வானவில் தேவதை
ஒன்று
த்தித்தரிகடத்தீம் ..தீம் …தீம் ….தக்கதிமிதா …தா …தா …தா ..தை ..
மெல்ல மெல்ல இசை உச்சஸ்தாயியை நோக்கி செல்ல கைகளையும் ,கால்களையும் தட்டியபடி அருமையாக ஆனந்த தாண்டவத்திலிருந்து …ருத்ர தாண்டவத்திற்கு மாற தொடங்கினான் சதீஷ் .
அவனை சமாதானப்படுத்தும் பாவனையில் தனது நடனத்தை
“லாஸ்யா ” பாணிக்கு மாற்றினாள் சபர்மதி .
பரத உடையில் போலி நகைகள் ஜொலிப்பில் தோரொன்று நளினமாய் அசைவது போன்ற அவளது அசைவுகள் பார்வையாளர்களிடையே பெரிய கைதட்டலை எழுப்பின .
சிவனின் ருத்ரத்தை குறைத்து இறுதியில் அர்த்தநாரீசுவரர்களாக இருவரும் நிற்கையில் கரகோசம் அரங்கம் நிறைத்தது .
அர்த்தநாரீசுவரர் போசில் நிற்கையில் “அசத்திட்ட சபர் “என்றான் சதீஷ் காதருகே .
அவர்கள் இருக்கையை அடைந்து அமர்ந்ததும் ,அருகிலிருந்த சக நண்பர்கள் அனைவரும் கை குலுக்கினர் .
“நீங்கதான் இன்னைக்கு வின்னர்ஸ் பாருங்க “…கிட்டத்தட்ட அனைத்து நட்புகளின் வாழ்த்தும் அதுவாகவே இருந்தது .
ப்ரியா _கல்யாண் தவிர …
தனது முகத்தை வெடுக்கென மறுபுறம் திருப்பிக்கொண்டாள் ப்ரியா .
கண்டுகொள்ளா பாவனை காட்டினான் கல்யாண் .
ஆரம்பத்திலிருந்தே சதீஷ் _ சபர்மதி ஜோடிக்கு போட்டியாக வந்து கொண்டிருப்பவர்கள் ப்ரியா _ கல்யாண் ஜோடிதான் .
நான்கைந்து அயிட்டம் பாடல்களை போட்டு காட்டுத்தனமாக ஆடி முடித்திருந்தனர் அவர்கள் .அதற்கும் ஏகப்பட்ட அப்ளாஸ் .
எப்படியும் இன்று நாம்தான் முதலிடம் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தவர்கள் முகம் இப்போது வாடி இருந்தது .
அப்படி ஒரு நடனத்தை நமது பாரம்பரியம் மாறாமல் அளித்திருந்தனர் சதிஷ் _ சபர்மதி ஜோடி .
இப்பொழுது தீர்ப்பு நேரம் .அந்த முன்னணி நடிகையும் ,நடன இயக்குநரும் தீர்ப்பு சொல்ல தயாரானார்கள் .
நகங்களை கடித்தபடி டென்சனாக இருந்த சபர்மதியின் அருகே குனிந்து “சபர் ..பயப்படாதே நாமதான் ..”என்றான் சதிஷ் .
ஆனால் …..
அவள் பயந்த மாதிரியே நடந்து விட்டது .இறுதி போட்டியில் நுழைவதற்காக இந்த இரு ஜோடிகளுக்குமிடையே வைக்கப்பட்ட ஸ்பெஷல் போட்டி இது.
அதில் சதிஷ் _ சபர்மதி பரதத்தையும் ப்ரியா ,கல்யாண் வெஸ்டர்ன் நடனத்தையும் தேர்ந்தெடுத்திருந்தனர் .
மேல்நாடு நம் நாட்டை தோற்கடித்து
விட்டது .
கல்யாணும் ,ப்ரியாவும் ஊ…ஊவென கத்திக்கொண்டிருந்தனர் .
