Serial Stories

கோகுலம் காலனி-17

17

” நாளை அண்ணனை எப்படி பிடிப்பது என்ற யோசனைதானே நந்தா …? ” பின்னால் குரல் கேட்டதும் திரும்பி பார்த்த நந்தகுமார் ராகவியை பார்த்ததும் பேசாது கையை மட்டும் வாவென அசைத்தான் .அருகே வந்தவளின் கையோடு இறுக்கமாக கை கோர்த்துக் கொண்டவன் , மெல்ல தனது பழைய நடையை தொடர்ந்தான் .

ராகவியும் அவன் சிந்தனையை கலைக்காது அவனுடன் நடக்க ஆரம்பித்தாள் .ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ” இப்படித்தான் என ஒரு யூகம் வைத்து அடுத்தடுத்து திட்டங்கள் போடுகிறேன் ராகா .எங்கேயாவது சிறு தவறு நேர்ந்து விட்டாலும் நம்க்கு பெரிய அடியாகி விடும் .பாவம் செண்பகா ஆன்ட்டி தாங்க மாட்டார்கள் .” 

ராகவி பதில் சொல்லாது அவன் கையை இறுக்கி பிடித்தாள் .தொடர்ந்து அவனோடு நடந்தாள் .” தவறு எதுவும் நடக்காது நந்தா . நிச்சயம் எல்லாமே நல்லபடியே நடக்கும் …” 

மீண்டும் இருவருக்குமிடையே மௌனம் .மென் ஒத்தல்களான அவர்களது நடைக்கு பின்ணனி போல் மெலிதாய் சிணுங்கி தொடர்ந்த்து ராகவியின் கொலுசு .இறுக்கமாய் இருந்த நந்தகுமாரின் முகம் மெல்ல இளகி புன்னகை பூத்தது .நின்று குனிந்து ராகவியின் கால்களை பார்த்தான் .

” இப்போதெல்லாம் ஒற்றை முத்து கொலுசுதானா ராகா …? ” 

” ஆமாம் …ஏன் …? நான் என்ன சின்னக் குழந்தையா …? நிறைய முத்துக்கள் வைத்து போட்டு ஜலீர் ஜலீர் என்று நடக்க …? ” 

” மோகினி போல் …” எடுத்துக் கொடுத்தான் .

” மோகினியா நான் …? ” அவன் கைகளை கிள்ளினாள் .

” நிச்சயமாக .உயிரை அப்படியே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் வேலையெல்லாம் மோகினிகள் தானே செய்வார்கள் .அப்போ நீ மோகினிதான் …” 

“:ஏய் …” மேலே பாய தயாரான ராகவியின் இரு கைகளையும் பற்றி நிறுத்தினான் .” ஷ் …ராகா இது ராத்திரி நேரம் .இப்போது போய் இப்படி கூப்பாடு போட்டாயானால் காலனி முழுவதும் இப்போது இங்கே கூடிவிடும் .நான் இங்கே இருப்பதை பார்த்தார்களானால் அவ்வளவுதான் .கண்டபடி பேச ஆரம்பித்து விடுவார்கள் …” 

அமைதியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ராகவி பற்களை கடித்து தன்னை அடக்கிக் கொண்டாள் .” இப்போது எதற்கு கொலுசை பற்றி பேசனீர்கள் …? ” 

” சின்ன வயதில் உனக்கு கொலுசு வாங்க வேண்டுமென நம் இருவர் அம்மாக்களும் நம்மை கூட்டிக் கொண்டு கடைக்கு போனார்கள் .பாப்பாக்கு ஜால்ரா கொலுசுதான் வாங்கனும்னு அடம் பிடிச்சு அழுதேன் . ஆனால் ஒரு முத்து இருக்கிற கொலுசை வாங்கிட்டாங்க .அப்புறம் …” 

” அந்தக் கொலுசு மறுநாளே தொலைஞ்சு போச்சு…அம்மா இப்போது கூட இந்தக் கதையை அடிக்கடி சொல்வாங்களே…புது கொலுசு வாங்கின மறுநாளே தொலைஞ்சிருச்சுன்னு வருத்தப்படுவாங்க .ஒரு வேளை  அதை நீங்கதான் …” 

