17
அந்த மல்லிகைப்பூ நான்கு நான்கு பூக்களாக வைத்து மிக நெருக்கமாக பந்து போல் கட்டப்பட்டிருந்தது.குணாளன் அதனை பேக்கில் இருந்து வெளியே எடுத்து டேபிள் மேல் வைத்து விட்டிருக்க, அதன் மணம் அறை முழுவதும் பரவி இருந்தது. மூச்சடைப்பது போல் உணர்ந்த மகதி அறையை விட்டு பால்கனியில் போய் நிற்க அங்கும் அந்த வாசம் விரட்டியது.
இவ்வளவு வாசமா! சலிப்புடன் நினைத்த மகதி அந்த வாசம் உடலில் உண்டாகிய வேதியல் மாற்றங்களை தாள முடியாமல் அறையை விட்டு வெளியேறினாள்.பூ வாங்கி வந்தவன் அதனை என் கையில் கொடுக்காமல் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டானானால் என்ன அர்த்தம்? அந்தபூவை எனக்குத்தான்வாங்கிக் கொண்டு வந்தானா? ஒரு வேளை அண்ணி பேசியதை கேட்டதும் அப்படியே வைத்து விட்டானோ ?மகதியின் மனம் எதையெதையோ எண்ணி புலம்பியது.
நிச்சயம் அண்ணி பேசியது காதில் விழுந்திருக்கும்.சும்மாவே என் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இப்போது இந்த அண்ணி வேறு உளறி வைத்திருக்கிறாள்.இனி என்னைப் பற்றி மிகவும் தப்பு தப்பாகத்தானே நினைக்கத் தோன்றும் ?
“வெளியில் எங்கும் போகிறீர்களாம்மா?” மீனாட்சிஆராய்சியுடன் அவளைப் பார்த்தபடி கேட்க, “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்றாள் எரிச்சலுடன்.
“இரண்டு பேரும் சீக்கிரமே வந்து விட்டீர்களே, எங்கேயும் போகப் போகிறீர்களோ என்று நினைத்தேன்” கொஞ்சம் ஏமாற்றம் மீனாட்சியிடம். தொடர்ந்து “பூ வைத்துக் கொள்ளவில்லை?” மீண்டும் நோண்டினாள்.
” அத்தை உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் நொய் நொய் என்கிறீர்கள்?”
“அட கோபப்படாதேம்மா.குணா பூ வாங்கி வந்திருந்தான். வீட்டிற்குள் நுழையும் போதே வாசம் வந்தது. நீ தலையில் வைக்கவில்லையா… அதுதான் கேட்டேன்”
” சாமி படத்திற்கு வாங்கி இருப்பார். போய் எடுத்து போட்டோவிற்கு போட்டு விடுங்கள்”
மீனாட்சி புன்னகைத்தாள். “அவன் என்றைக்கு சாமிக்கெல்லாம் பூ வாங்கியிருக்கிறான். உனக்காகத்தான் இருக்கும்மா. போய் தலையில் வைத்துக் கொள்” சொன்னதோடு மருமகளின் தோள் பற்றி மெல்ல மாடிக்கு தள்ளினாள்.
இவர்கள் வேறு இருக்கும் நிலைமை புரியாமல்… “பிறகு பார்க்கிறேன்” அழுத்தமாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். அடுத்த நொடியே மாடியிலிருந்து குணாளன் அழைக்கும் சத்தம் கேட்டது. “மகதி மேலே வா”
” போ போ” மீனாட்சி அவசரப்பட மாமியாரை முறைத்தபடி மாடி ஏறினாள். டேபிள் மேல் வைத்திருந்த பூ காணாமல் போயிருந்தது. ஆனால் அறைக்குள் வாசனை இன்னமும் சுற்றிக் கொண்டிருந்தது. கண்களை சுழற்றி பூவை தேடியபடி வந்தவளை “இங்கே வா” என்று கட்டிலில் தன் அருகை காட்டினான்.
பக்கத்தில் அமர்ந்தவளை பற்றி திருப்பியவன் அருகே வைத்திருந்த இலைச்சுருளை நீக்கி பூச்சரத்தை எடுத்து அவள் தலையில் சூடினான். “மயங்க வைக்கும் வாசம் இல்ல?” கேட்டபடிஅவள் கூந்தலில் முகம் புதைத்தான்.
உடல் முழுவதும் புளகாங்கிதம் அடைய உதடுகளை மடித்து கடித்து உணர்வுகளை அடக்க முயன்றாள் மகதி. உணர்வு பெருக்கில் எழுந்து நின்ற அவள் பின் கழுத்து பூனை முடிகளை தன் விரல் கொண்டு நீவிய குணாளன் சூடான இதழ்களை அழுத்தமாக அங்கே பதித்தான்.
“என்னென்னவோ செய்து எப்படியோ என்னை உன் பக்கம் பிடித்து இழுத்து விட்டாய்” சூடான மூச்சுக்காற்றுடன் பின் கழுத்தில் பேசிய அவன் இதழ்கள் கொடுத்த இந்த அவஸ்தையை விட ரூபாவதி பேசிய பேச்சுக்கள் கொடுத்த அவஸ்தைதான் மகதிக்கு அதிகமாக இருந்தது.
“வந்து..நான்…அப்படி..உங்களை
மயக்க… வந்து அதற்காகவெல்லாம் புடவை கட்டவில்லை “திணறி பேசினாள்.
அடுத்த முத்தத்தை சற்று கீழ் இறக்கி அவள் முதுகில் பதித்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் அழுத்தமாக அங்கேயே அமர்ந்தன.பின் குறுகுறுப்பை உண்டாக்கியபடி பேசின.”எனக்காக இல்லையா மதி?” பின்னிருந்து அவளைப் பற்றி தன் மீது சரித்துக்கொண்டு அவள் கண்களுக்குள் நோக்கியவன் அவள் புடவை தலைப்பை பற்றி தூக்கி “இந்த புடவை எனக்காக கட்டி கொண்டதில்லையா மதி ?”என்றான் கொஞ்சலாக.