என்ன நடக்கிறது இங்கே …? ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் சதிஷசும் ,சபர்மதியும் உழைத்த உழைப்பிற்கு பலனில்லையா …?
இன்னும் கூட உடல் முழுதும் ரணமாக வலிக்கிறதே …?
அவர்கள் இருவரின் கொரியோகிராபர் பாலன் தூர இருந்தே இவளை முறைக்கிறான் .
டப்பா பாடல்களும் ஆபாச அங்க அசைவுகளுமாக அவன் நடனம் தயாரித்திருந்தான் .சபர்மதிதான் படாத பாடு பட்டு ,சதிஷின் துணையுடன் அந்த ஆபாசத்தை கலையாக மாற்றினாள் .
அது பைனலுக்கான செலக்சன் ரவுண்டாதலால் ரிஸ்க் எடுக்க வேண்டாமென திரும்ப திரும்ப கூறினான் பாலன் .
“நீ ஒண்ணும் கலைக்கு சேவை புரிய வேணாம் .உன் தா..தையெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க .கொஞ்சமா டிரஸ் போட்டு டங்கு டங்குன்னு குதிச்சாத்தான் மார்க் கிடைக்கும் “…திரும்ப திரும்ப சொன்னான் .
ஒரே ஒரு தடவை டிரை பண்ணுவோம்னு அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்து இந்த நடனம் ஆடினாள் .
சதிஷுக்கும் கொஞ்சம் இவளைப் போல கலைப்பித்து இருந்ததால் அது சாத்தியமாயிற்று .
இப்போது பைனலுக்கு இவர்கள் தகுதி பெறவில்லை .கண் கலங்கி கண்ணீர் வடிந்தது சபர்மதிக்கு .சட்டென டிவி கேமெரா இவள் புறம் திரும்பி இவளது அழுகை படம் பிடிக்க துவங்கப்படுகிறது .
இனி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை ,ஒளிபரப்பான பின்பும் அடிக்கடி டிவியில் சபர்மதி அழுவாள் .
சே ..என்ன மனிதர்கள் இவர்கள் ..அடுத்தவர் கண்ணீரைக்கூட காசாக்குபவர்கள் …
வேகமாக எழுந்து போக முயன்றவளின் கையை பிறர் அறியாமல் பிடித்திழுத்து அமர வைத்தான் சதிஷ் .
“முட்டாள் மாதிரி பண்ணாதே ..இப்ப எந்திரிச்சு போறது நாகரீகம் இல்லை .நிகழ்ச்சி முடியட்டும் உட்கார் “அதட்டினான் .
கண்ணின் பாரத்தை தொண்டைக்குழிக்குள் அமுக்கியபடி கஷ்டப்பட்டு பொழுதை தள்ளி ,ப்ரியா ,கல்யாணின் எக்காள பார்வையை தாங்கி பல்லை கடித்தபடி அவர்களை வாழ்த்திவிட்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறியபோது ஏதோ பெரிய கட்டிலிருந்து விடுபட்டது போல் உணர்ந்தாள் .
போட்டியில் தோற்றதற்கு அக்காவிடம் என்ன சொல்வது என்ற பயமிருந்தாலும் ,அப்பா இனிமே இந்த டான்ஸ் ப்ராக்டிஸ் ,கிடையாது .அரைகுறை ஆடை அணிய வேண்டியதில்லை .நடனம் என்ற பேரில் அடுத்தவன் தோளில் ஏற வேண்டியதில்லை .நடனம் பயிற்றுவிக்கிறேன் என்ற போர்வையில் அங்கங்கே படும் விரல் தீற்றல்கள் இல்லை .
ஒழுங்காக சேலையணிந்தபடி இருக்கும் நான்கு சீரியல்களில் நடித்தபடி இருந்துவிடலாமென எண்ணமிட்ட போதே பெருந்தேவி ..அவள் அக்கா அப்படி எத்தனை நாள் அவளை விடுவாள் .ஒரே மாதத்தில் அடுத்த ஷோ பிடித்து விடுவாள் .
