19
” ராகா …நீ எங்கேம்மா இங்கே …? தப்பும்மா கல்யாணம் முடிக்காத சின்னப்பெண் இப்படி ஹோட்டலுக்கெல்லாம் வரக் கூடாது . நீ முதலில் வீட்டிற்கு கிளம்பு …” திடுமென பார்த்த தங்கையில் அதிர்ந்து அண்ணனாக மாறி அதட்டினான் .
ராகவி பதிலில்லாமல் கன்னம் வழிந்த நீரை துடைத்தபடி சுவருக்கு பார்வையை திருப்பிக் கொண்டாள் .தங்கையின் அந்த அசூசையான செய்கையின் பின்பே தன் நிலையை உணர்ந்த முரளி தன்னை ஒட்டி இருந்த ரேகாவை தீச்சுட்டது போல் உதறினான்.ஒரு அடி தள்ளி அமர்ந்தான் .ரேகா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் .
” நந்தா என்ன காரியம் செய்கிறாய் ..? வயதுப்பெண்ணை இப்படி லாட்ஜ்ஜுக்கெல்லாம் அழைத்து வரலாமா …? நீ உடனடியாக அவளை கூட்டிக் கொண்டு இங்கேயிருந்து கிளம்பு ”
” நான் ஏன் அண்ணா அடுத்தவருடன் போக வேண்டும் …? உனக்கில்லாத அக்கறை இந்த எதிர்வீட்டுக்கார்ருக்கு எப்படி இருக்கும் …? இவர்கள் நம் எதிரி வீடு என்பதை மறந்து விட்டாயா அண்ணா ? உன் தங்கையை இப்படி ஒரு வஞ்சம் வைத்திருப்பவருடன் …கழுத்தில் கத்தி வைப்பவருடன் அனுப்புவாயா நீ …? ”
முரளி தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் .” டேய் நந்தா ஏன்டா இப்படி செய்கிறாய் …? ” பற்களை கடித்தான் .
” நான் என்னடா செய்தேன் …? உன் தங்கைதான் எங்கள் வீடு தேடி ஓடி வந்தாள் . என் அண்ணனை காணவில்லை .கண்டுபிடித்து கொடு என்றாள் …”
” அதற்காக அவளை கண்ட இடத்திற்கும் கூட்டிக் கொண்டு அலைவாயா நீ …? ”
” இதில் என்னடா இருக்கிறது …? இதோ ரேகா கூடத்தான் இங்கே வந்திருக்கிறாள் .ரேகா வரலாம் ராகா வரக்கூடாதா …? ”
” டேய் …அவள் …” முரளி தடுமாறி நிற்க ,
” என்ன ரேகா இவன் இப்படி பேசுகிறான் .நீயாவது அவனுக்கு எடுத்து சொல்லேன் …” நந்தகுமாரின் முகத்தில் வடிந்த அப்பாவித்தனம் முரளியை பற்களை நறநறக்க வைத்தது. எழுந்து நந்தகுமாரின் சட்டையை பற்றி உலுக்கினான் .
” ரொம்ப கெட்டவன்டா நீ …”
” ஆமாம் அண்ணா .ரொம்ப ரொம்ப கெட்டவன் …” ராகவியின் கண்கள் பரிகாசமாக நந்தகுமார் மீது படிந்து பின் வேண்டுதலோடு அண்ணன் மேல் படிந்தன .
” வீட்டிற்கு போகலாமா அண்ணா …? அம்மா அழுது கொண்டே இருக்கிறார்கள் .அப்பா நாளைக்கு டூர் முடிஞ்சு வந்துடுவார் .அதற்குள்ளே நாம் வீட்டுக்குள் போய் விடலாம் .அப்பாவிற்கு ஒன்றும் தெரியாமலேயே இருந்து விடலாம் ”
” ராகா …நா…நான் …” முரளி தடுமாற்றத்துடன் ரேகாவை பார்க்க அவள் துளைக்கும் பார்வையோடு நின்றிருந்தாள் .அந்த பார்வை ராகவி மேல் இருந்தது .
” உன் அண்ணன் வீட்டை விட்டு வந்தது உனக்கு எப்படி தெரியும் …? ”
ராகவி தயக்கத்தோடு நிற்க , வேண்டான்டா என்ற முரளியின் விழி மன்றாடலை கண்டு கொள்ளாது தயக்கமின்றி வாய் திறந்தான் நந்தகுமார் .
