28
“வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை கோர்த்தபடி இருந்தான்.
இவன் ஏன் இப்படி செய்கிறான்.. சஸாக்கி குழம்பினாள்..
“சாரை வெல்கம் பண்ணு சகி..” அவளையும் இழுக்க பின்னால் வந்த திவாகர் இவள் கையில் ஒரு பொக்கேயை கொடுத்தான்.. வர வைத்துக் கொண்ட புன்னகையோடு அகிரோட்டோ கையில் கொடுத்து வெல்கம் சொன்னாள்..
“உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி..” சஸாக்கிக்காகவோ என்னவோ அகிரோட்டோ ஜப்பானிய மொழியில் பேச, தனது மொழி கேட்ட ஆனந்தத்தை தாண்டி, அகிரோட்டோவின் பேச்சு சஸாக்கியினுள் ஒரு விழித்தலை கொண்டு வந்தது..
இவர் அகிரோட்டோ ஜப்பானில் எங்கள் இருவரின் திருமணத்தை நடத்தி வைத்தவர்.. திருமணம் முடித்தால் தான் நமக்குள் பிசினல் என கண்டிப்பு காட்டியவர்.. அவரின் முன்னால் இங்கே இந்தியாவில் இவர்கள் என்னை தள்ளி வைத்துவிட்டதை.. இன்னொரு திருமணம் முடிக்க போவதை சொல்ல முடியாதே..
பாலகுமரன், திவாகரின் திட்டம் புரிய சஸாக்கியின் மனது கசந்து வழிந்தது..
வெறுப்பாய் பாலகுமரனை பார்த்தாள்.. அவனோ இவள் வெறுப்பை கண்டுகொள்ளாமல் புன்னகைத்தான்.. ஆதர்ச கணவன் ஆசை மனைவியை பார்த்து உதிர்க்கும் புன்னகையாக அது இருந்தது..
“நான் செய்து வைத்த திருமணம்.. எங்கள் நாட்டு பெண்.. உங்கள் மனைவியாக… எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது பாலகுமர்..”
“எங்களுக்கு ஒரு குழந்தை கூட இருக்கிறது அகிராட்டோ..”
பாலகுமரன் இயல்பாக சொல்ல சஸாக்கி ஆச்சரியமானாள்.. இவன் எப்படி இதையெல்லாம் சொல்லிக் கொள்கிறான்..
“ஓ கிரேட்.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..” அகிரோட்டோவின் குரலில் உற்சாகம் வழிந்தது..
“எங்கள் குழந்தையை பார்க்க எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் அகிரோட்டோ..” பாலகுமரனின் அழைப்பில் அதிர்ந்தாள் சஸாக்கி..
இவனென்ன இப்படி அழைத்துக் கொண்டிருக் கிறான்.. இதெப்படி சாத்தியமாகும்..?
“நிச்சயம் பாலகுமார்.. சஸாக்கி என் மகள் போல.. அவள் வீட்டிற்கு நான் வரமாட்டேனா..? இன்று நான் தங்க போவதே உங்கள் வீட்டில்தான்..” அகிரோட்டோவின் பேச்சில் சஸாக்கிக்கு தலை சுற்றுவதை போலிருந்தது..
என்ன நடக்கிறது இங்கே..??
அவள் குழப்பம் தீரும் முன்பே ஏர்போர்ட்டிலிருந்து கார் நின்ற இடம் பாலகுமரனுன் வீடு..
“அகிரோட்டோவுடனான பிசினஸ் மதிப்பு நூறு கோடிக்கும் அதிகமானது சகி.. அதனை நான் இழக்க விரும்பவில்லை.. அவர் இங்கிருக்கும் ஒரு வாரம் நீயும் குழந்தையும் இங்கேதான் தங்க போகிறீர்கள்..”
“குழந்தை..?” சஸாக்கியின் கேள்விக்கு பாலகுமார் கை நீட்டிக் காட்ட.. அங்கே அன்னலட்சுமி சசிரூபனுடன் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் மிகுந்த மகிழ்வில் இருந்தது..
மகளின் வாழ்க்கையில் விடிவு வந்துவிட்டதாக அவள் நினைத்திருக்கலாம்.. அன்னலட்சுமியின் அருகே அபிராமியும், கார்த்திகாவும் மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தனர்..
கார்த்திகா அகிரோட்டோவிற்கு கை குலுக்கி வரவேற்பு அளித்த கையோடு சஸாக்கியையும் அனைத்துக் கொண்டாள்.. அபிராமி சஸாக்கியின் தலையை வருட, சஸாக்கியால் நடப்பதை நம்ப முடியவில்லை.. அப்போது இந்த பாசப் பிணைப்பை பார்த்தபடி கடந்த அகிரோட்டோ கண்ணில் பட, இவர்களின் இந்த திடீர் பாசத்தின் காரணம் புரிய சஸாக்கியின் மனது வெறுமையில் நிரம்பியது..
“அவர்கள் அழைத்ததும் வந்து விடுவீர்களா மமா..?”