வேதனையுடன் எண்ணமிட்டபடி ஆட்டோவில் ஏறி அடையாளம் தெரியாமலிருக்க ஷாலை மேலே போட்டு கண்ணாடியை மாட்டி முகம் மறைத்து கொண்டாள் .
அப்பார்ட்மென்ட்டை அடைந்த போதே மனம் திக் திக்கென அடித்தது .
கடவுளே அக்கா இருக்க கூடாது .
குறைந்தபட்சம் இந்த ஒரு விசயத்தில் கடவுள் சபர்மதி பக்கமிருந்தார் .சாவியை பக்கத்து வீட்டுல கொடுத்துட்டு பெருந்தேவி வெளியே போயிருந்தாள் .
எந்த வீட்ல போயி யார் வாழ்க்கையை மென்னு துப்பிக்கிட்டு இருக்காளோ ? வெறுப்புடன் நினைத்தாள் .
வீட்டினுள் நுழைந்து குளித்து வந்ததும் பயங்கரமாக பசித்தது .அதிகாலை ஐந்து மணிக்கு ப்ராக்டிஸ் கு போனது .
ப்ராக்டிஸ் முடிஞ்சதும் நேரே போட்டிக்கு போயாச்சு .இடையில் இரண்டு இட்லி சாப்பிட்டதோடு சரி .
அடுப்படியில் நுழைந்து பார்த்தாள் .காலையிலிருந்து சமைத்த சுவடெதுவும் தெரியவில்லை .கடையில் வாங்கி சாப்பிட்ட அடையாளம் ஒன்றிரண்டு இருந்தது .பீன்ஸ் சமையல் மேடை மேலே இருந்தது .இவளது கடமையை உணர்த்தியபடி .
இரவு எட்டு மணி வரை வீட்டிலிருந்தபடியே சமைக்காமலிருப்பாளா ஒரு பொம்பளை ? கசப்புடனும் எண்ணியபடி பீன்சை நறுக்க தொடங்கினாள் .
பருப்பு ,ரசம் பொரியலுடன் சமையல் முடித்து வீட்டை ஒதுக்கி பாத்திரம் கழுவி நிமிர்ந்த போது மணி ஒன்பது முப்பது .
தான் பெற்ற செல்வங்களை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் பெருந்தேவி .
” சப்பு …எப்படா வந்த ?” ஆர்ப்பாட்டமாய் கேட்டாள் .
சப்புவாம் …மனதிற்குள் பொருமியபடி …
“இப்பதான் “முனங்கினாள் .
“நம்ப மாரி இல்லை ,அவ மக உட்கார்ந்துட்டா .கையும் ஓடலை .காலும் ஓடலை நீங்க கொஞ்சம் கூட வந்து இருங்கக்கான்னு சொன்னா அதான் போயிட்டு வர்றேன் .”
பேச்சு பேச்சாக இருக்கையிலேயே பெருந்தேவியின் கைகள் சபர்மதியின் கைப்பையை அவளனுமதியின்றியே ஆராய்ந்து கொண்டிருந்தன.
பிறகு சாப்பாடு உள்ளே இறங்காது என ,பெருந்தேவி உள்ளே நுழைகையிலேயே தட்டில் போட்டுக்கொண்டு அமர்ந்து விட்ட போதும் ,பெருந்தேவியின் பெருத்த அலறலின் போது ,சபர்மதி நான்காவது கவளம்தான் வாயில் வைத்திருந்தாள் .
அதுவும் அவளது கத்தலின் பின்பு உள்ளே இறங்காது தொண்டையிலேயே விக்கியது .
தொடர்ந்து அவள் மூஞ்சியில் சட்டென்று எறியப்பட்டு சோற்று தட்டிலேயே விழுந்தது அன்றைய பரிசு பண செக் .
What’s your Reaction?
+1
15
+1
33
+1
+1
+1
+1
+1
6