(4)
சிதம்பரம் சிவசுவை கவனித்துக் கொண்டிருந்தார்.
அவனிடம் ஒரு உற்சாகம் தெரிந்தது. எப்பவும் இருப்பதை விட சற்று அதிகமாக.
பொதுவாகவே சிவசுவிடம் ஒரு துள்ளல், மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். ஏதானும் பாடலை விசில் அடித்தபடி வேலைகளைக் கவனிப்பான். மனது சோர்வாக இருக்கும்போது சோகப் பாடல்களை விசில் அடிப்பான். அதிலிருந்தே அவன் மனம் இப்போது எந்த நினைவில் இருக்கிறது என்று கண்டு பிடித்து விடுவார் சிதம்பரம்.
இப்போது “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது”– என்ற பாடல்.
“எங்க, யாரை, எப்போ பார்த்தே?”
“அந்த நிலவை நான் பார்த்தால்”– மீண்டும் விசில்.
“யார் அந்த நிலவு?”– பதிலுக்குப் பாடினார் சிவசு.
“ஜீ, உங்களுக்குத் தெரியாதா?”
சிதம்பரம் அவனை உற்று நோக்கினார். “சத்யா?”
சிவசு மௌனமானான். அந்த மௌனமே அவன் மனசை வெளிப்படுத்தியது. அது முன்பே அவருகுத் தெரியும். அடிக்கடி சத்யாவைப் பற்றிப் பேசுவான். அப்போதெல்லாம் கண்ணில் ஒரு மின்னல். முகத்தில் ஒரு பூரிப்பு. அவருக்கும் சத்யாவைப் பிடிக்கும் என்றாலும், அழகு மட்டுமே அவனுடைய காதலுக்கு அடிப்படையாக இருக்கக் கூடாது என்று நினைத்தார்.
“உன் மனசு எனக்குப் புரியுது. ஆனா இது எந்த அடிப்படையிலான காதல்?”
“அப்படின்னா?”
“அழகு அப்படின்னா அது நிரந்தரம் இல்லை. அது அழியக் கூடிய ஒன்று. அப்போ அது அழியும்போது அன்பும் அழிஞ்சுடும். எப்பவும் நிரந்தரமா இருக்கக் கூடிய ஒன்றுதான் காதலுக்கு அடிப்படையா இருக்கணும்.”
“அவள் குணம்.”
“அப்படி என்ன குணச் சிறப்பு.”
“அவ சிதம்பரத்தின் பெண் உருவமா இருக்கா.
வாய் விட்டுச் சிரித்தார். ஒரு விதத்தில் அது பெருமையாகவும் இருந்தது.
முதலில் கிடைத்த குழந்தை சிவசு என்பதால் அவனிடம் சற்று ஈர்ப்பு அதிகம். அவன் வயசிலேயே இன்னும் இரண்டு பேர் இருந்தாலும், அவர்கள், படித்து, வேலை கிடைத்து வெளிநாடு என்று போய் விட்டார்கள். நன்றிக் கடனாக வருஷம் ஏதேனும் தொகை அனுப்புவார்கள். மற்றபடி அதிகமாக இங்கு ஒட்டுவதில்லை.
ஆனால் சிவசு இன்ஜீனியரிங் முடித்ததும், இங்கேயே கம்பெனி ஆரம்பித்தான். இதே இல்லத்தில் வளர்ந்து படித்த இருவருக்கு இங்கே வேலை கொடுத்தான். தன்னுடைய வருமானத்தில் தொகை ஒதுக்கி, இல்லத்துக்கு என்று கட்டிடம் கட்டித் தந்திருக்கிறான்.
சிதம்பரம் பொள்ளாச்சி அருகே. அங்கு தோப்பு, வயல் என்று இருக்கிறது என்றாலும் ஏரியா கம்மிதான். பத்து தென்னை மரங்கள். நாலைந்து பசுமாடுகள். வயலிலும் வாழை மரங்கள் பயிரிட்டு இருக்கிறார்கள். விளைச்சல் நன்றாக இருந்தாலும் குத்தகை ஆள் காட்டும் கணக்குதான்.
முட்டுக் கூலி, வேலையாள் கூலி, உரம், விற்பனை என்று ஏதேதோ கணக்கு சொல்வான். தருவதை வாங்கிக் கொள்வார்.
மேல் வருமானத்துக்காக, ஒரு டாக்டருடன் இணைந்து இரத்தப் பரிசோதனை மையம் வைத்திருக்கிறார். சர்க்கரை வியாதிக்கான டாக்டர் என்பதால் இவருக்கும் நல்ல வருமானம் வந்தது. நவீன பரிசோதனைகள் அனைத்தும் அங்கு இருந்தது. சிவசுவுடன் சேர்ந்து நகரில் சில நல்ல செயல்கள் செய்கிறார்.
