனர்.
“நிறுத்துங்க!அட நிறுத்துங்க!” பாரிஜாதத்தின் இறுதி உச்சரிப்பு அழுத்தமான அலறலாக வெளிப்படவே,அவள் இதற்கு முன்பே பல முறை நிறுத்த சொல்லியிருக்க வேண்டுமென உணர்ந்தான் உதயன்.
உதயன் விலகிய பின்னும் அவன் விலகவில்லை.”அத்தான்…தள்ளிப் போங்க”இருவருக்கிடையே கை நீட்டி அவனை தள்ளினாள் பாரிஜாதம்.அத்தான்…சட்டை பொத்தான் முணுமுணுத்தான் உதயன்.
“இவனென்ன வீட்டிற்குள் வருகிறான் பாரி?”
“வேறெங்கே போவார் அத்தான்?இரண்டு நாட்கள்தான்.போய்விடுவார்” நாள் கணக்கை உதயனுக்கும் சேர்த்தே சொன்னாள்.
“இவன் நிஜமாகவே உன் அம்மா சொந்தக்காரனா?”
“அவர்தான் தெளிவாக சொன்னாரே அத்தான்” எப்படியோ பேசி சமாளித்துவிட்டு,”உள்ளே வாருங்கள்”முறைத்தபடி உதயனை அழைத்து விட்டு போனாள்.
உள்ளே போனவனின் முகத்தின் மேல் கனத்த துண்டு வந்து விழுந்தது.”முதலில் உடம்பை துடைங்க.ஜன்னி வந்துடும் போல?”
“அந்த கிணற்றுத் தண்ணீர் அநியாயத்திற்கு ஜில்லுன்னு இருந்ததும்மா.அதுதான் உடல் நடுங்குது”கதகதத்த துண்டினை உடம்பை சுற்றி இறுக்கிக் கொண்டான்.
” இங்கே பிறந்து ஆறுமாதமான குழந்தையை கூட கிணற்று தண்ணீருக்குள் இறக்கிடுவாங்க.உங்களுக்கு குளிர் தாங்கலையா?”
“எதே…?ஆறு மாத குழந்தையையா?ஏதாவது கொலை முயற்சியா?முறைக்காதம்மா…பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பீங்கதானே?”
“பக்கத்துல நின்னு பார்த்தீங்களா நீங்க?ஜாக்கிரதை.எங்க ஊரைப் பற்றி கண்டபடி பேச வேண்டாம்”
“ம்க்கும் பார்த்தேனே இந்த ஊருடைய லட்சணத்தை.உங்களை மாதிரி பொண்ணுங்க இருக்கிற வரை நம்ம நாடு முன்னேறப் போவதில்லை”முணுமுணுத்தான்.
“ஈரம் சொட்டுற தலையை துவட்டி முதலில் உங்களை நீங்க காப்பாத்துங்க.அப்புறம் நாட்டு நலத்தை பார்க்கலாம்”
“நான் பேசியதை கேட்டுட்டியா?” மெதுவாகத்தானே பேசினோமெனும் எண்ணம் அவனுக்கு.
“எனக்கு காது இருக்கு பாருங்க”தலை சாய்த்து காட்ட,உதயனின் பார்வை கொக்கியாய் வளைந்து மென் சிவப்புடன் இருந்த அவள் காதுகளில் படிந்தது.என்ன அழகான காதுகள்! உடன் அவற்றை உணரத் துடித்த விரல்களை இறுக்கி மடித்துக் கொண்டான்.
பாரிஜாதம் தலைகுளித்து தளர்வாய் முடிந்திருந்த கூந்தலை காதுகளுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டாள்.”அந்த பொத்தானையும் கேட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்.
“பார்வைக்கு மட்டுமில்லை செயலிலும் கில்லிதான்…”
“என்னது?”
“உன் காதுகளை சொன்னேன்”
“இங்கே பாருங்க.நீங்க எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள்.நீங்கள் இல்லாவிட்டால் என்னால் என் அப்பாவின் இறுதி சடங்குகளில் பங்கேற்றிருக்க முடியாது” பாரிஜாதத்தின் குரல் கரகரத்தது.