” நானேதான் …” தலையை லேசாக குனிந்து ஒத்துக் கொண்டான் .நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது உன் காலிலிருந்து கழட்டி எடுத்து வச்சுக்கிட்டேன் .மறுநாளே வேறு கொலுசு வாங்க போவாங்க .அப்போது எனக்கு பிடித்த கொலுசை வாங்க வைத்து விடலாம்னு சின்னப்பிள்ளைத்தன நினைப்பு …” 

” நீ இத்தனுண்டா இருக்கும் போதிருந்து இப்படித்தானாடா …? எப்பவுமே எனக்கு கெட்டவனாகவே இருக்கிறாயே ஏன்டா …? ” ராகவி அவன் தோளில் குத்த …நந்தகுமார் திரும்பி மறு புற தோளையும் காட்டினான் .

” உன் ஆசையெல்லாம் தீர்த்துக்கோ …”அவன் தோளை தட்டிக் காட்டி சொன்னதில் இருந்த அழைப்பில் மிரண்டாள் .




” என்னது …? ” 

” என்னை அடிக்கத்தானே ஆசைப்பட்டாய் .அதை நிறைவேற்றிக்கோன்னு சொன்னேன் .நீ என்ன நினைத்தாய் …? ” குறும்பு கூத்தாடியது அவன் குரலில் .

” ச்சீ …போ …” ராகவி கோபத்துடன் வீட்டிற்குள் திரும்ப போக …

” ராகா …” ஆழ்ந்த குரலில் அழைத்தான் .

” உன் சம்பந்தப்பட்ட முடிவுகள் , உன் தேவைகள் எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும் என்று எனது சிறு வயதிலிருந்தே எனக்கு தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன் …” 

வான் நிலவு குளிராய் தன் மீது வீழ்ந்து விட்டதோ என்ற சந்தேகம் ராகவிக்கு வந்த்து .குளிர் போல் கைகளை உடம்போடு   கட்டிக் கொண்டாள். 

” செய்தது திருட்டு .இதற்கு பெரிய ” சர் ” பட்டம் வாங்குறது மாதிரி தலை குனிந்து ஒரு ஒப்புக் கொடுத்தல் …” முணுமுணுத்தாள .

” அந்தக் கொலுசை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறேன் ராகா .திரும்ப உன்னிடமே கொடுக்க வேண்டுமென்று …” 

” அந்த சிறிய கொலுசை இப்போது போட முடியுமாக்கும் …? ” 

” அந்தக் கொலுசு எனக்கு பொக்கிசம் .அதை யாருக்கும்   தர மாட்டேன் .அன்று ஜால்ரா கொலுசு உனக்கு போட்டுப் பார்க்க ஆசைப்பட்டேன் .இப்போது வருடம் ஏறிவிட்டது .என் ஆசையும் மாறிவிட்டது .இப்போது உன் கால்களுக்கு தங்க கொலுசு போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறேன் …” 

” என்னது …சாதாரண வெள்ளிக் கொலுசு தொலைந்த்தற்கே என் அப்பா அம்மா  பிறகு ஒரு வருடமாக எனக்கு கொலுசே வாங்கி  போட்டு விடலையாம் .இப்போது தங்க கொலுசென்றால் ..” பேசுயபடி போனவள் அவன் பார்வையை பார்த்ததும் நிறுத்தினாள .

” தங்க கொலுசு வாங்கி வைத்திருக்கிறேன் ராகா .போட்டுக் கொள்கிறாயா …? ” நந்தகுமாரின் குரல் கரகரப்பாய் ஒலித்தது .அவளின் மிக அருகே வந்து நின்றிருந்தான் .ஒற்றை விரலை அவளது முகத்தினடியில் வைத்து தூக்கினான் .விழிகளுக்குள் பார்த்தான் .

” ம் …? ” கேள்வியாய் கேட்டான் .

ராகவியின் விழிகள் அவன் கண்களை சந்திக்க முடியாமல் அலை பாய்ந்தன .தடுமாற்றமாய் எச்சில் விழுங்கிய தொண்டைக்குழியை கவனித்தவன் இப்போது நுனி விரலால் தொண்டையை மென்மையாக  வருடினான் .




