1
ரெட் சிக்னல் விழப் போகிறது என்று தெரிந்ததும் நிலானி காரின் வேகத்தை கூட்டினாள் .முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களை உரசியபடி பின்தள்ளி வேகமாக கடந்தாள். சிக்னலை கடந்து சென்று காரை பிரேக்கிட்டு நிறுத்தி பின் திரும்பி சிக்னலில் தேங்கி நின்ற வாகனங்களை பார்த்து இரு கைகளையும் உயர்த்தி ” யாஹூ ” என்று கூச்சலிட்டாள். அவளது உற்சாகத்திற்கு உரம் ஊட்டுவது போல விதம் விதமான உற்சாக கூச்சல்கள் அவளது காரில் உடன் இருந்தோரால் எழுப்பப்பட்டன.
” ஏய் சூப்பர்டி”
” அசத்திட்ட ”
” உன் தைரியம் யாருக்கும் வராது டி ”
” அவள் மகாராணிடி. அவள் தைரியத்திற்கு என்ன குறை? ”
” நாளைக்கு வேண்டுமானால் அவள் மகாராணியாகலாம். இன்றைய தேதியில் அவள் இளவரசிடி ”
” ஆமாம் நம் தமிழ் நாட்டின் இளவரசி ”
தோழிகளின் பாராட்டுக்களையும் மதிப்புரைகளையும் பெருமிதமான தலையசைப்புடன் கர்வமாக ஏற்றுக் கொண்டாள் நிலானி .கண்களின் மமதை அவளை இளவரசி என்றே சொன்னது.
” ஏய் படிச்சவங்க தானே நீங்க ? கொஞ்சம் கூட டீசன்சி இல்லாம இப்படி நடந்துக்குறீங்களே ? ” அவள் காரின் முன்னால் வந்து ப்ரேக்கிட்டு நின்றது ஒரு பைக்.
நடுத்தர வயது, இள வயதுமாக இரு ஆண்கள் அதில். அப்பா மகனாகவோ , அண்ணன் தம்பியாகவோ இருக்கலாம் .இவர்களது பைக்கை சற்று முன் உரசி கீழே தள்ளிவிட்டு வந்த நினைவு நிலானிக்கு இருந்தது.
” ஹலோ யாரிடம் என்ன பேசுகிறீர்கள் ? மேடம் யார் என்று தெரியுமா ? ஜால்ராக்களில் ஒன்று முழங்கியது.
” என்ன இந்த நாட்டு மகாராணியா ? ”
” இல்லை இளவரசி ”
” என்ன இளவரசியா ? ”
” ஆமாம். இன்றைய இளவரசி. நாளைய மஹாராணி ”
தோழிகளின் விவரிப்பில் அந்த ஆண்கள் குழம்பி நிற்க , நிலானி சாம்ராஜ்ய இளவரசியின் தோரணையுடன் காரிலிருந்து இறங்கி நின்றாள். அந்த நேரத்தில் அவளருகே இரண்டு பைக்குகள் வந்து நின்று பிரேக்கிட்டன. அதிலிருந்து முழுவதும் கருப்பு உடை அணிந்த கையில் துப்பாக்கி வைத்திருந்த பாதுகாவலர்கள் இறங்கி அந்த பைக் ஆண்களை சூழ்ந்து கொண்டனர்.
” ஐயோ எங்களை விட்டு விடுங்கள் ” நேரடியாக கழுத்தில் பதிந்த துப்பாக்கிக்கு ஆண்கள் இருவரும் அலறினர்.
” என்ன செய்தார்கள் மேடம் ? ” செக்யூரிட்டிகளின் கேள்விக்கு பதில் சொல்லாது அலட்சியமாக நின்றிருந்தாள் நிலானி.
” நாங்கள் ஒன்றும் செய்யவில்லை .மேடம் …சொல்லுங்க மேடம் ”
” ஸே ஸாரி மேன் ” தோழிகளில் ஒருத்தி அதட்டினாள் .
கையெடுத்து கும்பிட்டனர் அவர்கள். ” மன்னிச்சிடுங்க மேடம் .தெரியாமல் செய்து விட்டோம். எங்களை விட்டு விடுங்கள். “
நிலானியின் முகத்தில் திருப்தி பரவியது .” லீவ் தெம் ” கையசைத்தாள்.
