Entertainment events News

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

”மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகில் பெண்ணாக பிறந்தவளுக்கு தாய், மனைவி, தங்கை, தோழி, மகள் என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்.




மகளிர் தின வரலாறு

சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. எனினும், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் 1848ஆம் ஆண்டு அடிமை எதிர்ப்புப் போராட்டங்களின் போது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டன. அமெரிக்கப் பெண்களான எலிசபெத் கேடி ஸ்டேண்டன், லூக்ரீசிய மோர் நூற்றுக்கணக்கான மக்களோடு கூடி, பெண்களின் உரிமைக்காக மாநாடு நடத்தினர். 1909ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு, பணிச்சூழல்களை எதிர்த்துப் போராடிய பின்னலாடை தொழிலாளிகளான பெண்களைக் கௌரவப்படுத்தும் விதமாக மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையின் போது `உணவு, அமைதி’ ஆகியவற்றிற்காக போராடினர். இது க்ரீகோரியன் நாள்காட்டியின்படி, ஐரோப்பிய நாடுகளின் மார்ச் 8 என்று கணக்கிடப்படும் நாளாக இருந்ததால், இந்த நாளின் சர்வதேச மகளிர் தினமாக காலப்போக்கில் அனுசரிக்கப்படத் தொடங்கியது.

 




சிங்கப் பெண்கள்:

இயற்கையின் படைப்பில் சகல உயிரினங்களும் எல்லாமும் வல்ல ஆற்றலும் தனித்தன்மையும் கொண்டு இவ்வுலகில் இயங்கி வருகின்றது. டார்வின் தியரியின் படி இவ்வுலகம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஹோமோ சேப்பியன்ஸில் இருந்து மனிதன் என்ற பரிமாணத்தை அடைந்து  இன்று உலகையே கையில் வைத்து விண்ணையும் தனது அறிவெனும் விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் வைத்து அரசாள எண்ணி நிதம் நிதம் கணம் தோறும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறான்.




அப்படிப்பட்ட இந்த உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி சொரூபமாக கண்ணில்பட்ட தெய்வமாகவும் வாழும் கடவுளாகவும் நம் முன்னர் பெண்கள் இருக்கின்றார்கள். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தெடுப்பதில் ஒரு பெண்ணுக்கு உள்ள ஆத்மீகத் தொடர்பை நினைத்தால் அவளது உயிரைப் பாலாகக் பச்சிளம் குழந்தைக்குக் கொடுப்பதைப் போன்று அவளது தன்னம்பிக்கை,புன்னகை எல்லாவற்றையும் பிள்ளைக்கும், கணவருக்கும், சகோதரன், சகோதரனுக்குக்  கொடுத்துவிட்டு, மனதுக்குள் எதையும் அனுசரித்துக் கொண்டு போவதைப்போன்று நிதானமாக இவ்வுலகில் தன் சோகத்தை முந்தனையில் முடிச்சிட்டு வைத்திக்கொண்டு வாழ்வில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தன்னைச் சேர்ந்தோரையும் முன்னேற்ற அனுதினமும் இயந்திரமாக உழைத்து உயர்ந்தோங்கி வருகிறார்கள்.

பழங்காலத்தில், பெண்களை வீட்டுப்படி தாண்டவிடாத இந்தச் சமூகம் இன்று விண்ணில் வெற்றிக் கொடிநட்டு, ஆண்களைவிட அதிக நாட்கள் விண்ணில் தங்கிக்காட்டுகிற அளவுக்கு மனோதைரியத்தையும், விடாமுயற்சியையும், நினைத்ததைச் சாதிக்கின்ற வல்லமையும் , உடல்வலிமையும் வாய்த்திருக்கிறது என்பதை நினைத்தால் மனதில் பெருமை பொங்குகிறது.

நாட்டில் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, இரக்கத்தில் வடிவம் கருணையின் தாய் அன்னை தெரசா போன்றவர்களின் உழைப்பையும் அவர்கள் தங்கள் தன்முனைப்புடன் இந்த உலகில் பெண்மையை உயர்த்திப் பிடித்த காலத்தையும் இப்போதுள்ள காலத்தையும் நம்மால் ஒப்பு நோக்க முடியாவிட்டாலும்,  பாரதியாரின் மனைவி செல்லம்மா எப்படி ஒரு மகா கவிக்கு தனிப்பெருந்துணையாய் இருந்தாரோ அதேபோல் இவ்வுலகிற்கு ஓவ்வொரு பெண்களும் ஆணின் வளர்ச்சிக்கு அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

சிங்கப் பெண்கள்   அவர்கள் பிரசவ வலியையைத் தாங்குகின்ற அவர்களின் சுகமான இன்னல் தருணத்தை  நாம் மனதால் உணர்கின்றபோதுதான் அதன் பெருமையை கர்வத்துடன் புரிந்துகொள்ள முடியும்!