உற்சாகமாக கப்போர்டில் துணி அடுக்கிக் கொண்டிருந்த அன்னலட்சுமியிடம் கேட்டாள்.. அவர்கள் முன்பிருந்த அதே அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
“திடுமென இங்கிருந்து கார் வந்தது.. உங்களை அபிராமி அழைத்து வர சொன்னார்கள் என்றார்கள்.. நீ ஆபிசிலிருந்து நேரடியாக வீட்டிற்கு வந்துவிடுவாய் என்றார்கள்.. மறுக்க என்ன இருக்கிறது சஸி..? உன் வீடு.. உன் கணவன்.. உன் குடும்பம்.. எனக்கு மறுக்க எந்த காரணமும் இல்லையேம்மா..”
அவர்களின் பிசினஸிற்காக அம்மா எனச் சொல்லி அன்னலட்சுமியின் இப்போதைய இந்த அற்ப மகிழ்ச்சியை உடைக்க சஸாக்கியின் மனம் வரவில்லை.. பாவம் ஒரு வாரம்.. அம்மா சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என நினைத்து பேசாமல் இருந்து கொண்டாள்..
“சசிரூபனை எங்கே அம்மா..?”
“அவன் பாட்டியிடம் இருக்கிறான்.. அவன் அத்தைக்கும், பாட்டிக்கும் அவனை கொஞ்சி கொஞ்சி தீரவில்லை..” அன்னம் பெருமிதமாக சொல்லிக் கொள்ள, சஸாக்கிக்கு இது வேறா.. என்றிருந்தது..
தலைவலிப்பது போலிருக்க இன்டர்காமை அழுத்தி காபி சொன்னாள்.. இந்த ஹைகிளாஸ் வசதியை அனுபவிக்கும் அதே நேரம் இரண்டு மாதங்களாக வெளியே வாழ்ந்த நடுத்தர வாழ்வு நெருடலாய் மனதில் வர, குற்றம் புரிவதை போலொரு மனோபாவத்தில் தலையை பிடித்துக் கொண்டாள்..
அன்னலட்சுமி விருந்துபச்சாரத்தில் அபிராமிக்கு உதவ போவதாக போனாள்.. பெட்டில் வசதியாக சஸாக்கி சாய்ந்து கொண்ட போது கதவு தட்டப்பட.. “கமின்” என்றாள்..
காபி டிரேயோடு சரண்யா உள்ளே வந்தாள்..
“அப்படி வைத்து விட்டு போ” ஒற்றை விரலாட்டினாள்..
அதை உணர்ந்த சரண்யாவின் விழிகள் சிவந்தன.. கொதித்தன..
“இது அற்ப வாழ்வு உனக்கு.. இதற்கு இவ்வளவு பந்தாவா..?”
“எனக்கு காபிக்கு ஒரு ஸ்பூன் சீனி..” அவளது எச்சரிக்கையை அலட்சியம் செய்து ஆணையாக தன் தேவை சொன்னாள் சஸாக்கி..
சரண்யாவின் முகம் கொடூரமாக மாறியது.. சட்டென சஸாக்கியின் கழுத்தை பிடித்தாள்.. சஸாக்கி படுத்தபடி இருந்தது அவளுக்கு கழுத்தை நெரிக்க வசதியாக இருந்தது..
“ஏய்.. பயமெல்லாம் போயிடுச்சா..?” கழுத்தை நெரிக்க தொடங்கினாள்..
“பயமா அப்படின்னா என்னடி..?”
சரண்யாவின் கைகள் ஸ்தம்பித்தன.. இந்த தைரியத்தை அவள் சஸாக்கியிடம் எதிர்பார்க்கவில்லை.. என்பது நன்கு தெரிந்தது..
அவளது அதிர்வை தனக்கு சாதகமாக்கிய சஸாக்கி அவளை அழுத்தி தள்ளி விட்டு எழுந்து நின்றாள்..
“நான் பயப்பட மாட்டேன் சரண்யா.. என் கணவரும், குழந்தையும், என் குடும்பமும் எனக்கு வேண்டும்.. அதனை நான் இனி யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்..” உறுதி தெறிக்க கூறினாள்..
அவளது தள்ளலில் கீழே விழுந்து விட்ட சரண்யாவிற்கு நடப்பதை நம்ப முடியவில்லை.. உடனே சமாளித்து ஸ்பிரிங் போல் எழுந்து நின்றவள்.. தன் முகத்தை மாற்றினாள், குரலை குழைத்தாள்.. மென் குரலில் இழுத்தபடி ராகம் போல..
“சஸாக்கி..” என ரகசியமாக அழைத்தாள்..
சஸாக்கியின் முகம் மாறியது..
“இங்கே வா..” ரகசிய குரலோடு சஸாக்கியை நோக்கி தன் கைகளை நீட்டினாள்..
சஸாக்கி நிலை குத்திய விழிகளோடு விரிந்திருந்த சரண்யாவின் கைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1