உதயன் அவளை இளகல் பார்வை பார்த்தான்”வருத்தப்படாதம்மா.என் மனது போலென்றால் உன் அப்பாவிற்கு உன்னைத்தான் கொள்ளி வைக்க வைத்திருக்க வேண்டும்.ஆனால் நீதான்…”
அவசரமாக மறுத்தாள்.”இல்லை.வேண்டாம்.எத்தனையோ வருடங்களாக இவர்கள் உள்ளங்களில் ஊறிக் கிடக்கும் நம்பிக்கைகள்.அதனை உடைக்க நான் விரும்பவில்லை.அதனால்தான் சுடுகாட்டிற்கு வர மறுத்துவிட்டேன்”
உதயன் எவ்வளவோ வாதாடியும் பாரிஜாதம் சுடுகாட்டிற்கு வர மறுத்திருந்தாள்.
“இவர்கள் உன்னை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள்?பிறகும் நீ…”
“ம்…போதும்.இவர்கள் என் சொந்தங்கள்.சொந்தங்களை எந்த நாளும் விட்டு விலக கூடாதென்பது என் அம்மா எங்களுக்கு சொல்லிச் சென்ற பாடம்”.
“ஓ…அவர்களும் அதையே பின்பற்றித்தான் கொடுமை செய்யும் கணவனையும்,சொந்தங்களையும் தாங்கி வாழ்ந்தார்களோ?”
பாரிஜாதம் அவனை வெறித்தாள்.”எங்கள் குடும்ப பிரச்சனையில் ஒரு அளவுக்கு மேல் தலையிட உங்களுக்கு உரிமையில்லை உதயன்”
“நான் உன் தாய் மாமா” அழுத்தமாக சொன்னவனை வியப்பாக பார்த்தாள்.
“வந்து…அப்படித்தானே இங்கிருப்பவர்கள் நினைக்கிறார்கள்? அதன்படி பார்த்தால்….”
ஒரு கையுயர்த்தி அவனை நிறுத்த சைகை செய்தாள்.”எனக்கு நீங்கள் செய்த நன்மைகளுக்கு நன்றிக் கடனாக இங்கே தங்க அனுமதித்திருக்கிறேன்.தலையில் வழியும் நீரோடு குளிரில் நடுங்கி நின்றீர்களேயென வீட்டிற்குள் அனுமதித்திருக்கிறேன்.உங்கள் எல்லையை நீங்கள் தாண்ட நினைத்தால்…” மேலே பேசாது ஒற்றை விரலாட்டி பத்திரம் காட்டிவிட்டு உள்ளறைக்கு போய்விட்டாள்.
பன்னீர் பூவின் வெண்மையும்,மென்மையுமாக தன் முன் நீண்டு எச்சரிக்கை சொன்ன அந்த விரல்களை நினைத்தபடியே தலை துவட்டி உடை மாற்றினான் உதயன். அவன் வயிறு பசி என்று அறிவித்தது
பாரிஜாதம் அப்பா படுக்கையில் கிடந்த அறைக்குள் சுவரில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்து கட்டிலை வெறித்துக் கொண்டிருந்தாள்.கட்டில் தலைமாட்டில் விளக்கேற்றி வைத்திருந்தாள்.
அறைக்குள் எட்டிப் பார்த்த உதயன் “துக்கம் தான். பெற்ற தந்தையை இழப்பது வருத்தம் தான். ஆனால் அதற்காக வயிற்றை பட்டினி போட்டால் உடம்பு என்ன ஆவது? சும்மாவே நீ உணவு உண்டு சில பல நாட்கள் ஆகி இருக்கும் போல் தெரிகிறது”
பாரிஜாதம் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.”என்னை நான் கவனித்து கொள்வேன்” என்றாள் வறண்ட குரலில்.
“எதை கவனித்தாய்?அடுப்பு எரிந்து ஐந்து நாட்கள் ஆனது போல் இருக்கிறது.இங்கே கடையில் ஏதாவது சாப்பிட வாங்கலாமா? அல்லது நானே கஞ்சி தயாரித்து….” பேசிக்கொண்டிருக்கும் போதே வாசல் அழைப்பு மணி ஒலிக்க பாரிஜாதம் கையசைத்தாள். “சாப்பாடு” என்றாள்.
உதயன் ஆச்சரியமாக பார்க்க “அப்பாவிற்கான சாஸ்திரம் முடியும் வரை தங்கியிருக்கும் உறவினர்களுக்காக மொத்தமாக சமைத்து விடுவார்கள்”எந்திரமாய் பதிலளித்தாள். உதயன் போய் கதவை திறக்க கையில் டிபன் கேரியருடன் நின்றவன் பாரிஜாதத்தின் அத்தான்.
What’s your Reaction?
+1
34
+1
31
+1
+1
1
+1
+1
1
+1
2