பிடி தளர்ந்ததும் அந்த ஆண்கள் பைக்கில் பறந்து விட்டனர் . தேங்கிய போக்குவரத்தில் நின்றிருந்த வாகனங்கள் சிறு பயத்துடன் நிலானி அருகே தயங்கி பின் அவளை சுற்றி கொண்டு நகர்ந்தன.
” யார் இந்த பொண்ணு ? ” தேங்கியிருந்த வாகனங்களில் ஒன்றில் இருந்த யாரோ யாரிடமோ கேட்க ,
” ஏதாவது அரசியல் குடும்பமாக இருக்கும் .அந்த செக்யூரிட்டியை கவனித்தீர்களா ? அது கருப்புப் பூனைப் படை ”
” ஓ அப்போது கொஞ்சம் பெரிய இடம் தான் ”
“அப்படியாகத்தான் இருக்கும். நம் நாட்டில்தான் இந்த அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே” பேசிக் கொண்டு சென்ற இருவரும் அந்த இடம் தாண்டியதும் நிலானியை மறந்தே போனார்கள்.
வேகத்தை சிறிதும் குறைக்காமல் நிலானி நுழைந்த பங்களா மத்திய அமைச்சர் திருக்குமரனுடையது என்று பெயர் பலகை சொன்னது. போர்ட்டிகோவிலும் இல்லாமல் கார் செட்டிலும் இல்லாமல் இடையில் தோன்றிய இடத்தில் தன் காரை வளைத்து நிறுத்தியவள் கீழே இறங்கியதும் தூக்கி எறிந்த கார் சாவியை பிடிப்பதற்கு டிரைவர் ஒருவன் நின்றிருந்தான் .
” ஐயாவோட மகள். ”
” மேடம் வணக்கம் மேடம் ”
” அப்படியே தேவதை மாதிரி இருக்காங்க ”
” அந்த கம்பீரத்தை பார்த்தாயா ? நம்ம ஐயாவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்கள்தான் ”
” அப்படியே அவரின் ஜாடை ”
பங்களாவின் முன்னே காத்து நின்ற கூட்டங்களில் இருந்து காதில் விழுந்த இந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்தி வீட்டினுள் போனாள் நிலானி.
” சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள் ” உடன் வந்த தோழிகளை சுழற்றி விட்டவள் ” வேர் இஸ் டாட் ? “சபாரி சூட் அணிந்த அந்த முன் வழுக்கை ஆசாமியிடம் விசாரித்தாள்.
” இன்னைக்கு கட்சி மீட்டிங் இருக்கு பாப்பா .அப்பா அதற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார் ” கேட்ட விபரம் கிடைத்துக் கொண்டிருக்கும் போதே இரண்டிரண்டு படிகளாக தாவி மாடி ஏறினாள்.
” ஹாய் டேட் .ஹவ் ஆர் யூ ? ஐ ம் மிஸ்ஸிங் யு ஸோ மச் டேட் ” இரு கைகளையும் நீட்டியவாறு வந்த மகளை பாசத்துடன் எதிர்கொண்டார் திருக்குமரன் .
” என்னடா செல்லம் இப்படி பப்ளிக்கா இங்கிலீஷ்ல கூப்பிடுறியே ? நாமெல்லாம் தமிழைக் காக்க அவதாரம் எடுத்தவர்கள் .நம் வீட்டிற்குள் இப்படி அந்நிய மொழி பேசக் கூடாது ” கேலியுடன் ஒற்றைக் கண்ணை சிமிட்டினார் .
” ஓ …நோ டேட் .வாட் எ ஸ்டுப்பிட் பாலிடிக்ஸ்…” சினுங்கிய மகளின் தலையை பாசத்துடன் வருடினார்.
” அதை விடுடா கண்ணா. இப்போது உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே .நம்ம செக்யூரிட்டி எப்படி ? “மீசையை நீவி கொண்டார்.
” பென்டாஸ்டிக் டேட் .இன்னைக்கு சிக்னல்ல ரெண்டு பேர் கழுத்துல கன்ன வச்சிட்டாங்க தெரியுமா ? நிலானியின் கண்களில் நிலாக்கள்.
” ஹா…ஹா… எல்லோரும் ஆடிப்போய் இருப்பாங்களே ” தகப்பனும் மகளும் ஹை பை கொடுத்துக் கொண்டனர் .
