78
நறுவிசுகளுக்கிடையே தோணாமல்
மறைத்து வைக்கிறாய்
உன் நர்த்தனங்களை
சுற்றி சுழலும் சுடலை மாடனை ஒத்திருக்கிறது
உன் பெரு நடனங்கள் ,
கசக்க …கசக்க தாண்டவமாடி முடித்த பின்
காரணம் தேடாது சிரிக்கும்
இக்களங்கமற்ற சிரிப்பு
ஏனடா ….ராட்ச்சா ….???
மதுரத்தின் கவனப்படுத்தலுக்கு பிறகே குடும்பத்தினர் அனைவரும் ஹர்சவர்த்தன் சொன்னதை கவனித்தனர் .ஜோதியும் கூட அப்போதுதான் அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக உள் வாங்கினாள் .புதிதாக ஒரு குழப்பம் அவளுள் அலையடிக்க ஆரம்பித்தது .
” என்ன தம்பி சொல்றீங்க …? ” பரமசிவம் மீசையை வருடியபடி உறுமல் குரலில் கேட்டார் .
” தவறாக எதையும் சொல்லி விடவில்லை தாத்தா .மகராவை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன் …”
” உங்களுடன் என்றால் …? “
” என்னுடன் என்றால் என்னுடன் ….என் பாதுகாப்புடன் .என் வழுங்கால வாழ்வை பகிர்பவளாக , என் குடும்பத்தினருடன் நல்லபடியாக அறிமுகமாகி அவளது வருங்காலத்தை அமைத்துக் கொள்பவளாக …”
” புரியவில்லை ….”
” உங்கள் குடும்பத்தினரை நான் இங்கு வந்து உங்களுடன் தங்கி சமாதானப்படுத்தியது போன்றே , என் குடும்பத்தினரை மகரா அங்கு வந்து எங்களுடன் தங்கி சமாதானப்படுத்த வேண்டும் …”
” ஓ …அப்போது உங்கள் குடும்பத்தாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா …? ” கீச்சிட்ட வடிவழகியின் குரலில் ஒரு வித எதிர்ப்பு நிரம்பியிருந்த்து .
” இதில் ஏதோ சரியில்லை மாமா .நாம் யோசிக்கவேண்டும் …” மதுரமும் குரல் கொடுத்தாள் .
.மாமனார் முன்பு தைரியமாக நின்று கருத்து சொல்லாதவர்கள்தான் இருவரும் .ஆனால் இப்போது சொன்னார்கள் .உறுதியாக நின்றார்கள் .
” நீங்க இரண்டு பேரும் சும்மா இருங்க . ஹர்சா சாரோட வீட்டின் இந்த எதிர்ப்பு இயற்கைதானே சித்தி .நம் ஹர்சா சாரின் உயரத்திற்கு எத்தனையோ சாம்ராஜ்ய ராஜகுமாரிகள் அவரை மணம் முடிக்க காத்திருப்பார்கள் .சார் வீட்டில் அவர்களை விட்டு விட்டு நம் ஜோதியை ஏற்றுக்கொள்வார்களா … ? “
கதிரேசனின் இந்த நியாயமான கேள்வியில் ஜோதியின் இதயம் லயம் தப்பியது .
” அதெப்படி தம்பி .இது போல் ஒரு எதிர்ப்பு உள்ள இடத்திற்கு , எங்கள் பேத்தியை நான் அனுப்புவேன் …?.ம்ஹூம் முடியாது தம்பி …” பரமசிவம் உறுதியாய் தலையசைக க ஹர்சவர்த்தன் தளரவில்லை .
” உடனே பதில் சொல்லவேண்டாம் தாத்தா .கொஞ்ச நேரம் நிதானமாக யோசித்து , உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து பேசி பிறகு பதில் சொல்லுங்கள் …”
ஹர்சவர்த்தன் மாடியேற திரும்பினான் .இரண்டு எட்டு நடந்தவன் நின்று திரும்பி ” வீட்டிற்கு பெரியவர்கள் .மூத்த தலைமுறை .அனுபவம் வாய்ந்தவர்கள் .உங்கள் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள் தாத்தா …” நடையை தொடர்ந்தான் .
ஜோதி அதிர்ந்தாள் . பெரிய பாட்டியிடமா கேட்க சொல்கிறான் .அவர்களது கண்டிப்பு இவனுக்கு தெரியுமா …? இதை போன்ற புரட்சி திருமணத்தை அவர் எப்படி ஒத்துக் கொள்வார் …? இவன் ஏன் எப்போதும் வாயை வைத்துக் கொண்டு சும்மாவே இருக்க மாட்டேனென்கிறான் . தவளை …தவளை …
ஜோதி வெறுத்து போய் படியேறிக் கொண்டிருந்த ஹர்சவர்த்தனின் முதுகை வெறிக்க , அவன் நிதானமாக திரும்பி இவ்வளவு நேரத்திற்கு பிறகு …அதாவது நான்தான் ஜோதிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என எல்லோர் முன்பும் அறிமுகமான பிறகு, நடந்த வாதங்களுக்கு பிறகு , இதோ இப்போதுதான் அவளது கண்களை சந்தித்தான் .அழகாக கண்களை சிமிட்டினான் .இதழ் குவித்து முத்தமிடும் பாவனை காட்டினான் .மீதி படியேறி மேலே போய்விட்டான் .