” முரளிதான் தெளிவாக லெட்டர் எழுதி வச்சுட்டுத்தானே வந்தான் ரேகா …”
ரேகாவின் முகம் முதலில் ஆத்திரமும் …பின் தன்னிரக்கமும் , அழுகையுமாக மாறியது .எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் சிறு விம்மல் ஒன்று வெளி வந்து விட , அதனை அங்கிருப்பவர்களுக்கு காட்ட விரும்பாது முதுகு காட்டி திரும்பிக் கொண்டாள் .
முரளி குற்றவுணர்வு முகத்தில் பரவ அவளருகே போய் அவள் கையை பற்றினான் .” சாரி ரேகா .வெளியே போய் விட்டு வீடு திரும்ப ஒரு மணி நேரம் லேட்டானாலே அம்மா தவித்துப் போய்விடுவார்கள் . மகன் எங்கே இருக்கிறான் என தெரிவிக்காமலேயே ஒரு வருடத்திற்கு அவர்களை வருந்த வைக்க நான் தயாராக இல்லை .”
” ஆமாம் உன் அம்மா மட்டும்தானே வருந்துவார்கள் .என் அம்மா , பாட்டியெல்லாம் நான் வீட்டிற்கு வரவில்லையென்றால் ரொம்ப சந்தோசப்படுவார்கள் பாரு ”
” இ …இல்லை ரேகா .யாராக இருந்தாலும் வருத்தப்படத்தான் செய்வார்கள் .இந்த யோசனை எனக்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை .நீதான் பிடிவாதமாக இருந்தாய் …”
” சீ உன்னை நம்பியா வந்தேன் …? ” அளவில்லா வெறுப்பு ரேகாவின் கண்களில் .
” இல்லை ரேகா .நான்தான் உன்னை நம்பி வந்தேன் .மறந்து விட்டாயா …? எனக்கு வேலை கிடையாது .உன் வேலையையும் , அதில் வரும் சம்பளத்தையும் வைத்துத்தான் நாம் வாழ்க்கையை திட்டமிட்டு இருந்தோம் .இதுவும் என்னை உறுத்தியபடி இருந்த விசயம் ”
” இதை பற்றி நாம் முன்பே பேசியிருக்கிறோம் முரளி .இருவரின் நிறை குறைகளை பேசி தீர்த்த பின்தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம் ….”
” ஆமாம் அப்போது சரியென்று தோன்றிய விசயம் .இப்போது முழுத்தவறென்று மண்டையில் அடிக்கிறதே ”
” உங்கள் தங்கையை பார்த்த பிறகு …”
முரளி மௌனமாக அவளை பார்த்தான் .பிறகு மெல்ல வாய் திறந்தான் .” இது உண்மைதான் ரேகா .என் தங்கையை நாங்கள் பூப் போல் வளர்த்து வந்திருக்கிறோம்.இந்த என் செயலால் அவளின் திருமண வாழ்க்கை பாதித்தால் …அவள் கண் கலங்கி நின்றாளானால் என்னால் என் வாழ்க்கையை வாழ முடியுமா …? உனக்கு உடன் பிறப்பு கிடையாது ரேகா. இந்த வேதனை உனக்கு புரியாது .”
” நீ ..நீ என்னை ஏமாற்றிவிட்டாய் .எனக்கு துரோகம் செய்துவிட்டாய் …”
” இல்லை ரேகா .இன்று வரை உனக்கு நண்பனாக , காதலனாக மட்டும்தான் இருந்திருக்கிறேன் .இதோ இப்போது வரை திருமணம் செய்ய முடுவெடுத்த பின்னும் கூட உன்னிடம் எந்த அதீத உரிமையும் எடுத்துக் கொள்ளவில்லை …”
பெருமிதமாய் தலை உயர்த்தி முரளி தந்த இந்த விளக்கத்தில் ஆத்திரமான ரேகா முரளியின் சட்டையை பிடித்து உலுக்கினாள் .” டேய் உடம்பை கெடுப்பது மட்டுமதான் துரோகமா …? மனதைக் கெடுப்பது அதை விட பெரிய துரோகம்டா . .நீ துரோகிடா … என் மனதை சாகடித்து விட்ட மிகப் பெரிய துரோகி .உன்னை போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாதுடா …” பேசப் பேச உடைந்து அழுதாள் .