இல்லத்தில் குழந்தைகள் பத்து பேர், முதியவர்கள் பதினைந்து பேர், பிறந்து தெருவில் விடப்பட்ட குழந்தைகள் ஐந்து, ஏழு மாதங்களில் ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள தாய் சேவகர்கள் மூன்று பேர், சமையலுக்கு, உதவியாள் என்று அனைவருக்கும் பணம் தன் வருமானத்தில்தான் செய்கிறார்.
அவரின் மனைவி வசந்தாமணி பரிசோதனை நிலையத்தைக் கவனிக்க, சிதம்பரம், வயல்களைக் கவனிக்கிறார். சிவசு, அவன் நண்பர்கள், இங்கிருந்து போனவர்கள் என்று அனைவரும் இல்லத்திற்கு டொனேஷன் செய்கிறார்கள்.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஒரு விபத்தில் சிதம்பரத்திற்கு முதுகுத் தண்டில் அடி. வசந்தாவுக்கு வயிற்றில் கம்பி பாய்ந்து கருப்பை கிழிந்து அதை எடுத்து விட்டார்கள். இனி குழந்தை பிறக்க வழி இல்லை என்று இருந்த நேரத்தில் சிவசு கிடைத்தான்.
தோட்டத்து வீட்டில் வாசலில் கிடந்தான்.
கையில் தூக்கிய நேரம் மனதில் பூ மலர்ந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். நாலு வருஷம் கழித்து ஒரு பெண் குழந்தையும் கிடைக்க. இறைவனின் இல்லம் உதயமானது. ஆணும், பெண்ணும் கலந்துதான் வளர்ந்தார்கள். ஆனால் எங்கும் ஒரு சிறு சலனமோ, தப்பிதமோ நடக்கவில்லை.
சிவசு எல்லோருக்கும் ஒரு மூத்த அண்ணனாக இருந்தான். கூட இருந்த ஒரு பெண் காதலில் விழுந்த போது, அந்த வீட்டினரோடு பேசி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தான்.
“நீ எப்படா காதலிக்கப் போறே?”
“ஒரு நல்ல முகூர்த்தநாள் பார்த்துச் சொல்லுங்க”
“பொண்ணும் நான்தான் பாக்கணுமா?’
“பின்ன?”
“எனக்கு வ்யசாச்சிடா”
“அப்போ அம்மாவை லவ் பண்ணுங்க.”
“அவளுக்கும் வயசாச்சி.”
“அப்போ வேறு அம்மா பாக்கலாமா?”
“நம்ம தோல் உறிஞ்சுடும்.”
ஆனால் வசந்தாமணி சிவசுவின் மனத்தைக் கண்டு பிடித்து விட்டாள். இல்லத்தின் ஆண்டு விழாவிற்கு சத்யா வந்து போன பிறகு சிதம்பரத்திடம் கூறினாள்.
“சிவசுவைக் கொஞ்சம் கவனிங்க.”
“ஏன் அவனுக்கு என்ன?”
“சத்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்ணுல ஒரு டார்ச் லைட். எரியுது”
சிதம்பரம் கவலையானார்.
“வசந்தா, சத்யாவின் அப்பா, பெரிய மனுஷன். அவர் நம்ம சிவசுவை ஏத்துப்பாரா? குலம், கோத்திரம் எல்லாம் பார்த்தா?”
“நல்ல எண்ணங்களும், குணமும்தான் நல்ல குலம், கோத்திரம்”
“நீ சொல்றே. அவங்க ஒத்துக்கணுமே?”
“முதல்ல அவனுக்கு இஷ்டமான்னு கேளுங்க”
ஆனால் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் சிவசுவின் முகமும், உதட்டில் ஒலிக்கும் பாடலும், அவன் மனதை வெளிப்படுத்தியது. ஆனால் அதை அவன் வாயினால் கேட்க விரும்பினார்.
சிதம்பரம் விவரமாக எல்லாவற்றையும் சொல்ல சிவசுவின் முகம் புன்னகையில் விரிந்து உடனே கூம்பியது.
“நான் ஆசைப்பட்டா ஆச்சா?”
“உங்க ரெண்டு மனம் இணையறதுதான் முக்கியம்.”
“இல்லப்பா. சத்யா அவங்க அப்பா பேச்சை மீற மாட்டா.”
“சரி, நான் பேசறேன்.”
“இல்லப்பா. அது வேற பெரிய பிரச்சினைல கொண்டு போய் விடரும்.”
“அப்போ மனசுக்குள்ள வச்சு மறுகப் போறியா?”
“- – – – – – – -“
சிதம்பரம் அவன் தோளைத் தட்டித் தந்தார்.
“காதலிக்கறது பெரிசு இல்லை. அதுல உறுதியா நிக்கணும். போராட தைரியம் வேணும்.”
“என் காதல் அவளுக்குப் பிரச்சினையா ஆச்சுன்னா?”
“அவளுக்காக வருத்தப் படறே பாத்தியா! இதாண்டா காதல். நான் தூது போறேன்”
சிதம்பரம் எழுந்தார்.
ஆனால் அவர் செய்த தவறு வாசுதேவனைச் சந்தித்தது.
What’s your Reaction?
+1
13
+1
9
+1
+1
+1
+1
+1
1