ஜோதி ஸ்தம்பித்து நின்றாள் .இதற்கு என்ன அர்த்தம் …? இவன் பாட்டியிடம் முன்பே பேசி விட்டானா …? சம்மதம் வாங்கி விட்டானா ….? நேற்று பாட்டி விழிப்பதற்குள் நாங்கள் வந்து விட்டோமே …பிறகு எப்போது எப்படி என்ன பேசினான் ….? ஜோதிக்கு மண்டை வெடிக்கும் போல் இருந்த்து .
சுற்றிலும் பார்க்க அங்கே யாரையும் காணவில்லை .எல்லோரும் பாட்டி அறைக்குள் போய்விட்டிருந்தனர் .ஜோதி படபடவென மாடியேறினாள் .ஹர்சவர்த்தன் அறையினுள் கட்டில் மேல் அவன் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு துணிகளை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தான் .
” நீயும் உடனே போய் பேக்கிங்கை ஆரம்பி மகரா .நாளையே நாம் கிளம்ப வேண்டியதிருக்கும் …”
அவள் காலடி ஓசையிலேயே அவளை உணர்ந்து திரும்பி பாராமலேயே சொன்னான் .
” என்ன நடக்கிறது இங்கே …? நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையா …? “
மீண்டுமொரு முறை அவனிடம் நீ என்னை காதலிக்கிறாயா என்றோ …. கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறாயா என்றோ நேரடியாக கேட்கும் தெம்பு ஜோதியிடம் இல்லை .
” எந்த உண்மையை கேட்கிறாய் …? “
இவனை …பல்லை கடித்தவள் …
” விதம் விதமாய் …ரகம் ரகமாய் விளக்கி சொன்னீர்களே அந்த உண்மைகளை ….”
” ஓ …அதுவா .அது ….ம் …எல்லாமே உண்மைதான் ….”
காதலென்றோ …கல்யாணமென்றோ வாயை திறந்து பேசுவானா என்று அவளும் …பேசமாட்டேனே என அவனும்
விடாக்கண்டன் …கொடாக்கண்டனாக நின்றனர் .
” சாம்ராஜ்ய ராஜகுமாரிகள் வர மாலையோடு வரிசை கட்டி நிற்கும் இடத்தில் சாதாரண குடிமகளான எனக்கென்ன வேலை …? ” ஜோதியின் எரிச்சலில் வார்த்தைகள் தெறித்து விழுந்தன.
” என் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வேலை …”
” அது போன்ற திறமை எதுவும் என்னிடம் கிடையாது …”
” அதை முடிவு செய்ய வேண்டியது நான்தான் …”
” வேண்டாம் ஹர்சா . இதோ இப்படி உங்களை போல் சூழ்நிலைகளை உங்கள் பக்கம் திருப்பி சாதிக்கும் திறமையெல்லாம் எனக்கு கிடையாது .நான் உங்களுக்கு அந்த வகையில் உபயோகப்பட மாட்டேன் .அதனால் என்னை இப்படியே என் குடும்பத்தாரோடு விட்டு விடுங்கள் …”
ஹர்சவர்த்தன் கை வேலையை போட்டு விட டு அவளருகே வந்தான் .அவள் இரு தோள்களையும தன் இரு கைகளால் இறுக பற்றினான் .
” உன் பக்கத்தில்தான் நான் இருக்க போகிறேனே மகரா .இந்த மகாராணிக்கு ஏற்ற மதியூக மந்திரியாய் உன்னருகிலேயேதான் இருக்க போகிறேன் .பிறகென்ன பயம் …? “
இந்த வார்த்தைகளில் ஜோதியின் உச்சந்தலையில் ஏறி அமர்ந்திருந்த பாரம் பனியாய் உருகி காணாமல் போனது .துளி சந்தேகமும் இல்லாமல் அவள் மனம் நிர்மலமானது .என்ன பிரச்சினைதான் வரட்டுமே ….என் ஹ்ர்சா அருகில் இருக்கிறான் .அவன் பார்த்துக் கொள்வான் .நிச்சய நாளையை போல் இந்த வித்து அவள் மனதினுள் விழுந்த்து .
குழப்ப பூதங்கள் பல “நானிருக்கிறேன்” என்ற அவனது ஒரு சொல்லில் காரணமற்றவை என்ற தோற்றம் காட்டி கரைந்து மறைந்து போயின .
” எப்போதும் என் அருகிலேயே இருப்பீர்களா ஹர்சா …? ” சத்தியம் போல் …வேண்டுதல் போல் தன் கைகளை அவன் முன் நீட்டினாள் .
” ம் …” என்ற ஒற்றையெழுத்து பதிலுடன் தன் முன் நீண்ட அவள் உள்ளங்கை பற்றி குனிந்து தன் இதழ் பதித்தான் ஹர்சவர்த்தன் .
ஜோதி அவனை முழுமையாக நம்பினாள்.
பாட்டி மிக எளிதாக அவனுடன் ஜோதியை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு விட சந்தேகங்களையும் , குழப்பங்களையும் உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு ஜோதியின் குடும்பம் அவளை வழியனுப்ப தயாரானது .
.அந்த இடத்திலிருந்து ஹர்சவர்த்தனுடனான மகரஜோதியின் வாழ்க்கை பயணம் ஆரம்பமானது .
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Superarana thrupumunai. next anna nadakkumo yena arvamaga yulathu.