இல்லை என்று எப்படி சொல்வாள்
அது மனதார சொல்லும் பொய்யல்லவா? ஒரு வார்த்தை பேச தோன்றாது அவன் விழிகளுக்குள் தன்னை கரைத்து நின்றவளை புன்னகையுடன் பார்த்தவன் புடவை தலைப்பை இருவருக்கும் மேல்திரையாக போர்த்திக் கொண்டு குனிந்து அவள் இதழ்களை தன் இதழ்களால் பற்றிக் கொண்டான்.
அண்டத்தின் ஜ்வாலை ஒன்று. தீயாய் தகித்தபடி தம்பதிகளை எரிக்கத் துவங்கியது.
மகதிக்கு விழிப்பு வந்து கண் திறந்த போது அறை முழுவதும் அரை இருளில் இருப்பது தெரிந்தது.ஆனால் அந்த மல்லிகையின் மணம் மட்டும் இன்னமும் அறை முழுவதும் விரவிக் கிடந்தது.அவள் கூந்தலில் இருந்த பூக்கள் இப்போது கட்டில் முழுவதும் பரவிக் கிடப்பதை உணர்ந்தவளுள் சந்தனப் புகையாய் அடர்ந்து பரவியது வெட்கம்.
இன்னமும் விட மனமின்றி அவளை நெருக்கி இறுக்கிக் கிடந்த கணவனின் கையை முயன்று விலக்கி எழுந்தவள் பால்கனி ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள்.நிறைவில் ததும்பிக் கிடந்த அவள் மனம் கீற்றாய் ஒளிர்ந்த வான் நிலவை ரசித்தது.வேறெங்கும் நட்சத்திரங்கள் இன்றி வானம் கழுவி விட்டது போல் சுத்தமாக இருக்க நிலவைச் சுற்றி மட்டும் பாதுகாவலன் போல் மூன்று நட்சத்திரங்கள் கண்களை சிமிட்டி சிமிட்டி நின்றன.
இந்த வான் அதிசயத்தை வியப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அமர்ந்தான் குணாளன். “மதி என்னடா…ஏன் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டாய்?” லேசான கவலை தெரிந்த கணவனின் குரலுக்கு மகதிக்கு சிரிப்பு வந்தது.
உன்னை எதிர்கொள்ள பயந்து தாண்டா என்று எப்படி சொல்வது? அவன் முகம் பார்க்காமல் வானிலேயே பார்வை பதித்திருந்தாள்.” மதி டூ யூ ஹேவ் எனி அன் கம்பர்ட்டபுள்…ம்…வந்து உடம்பு ஏதாவது அன் ஈசியாக ஃபீல் பண்ணுகிறாயா?” குணாளன் சிறு தவிப்புடன் அவளை தன் புறம் திருப்ப முயல,மகதியோ திரும்ப மறுத்தாள்.
“ஏய்…”அவன் வலிந்து திருப்ப, வெட்கத்துடன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். குணாளனின் கேள்விகளுக்கான விடையை இந்த வெட்கம் கொடுத்து விட, காதலும் கணவன் வேட்கையுமாக நிலவொளியில் மிளிர்ந்தது அவன் கண்கள்.
” முன்பெல்லாம் போ போன்னு எப்பவும் விரட்டிட்டே இருப்பீங்களே… ?”முகம் பார்க்கும் தெம்பின்றி அவன் மார்பில் புதைந்து கொண்டு முணுமணுத்தாள்.
“ம்…ஆமாம் குட்டியூண்டா இரட்டை சடை போட்டுட்டு துறுதுறுன்னு அங்கும் இங்கும் முயல்குட்டி மாதிரி போயிட்டிருப்பியே,பார்த்ததும் மடியில் தூக்கி வைத்து கொஞ்ச தோணும்.ஆனால் பக்கத்து வீட்டு ஆண் பிள்ளையான என்னால் முடியாதே,ஆனால் இப்போது முடியுமே,எனக்கு உரிமை இருக்கிறதே” அவன் இதழ்கள் வேட்கையுடன் அவள் கன்னங்களில் பதிந்தன.
“அதே சிறு பிள்ளையா நான்?” சிணுங்கியது மகதியின் குரல்.
“இன்னமும் கூட உன் முகம் அப்படியேதான்… குழந்தை போலவேதான் இருக்கிறது.அப்போது நெருங்கி நெருங்கி வந்தவளை தள்ளிப் போ பாப்பா என்று விரட்ட முடிந்தது. ஆனால் இன்று…இப்படி வடிவாக வனப்பாக வளர்ந்து நிற்பவளை விலக்க எப்படி முடியும்…ம்?” அவன் கைகள் ஆவலுடன் அவளுடம்பில் பதிய மகதி சிலிர்த்து அவனுள் சுருண்டாள்.
“சின்ன வயதில் இருந்தே இந்த ஊஞ்சல் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே? இதில் இப்படி வேகமாக ஆட ஆசைப்படுவாய் தானே?” கால்களை உந்தி ஊஞ்சலை ஆட்டியவன், மெல்ல அவளை ஊஞ்சலில் சரித்து மேலே படர்ந்தான்.
இப்போது ஊஞ்சல் தானே ஆடத் துவங்கியது.கீற்று நிலா வெட்கத்துடன் மேகத்தினுள் ஒளிந்து கொண்டது.
What’s your Reaction?
+1
50
+1
24
+1
2
+1
1
+1
1
+1
2
+1