” இன்னமும் பயமா ராகா …? ” கெஞ்சலும் , கொஞ்சலுமாக கேட்டான் .

ராகவி விழிகளை இறுக மூடினாள் .மெலிய குரல்தான் .ஆனால் உறுதியாக சொன்னாள் ” ஆமாம் ” 

சட்டென அவள் பிடியை விட்டு விட்டான் . வாடிய முகத்துடன் தள்ளி நின்றான் .ராகவி வேகமாக வீட்டிற்குள் திரும்பினாள் .    தளர்ந்த நடையுடன்  பின்னாலேயே வந்து வாசல் கதவை பூட்டியவன் ” ராகவி ” மெல்லிய குரலில் அழைத்தான் .

” நாளை காலையிலேயே தயாராகி விடு . ஆறு மணிக்கெல்லாம் நாம் கிளம்ப வேண்டும் …” 

” நானும் நிச்சயமாக வர வேண்டுமா …? ” 

” ஏன் …? இன்று முழுவதும் என்னுடன்தானே இருந்தாய் …? நாளை மட்டும் வருவதற்கு என்ன …? ” நந்தகுமாரின் குரலில் கோபம் வந்திருந்தது .

டீ ..ராகவி அவன் தேடிப் போவது உன் ஓடுகாலி அண்ணனை …உள்ளே ஒரு குரல் கேட்க ராகவி சமாதானத்தில் இறங்கினாள் .

” அந்த ரேகாவை பார்க்கத்தானே போவதாக சொன்னீர்கள் . அங்கே நான் தேவையா என்று நினைத்தேன் ” 

” தேவை வரலாமென்றுதான் உன்னையும் கூட்டிக் கொண்டு அலைகிறேன் .புரிகிறதா …? ” பெறுமையில்லாத குரல் .

” சரி …சரி .நான் கிளம்பி விடுகிறேன் ..”ஒப்புதல் அளித்து விட்டு அறைக்குள் நுழைய போனவளின் கையை பற்றி நிறுத்தினான் .அவன் குரலில் இப்போது மென்மை வந்திருந்த்து .

” சாரி ராகா .ஏதோ நினைவில் கொஞ்சம் கோபம் .நாம் நாளை ரேகாவை பார்க்க பார்க்குக்கு போகப் போவதில்லை .நேரடியாக அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே போகப் போகிறோம்…” 

” என்ன …? அது எப்படி …? ” ராகவி பரபரத்தாள் .

” இதுவும் கெஸ்தான் .அவள் சொன்ன பார்க்குக்கு பக்கத்தில் இருக்கும் ஏதோ ஓர் ஹோட்டலில் தான் அவர்கள் தங்கியிருக்க வேண்டுமென்ற கெஸ்ஸிங் .அங்கே பேமிலியோடு தங்கும்படியான  ஹோட்டல்கள் ஐந்துதான் இருக்கின்றன .அந்த ஐந்து ஹோட்டல்களிலும் நாளை நாம் விசாரிக்க போகிறோம் . நேரடியாக அவர்கள் அறைக் கதவையே தட்டப் போகிறோம் …” 

ராகவி விழி விரித்தாள் .” இது நடக்குமா …?அப்படியே நடந்தாலும் இவ்வளவு திட்டங்கள் போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்கள் திருமணம் முடிக்காமல் திரும்ப வர சம்மதிப்பார்களா …? ” 

” சம்மதிக்க வைக்க வேண்டும் .நாளை சீக்கிரம் ரெடியாகு ” உத்தரவு குரலில் சொல்லிவிட்டு போனவனின் முதுகை வெறித்தாள் .

மறுநாள் நந்தகுமாரின் ஊகப்படியே நடந்து  அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த முரளியையும் , ரேகாவையும் கண்டுபிடித்து அவர்களது அறைக்கு நடந்து செல்லும் போது ராகவியின் மனதில் ஊழிக்காற்றின் மரமசைவுகள் .

அங்கே அவள் பயந்தபடிதான் நடந்தது .




What’s your Reaction?
+1
27
+1
12
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!