அது மானிட உலகிற்கு இயற்கையும் இறைவனும் ஒருசேர ஒருமித்த குரலுடன் பெண்ணிற்கு அளித்த பெரும்பேறுகாலம் அது.




சாதனை பெண்கள் :

’ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை’ என்பதை இந்தப் போட்டி உலகில் கண்டோம். இன்னும் கார்க்கி, மைத்ரேகி, அவ்வையார், காரைக்கால் அம்மையார் , சரோஜினி நாயும், செல்வி ஜெயலலிதா, பாத்திமாபீவி, தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த ஊக்கமடையவர்களாகவும் இருந்து வழிநடத்தி இருக்கிறார்கள்.

அத்தகையோர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே கண்களுக்குத் தெரிகிறார்கள். ஏன்னென்றால்  எத்தனையோ பெரிய நட்சத்திரப் பிரபலங்கள் நடிகர்கள்,அரசியல் ஆளுமைகள் தமிழக அரசியலில் காலூன்ற தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் திருமணம் புரியாமல் செல்வி ஜெ. ஜெயலலிதா என்ற ஆளுமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் முத்திரை பெற்ற தலைவராகி அதிமுக என்ற கட்சியின் ஒற்றைத் தலைவியாக பல லட்சம் மக்களின் மனதில் அம்மாவாக பிரதிப்பலித்தார்   என்பது மறுக்கபடாத உண்மை .

அவர், இருமுறை தொடர்ந்து முதல்வராகி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போலவே சாதனை  படைத்துள்ளார். அதுவும் தமிழகத்தில் வேறு எவரும் செய்யாத சாதனையே ஆகும்.இந்திய அரசியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, நடிகை ரோஜா, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு அரசியல் சரித்திரம் எழுத முடியாது.

அதேபோல், இந்தியப்  பெண்கள் கிரிக்கெட் கேப்டன்  மிதாலி ராஜ், 16 வயதிலேயே சச்சினைப் போல் உலகப் பெண்கள் கிரிக்கெட் அரங்கில் ராஜபாட்டை செய்திவரும் வீராங்கனை ஷஃபாபி வர்மா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சாய்னாநேவால், பிவி சிந்து, பல உலகச் சாம்பியன்சிப் பட்டங்களை தன்வசம்படுத்திய மேரிகோம் ஆகியவர்களும் இந்தியா உலகத்தரத்தில் சாதனைப் படைத்துவருவதற்கு உதாரணமாகக் கூறலாம்.




இப்படி இன்றும் , விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை,அரசியல்,  நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், கார்ப்பரேட் உலகம், விமானம், விளையாட்டு,சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல்துறை,  போன்ற எல்லாவகைத் துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது உலகிற்கு மழையைப் போன்று அளப்பரியதாக உள்ளது.

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் அதிகளவில் இயற்கை வளங்களை நம்பி வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவை குறைவாகவே கிடைப்பதோடு, பெண்கள் உணவு, நீர், எரிபொருள் முதலானவற்றைப் பெறுவதில் அவர்களின் பொறுப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது’ என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளதோடு, காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, தீர்வை நோக்கி நகர்வது முதலான பணிகளை மேற்கொள்வது பெண்களின் தலைமை இன்றியமையாதது எனவும் கூறியுள்ளது.

 

ஆய்வில் அதிர்ச்சி 

இந்தியாவில் அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் ஆண்களை விட அதிக நேரம் பெண்களே உழைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. சராசரியாக ஆண்கள் 7 மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் 9 முதல் 11, மணி நேரம் உழைக்கிறார்களாம். அதுமட்டுமா இந்தியாவில் பாலின பேதம் இன்றும் ஊதியரீதியாக தொடர்கிறது. ஆண்களை காட்டிலும் 34% குறைந்த ஊதியத்தை பெண்கள் பெறுகிறார்கள் என 2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உரிமைகள் சம அளவில் இன்னும் வந்துவிடவில்லை.

சர்வதேச மகளிர் தினம் என்பது எந்த நாடு, குழு அல்லது அமைப்புக்கும் பிரத்தியேகமானதல்ல. அந்த நாள் ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமானது. பெண்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும். பெண்கள் எதிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வரை இந்த நாள் கொண்டாடப்படுவது அவசியமே.

எனவே மகளிர் தினத்தில் மகளிர் அனைவருக்கும்  “மகளிர் தின” வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் நமது தளம் பெருமிதம்  கொள்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!