” என்னங்க இது ? அவதான் சின்ன பொண்ணு .விவரம் தெரியாமல் பேசுறானா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களே ? இப்போ இவளுக்கெல்லாம் கருப்பு பூனை பாதுகாப்பு எதற்கு ? ” குறைபட்ட படி வந்தாள் செங்கமலம் நிலானியின் தாய்.
” என் மகள்டீ .மத்திய மந்திரியின் ஒரே செல்லப் பெண் . நாளைய தமிழக முதலமைச்சரின் ஆசை மகள் .என்னுடைய வாரிசே இவள் தான் .நாளையே இவளே நாட்டின் முதலமைச்சராகவும் ஆகலாம். அவளுக்கு இப்போதே பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா ? ”
” என்னவோ செய்யுங்கள் போங்கள் ” செங்கமலம் எப்போதும்போல் ஒதுங்கிக்கொண்டாள. அவள் கணவனும் மகளும் அவள் சொன்னதைக் கேட்கும் ஜாதி இல்லை.
” இந்த செக்யூரிட்டீசை அன்றே ஏற்பாடு செய்திருக்க வேண்டும் டேட் . அந்த அவன் அலறிக் கொண்டு ஓடியிருப்பான் ” நிலாவினியின் கண்களிவஞ்சம்சம் தெரிந்தது .
” அதனால் என்னடா இன்னும் ஒருமுறை நீ அவனை சந்திக்காமலா போவாய் ?அப்போது அவன் கையை ஒடித்து விட சொல்கிறேன் .” தந்தையின் ஆதரவில் மகளுக்கு திருப்தி வந்தது.
” தேங்க்யூ டேட் ”
நன்றியோடு தந்தையின் கன்னத்தில் முத்தமிடவும் மறக்கவில்லை அவள்.
மீண்டும் அவனை சந்திக்க நேருமோ ?யோசித்தபடி தனது அறைக்குள் வந்த நிலானியுனுள் அன்று அவனை சந்தித்த ஞாபகங்கள் வந்தன .கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது வழக்கமான வேகத்தில் காரை பறக்க விட்டுக் கொண்டிருந்தாள். திருதென் பக்கவாட்டு சாலை ஒன்றில் இருந்து வந்த அம்பாசிடர் மேல் மோத நேருமோ என்ற பதட்டத்தில் வேகத்தை குறைக்க, கார் வேகம் குறைய மறுத்தது. மிகவும் முயற்சித்து பிரேக்கை மிதித்து நிறுத்தினாலும் கடைசி நேரத்தில் சற்று வளைத்து பக்கத்து பள்ளத்தில் இறங்கி தான் அந்த அம்பாசிடரை தவிர்க்க வேண்டி இருந்தது .
நியாயமாகப் பார்த்தால் இதற்காக கத்தியிருக்க வேண்டியது அவள்தான் ஆனால் ,அந்த காரில் இருந்து இறங்கி வந்தவன் …. அவன் இளைஞன் இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றபடி ஹேர் ஸ்டைலும் குறுந்தாடியுமாக இருந்தாலும் கட்டங்கள் போட்ட அவனது அங்கிள் ஷர்ட்டும், காட்டன் பேன்ட்டும் ஆதிகாலத்து அம்பாசிடர் காரும் அவனது வயதை கூட்டி சொல்லியது .
” புத்தி இல்லையா ? மூளை இல்லையா ? கண்ணில்லையா ? ” என்று கண்டபடி பேசிக் கொண்டிருந்தான் அவன். அவனது அலட்சியம் பொறுக்க முடியாத நிலானி தனது போனில் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து அங்கிருந்து இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள்கள் உடன் உடனே வந்து விட , அலட்சியமான ஓர் கையசைவு டன் அவர்களுக்கு இவனை காண்பித்துவிட்டு கார் ஏறி வந்து விட்டாள் .அதன் பின்பே திருக்குமரன் அவளுக்கு செக்யூரிட்டிகளை ஏற்பாடு செய்தார்.
அந்த கிராமப்புறத்தானை மீண்டும் சந்திக்க நேருமா என்ன ? நிலானியின் ஆசையோ.. சிந்தனையோ …அது மறுநாளே நடந்தது .நிலானி மீண்டும் அந்த அம்பாசிடர் கார்காரனை சந்தித்தாள்.
What’s your Reaction?
+1
9
+1
10
+1
1
+1
+1
+1
+1
அருமை