அந்த அழுகை ராகவியின் மனதை பிசைந்த்து.இந்த நிலையில் அவள் ரேகாவிற்கு ஆறுதல் சொல்ல விரும்பினாள் .ஆனால் குற்றவாளியின் தங்கையாக இருந்து கொண்டு அவள் என்ன ஆறுதல் சொல்ல முடியும் …? அவளால் முடியாது …ஆனால் நந்தனால் …அவன்தான் கோகுலத்து பெண்களின் கண்ணனாயிற்றே …எல்லாவளும் அவன் சொன்ன சொல்லென்றால் தலையாட்ட தயாராக இருக்கிறார்களே …
ராகவிக்கு கொஞ்சமும் பிடிக்காத்துதான் .ஆனாலும் வேறு வழியின்றி நந்தகுமாரையே ரேகாவை சமாதானப்படுத்த அனுப்ப எண்ணி நந்தகுமாரை திரும்பி பார்த்தவளுக்கு கோபம் வந்த்து .அவன் ப்ளாஸ்டிக் சேரை திருப்பிப் போட்டு உட்கார்ந்து , அதன் சாய்மானத்தின் மீது நாடியை தாங்கலாய் வைத்துக் கொண்டு , எட்டரை மணி சீரியல் பார்க்கும் பெண் போல் ஆர்வத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் .
எந்த கவலையோ …உறுத்தலோ இல்லாமல் எப்படி உட்கார்ந்திருக்கிறான் பார் … ராகவி ஆத்திரத்துடன் அவன் காலில் மிதித்தாள் .” ஆஹ் …என்ன …என்ன …? ” சீரியலுக்கிடையே எழுந்து போகச் சொன்ன பரிதவிப்பு அவனிடம் .
” என்ன வேடிக்கை …? ரேகா எப்படி அழுகிறாள் பாருங்கள் .எதையாவது சொல்லி சமாதானப்படுத்தலாமில்ல …? ”
” நீ கவலைப்படாதேம்மா . நாளை குறித்த நேரத்தில் உங்கள் திட்டபடியே கல்யாணத்தை நடத்தி வைத்து விடுகறேன்னு சொல்லட்டுமா …? ”
நந்தகுமாரின் அப்பாவிக் கேள்விக்கு மீண்டும் அவன் காலில் மிதித்தாள் .இந்த முறை ஹை ஹீல்ஸ் செப்பலின் பின் கூர் நுனியால் .
” ஆ…ஆ…” வேலினை காலில் சொருகிய வேதனை உணர்வு அவனிடம் .
” அடிப்பாவி ஆங்காரி , காளி , காட்டேரி …ரத்தக் காட்டேரி …” புலம்பியபடி தாக்குதலுக்குள்ளான தன் காலை குனிந்து பார்க்க முயன்றவனின் தோள் பற்றி தூக்கினாள் .
” போங்க .போய் நிலைமையை சமாளிச்சுட்டு அண்ணனை கூட்டிட்டு வாங்க .வீட்டிற்கு போகலாம் …”
” ம்க்கும் …ரேகாவையும் சமாதானப்படுத்தனும் , இவள் அண்ணனையும் வீட்டிற்கு கூட்டி வரனும் .இது எப்படி முடியும் …? சை அப்பாவி ஒருத்தன் கிடைத்தால் அவனை குடும்பத்தோடு சேர்ந்து எப்படியெல்லாம் கொடுமை படுத்துறாங்க …சை நல்ல ஆளை தேடிப் பிடிச்சேன் லவ் பண்ண …?” புலம்பியபடி முரளி – ரேகாவை நோக்கி நடந்தான் .
என்ன சொல்வான் …? படபட மனதுடன் ஆர்வமாக நந்தகுமாரை பார்த்தபடி நின்றாள் ராகவி .
” இரண்டு பேரும் வெளியே போய் நில்லுங்க …” நந்தகுமார் உத்தரவாக சொல்ல அண்ணனும் , தங்கையும் திகைத்தனர் .
” எதுக்குடா …? ”
” ப்ளீஸ் முரளி .உன் தங்கையை கூட்டிக் கொண்டு வெளியே போ .நான் ரேகாவிடம் பத்து நிமிடங்கள் தனியாக பேச வேண்டும் …ப்ளீஸ் ”
இருவரும் வெளியே வந்து விட்டனர் .
What’s your Reaction?
+1
22
+1
15
+1
1
+1
+1
1
+1
1
+1